யாழ்ப்பாணத்தில் இந்திய வியாபாரிகள் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று வியாழக்கிமை காலை கொழும்பிலிருந்து வந்த அதிகாரிகள் என்று தங்களை அறிமுகம் செய்துகொண்டவர்களால் கைது செய்யப்பட்டனர். உரிய விசா இன்றி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டே இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று புதன் கிழமை காலை 4.30 மணியளவலில் வெள்ளைநிற வான் ஒன்றில் வந்த குழுவினர் இந்திய வியாபாரிகள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த விடுதிகளுக்குள் சென்று அவர்கள் தங்கியிருந்த அறைகளை சோதனையிட்டு அவாகளின் கடவுச் சீட்டுக்களை பரிசோதனை செய்தனர். பின்னர் அவர்களை வாகனத்தில் ஏறும்படி கூறினர். அவர்கள் தாங்கள் வியாபாரம் செய்த பணத்தின் நிலுவையை வாங்க வேண்டியுள்ளதாக கூறியதால் முற்பகல் 10 மணியளவில் அவர்களை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.
இக் கைது குறித்து தமக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை என யாழ். பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து இராணுவப் பேச்சாளர் உபயமெதவெல தெரிவிக்கையில் இக் கைது குறித்து தமக்கு தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனவும், ஆனால், சுற்றுலா விசாவில் வந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் வியாபாரிகளை கைது செய்ய முடியும் எனவும் தெரிவித்தார். குறித்த வியாபாரிகள் இதற்காகவே கைது செய்யப்பட்டிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட குறித்த வியாபாரிகளின் கைத்தொலைபேசிகளுடன் தொடர்பு கொண்ட போது அவை செயலிழந்திருந்ததாக குறித்த வியாபாரிகள் தங்கியிருந்த விடுதி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.