விஸ்வா

விஸ்வா

யாழ்ப்பாணத்தில் 20 இந்திய வியாபாரிகள் கொழும்பிலிருந்து வந்த அதிகாரிகளால் கைது!

யாழ்ப்பாணத்தில் இந்திய வியாபாரிகள் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று வியாழக்கிமை காலை கொழும்பிலிருந்து வந்த அதிகாரிகள் என்று தங்களை அறிமுகம் செய்துகொண்டவர்களால் கைது  செய்யப்பட்டனர். உரிய விசா இன்றி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டே இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று புதன் கிழமை காலை 4.30 மணியளவலில் வெள்ளைநிற வான் ஒன்றில் வந்த குழுவினர் இந்திய வியாபாரிகள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த விடுதிகளுக்குள் சென்று அவர்கள் தங்கியிருந்த அறைகளை சோதனையிட்டு அவாகளின் கடவுச் சீட்டுக்களை பரிசோதனை செய்தனர். பின்னர் அவர்களை வாகனத்தில் ஏறும்படி கூறினர். அவர்கள் தாங்கள் வியாபாரம் செய்த பணத்தின் நிலுவையை வாங்க வேண்டியுள்ளதாக கூறியதால் முற்பகல் 10 மணியளவில் அவர்களை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

 இக் கைது குறித்து தமக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை என யாழ். பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து இராணுவப் பேச்சாளர் உபயமெதவெல தெரிவிக்கையில் இக் கைது குறித்து தமக்கு தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனவும், ஆனால், சுற்றுலா விசாவில் வந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் வியாபாரிகளை கைது செய்ய முடியும் எனவும் தெரிவித்தார். குறித்த வியாபாரிகள் இதற்காகவே கைது செய்யப்பட்டிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட குறித்த வியாபாரிகளின் கைத்தொலைபேசிகளுடன் தொடர்பு கொண்ட போது அவை செயலிழந்திருந்ததாக குறித்த வியாபாரிகள் தங்கியிருந்த விடுதி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ். பிரதேசச் செயலர்களுக்கு தம்புள்ளயில் செயலமர்வு

Dambulla_SLயாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள பிரதேசச் செயலர்களுக்கு இன்று வியாழக்கிழமையும் நாளையுமாக இரு நாட்கள் செயலமர்வு ஒன்று தம்புள்ளையில் நடைபெறுகின்றது. காணி நிர்வாகம் தொடர்பாகவே இச்செயலமர்வு நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செயலமர்வு காணி அமைச்சின் உயர் அதிகாரிகளினால் யாழ்ப்பாண பிரதேசச் செயலர்களுக்கு தமிழ் மொழி மூலம் நடத்தப்.படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”பச்சிலைப்பள்ளி மக்கள் மீள்குடியேற இரண்டு வருடங்களாகும்” அமைச்சர் தேவானந்தா

பச்சிலைப்பள்ளி மேற்குப்பகுதிகளில் மக்கள் மீள்குடியேற இரண்டு வருடங்களாகும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு

பச்சிலைப்பள்ளி மேற்குப்பகுதிகளில் அதிகளவு மிதிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதால் இப்பகுதி மக்கள் மீள்குடியேற இரண்டு வருடங்கள் ஆகும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பளை கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பச்சிலைப்பள்ளி மேற்குப்பகுதிகளான வேம்படுகேணி, இத்தாவில், முகமாலை, கிளாலி ஆகிய பகுதிகளில் மக்கள் மீள்குடியேறுவதற்கு உயர்பாதுகாப்புவலய பிரச்சினை எதுவும் இல்லை எனவும், அதிகமான மிதிவெடிகள் இப்பகுதியில் காணப்படுவதே காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பிட்ட இப்பகுதிகளில் வெடிபொருட்கள் மீட்கும் படைப்பிரிவினரால் அங்குளம் அங்குளமாக துப்புரவாக்கப்பட்டு மிதிவெடிகள் மீட்கப்பட்டு வருகின்ற நடவடிக்கைகளை  அவதானிக்க முடிகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

மட்டு. செட்டிப்பாளையத்தில் நிலை கொண்டிருந்த அதிரடிப்படையினர் வெளியேறியுள்ளனர்.

STF_SLForceமட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரிவிற்குட்பட்ட செட்டிப்பாளையத்தில் கடந்த 20 வருடங்களாக நிலைகொண்டிருந்த விசேட அதிரடிப்படையினர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

குறித்த பகுதியில் சுமார் 25 குடும்பங்களின் குடியிருப்புக்கள், நெசவு நிலைய கட்டடம், கிராம அபிவிருத்திச்சங்க கட்டடம் முதலானவற்றில் கடந்த 1990 ஆம் ஆண்டிலிருந்து விசேட அதிரடிப்படையினர் முகாமிட்டிருந்தனர். தற்போது மட்டக்களப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதிரடிப்படையினர் அவ்விடங்களிலிருந்து விலகிச் சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதயில் முன்னர் வாழ்ந்த மக்கள் தங்கள் குடியிருப்புக்களை துப்புரவு செய்து மீள்குடியேறும் நடவடிக்கைகளில் ஈடபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வடமராட்சியில் கசிப்பு தயாரித்த இரு பெண்களுக்கு அபாராதம் விதிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் கசிப்பு  வைத்திருந்த இரு பெண்களுக்கு நீதிமன்றினால் அதிகூடிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ். துன்னாலைத் தெற்கில் சட்டவிரோதமாக, உடல் நலத்திற்கு கேடான கசிப்பு எனப்படும் கள்ளச் சாராயம் தயாரிக்கப்பட்டு வந்தமை கண்டறியப்பட்டு இதனைத் தயாரிப்பதற்காக அவர்கள் வைத்திருந்த பெருமளவிலான உபகரணங்கள் மூலப்பொருட்கள் என்பனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்டப்ட இரு பெண்களும் பருத்தித்துறை நீதவான் திருமதி றோய் மகிழ் மகாதேவா முன்னிலையில் முற்படுத்தப்பட்டபோது, அப்பெண்களில் ஒருவருக்கு ஐந்து இலட்ச ரூபா அபராதமும், அடுத்தவருக்கு மூன்று இலட்ச ரூபா அபராதமும் விதித்தார்.

ஜனாதிபதியை சந்திக்க எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழ்தேசியக் கூட்டமைப்பு.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து உரையாட தமிழ்தேசியக்கூட்டமைப்பு தயராகவுள்ளதாகவும் ஆனால், ஜனாதிபதி தரப்பிலிருந்து எவ்வித அழைப்பும் வரவில்லை எனவும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் முன்னர் சந்தித்து கலந்துரையாடிய போது மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும், அபிவிருத்திப்பணிகள் தொடர்பாகவும், இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாகவும் ஆராய இருதரப்பும் இரு குழுக்களை அமைப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டது. அதன்படி மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, அபிவிருத்தி தொடர்பாக கூட்டமைப்பு தரப்பில் குழுவொன்று நியமிக்கப்பட்டு அக்குழுவில் இடம்பெறுபவர்களின் பெயர், விபரங்கள் அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அரசதரப்பு குழு அமைக்கப்படவில்லை. இதேபோல, இனப்பிரச்சினை தொடர்பாக ஆராய அரசாங்கத்தின் தரப்பில் குழுவொன்று நியமிக்கப்பட்டு பெயர் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ள போதும் கூட்டமைப்பு தமது பிரதிநிதிகளை இன்னமும் நியமிக்கவில்லை.

இந்நிலையில், ஜனாதிபதியுடனான மீண்டும் ஒரு சந்திப்பை கூட்டமைப்பு எதிர்பார்ப்பதாகத் தெரிகின்றது.

ஜனாதிபதி விரைவில் சீனப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதற்கு முன்பதாக கூட்டமைப்பினரைச் சந்திக்கவுள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புனர்வாழ்வு முகாம்களில் இன்னமும் 5100 முன்னாள் விடுதலைப்புலிகள் மட்டுமே உள்ளனர்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அரச படையினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னமும் 5100 பேர் மட்டும் புனர்வாழ்வு நிலையங்களில் உள்ளதாகவும், அவர்களையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இப்புனர்வாழ்வு நிலையங்களில் 93 பெண் போராளிகளே மீதமுள்ளதாகவும் அவர்களில் 43 பேர் க.பொ.த. சாதாரண பரீடசைக்குத் தோற்றிய பின்னர் விடுவிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். மீதமுள்ள பெண்களும் கட்டம் கட்டமாக அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்.பொது நூலகத்திற்கு ஜேர்மன் கலாசார அமையம் நூல்கள் அன்பளிப்பு.

யாழ்.பொது நூலகத்திற்கு ஜேர்மன் கலாசார அமையத்தினால் 2000 யூரோ பெறுமதியான நூல்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வு நேற்று செவ்வாய்கிழமை யாழ்.பொது நூலகத்தில் யாழ்.மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜேர்மன் கலாசார அமையத்தின் பணிப்பாளர் பிஜோன் கொரில்ஸ், யாழ்.பொது நூலகர் எஸ்.தனபாலசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜேர்மன் கலாசார அமையம் வருடந்தோறும் இலங்கையிலுள்ள நூலகங்களுக்கு 2000 யூரோ பெறுமதியான நூல்களை வழங்கி வருகின்றது. அவ்வகையில் இம்முறை யாழ்.நூலகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் நன்றி தெரிவித்து உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். பொது நூலகத்தை தமிழ்மக்களே பயன்படுத்துகின்றனர் ஆகவே தமிழ் மொழியிலான நூல்களை அதிகம் வழங்குவது பொருத்தமானது என தெரிவித்தார்.

அனுமதியின்றி மீள்குடியமர்ந்துள்ள வசந்தபுரம் மக்களை வெளியேறுமாறு படையினர் கோரிக்கை.

கொழும்புத்துறை வசந்தபுரம் என்ற இடத்திலிருந்து முன்னர் வெளியேறிய மக்கள் நேற்று முன்தினம் அப்பகுதியில் அனுமதியின்றி மீள் குடியமர்ந்துள்ளதால் அவர்களை வெளியேறுமாறு படைனயினர் அவர்களிடம் கோரியுள்ளனர்.

1995 ஆம் ஆண்டு வெளியேறிய அப்பகுதி மக்களில் 88 குடும்பங்கள் நேற்று முன்தினம் திங்கள் கிழமை தறப்பாள் கூடாரங்களை அமைத்துக்கொண்டு அப்பகுதிகளில் குடியமர்ந்துள்ளனர்.

இவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு படையினர் தெரிவித்து வருவதாகவும் ஆனால், அம்மக்கள் வெளியேற மறுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அப்பகுதியில் வெடிபொருட்கள் இன்னமும் அகற்றப்படவில்லை எனவும், இதேவேளை, அவர்கள் அப்பகுதியில் குடியேறுவதற்கான மேலிட அனுமதியும் வழங்கப்படவில்லை எனவும் படையினர் தெரிவிக்கின்றனர்.

தாங்கள் இவ்வளவு காலமும் வாடகை வீடுகளிலும் உறவினர் நண்பர்களின் வீடுகளிலும் தங்கியிருந்ததாகவும், தொடர்ச்சியாக அவ்வாறு தங்கியிருக்க முடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டதால் தங்களின் சொந்த இடங்களில் குடியேறியுள்ளதாகவும் இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் இம்மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு தொடர்ச்சியாக படையினர் கோரி வருகின்றனர்.

தெல்லிப்பழையில் மீள்குடியேற்றத்தை விரைவு படுத்த வெடிபொருட்கள் அகற்றும் பணி துரிதம்.

உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்த தெல்லிப்பழை கிராமசேவகர் பிரிவுகளில் மக்களை மீன்குடியேற்றுவதற்கு வசதியாக வெடிபொருட்கள் அகற்றும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை பிரதேசச் செயலர் பிரிவில் காங்கேசன் வீதியின் மேற்குப் புறமாகவுள்ள மாவிட்டபுரம் வரையிலான பகுதிகளில் மக்கள் மீள்குடியமர்வதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து அப்பகுதிகளின் மீள்குடியேற்றத்தை விரைவு படுத்தும் வகையில் துரிதமாக வெடிபொருட்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகின்றமை குறிப்படத்தக்கது.