விஸ்வா

விஸ்வா

வடக்கில் 110 பாடசாலைகள் தரமுயர்த்தப்படவுள்ளன.

இலங்கை முழுவதும் 1000 பாடசாலைகளை தரமுயர்த்துவது தொடர்பான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதன் அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் 110 பாடசாலைகள் தரமுயர்த்தப்படவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூட்டம் நேற்று புதன்கிழமை யாழ்.இந்துக் கல்லூரியில் நடைபெற்றது. இதன்போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

இவ்வேலைத்திட்டம் 2012ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையான காலத்திற்குட்பட்டதாக அமையும் எனவும், ஒவ்வொரு பாடசாலைக்கும் ஆகக் குறைந்த தொகையாக 5 மில்லியன் ரூபா தொடக்கம் 60 மில்லியன் ரூபா வரைக்கும் நிதி ஒதுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவீன கல்வி முறைகளை சகல மாணவர்களுக்கும் கிடைக்கச் செய்தல், கிராமப்புற மாணவர்களுக்கு சமவாய்ப்பினைப் பெற்றுக்கொடுத்தல் என்பன இத்திட்டத்தின்’ நோக்கம் என நேற்றைய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திச்சங்கச் செயலாளர்கள் முதலானோர் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்தனர். மற்றும் இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, வடமாகாண கல்விப் பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன். கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன், ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முன்னர் வடக்கில் 90 பாடசாலைகளை இத் தரமுயர்த்தலுக்காக தெரிவு செய்வதாக அறிவிக்கபட்டிருந்தமையும் வடமாகாண ஆளுநரின் கோரிக்கைக்கு அமைய 110 பாடசாலைகளைத் தரமுயர்த்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

விடுவிக்கப்பட்ட முன்னாள் புலிஉறுப்பினர்களின் நலன்களுக்காக குழுக்கள் அமைக்கப்படவுள்ளன.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் சமூகத்தோடு இணைந்து இயல்பு வாழ்வு வாழ்வதற்கான வழிவகைகளை மேற்கொள்வதற்கென தேசிய ரீதியிலான தலைமையின் கீழ் குழுக்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குழுக்களில் மாவட்ட அரசாங்க அதிபர்கள், சமூகத் தலைவர்கள், சமயத் தலைவர்கள் உள்ளடக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளான இவர்கள் சமூகத்துடன் இணைந்து இயல்பான வாழ்க்கைக்குத் திரும்புவதற்கான சகல உதவிகளையும் இக்குழுக்கள் முன்னெடுக்கம் எனவும். இக்குழுக்களின் செயற்பாடுகளுக்கென பல கோடிரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுசந்த ரணசிங்க நேற்று வியாழக்கிழமை யாழப்பாணத்தில் வைத்து தெரிவித்தார்.

இறுதி யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்த 12 ஆயிரம் முன்னாள் போராளிகளில் 5,221 பேர் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 594 பேர் சிறுவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

”பெண்கள் மேலதிகாரிகளால் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்றனர்” யாழ் அரசாங்க அதிபர் இமெல்டா சுகமார்

Imelda_Sugumar_GA_Jaffna”பெண்கள் மேலதிகாரிகளால் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்றனர்” என யாழ்ப்பாண அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்து உள்ளார். சிறுவர், முதயோர் தின விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டினார். இந்நிகழ்வு வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதேசச் செயலாளர் திருமதி தே பாபு தலைமை தாங்கினார்.

Imelda_Sugumar_at_Children_Dayஇதே போன்ற பெண் மாணவிகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டு யாழ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் சிலர் மீதும் சுமத்தப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.  ‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்

அரசாங்க அதிபர் ஒரு பெண் என்பதனாலும் தற்போது ஏற்பட்டு வரும் நம்பிக்கை காரணமாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை வெளியே கொண்டு வர முற்பட்டு உள்ளனர். அதனால் எதிர்காலத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் பல அநீதிகள் வெளிவரலாம் என சமூகவியலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் ஒரு பெண் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டு இருப்பது இதுவே முதற் தடவையாகும். இமெல்டா சுகுமார் யாழ்ப்பாணத்தின் 57வது அரசாங்க அதிபர். இவர் உத்தியோகத் தர வரிசையில் இலங்கையில் உள்ள 50 தரமான உத்தியோகஸ்தர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. யாழ் மாவட்டத்தில் சிறுவர்களின் நிலை மோசமானதாக இருப்பதாகத் தெரிவித்த அவர் அதனை மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இந்திய அரசினால் மேற்கொள்ளப்படும் வீட்டுத்திட்டம் வவுனியாவிலும் அமைக்கப்படவுள்ளது.

Charles_Mrs_GA_Vavuniyaஇந்திய அரசாங்கத்தின் நிதியுதிவியுடன் மேற்கொள்ளப்படும் வீடமைப்புத்திட்டம் வவனியாவில் அடுத்த வருடம் மாhச் மாதமளவிலேயே ஆரம்பமாகும் என வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி எச்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் யுத்தத்தால் சேதமுற்ற மற்றும், வீடுகள் இல்லாதவர்களுக்கு என சுமார் ஏழாயிரம் வீடுகள் இந்திய நிதியுதவியின் கீழ் அமைக்கப்படவுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். இத்திட்டத்திற்கான பயனாளிகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் வவுனியா மாவட்டத்தில் நான்கு பிரதேசச் செயலர் பிரிவுகளிலும் தற்போது நடைபெற்று வருகின்றன எனவும் பதிவகள் நிறைவு பெற்றதும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வீடமைப்புப் பணிகள் ஆரம்பமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மூன்று பகுதிகளில் இன்று மீள்குடியேற்றம்.

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசச் செயலர் பிரிவிற்குட்பட்ட விசுவமடு, கிழக்கு, விசுவமடு மேற்கு, மாணிக்கபுரம் ஆகிய கிராமசேவையாளர் பிரிவுகளில் இடம்பெயர்ந்த மக்கள் இன்று புதன்கிழமை மீள்குடியேற்றபடுகின்றனர். முகாம்களிலிருந்து வெளியேறி நண்பர்கள். உறவினர்கள் வீடுகளில் தங்கியிருந்த மக்களே இவ்வாறு மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.

விசுவமடு மகாவித்தியாலயத்தில் இயங்கும் புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க அதிபர் பணிமனையில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு இம்மக்கள் அவர்களின் சொந்தக் காணிகளில் மீள்குடியமர்த்தப்படுகின்றனர்.

இதேவேளை, முல்லத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசச்செயலர் பிரிவிலுள்ள மற்றுமொரு கிராமமான தேராவிலில் எதிர்வரும் 12ஆம் திகதி பொதுமக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியில் கைவிடப்பட்ட வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

Abondon_Motor_Vehiclesஇறுதிக் கட்டப் போரின் போது வன்னியில் பல பகுதிகளில் பொதுமக்களால் கைவிடப்பட்ட 121 வாகனங்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் வாகனப் பதிவுப் புத்தகம், பொலிஸ் முறைப்பாடு பிரதி, கிராமசேவையாளரினால் உறுதிப்படுத்தப்பட்ட இரு அடையாள அட்டைப்பிரதிகள், வரி அறவீட்டுப்படிவத்தின் பிரதி ஆகிய ஆவணங்களுடன் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் தங்கள் வாகனங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அடையாளம் காணப்பட்ட குறித்த வாகனங்களின் பதிவு இலக்கங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கைவிடப்பட்ட ஆயிரக்கணக்கான மோட்டார் சைக்கிள்கள் பழுதடைந்த நிலையில் கிளிநொச்சியில் வைக்கப்பட்டுள்ள போதிலும், பொதுமக்கள் தங்களது மோட்டார் சைக்கிள்களை அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட100 குடும்பங்களுக்கு இழப்பீடு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இக்குடும்பங்களுக்கு 12மில்லியன் ரூபாவை இழப்பீடாக வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இழப்பீடுகள் எதிர்வரும் 12ஆம் திகதி குறித்த மக்களிடம் கையளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சுயதொழில் நடவடிக்கைகளில் ஈடுபட பொருத்தமானவர்களைத் தெரிவு செய்யும் நிகழ்வும் நடைபெறும் எனவும், இவ்வாறு தெரிவு செய்யப்படுபவர்களுக்கு கடன் வசதிகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கில் புளியங்குளம், முல்லைத்தீவு, நெடுங்கேணி, அகிய பிரதேசங்களில் உள்ள சேதமுற்ற 250 வீடுகளைப் புனரமைப்பதற்கான நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தென்மராட்சி அல்லாரையில் முகமூடி அணிந்த துப்பாக்கி நபர்களினால் வீடொன்றில் கொள்ளை!

தென்மராட்சி அல்லாரைப் பகுதி வீடொன்றில் ஆயுதமனையில் 10 இலட்ச ருபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11மணியளவில் இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

துப்பாக்கிகள் சகிதம் முகமூடி அணிந்த எட்டுப்பேர் குறித்த வீட்டிற்குள் புகுந்து அவ்வீட்டிலிருந்த தந்தை, மகன் இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். தொடர்ந்து அவ்வீட்டிலிருந்த பெண்ணை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி அவர் அணிந்திருந்த நகைகளை அபகரித்ததோடு, வீட்டிலிருந்த பெறுமதியான பொருட்களையும் எடுத்துக் கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.

அல்லாரையைச் சேர்ந்த சிவகுரு பாலசிங்கம் என்பவரது வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 15 பவுண் தங்கநகை, 25ஆயிரம் ரூபா பணம், கமரா, தொலைபேசி உட்பட 10 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். அபிவிருத்தித் திட்டங்களுக்கு 909.39 மில்லியன் ஒதுக்கீடு.

Jaffna_Developmentயாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு 909.39 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வடக்கின் துரித மீட்சித்திட்டத்தின் கீழ் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் வீதிகள் பலநோக்கு கூட்டுறவுசங்கக் கிளைகள், பொதுக்கட்டடங்கள், குடிநீர் விநியோகத் திட்டங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள், பாடசாலைக் கட்டங்கள் திருத்துதல் முதலான அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டச் செயலகத்தில் அரச அதிபர் தலைமையில் நடைபெற்ற பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வடக்கின் மீட்சித்திட்டத்தின் மாதாந்த மீளாய்வுக் கூட்டத்தில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா சேமமடுவில் காட்டுயானைகள் அட்டகாசம்.

Elephant_Went_Wild_2007_Galleவவுனியா சேமமடு மக்கள் குடியிருப்புக்களில் காட்டு யானைகள் அட்டகாசம் புரிந்து வருகின்றன. குடியிருப்புக்களில் புகுந்து பயன்தரு மரங்களை அழித்து வருவதோடு பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும் இக்காட்டு யானைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து இப்பகுதியில் இக்காட்டு யானைகளை விரட்டியடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வனவளப் பாதுகாப்பு அதிகாரிகளும், இராணுவத்தினரும் இணைந்து இந்த யானைகளை நெடுங்கேணியிலுள்ள அடர்ந்த காட்டுப்பகுதிகளுக்குள் விரட்டியடிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.