”பெண்கள் மேலதிகாரிகளால் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்றனர்” என யாழ்ப்பாண அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்து உள்ளார். சிறுவர், முதயோர் தின விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டினார். இந்நிகழ்வு வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதேசச் செயலாளர் திருமதி தே பாபு தலைமை தாங்கினார்.
இதே போன்ற பெண் மாணவிகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டு யாழ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் சிலர் மீதும் சுமத்தப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. ‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்
அரசாங்க அதிபர் ஒரு பெண் என்பதனாலும் தற்போது ஏற்பட்டு வரும் நம்பிக்கை காரணமாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை வெளியே கொண்டு வர முற்பட்டு உள்ளனர். அதனால் எதிர்காலத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் பல அநீதிகள் வெளிவரலாம் என சமூகவியலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
யாழ்ப்பாணத்தில் ஒரு பெண் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டு இருப்பது இதுவே முதற் தடவையாகும். இமெல்டா சுகுமார் யாழ்ப்பாணத்தின் 57வது அரசாங்க அதிபர். இவர் உத்தியோகத் தர வரிசையில் இலங்கையில் உள்ள 50 தரமான உத்தியோகஸ்தர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. யாழ் மாவட்டத்தில் சிறுவர்களின் நிலை மோசமானதாக இருப்பதாகத் தெரிவித்த அவர் அதனை மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.