இறுதிக் கட்டப் போரின் போது வன்னியில் பல பகுதிகளில் பொதுமக்களால் கைவிடப்பட்ட 121 வாகனங்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் வாகனப் பதிவுப் புத்தகம், பொலிஸ் முறைப்பாடு பிரதி, கிராமசேவையாளரினால் உறுதிப்படுத்தப்பட்ட இரு அடையாள அட்டைப்பிரதிகள், வரி அறவீட்டுப்படிவத்தின் பிரதி ஆகிய ஆவணங்களுடன் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் தங்கள் வாகனங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அடையாளம் காணப்பட்ட குறித்த வாகனங்களின் பதிவு இலக்கங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, கைவிடப்பட்ட ஆயிரக்கணக்கான மோட்டார் சைக்கிள்கள் பழுதடைந்த நிலையில் கிளிநொச்சியில் வைக்கப்பட்டுள்ள போதிலும், பொதுமக்கள் தங்களது மோட்டார் சைக்கிள்களை அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.