அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

பாணின் விலை 4 ரூபாவினால் அதிகரிப்பு

பாணின் விலை நேற்று நள்ளிரவு முதல் 4 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக பேக்கரி உரிமையாளர் சங்கம் நேற்று தெரிவித்தது.

மேற்படி சங்கத்தின் நிறைவேற்றுக் குழு நேற்று கூடியபோதே இந்த தீர்மானத்தை எடுத்ததாக சங்கத்தின் செயலாளர் நிமல் பெரேரா தெரிவித்தார்.

கோதுமையின் இறக்குமதி தீர்வை, மீண்டும் அமுல்படுத்தப் பட்டுள்ளதையடுத்து மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள தாலேயே பாணின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாணின் விலை அதிகரிக்கப்பட்ட தைப் போன்றே கோதுமை மாவினால் தயாரிக்கப்படும் ஏனைய உணவு வகைகளின் விலையும் அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்

எம்.டரஸ்மனுக்கும் அரசிற்குமிடையே கருத்து முரண்பாடு

222.jpgஇலங் கையில் இடம்பெறும் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் 2008 ஆம் சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழுவில் அங்கம் வகித்தவரான எம்.டரஸ்மன் தற்போது இலங்கையின் யுத்தக் குற்றங்கள் தொடர்பான வல்லுனர் குழுவின் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது

சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழுவில் அங்கம்வகித்த போது அனுபவமிக்கவரான முன்னாள் சட்டமா அதிபர் எம்.டரஸ்மனுக்கும் இலங்கை அரசிற்குமிடையே பாரிய கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டமை குறிப்பிடதக்கது.

சல்மான்கான் நேற்று இலங்கை வருகை

salman.jpg‘ரெடி’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக பிரபல ஹிந்தித் திரைப்பட நடிகர் சல்மான் கான் நேற்று இலங்கை வந்து சேர்ந்தார். இப்படத்தில் சல்மான்கான் நடிக்கும் முதல்காட்சி நேற்றுக் கொழும்பில் படமாக்கப்பட்டது.

கொழும்பையும் அதனைச்சூழவு ள்ள பகுதிகளிலுமே ‘ரெடி’ திரைப் படத்தின் படப்பிடிப்பு இடம்பெற வுள்ளது. இத்திரைப்படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பு முழுவதும் இலங்கையிலேயே இடம்பெறவுள்ளது.

ஐ.நா நிபுணர் குழு நியமனம்

uno.jpgஇலங்கை யின் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக ஐ.நா செயலாளர் பான் கீ மூனுக்கு ஆலோசனை கூறும் மூன்று பேர் கொண்ட நிபுணர் குழுவை பான் கீ மூன் நியமித்துள்ளார். இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமா அதிபர் எம்.டரஸ்மன், அமெரிக்காவின் சட்டத்தரணி ஸ்ரிபன் ரட்னர், தென்னாபிரிக்காவின் சட்ட நிபுணர் ஜஸ்மின் சூகா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் ஐக்கிய நாடுகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இக்குழுவின் தலைமைப் பொறுப்பு எம்.டரஸ்மனுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று ஐ.நா.வின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த செயலாளர் நாயகத்துக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் இணக்கம் காணப்பட்ட விடயங்களின் அமுலாக்கத்துக்கு இந்நிபுணர் குழு செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழங்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குழு நான்கு மாதங்கள் வரை செயற்படும் என்றும் அதில் சொல்லப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகரசபை கலைப்பு

cmc.jpgகொழும்பு மாநகரசபை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண முதல் அமைச்சர் இந்த அறிவிப்பை  நேற்று விடுத்துள்ளார். ஊழல் குற்றச்சாட்டுக்கள் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகரசபை கலைக்கப்பட்டதும் அதன் நிர்வாகம் விசேட ஆணையாளரொருவரின் கீழ் கொண்டுவரப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகரசபைத் தேர்தலின்போது ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவுடனான சுயேச்சைக்குழு வெற்றியீட்டி அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்த போதிலும் மிகக் குறுகிய காலத்துக்குள் அதன் நிர்வாகம் குழப்பகரமான நிலைக்குத்தள்ளப்பட்டதையடுத்து மாநகர சபையைக் கலைக்காமல் நிர்வாகத்தை இடைநிறுத்தி விசேட தலைமை அதிகாரியின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

யாழ்.நூலக எரிப்புச் சம்பவத்துக்கு மன்னிப்பு கோரினார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க

9chnpika.jpgயாழ். நூலகத்தை முப்பது வருடங்களுக்கு முன்னால் தனது சமூகத்தைச் சேர்ந்த சில தீயவர்கள் எரித்து அழித்ததற்காக மன்னிப்புக் கோரினார் அமைச்சரும் ஜாதிக ஹெலஉறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க. யாழ்ப்பாணம் பொதுநூலகத்திற்கு ஜாதிக ஹெலஉறுமயவினால் ஒரு தொகுதி நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. இந்நிகழ்வு திங்கட்கிழமை அங்கு இடம்பெற்றபோது கலந்துகொண்டு உரையாற்றிய தருணத்திலேயே அமைச்சர் சம்பிக்க ரணவக்க நூலக எரிப்புச் சம்பவம் தொடர்பாக வருத்தம் தெரிவித்ததுடன், மன்னிப்பும் கோரினார்.

அவர் தமது உரையில் மேலும் தெரிவித்ததாவது;

எமது வரலாற்றில் புதிய அத்தியாயத்தை ஆரம்பிப்பதற்கு நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். தமிழ்க் கலாசாரத்தின் உண்மையான உணர்வை மீளப்பெறுவதற்கு உதவி வழங்க நாம் விரும்புகிறோம். அதனாலேயே சில புத்தகங்களுடன் நாம் இங்கு வந்திருக்கிறோம். முப்பது வருடங்களுக்கு முன்னர் துரதிர்ஷ்டவசமாக எனது சமூகத்தைச் சேர்ந்த சில தீய ஆட்கள் யாழ்.நூலகத்தை எரித்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்த பெறுமதிமிக்க புத்தகங்கள் எரிக்கப்பட்டன. அந்தத் தினத்தில் இடம்பெற்றவை தொடர்பாக நாங்கள் ஆழ்ந்த கவலையடைந்தோம். துரதிர்ஷ்டவசமாக வரலாற்றை மாற்ற முடியாது. எவ்வாறாயினும் சிறிய வழியிலாவது அந்தக் காயங்களை ஆற்றுவதற்கு எமது பங்களிப்பை வழங்க விரும்புகிறோம். அதனாலேயே நாம் இங்கு வந்துள்ளோம். கடந்த காலத்தைப் பற்றி நாங்கள் தொடர்ந்தும் சண்டையிட்டுக் கொண்டிருந்தால் நாம் எதனையும் வென்றெடுக்கப்போவதில்லை. நாங்கள் சகோதரர்களாக,சகோதரிகளாக எதிர்காலத்தை அணுகுவோமானால் அற்புதமான விடயங்களை வென்றெடுக்க முடியும்.

அரசியல் பிளவுகள் சில இருந்தாலும் 1983 இற்கு முன்னர் நாங்கள் சமாதானமாக வாழ்ந்தோம். யுத்தத்தின்போது கூட இன மோதல்களை நாம் கொண்டிருக்கவில்லை. வட அயர்லாந்தில் சமாதான கோடுகளென அழைக்கப்பட்ட முட்கம்பி வேலிகள் இடப்பட்டிருந்தன. அங்கு கத்தோலிக்கரும் புரட்டஸ்தாந்து மதத்தினரும் சண்டையிட்டனர். இந்தியாவில் இன மோதல்கள் பொதுவாக இடம்பெற்று வருகின்றன. நாங்கள் இராணுவ அரசியல் மோதலில் ஈடுபட்டிருந்த போதிலும் அவை சமூக மோதலாக உருமாறிச்செல்லவில்லை. அடிமட்டத்தில் நாங்கள் சமாதானமாகவே வாழ்ந்தோம். ஏனெனில் பல நூற்றாண்டுகளாக நாங்கள் பகிர்ந்து கொண்டிருக்கும் கலாசாரப் பாரம்பரியமே இதற்குக் காரணமென நான் நினைக்கின்றேன்.

ஆதலால் நல்லிணக்கத்துக்கான அத்திபாரமானது எமது சமூகத்திற்குள்ளேயே இருப்பதாக நான் நம்புகிறேன். இந்தக் கலாசார அரசியல் பிணைப்புகளை விரிவுபடுத்துவதாக அரசியல் ரீதியான இணக்கப்பாடு அமையும். எமது வரலாற்றில் துன்பகரமான அத்தியாயத்தை இப்போது முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறோம். புதிய எதிர்பார்ப்புகள்,புதிய சிந்தனைகள், புதிய உணர்வுகளுடன் புதியதை ஆரம்பிக்க விரும்புகிறோம். இனிமேலும் கடந்தவையைப் பற்றிக் கதைக்கக்கூடாது.

விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்பென நாங்கள் உறுதியாக நம்பினோம். அதனை இராணுவ ரீதியாகத் தோற்கடிக்க வேண்டுமெனக் கருதினோம்.  ஆயினும் எமது போராட்டம் சமாதான வழியிலும் ஜனநாயக ரீதியிலுமாகவுமே அமைந்தது. இப்போது புலிகள் இல்லை. ஜனநாயக ரீதியான பேச்சுவார்த்தைக்குத் தடையில்லை. எமது வேறுபாடுகளைப் பேணி கடைப்பிடிக்க வேண்டிய தேவையில்லை. இப்போது ஒற்றுமைத் தன்மையை தேடிக்கண்டுபிடிக்கவே விரும்புகிறோம்.

கோட்பாட்டுக்கு மாறான மாற்ற தடைச் சட்டமூலத்திற்கு தமிழ் எம்.பி.க்கள் சிலர் எம்முடன் ஒத்துழைத்துச் செயற்பட்டனர். எமது கலாசாரத்தைப் பாதுகாக்க நாம் விரும்புகிறோம். சிங்களவர்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்க நாம் விரும்புகிறோம். ஆயினும் ஏனைய சமூகங்களை நாங்கள் அழிக்க விரும்புகிறோம் என இது அர்த்தப்படாது. பௌத்த கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட கட்சியினராக நாம் உள்ளோம். நாங்கள் எப்போதுமே கலாசார மற்றும் பன்முகத்தன்மை தொடர்பாக நட்புறவுடனேயே உள்ளோம். சகல சமூகங்களின் மத்தியிலும் சிங்களவர்களின் சிறந்த நண்பர்களாக தமிழர்கள் வருவதற்கு முடியும். நாங்கள் ஒன்று சேர்ந்து எதிர்காலத்தில் முன்னேற முடியும்.

பிரிவினைவாதத்தை நம்புபவர்களை ஐக்கிய அமெரிக்காவின் வடபகுதிக்கு எதிராக தெற்கின் பிரிவினைவாத இராணுவத்திற்கு தலைமை தாங்கிய ஜெனரல் ரொபேர்ட் இ லீ குறித்து அறிந்துகொள்ளுமாறு நான் அழைப்பு விடுக்கிறேன். யுத்தத்தின் பின்னர் ஐக்கிய தேசத்தை ஒன்றுபட்டுக் கட்டியெழுப்புவதற்கு அவர் பாரிய பங்களிப்பை வழங்கியிருந்தார். அவருடைய மாளிகை கூட மயானமாக அழிக்கப்பட்டிருந்தது. அவர் இறந்து 13 வருடங்களின் பின்னரே அவரின் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்கப்பட்டது. நூறு வருடங்களுக்குப் பின்னரே அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது. நல்லிணக்கம் தொடர்பாக அந்நாட்டு அரசாங்கம் எதனையும் செய்திருக்கவில்லை. ஆயினும் அவர் ஒன்றுபட்ட அமெரிக்காவுக்கு அவர் ஆதரவு வழங்கினார். இந்த மாபெரும் இராணுவ ஜெனரலில் வரலாறானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நல்ல உதாரணமாக அமையுமென நான் நம்புகிறேன்

செம்மொழி மாநாடு கோவையில் இன்று கோலாகலமாக ஆரம்பம்

semmoli.jpgஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு தமிழ்நாட்டின் கோவை நகரில் இன்று 23ம் திகதி காலை கோலாகலமாக ஆரம்பமாகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு. கருணாநிதி தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை ஜனாதிபதி பிரதீபாபட்டேல் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கிறார்.

கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் செம்மொழி மாநாட்டின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் நடைபெறுகின்றன. இன்று ஆரம்பமாகும் செம்மொழி மாநாடு தொடர்ச்சியாக ஐந்து தினங்கள் நடைபெற்று எதிர்வரும் 27ம் திகதி நிறைவு பெறுகிறது.

இதேவேளை செம்மொழி மாநாட்டில் பங்கேற்பதற்காக உலகின் சுமார் ஐம்பது நாடுகளிலிருந்து ஐயாயிரம் பேர் வரையான தமிழறிஞர்கள் கோவைக்கு வந்து சேர்ந்துள்ளனர். இலங்கைத் தமிழறிஞரான பேராசிரியர் கா. சிவத்தம்பியும் இவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவராவார். இன்றைய நிகழ்ச்சிகளில் முக்கியமானதாக பேரணியொன்று நடைபெறுகிறது. ‘இனியவை நாற்பது’ என்ற தலைப்பில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்புடன் இன்று மாலை கோவையில் பேரணி நடைபெறுகிறது.

செம்மொழி மாநாட்டில் ஆயிரத்து இருபது தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள் அறிஞர்களால் சமர்ப்பிக்கப்படுகின்றன. நிகழ்ச்சிகள் நடைபெறும் நவீன உள்ளரங்கம், பிரமாண்டமான விழாப் பந்தல், மேடை, கண்காட்சி அரங்கம், ஆய்வரங்கங்கள் ஆகியன கண்கொள்ளாக் காட்சியாக அமைந்துள்ளன.

வடக்கில் சேதமடைந்த அரச அலுவலகங்களை நிர்மாணிக்க ரூ.89 கோடி

வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சகல அரச அலுவலகங்களையும் மீள நிர்மாணிப்பதற்கான இரண்டு வருட செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இதற்கென முதற்கட்டமாக ஆசிய அபிவிருத்தி வங்கி 89 கோடி ரூபாவை வழங்கியுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்தது.

வடக்கில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டச் செயலகங்கள் உட்பட யுத்தத்தினால் பாதிப்படைந்த சகல அரச நிர்வாகச் கட்டிடங்களும் இதன் மூலம் மீள நிர்மாணிக்கப்படவுள்ளன. இத்திட்டத்தின் முதற்கட்டமாக கிளிநொச்சி மாவட்ட செயலகம் 200 மில்லியன் ரூபா செலவிலும் முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் 60 மில்லியன் ரூபா செலவிலும் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளன.

அத்துடன் கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலுள்ள பிரதேச செயலகங்களும் இப்பிரதேசங்களிலுள்ள கிராம சேவையாளர் காரியாலயங்களும் புனரமைப்புச் செய்யப்படவுள்ளதாக அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; வடக்கில் கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள சகல அரச அலுவலகங்களும் தற்போது செயற்படுகின்றன.

புதுக்குடியிருப்பு மற்றும் மருதங்கேனி போன்ற பிரதேச செயலகங்கள் வேறு இடங்களில் இயங்கி வருவதுடன் ஏனைய சகல அரச அலுவலகங்களும் தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த செயலகங்களுக்கான தளபாடங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட பல செயலகங்கள் புனரமைக்கப்பட்டு இயங்க வைக்கப்பட்டுள்ளன. இதற்கென 175 மில்லியன் ரூபாவை 2009ம் ஆண்டுக்காக அரசாங்கம் ஒதுக்கியுள்ளதுடன் அதில் 152 மில்லியன் ருபா செலவிடப்பட்டு பெரும்பாலான கட்டிடங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து 2010ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள செயற்றிட்டங்கள் இரண்டு வருடத்திட்டமாக முன்னெடுக்கப்படுவதுடன் அதனை அடுத்து வரும் இரண்டு வருடங்களில் சகல அரச கட்டிடங்களும் முழுமையாக மீள்நிர்மாணம் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கோதுமை மா விலை ரூபா 10.50ஆல் அதிகரிப்பு

கோதுமை தானியம் இறக்குமதிக்கான வரிச் சலுகையை நீக்க நிதி அமைச்சு அனுமதி வழங்கியதை அடுத்து கோதுமை மா நிறுவனங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாவின் விலையை கிலோ ஒன்றுக்கு ரூபா 10.50 ஆல் அதிகரித்துள்ளன.

கோதுமை தானிய இறக்குமதிக்கென வழங்கப்பட்டிருந்த வரிச்சலுகையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்க நிதி அமைச்சு நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய கோதுமை தானிய இறக்குமதிக்கான வரி 15 சதவீதத்தால் அல்லது கிலோவொன்றுக்கு 10 ரூபாவால் அதிகரிக்குமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மா கிலோவொன்றின் விலையை ரூபா 10.50 ஆல் அதிகரிக்குமாறு பிறிமா நிறுவனம் தனது முகவர்களுக்கு நேற்று அறிவித்துள்ளது.

கோதுமை மா கிலோவொன்றின் விலை ரூபா 10.50 ஆல் அதிகரிக்கப்பட்டிருப்பதாக பிறிமா நிறுவனமும் செரண்டிப் நிறுவனமும் தங்களுக்கு அறிவித்திருப்பதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, இதுவரை 63 ரூபாவாக இருந்த கோதுமை மா கிலோவொன்றின் விற்பனை விலை அரசாங்கம் வழங்கிய வரிச் சலுகை நீக்கத்தால் ரூபா 73.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பதவி வகிப்பதை இரு தடவையாக மட்டுப்படுத்துவது ஜனநாயக விரோதம்

cadar.jpgபாராளு மன்றத்திற்கு எத்தனை தடவையும் போட்டியிட முடியுமென்றால், ஜனாதிபதி பதவிக்கு ஏன் போட்டியிட முடியாதென்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆர். எம். அப்துல் காதர் கேள்வி எழுப்பியுள்ளார். ஒருவர் ஜனாதிபதியாகப் பதவி வகிப்பதை இரண்டு தடவையாக மட்டுப்படுத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானதென்றும் காதர் எம். பி. தெரிவித்தார்.

மக்கள் ஆணை கிடைக்கும் வரை ஜனாதிபதியாக இருக்கும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்பட வேண்டும். அவ்வாறான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டால், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் மீண்டும் போட்டியிடும் நிலை உருவாகும்’ என்று சுட்டிக்காட்டிய அவர், ஜனாதிபதி பதவியை இரண்டு தடவைக்கு மேல் வகிப்பதற்கான அரசியலமைப்பு திருத்தத்தை எதிர்ப்பவர்கள் தமது அரசியல் சுயலாபத்திற்காக மக்களைக் குழப்புகிறார்களென்றும், இரண்டு தடவையாக மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் சரத்தை அரசியலமைப்பில் நீக்க வேண்டுமென்று மங்கள சமரவீர எம். பியும் முன்பு ஒரு தடவை வலியுறுத்தியிருந்தாரென்றும் குறிப்பிட்டார்.