யாழ்.நூலக எரிப்புச் சம்பவத்துக்கு மன்னிப்பு கோரினார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க

9chnpika.jpgயாழ். நூலகத்தை முப்பது வருடங்களுக்கு முன்னால் தனது சமூகத்தைச் சேர்ந்த சில தீயவர்கள் எரித்து அழித்ததற்காக மன்னிப்புக் கோரினார் அமைச்சரும் ஜாதிக ஹெலஉறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க. யாழ்ப்பாணம் பொதுநூலகத்திற்கு ஜாதிக ஹெலஉறுமயவினால் ஒரு தொகுதி நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. இந்நிகழ்வு திங்கட்கிழமை அங்கு இடம்பெற்றபோது கலந்துகொண்டு உரையாற்றிய தருணத்திலேயே அமைச்சர் சம்பிக்க ரணவக்க நூலக எரிப்புச் சம்பவம் தொடர்பாக வருத்தம் தெரிவித்ததுடன், மன்னிப்பும் கோரினார்.

அவர் தமது உரையில் மேலும் தெரிவித்ததாவது;

எமது வரலாற்றில் புதிய அத்தியாயத்தை ஆரம்பிப்பதற்கு நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். தமிழ்க் கலாசாரத்தின் உண்மையான உணர்வை மீளப்பெறுவதற்கு உதவி வழங்க நாம் விரும்புகிறோம். அதனாலேயே சில புத்தகங்களுடன் நாம் இங்கு வந்திருக்கிறோம். முப்பது வருடங்களுக்கு முன்னர் துரதிர்ஷ்டவசமாக எனது சமூகத்தைச் சேர்ந்த சில தீய ஆட்கள் யாழ்.நூலகத்தை எரித்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்த பெறுமதிமிக்க புத்தகங்கள் எரிக்கப்பட்டன. அந்தத் தினத்தில் இடம்பெற்றவை தொடர்பாக நாங்கள் ஆழ்ந்த கவலையடைந்தோம். துரதிர்ஷ்டவசமாக வரலாற்றை மாற்ற முடியாது. எவ்வாறாயினும் சிறிய வழியிலாவது அந்தக் காயங்களை ஆற்றுவதற்கு எமது பங்களிப்பை வழங்க விரும்புகிறோம். அதனாலேயே நாம் இங்கு வந்துள்ளோம். கடந்த காலத்தைப் பற்றி நாங்கள் தொடர்ந்தும் சண்டையிட்டுக் கொண்டிருந்தால் நாம் எதனையும் வென்றெடுக்கப்போவதில்லை. நாங்கள் சகோதரர்களாக,சகோதரிகளாக எதிர்காலத்தை அணுகுவோமானால் அற்புதமான விடயங்களை வென்றெடுக்க முடியும்.

அரசியல் பிளவுகள் சில இருந்தாலும் 1983 இற்கு முன்னர் நாங்கள் சமாதானமாக வாழ்ந்தோம். யுத்தத்தின்போது கூட இன மோதல்களை நாம் கொண்டிருக்கவில்லை. வட அயர்லாந்தில் சமாதான கோடுகளென அழைக்கப்பட்ட முட்கம்பி வேலிகள் இடப்பட்டிருந்தன. அங்கு கத்தோலிக்கரும் புரட்டஸ்தாந்து மதத்தினரும் சண்டையிட்டனர். இந்தியாவில் இன மோதல்கள் பொதுவாக இடம்பெற்று வருகின்றன. நாங்கள் இராணுவ அரசியல் மோதலில் ஈடுபட்டிருந்த போதிலும் அவை சமூக மோதலாக உருமாறிச்செல்லவில்லை. அடிமட்டத்தில் நாங்கள் சமாதானமாகவே வாழ்ந்தோம். ஏனெனில் பல நூற்றாண்டுகளாக நாங்கள் பகிர்ந்து கொண்டிருக்கும் கலாசாரப் பாரம்பரியமே இதற்குக் காரணமென நான் நினைக்கின்றேன்.

ஆதலால் நல்லிணக்கத்துக்கான அத்திபாரமானது எமது சமூகத்திற்குள்ளேயே இருப்பதாக நான் நம்புகிறேன். இந்தக் கலாசார அரசியல் பிணைப்புகளை விரிவுபடுத்துவதாக அரசியல் ரீதியான இணக்கப்பாடு அமையும். எமது வரலாற்றில் துன்பகரமான அத்தியாயத்தை இப்போது முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறோம். புதிய எதிர்பார்ப்புகள்,புதிய சிந்தனைகள், புதிய உணர்வுகளுடன் புதியதை ஆரம்பிக்க விரும்புகிறோம். இனிமேலும் கடந்தவையைப் பற்றிக் கதைக்கக்கூடாது.

விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்பென நாங்கள் உறுதியாக நம்பினோம். அதனை இராணுவ ரீதியாகத் தோற்கடிக்க வேண்டுமெனக் கருதினோம்.  ஆயினும் எமது போராட்டம் சமாதான வழியிலும் ஜனநாயக ரீதியிலுமாகவுமே அமைந்தது. இப்போது புலிகள் இல்லை. ஜனநாயக ரீதியான பேச்சுவார்த்தைக்குத் தடையில்லை. எமது வேறுபாடுகளைப் பேணி கடைப்பிடிக்க வேண்டிய தேவையில்லை. இப்போது ஒற்றுமைத் தன்மையை தேடிக்கண்டுபிடிக்கவே விரும்புகிறோம்.

கோட்பாட்டுக்கு மாறான மாற்ற தடைச் சட்டமூலத்திற்கு தமிழ் எம்.பி.க்கள் சிலர் எம்முடன் ஒத்துழைத்துச் செயற்பட்டனர். எமது கலாசாரத்தைப் பாதுகாக்க நாம் விரும்புகிறோம். சிங்களவர்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்க நாம் விரும்புகிறோம். ஆயினும் ஏனைய சமூகங்களை நாங்கள் அழிக்க விரும்புகிறோம் என இது அர்த்தப்படாது. பௌத்த கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட கட்சியினராக நாம் உள்ளோம். நாங்கள் எப்போதுமே கலாசார மற்றும் பன்முகத்தன்மை தொடர்பாக நட்புறவுடனேயே உள்ளோம். சகல சமூகங்களின் மத்தியிலும் சிங்களவர்களின் சிறந்த நண்பர்களாக தமிழர்கள் வருவதற்கு முடியும். நாங்கள் ஒன்று சேர்ந்து எதிர்காலத்தில் முன்னேற முடியும்.

பிரிவினைவாதத்தை நம்புபவர்களை ஐக்கிய அமெரிக்காவின் வடபகுதிக்கு எதிராக தெற்கின் பிரிவினைவாத இராணுவத்திற்கு தலைமை தாங்கிய ஜெனரல் ரொபேர்ட் இ லீ குறித்து அறிந்துகொள்ளுமாறு நான் அழைப்பு விடுக்கிறேன். யுத்தத்தின் பின்னர் ஐக்கிய தேசத்தை ஒன்றுபட்டுக் கட்டியெழுப்புவதற்கு அவர் பாரிய பங்களிப்பை வழங்கியிருந்தார். அவருடைய மாளிகை கூட மயானமாக அழிக்கப்பட்டிருந்தது. அவர் இறந்து 13 வருடங்களின் பின்னரே அவரின் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்கப்பட்டது. நூறு வருடங்களுக்குப் பின்னரே அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது. நல்லிணக்கம் தொடர்பாக அந்நாட்டு அரசாங்கம் எதனையும் செய்திருக்கவில்லை. ஆயினும் அவர் ஒன்றுபட்ட அமெரிக்காவுக்கு அவர் ஆதரவு வழங்கினார். இந்த மாபெரும் இராணுவ ஜெனரலில் வரலாறானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நல்ல உதாரணமாக அமையுமென நான் நம்புகிறேன்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • palli
    palli

    அப்போ என்னும் 25 ஆண்டுகள் போன பின் தான் முள்ளிவாய்க்கால் மன்னிப்பா??

    Reply