செம்மொழி மாநாடு கோவையில் இன்று கோலாகலமாக ஆரம்பம்

semmoli.jpgஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு தமிழ்நாட்டின் கோவை நகரில் இன்று 23ம் திகதி காலை கோலாகலமாக ஆரம்பமாகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு. கருணாநிதி தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை ஜனாதிபதி பிரதீபாபட்டேல் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கிறார்.

கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் செம்மொழி மாநாட்டின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் நடைபெறுகின்றன. இன்று ஆரம்பமாகும் செம்மொழி மாநாடு தொடர்ச்சியாக ஐந்து தினங்கள் நடைபெற்று எதிர்வரும் 27ம் திகதி நிறைவு பெறுகிறது.

இதேவேளை செம்மொழி மாநாட்டில் பங்கேற்பதற்காக உலகின் சுமார் ஐம்பது நாடுகளிலிருந்து ஐயாயிரம் பேர் வரையான தமிழறிஞர்கள் கோவைக்கு வந்து சேர்ந்துள்ளனர். இலங்கைத் தமிழறிஞரான பேராசிரியர் கா. சிவத்தம்பியும் இவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவராவார். இன்றைய நிகழ்ச்சிகளில் முக்கியமானதாக பேரணியொன்று நடைபெறுகிறது. ‘இனியவை நாற்பது’ என்ற தலைப்பில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்புடன் இன்று மாலை கோவையில் பேரணி நடைபெறுகிறது.

செம்மொழி மாநாட்டில் ஆயிரத்து இருபது தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள் அறிஞர்களால் சமர்ப்பிக்கப்படுகின்றன. நிகழ்ச்சிகள் நடைபெறும் நவீன உள்ளரங்கம், பிரமாண்டமான விழாப் பந்தல், மேடை, கண்காட்சி அரங்கம், ஆய்வரங்கங்கள் ஆகியன கண்கொள்ளாக் காட்சியாக அமைந்துள்ளன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *