அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குண்டுத் தாக்குதலுடன் கெயார் நிறுவனத்துக்குத் தொடர்பு

care-international.jpgபாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவைப் படுகொலை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட குண்டு கெயார் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனத்தின் வாகனத்தின்மூலமே கொழும்புக்கு எடுத்துவரப்பட்டதாகப் பொலிஸார், கொழும்பு நீதிமன்றத்திடம் தெரிவித்தனர். கெயார் நிறுவனப் பணியாளர்களான தர்மலிங்கம் தர்மதரன், இராசையா கண்ணன் ஆகிய இருவருமே குறிப்பிட்ட வாகனத்தில் குண்டைக் கொழும்புக்கு எடுத்துவந்தார்கள் என்பது விசாரணைகள் மூலம் அறியப்பட்டதாகப் பொலிஸார் நீதிமன்றத்தில் கூறினர்.

இவ்வாறு கொழும்புக்கு எடுத்தவரப்பட்ட குண்டை வெள்ளவத்தை உருத்திரா மாவத்தையிலுள்ள வீடொன்றில் மறைத்து வைப்பதற்கான ஏற்பாடுகளை சிவலிங்கம் ஆரூரன் என்ற நபர் மேற்கொண்டிருந்ததாகவும், அந்தக் குண்டு மோதரைப் பகுதியைச் சேர்ந்த லத்தீஃவ் முகமட் என்பவரின் முச்சக்கரவண்டியில் எடுத்துச் சென்றதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.இந்தக் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நபர்களைக் கைதுசெய்திருப்பதுடன், குண்டைக் கொழும்புக்குக் கொண்டுவரப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தை அரசாங்கப் பகுப்பாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைத்திருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

விடுதலைப் புலிகள் வழங்கிய கட்டளையின் படி ஆரூரன் என்பவர் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவைப் படுகொலை செய்வதற்கு முயற்சித்ததாகப் பொலிஸார் கூறினர்.பொலிஸாரின் அறிக்கையை ஆராய்ந்த நீதிமன்றம் சந்தேகநபர்களை எதிர்வரும் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் திகதி கொழும்பு கொள்ளுப்பிட்டி பித்தளைச் சந்திப் பகுதியில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவை இலக்குவைத்துத் தற்கொலைக் குண்டுத்தாக்குதலொன்று நடத்தப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வணங்கா மண் கப்பல் ஊழியர்களில் சிலருக்கு உடல் நலம் பாதிப்பு

vanangaaman-captainali.jpgஇலங்கை அரசால் திருப்பி அனுப்பப்பட்டு தற்போது சென்னை அருகே நடுக் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் வணங்கா மண் நிவாரணக் கப்பல் ஊழியர்களில் இருவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வணங்கா மண் கப்பலிலிருந்து உதவி கோரப்பட்டால் உடனடியாக செய்ய சென்னை துறைமுகம் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.வி. கேப்டன் அலி என்று பெயரிடப்பட்ட வணங்கா மண் கப்பலில் ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் சேகரித்து அனுப்பிய நிவாரணப் பொருட்கள் உள்ளன. இந்தப் பொருட்களுடன் வன்னிப் பகுதிக்கு இக்கப்பல் வந்தபோது கப்பலை உள்ளே நுழைய விடாமல் அப்படியே திருப்பி அனுப்பி விட்டது இலங்கை அரசு.

இதனால் எங்கு போவது என்று தெரியாமல் வணங்கா மண் கப்பல் சென்னைக்கு அருகே 18 கடல் மைல் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இக்கப்பலில் 13 ஊழியர்கள் உள்ளனர். அவர்களின் உடல் நலம் தற்போது மெல்ல மெல்ல பாதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆரோக்கியமான குடிநீர், உணவு ஆகியவை கிடைக்காததால் கப்பல் ஊழியர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

சிரியாவைச் சேர்ந்த ஒருவர் மற்றும் ஐஸ்லாந்தைச் சேர்ந்த ஒருவர் ஆகிய இருவருக்கு தற்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாம். இவர்கள் இருவரும் இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவில் முன்பு இடம் பெற்றிருந்தவர்கள்.

கொண்டு வந்த நிவாரணப் பொருட்களை சென்னையில் இறக்குவதற்காக தற்போது கப்பல் காத்திருப்பதாக தெரிகிறது. இதுதொடர்பாக மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாம். இந்த நிலையில் கப்பல் ஊழியர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு வருவதால், அவசர உதவிகள் தேவைப்பட்டால் செய்வதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக சென்னை துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முள்வேலிக்குள் உள்ள எம் இன விடுதலைக்காக இன்று லண்டனில் மாபெரும் பேரணி

londonparliament.jpgயூன் மாதம் 20ம் (இன்று)திகதி சனிக்கிழமை லண்டன் மாநகரில், முள்வேலியின் பின்னால் நிற்கும் மக்கள் மீட்கப்பட்டு அவர்கட்கு இயல்பு நிலை வாழ்க்கை ஏற்படுத்தித் தரப்பட வேண்டும் என்பதனை அடிநாதமாகக் கொண்டு மாபெரும் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் உள்ள சகல அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்களையும் இணைத்து பிரித்தானிய தமிழர் பேரவையால் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து இப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1. காணாமல் போனவர்கள் மீட்கப்பட வேண்டும்.
2. முகாம்களில் வாழும் மக்கள் இயல்பு நிலைக்கு மீளவேண்டும்.
3. இனப்படுகொலையை நிகழ்த்தியோரும் அதனை மூடி மறைப்போரும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

என்பவையே இப்பேரணியில் மையப்படுத்தப்பட்டுள்ள கோரிக்கைகளாகும். ஈழத்தமிழர்களுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றுள்ளதாக இலங்கை அரசு அறிவித்தபின்னர் நடைபெறும் இப்பேரணி மேற்குலக அரசுகளினாலும் ஊடகங்களினாலும் உற்று நோக்கப்படுகின்றன.

இரண்டொரு வாரங்களில் 950 டொக்டர்கள் நியமனம்

nimal-sripala.jpgஅரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கு 950 டொக்டர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இன்னும் இரண்டொரு வாரங்களில் இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

950 டாக்டர்களில் 122 பேர் வட மாகாணத்தில் பணியாற்றுவதற்காக நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இவர்கள் நிரந்தரமாகவே வடக்கில் பணியாற்றுவார்கள் என்றார். வடக்கு வசந்தத்திற்கு ஒரு உந்து சக்தியாகவே 122 டொக்டர்களும் அங்கு அனுப்பப்படவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதிக்கும் படை உயர் அதிகாரிகளுக்கும் இன்று சுதந்திர சதுக்கத்தில் கௌரவம் – அமரபுர மற்றும் ராமன்ய நிக்காயக்கள் ஏற்பாடு

mahinda-rajapaksha.jpgபயங் கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் உன்னதப் பணிக்குத் தலைமை தாங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,  இதனை சிறப்பாக வழிநடத்திய பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, முப்படைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையின் பணிப்பாளர் நாயகம் ஆகியோரைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வொன்றை ஸ்ரீலங்கா அமரபுர நிக்காய மற்றும் ஸ்ரீலங்கா ராமன்ய நிக்காய ஆகிய உயர் பௌத்த பீடங்கள் இன்று கொழும்பில் ஏற்பாடு செய்துள்ளன.

இந்த வைபவம் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது. இடவசதி மற்றும் பாதுகாப்பு என்பவற்றைக் கருத்திற்கொண்டு சுமார் ஆயிரம் பேரளவானோரே இவ்வைபவத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக இரு பௌத்த பீடங்களும் தெரிவித்துள்ளன.

நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் மூலம் இரு பீடங்களும் ஒன்றாக இணைந்து நிகழ்ச்சிகளை நடத்தக்கூடிய வாய்ப்புக் கிடைத்துள்ளதாகவும் இவ்விரு பீடங்களும் ஒன்றிணைந்து நிகழ்ச்சியொன்றை நடத்துவது வரலாற்றில் இதுவே முதல்தடவையாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,  இந்த வைபவத்தை முன்னிட்டு இன்று பகல் 1.00 மணியிலிருந்து இரவு 8.00 மணி வரை கொழும்பின் சில வீதிகளில் போக்குவரத்து அனுமதிக்கப்பட் மாட்டாது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

கொழும்பின் சில பகுதிகளில் இன்றும் நாளையும் நீர்வெட்டு – தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவிப்பு

கொழும்பின் சில பகுதிகளில் இன்று காலை 9.00 மணி முதல் நாளை இரவு 9.00 மணி வரையான 36 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

கலட்டுவாவிலிருந்து தெஹிவளை நீர்த் தேக்கம் வரை நீர் விநியோகம் செய்யும் குழாயில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்த வேலைகள் காரணமாகவே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி தெஹிவளை-கல்கிஸ்ஸ மாநகர சபை எல்லை,  சொய்சாபுர, மொரட்டுவை, வெள்ளவத்தை,  பாமன்கடை, கிருலப்பனை, ஹெவலொக்டவுன்,  கொஹவல, மாளிகாகொடல்ல,  கிம்புடான,  முல்லேரியாவ,  ஐ.டி.எச்.,  அங்கொடை, முல்லேரியா ஆஸ்பத்திரி, பன்னிபிட்டிய, ஹோமாகம,  ருக்மல்கம,  மத்தேகொட,பெலவத்த மற்றும் மஹரகம ஆகிய பகுதிகள் நீர்வெட்டினால் பாதிக்கப்படும் என்றும் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது. 

24 மணி நேரமும் மீன்பிடிப்பதற்கு வடக்கு மீனவர்களுக்கு அனுமதி – 15 குதிரைவலு கொண்ட படகுகளை பாவிக்க முடியும்

basil.jpgயாழ். குடா நாட்டின் கடற் பிரதேசத்தில் மீனவர்களுக்கு மீன்பிடிப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த தடைகள் யாவும் நேற்றுடன் நீக்கப்பட்டுள்ளன. இதன்படி 24 மணி நேரமும் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  ஜனாதிபதியின் பணிப்பிற்கமைய வட மாகாண விசேட ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ எம்.பி. நேற்று யாழ். மீனவர்களுக்கு உத்தியோகபூர்வமாக இதனை அறிவித்தார்.

மீனவர்களின் மீன்பிடி உபகரணங்களுக்கென 303 மில்லியன் ரூபாவை உடனடியாக வழங்குவதாகக் கூறிய பசில் ராஜபக்ஷ எம்.பி., 15 முதல் 25 வரையிலான குதிரை வலு கொண்ட இயந்திரப் படகுகளைக் கொண்டு இன்று முதல் மின்பிடிக்கலாம் என்றும் கூறினார். கடலில் மீனவர்கள் செல்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தூரக்கட்டுப்பாடும் நீக்கப்பட்டு விட்டதாக அவர் அறிவித்தார்.

கட்டுமரம், தோணி என்பவற்றை பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொண்ட அவர், ராடர் திரைகளில் அவை தெரியாத காரணத்தினாலேயே இவற்றை உபயோகிக்க வேண்டாம் எனக் கேட்பதாக தெரிவித்த அவர், ராடர் திரைகளில் பதிவாகும் விதத்தில் கட்டுமரம், தோணி என்பவற்றுக்கு சாதனங்கள் பொருத்தப்பட்டதும் இவற்றை உபயோகிக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.

பிடிக்கும் மீன்களை குளிரூட்டப்பட்ட லொறிகளில் (கூலர்) ஏற்றி நேரடியாக ஏ-9 பாதையூடாக கொழும்புக்கு கொண்டு வரவும் இன்று முதல் அனுமதி வழங்கப்படுகிறது. லொறிகளில் ஏற்றப்படும் மீன்களை அந்த இடத்திலேயே சோதனை செய்து சீல் செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் பசில் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.

யாழ். மீனவக் கிராமங்கள் அனைத்திலுமுள்ள உட்கட்ட மைப்பு வசதிகள், வீடமைப்புகள், மீன்பிடி துறைமுகங்கள், இறங்கு துறைகள், மீன்களின் மொத்த விற்பனைக் கூடங்கள் அனைத்தும் புனரமைப்பு செய்யப்படும் என்றும் பசில் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.பிடிக்கும் மீன்கள் பழுதுபடாமல் பாதுகாத்து வைப்பதற்கான குளிரூட்டிகள் இல்லாத காரணத்தினால் கிழக்கிலிருந்து தற்காலிகமாக இரண்டு கூலர்களை யாழ். குடா நாட்டிற்கு கொண்டு வருவது என்றும் நேற்று தீர்மானிக்கப்பட்டது.

மீனவர்களுக்கு தேவையான மீன்பிடி உபகரணங்களுக்காக வழங்கப்படும் 303 மில்லியன் ரூபாவில் 78 மில்லியன் ரூபாவை கடற்றொழில் அமைச்சும், எஞ்சிய தொகை கமநெகும திட்டத்தினூடாகவும் வழங்கப்படவுள்ளது.

யாழ். குடாநாட்டின் மீள்குடியேற்றம் தொடர்பாக பசில் ராஜபக்ஷ எம்.பி. பேசும் போது, யாழ். குடா நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து சென்றோர் வவுனியா நிவாரணக் கிராமங்களில் இருப்பினும் தாமதமின்றி உடனடியாக அவர்கள் அனைவரும் குடாநாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

நேற்றுக் காலை யாழ். காரைநகரிலுள்ள தியாகராஜா வித்தியாலயத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தின் போது யாழ். குடாநாட்டின் அனைத்து பகுதிகளிலுமுள்ள மீனவர் சங்கங்கள் கலந்து கொண்டன. ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ எம்.பியுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா, விமல் வீரவன்ச எம்.பி., யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மெந்தக சமரசிங்க, வட பிராந்திய கடற்படைத் தளபதி ரியர் அத்மிரால் டி. டபிள்யூ. சோமதிலக்க திசாநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்

இரானியத் தலைவரின் கருத்துக்கு பிரிட்டன் விளக்கம் கோரியுள்ளது

uk-pm.jpgஅயோ துல்லா கமனெய் அவர்களின் கருத்துக்கள் குறித்து விளக்கம் கேட்க இலண்டனில் உள்ள இரானியத் தூதரை பிரிட்டிஷ் அரசு அழைத்திருக்கிறது.

இரானில் கடந்த சில நாட்களில் காணப்பட்ட ஒடுக்குமுறையும் மூர்க்கத்தனமும் திரும்ப நடக்கக்கூடாது என்று பிரதமர் கோர்டன் பிரவுன் வலியுறுத்தியிருக்கிறார்.

ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் பிரஸ்ஸல்சில் கூடி, இரானில் நடந்த எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறையை ஒருமனதாகக் கண்டித்த கூட்டத்தில் பிரவுன் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். அயதுல்லாவின் பேச்சு, இனி எந்த ஒரு ஆர்ப்பாட்டத்தையும் வன்முறை வழியில் ஒடுக்க, இரானிய பாதுகாப்புப் படைகளுக்கு பச்சைக்கொடி காட்டுவதுபோல இருப்பதாக இலண்டனிலிருந்து இயங்கும் சர்வதேச பொதுமன்னிப்புச் சபை என்ற மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.

புனர்நிர்மாணம் செய்யப்பட்ட ஜேதவனாராமய தூபி ஜனாதிபதியால் திறந்து வைப்பு

jethawana_stupa3.pngஅநுராத புரத்தில் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஜேதவனாராமய தூபி புனர்நிர்மாணம் செய்யப்பட்டு பக்தர்களின் தரிசனத்துக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.செங்கற்களால் அமைக்கப்பட்ட மிகப்பெரியதும் மிக உயரமானதுமான இந்தத் தூபியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.

யுனெஸ்கோ நிறுவனம் மற்றும் மத்திய கலாசார நிதியம் என்பவற்றின்; ஒத்துழைப்புடன் 1980ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இதன் நிர்மாணப் பணிகள் நிறைவடைய சுமார் மூன்று தசாப்தங்கள் சென்றுள்ளன. இலங்கையில் குளங்களை நிர்மாணிப்பதில் புகழ்பெற்ற மன்னராக விளங்கிய மஹகாசேன மன்னனால் கி.மு 276-300 காலப் பிரிவில் இத்தூபி கட்டப்பட்டதாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன. 1600 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை அழிவுகளுக்கு மத்தியில் முற்றாக இடிந்து விடாது காணப்பட்ட இத்தூபி இலங்கை கட்டடக் கலையின் தேர்ச்சிமிக்க பொறியியல் ஆற்றலுக்கு சிறந்த சான்றாகத் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அகதிகளுக்கு தமிழக அரசு திடீர் நிபந்தனை

india-refuge.jpgதமிழ்நாடு அகதிகள் முகாமில் தங்கியுள்ளவர்கள் இலங்கை செல்ல வேண்டுமானால், “மீண்டும் வரமாட்டேன்” என கியூ பிரிவு பொலிஸாரிடம் உறுதியளிக்க வேண்டுமென தமிழக அரசு நிபந்தனை விதித்துள்ளது. இலங்கையில் 1983இல் ஏற்பட்ட இனக் கலவரத்திற்குப் பின், ஏராளமானோர் அகதிகளாக தமிழகம் வந்தனர்.

தமிழகத்தில் 117 முகாம்களில் தங்கியுள்ள இவர்கள், வெளிநபர்களுடன் தொடர்பு வைத்துள்ளனரா என்பது குறித்து கியூ பிரிவு பொலிஸார் கண்காணித்து வருகின்றனர். இதன்போது, முகாமில் தங்கியுள்ள அகதிகள் சிலர் இலங்கைக்குச் செல்ல விரும்புவது தெரிய வந்துள்ளது.

இவ்வாறு செல்ல விரும்புபவர்கள், கியூ பிரிவு பொலிஸாரிடம், ” மீண்டும் முகாமுக்கு வரமாட்டேன்…” என்று உறுதிமொழி எழுதி கொடுத்து விட்டு, சான்றிதழ் பெற்று தமிழ்நாடு அரசுக்கு விண்ணப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்