அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

மட்டு. நகரில் சோதனை நடவடிக்கைகள் நிறுத்தம் : பயணிகள் மகிழ்ச்சி

sri_lankan_policeman.jpgமட்டக் களப்பு மாவட்டத்தில் பிரதான நெடுஞ்சாலைகளிலுள்ள அநேகமான வீதித் தடைகளும் பொலிஸ் சோதனைச் சாவடிகளும் தற்போது அகற்றப்பட்டுள்ளன. இதனால் உள்ளூர், வெளியூர் பயணங்கள் கடந்த காலங்களை விட இலகுவாக இருப்பதாக பலரும் தெரிவிக்கின்றனர். குறிப்பாக மட்டக்களப்பு – கொழும்பு பயணத்தின் போது மட்டக்களப்பிலிருந்து மன்னம்பிட்டி வரை 7 சோதனைச் சாவடிகளும் 10இற்கும் மேற்பட்ட வீதித் தடைகளும் அமைந்திருந்தன.

சோதனைகளின் போது பயணிகள் பாதுகாப்பு கெடுபிடிகளையும் தாமதங்களையும் எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. தற்போது இவை அகற்றப்பட்டுள்ளதாலும், சோதனைச் சாவடிகளில் சோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளதாலும் பயணங்கள் இலகுவாக இருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

“ஏற்கனவே இந்த வீதித் தடைகளினாலும், சோதனைச் சவடிகள் காரணமாகவும் மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கான பயணத்திற்கு 10 முதல் 12 மணித்தியாலங்கள் தேவைப்பட்டது. இப்போது 7 முதல் 8 மணித்தியாலங்கள் போதுமானது” என தெரிவிக்கின்றனர்.  இருப்பினும் ஓட்டமாவடி-மன்னம்பிட்டி ,வெலிக்கந்தை பொலிஸ் சோதனைச் சாவடிகளில் வாகன இலக்கங்கள் மட்டுமே பதிவு செய்யப்படுகின்றது

“மட்டக்களப்பிலிருந்து வெளியிடங்களுக்கான பயணங்கள் தற்போது இலகுவாக இருந்தாலும், வாகனத்திற்கு இன்னமும் பொலிஸ் பாஸ் பெற வேண்டும் என்ற நடை முறை அமுலிலிருப்பதால் அதனையும் நீக்க வேண்டும்”  அதே வேளை மட்டக்களப்புக்கு வடக்கே பயணங்கள் இலகுவாக இருந்தாலும் தெற்கே வீதி தடைகளையும் சோதனைச் சாவடிகளையும் இன்னமும் காணக் கூடியதாக உள்ளது.
மட்டக்களப்பிலிருந்து கல்முனை வரையிலான 43 கிலோ மீற்றர் தூரத்திற்குள் மட்டும் ஓந்தாச்சி மடம், கல்லாறு ,நீலாவணை ஆகிய இடங்களிலுள்ள சோதனைச் சாவடிகளில் தொடர்ந்தும் சோதனைகள் இடம் பெறுகின்றன.

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்துக்கும் மேல் அதிகரிப்பு!

aedes_aegypti.jpgநாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 529 ஆக அதிகரித்துள்ளதென டெங்கு நோய் தடுப்புப்பிரிவு தெரிவிக்கின்றது. கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் 08-07-2009வரை இந்த எண்ணிக்கை நிலவியதாகவும் இதேகால எல்லையில் டெங்கு நோயால் 168 பேர் உயிரிழந்துள்ளதாகவும் டெங்கு நோய் தடுப்புப் பிரிவின் வைத்திய நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.

எனினும் கடந்த வாரம் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். கடந்த சனிக்கிழமை முதல் செவ்வாய்கிழமை வரையான நான்கு நாட்களில் மாத்திரம் 569 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது கொழும்பு,  கண்டி,  கேகாலை,  ஆகிய மூன்று மாவட்டங்களிலேயே கூடுதலான டெங்கு நோயாளர்கள் காணப்படுகின்றனர். ஏனைய மாவட்டங்களில் நோய் பரவும் நிலை சற்று குறைந்து வருகின்றது. கண்டி மாவட்டத்தில் மாத்திரம் 2 ஆயிரத்து 237 பேர் டெங்கு நோயினால் பீடிக்க்கப்பட்டுள்ளனர்.

டெங்கு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு கூடிய கவனம் செலுத்தி வருவதாகவும் நுளம்புகளை ஒழிப்பதிலும் தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும் டெங்கு நோய் தடுப்புப் பிரிவு தெரிவிக்கின்றது. நுளம்புகளை அழிப்பதற்கான பற்றீரியாக்கள் கூடுதலான நீர்நிலைகள் உள்ள பகுதிகளிலேயே பயன்படுத்தப்படுவதால் ஏனைய பகுதிகளில் நுளம்புகள் பரவாமல் தடுப்பதற்கு சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்கும் பணிகளை மக்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமென  டெங்கு ஒழிப்புப் பிரிவு மக்களுக்கு வேண்டுகொள் விடுத்துள்ளது.

வெளிநாட்டு பௌத்த கல்வி நிறுவனங்களுக்கு சலுகைகள்

susil1111.jpgஇலங்கை பௌத்த மத குருக்களால் இந்தியாவிலும் நேபாளத்திலும் நடத்தப்பட்டு வரும் பௌத்த கல்வி நிறுவனங்களுக்கு இலங்கையின் பிரிவெனா கல்விச் சட்டமூலத்தின் கீழ் வழங்கப்படும் சகல சலுகைகளையும் பெற்றுக்கொடுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கான பிரேரணையை கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த முன்வைத்திருந்தார். இதன்படி 1979 /64ஆம் இலக்க பிரிவெனா கல்விச் சட்டமூலத்தின் கீழ் மாணவர்களுக்கான உதவி,  பாடசாலைப் புத்தகங்கள்,  சீருடைகள் மற்றும் போதனாசிரியர்களுக்கான சலுகைகள் வழங்கப்படவுள்ளன.

லிப்ற் கொடுப்பதாகக் கூறி பாலியல் வல்லுறவு கொண்ட இருவருக்கு, 17 ஆண்டுகள் சிறை!!!

Rapists_Tharmaseelan_and_Arunanலிப்ற் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் வல்லறவிற்கு உட்படுத்திய இரு தமிழ் இளைஞர்களுக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. தர்மசீலன் தங்கவேல் (27) அருணன் தனபாலசிங்கம் (30) ஆகிய இரு இளைஙர்களுமே பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டில் தண்டனை பெற்றுள்ளனர். யூலை 6ல் போற்ஸ்மோத் கிறவுண் நீதிமன்றத்தில் மூன்றுநாள் வழக்கின் முடிவில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இவர்களுக்கான தண்டனையை வழங்கிய நீதிபதி கிரகாம் உவைற் தண்டனைக்காலம் முடிந்ததும் அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

மேலும் இவர்கள் குற்றவாளிகளாகக் கணப்பட்டு உள்ளதால் பாலியல் குற்ற ஆவணத்தில் அவர்களது பெயர் விபரம் காலவரையறையின்றி பதிவு செய்யப்படும். இதனால் இவர்கள் தண்டனைக் காலம் முடிந்த பின்னரும் தங்களது நகர்வுகள் இருப்பிடம் வாழ்விடம் பற்றி பொலிசாருக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட 21 வயதான பல்கலைக்கழக மாணவி சம்பந்தப்பட்டவர்கள் எப்போதும் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று விரும்பினாலும் அவர்கள் நீண்டகாலச் சிறைத் தண்டனை பெற்றது ஆறுதல் அளிப்பதாகத் தெரிவித்தார். இவர் மூன்று நாட்கள் நிதிமன்றத்தில் சாட்சியமளித்தார். தனக்கு நிகழ்ந்த கொடுமையை விபரித்து மற்றையவர்களுக்கும் அவ்வாறு நிகழ்ந்து விடாது தடுத்துள்ள அம்மாணவியின் துணிச்சலை டிடெக்டிவ் சார்ஜன் சூ முரே பாராட்டினார்.

பிரித்தானியாவின் ஹம்பசெயர் என்ற இடத்தில் உள்ள போஸ்ட்மவுத் பிரதேசத்தில் சவுத்சீ பகுதியில் வெளியே சென்று குடித்துக் கொண்டிருந்த மாணவியை தர்மசீலன் தங்கவேலும் அருணன் தனபாலசிங்கமும் வீட்டில் இறக்கி விடுவதாக்க கூறி தங்கள் காரில் ஏற்றினர். காரில் ஏற்றியவர்கள் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு இன்னுமொரு அறை பயன்படுத்தப்படாமல் இருப்பதாகக் கூறி அதில் தங்கலாம் தூங்கலாம் என அந்த மாணவிக்குத் தெரிவித்தனர்.

பின்னர் இருவரும் மாறி மாறி அந்த மாணவியுடன் பாலியல் வல்லுறவு கொண்டுள்ளனர். அந்த மாணவி எவ்வளவோ கெஞ்சிய போதும் இவர்கள் வல்லுறவு கொள்வதை நிறுத்தவில்லை என அம்மாணவி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அதன் பின்னர் மீண்டும் அம்மாணவியை காரில் ஏற்றிவந்து சவுத்சீயில் வீதியோரத்தில் அவரை இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

அதன் பின்னர் தர்மசீலன் தங்கவேலும் அருணன் தனபாலசிங்கமும் கைது செய்யப்பட்டனர்.
குற்றவாளிகள் இருவரும் மாணவியை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியதை மறுத்துள்ளனர். அம்மாணவியின் சம்மதத்துடனேயே அவருடன் உறவு கொண்டதாக அவர்கள் நீதிமன்றில் தெரிவித்தனர்.

யூரிகள் மூன்று நாட்கள் வாதப் பிரதிவாதங்களைக் கேட்ட பின் மூன்று மணிநேரம் அவற்றை ஆராய்ந்து தர்மசீலன் தங்கவேல், அருணன் தனபாலசிங்கம் இருவரையும் குற்றவாளிகளாகக் கண்டனர்.

இவர்கள் ஒவ்வொருவருக்கும் எட்டு ஆண்டுகளும் ஆறுமாதங்களும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள கடினமான குடிவரவு விதிகளுக்கமைய நீதிபதியின் பரிந்துரைக்கு அமைய குற்றவாளிகள் திருப்பி அனுப்புவதற்கு உள்துறை அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் இளைஞர்கள் குழுக்களிடையே வன்முறையைப் போன்று பாலியல் துஸ்பிரயோகங்கள் பல இடம்பெற்றுள்ளன. ஆனால் ஊடகங்களில் மிகச்சிலவே வெளிவந்துள்ளது. வயது குறைந்தவர்களை பாலியல் இச்சைகளுக்கு உள்ளாக்கிய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது. இவற்றில் ஈடுபட்ட பலர் நீதிக்கு முன் நிறுத்தப்படவில்லை.

சார்க் மாநாட்டில் கொழும்புப் பிரகடனம்! சிறுவர் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் தகவல்

saarc_colombo_2009.jpgசார்க் நாடுகளின் சிறுவர்கள் தொடர்பான அமைச்சர்களின் மா நாட்டின் போது கொழும்புப் பிரகடனம் முன்வைக்கப்படவுள்ளதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் சட்டத்தரணி எம். சுமனதாச தெரிவித்தார். சார்க் அமைப்பு நாடுகளின் சிறுவர்கள் தொடர்பான சிரேஷ்ட அதிகாரிகளின் மாநாடு இன்று காலை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் உத்தியோக பூர்வமாக அரம்பமானது.

இன்றைய அமர்வுக்கு தலைமை வகித்த சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டார். இன்றைய அமர்வின் ஆரம்பத்தின் போது சார்க் வலய நாடுகளில் சிறுவர்களின் நலன் காக்கவும் மேம்பாட்டுக்காகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆக்கபூர்வமான திட்டங்கள் தொடர்பான அறிக்கை ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின தெற்காசிய நாடுகளுக்கான பிராந்திய ஆலோசகர் கெப்ரியல் கோஹ்லரால் வாசிக்கப்பட்டது.

அமைச்சின் செயலாளர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில். சார்க் வலய நாடுகளில் சிறுவர்களின் மேம்பாட்டுக்காக மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து கண்காணிக்கவும் அது தொடர்பான அறிக்கை சமர்பிப்பதற்கான பொறுப்பையும் சார்க் நாடுகள் யுனிசெப் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. அதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையே இன்று சமர்பிக்கப்பட்டது. வலய நாடுகள் சிறுவர்களுக்கான பல அபிவிருத்தித் திடடங்களை மேற்கொண்டு வருவது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2001 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையிலான ஒரு தசாப்த கால எல்லையில் மேற்கொள்ளப்படும் திட்டங்களே யுனிசெப் நிறுவனத்தின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டு வருகின்றதென அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை,  இந்தியா,  பாகிஸ்தான்,  பூட்டான்,  அப்கானிஸ்தான்,  பங்ளாதேஷ், மாலை தீவு. நேபாளம் ஆகிய நாடுகளின் அமைச்சுக்களின் செயலாளர்கள்ää பணிப்பாளர்கள் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் பிரதிநிதிகளாக இன்றைய அமர்வில் கலந்து கொண்டனர்.

புலிகளின் நிர்ப்பந்தம் காரணமாகவே பொய்யான தகவல்களை வழங்கினோம் – கைதாகியுள்ள ஐந்து டாக்டர்களும் தெரிவிப்பு

மனிதாபிமான நடவடிக்கையின் இறுதிக் கட்டத்தின்போது புலிகளின் அழுத்தங்கள் காரணமாகவே அரசாங்கத்திற்கும் பாதுகாப்புப் படையினருக்கும் எதிராக உண்மைக்குப் புறம்பான தகவல்களை ஊடகங்கள் ஊடாக வழங்க நேர்ந்ததாக புலிகளின் பிடியில் இறுதி வரையிருந்து சேவையாற்றிய ஐந்து டாக்டர்கள் நேற்றுத் தெரிவித்தனர்.

உண்மைக்குப் புறம்பான தகவல்களை அப்பொழுது வழங்கியமைக்காக தாங்கள் தற்பொழுது வருந்துவதாக தெரிவித்த அவர்கள், புலிகளின் துப்பாக்கி முனையில் தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் அச்சுறுத்தப்பட்டமையினாலேயே உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்க நிர்ப்பந்திக்கப்பட்டதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

புலிகள் சில சந்தர்ப்பங்களில் தங்களுக்குத் தெரியாமல் தங்களது பெயர்களை பயன்படுத்தி பலாத்காரமாக பொய்யான தகவல்களை ஊடகங்களுக்கும் இணைய தளங்களுக்கும் வழங்கியதாக முல்லைத்தீவு மாவட்டத்தின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் துரைராஜா வரதராஜா தெரிவித்தார்.

பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்த மனிதாபிமான நடவடிக்கைகளின் இறுதிக் கட்டத்தின் போது புலிகளின் பிடியில் இறுதிவரையிருந்து சேவையாற்றிய வண்ணம் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்கிய ஐந்து டாக்டர்களும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு ஊடகவியலாளர்களை சந்தித்து தமது உண்மை நிலைமைகளை விபரித்தனர்.

இரகசிய பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் ஞாபகார்த்த வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் டாக்டர் சின்னத்துரை சிவபாலன், முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் டாக்டர் வீரகத்திப்பிள்ளை சன்முகராஜா, முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் துரைராஜா வரதராஜா, கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் பதில் மருத்துவ அத்தியட்சகர் டாக்டர் தங்கமுத்து சத்திய மூர்த்தி மற்றும் முல்லைத்தீவு சுகாதார சேவை அதிகாரி டாக்டர் கதிரவேல் இளஞ்செழியன் வள்ளவன் ஆகியோரே இதில் கலந்து கொண்டனர்.

இவர்கள் இங்கு மேலும் தகவல் தருகையில்:- நாங்கள் அரசாங்க வைத்தியர்களாக இருந்த போதிலும் புலிகளின் ஆயுதங்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலிலேயே இறுதிவரை புலிகளுக்கும் சேவையாற்ற நேர்ந்தது. சிவிலியன்களின் நலனை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டிய நாங்கள் நிர்ப்பந்தம் காரணமாக புலிகளுக்கும் சிகிச்சை வழங்க வேண்டியேற்பட்டது. எனினும் இறுதி வரை நாங்கள் அரசாங்கத்தின் சம்பளத்தையே பெற்றுக் கொண்டோம். நாங்கள் எமது சொந்த விருப்பத்திற்காக இவ்வாறு செயற்படவில்லை. எம்மையும், எமது குடும்பத்தையும் பாதுகாக்க இது தவிர எமக்கு வேறு வழியில்லை.

புலிகளின் தாக்குதல்கள் காரணமாகவே அதிகமானவர்கள் காயமடைந்தனர். எனினும் உயிரிழந்தவர்களதும், காயமடைந்தவர்களதும் எண்ணிக்கை தொடர்பில் மிகைப்படுத்தி கூறும்படியே புலிகள் அதிகமான சந்தர்ப்பங்களில் வற்புறுத்தி வந்துள்ளனர். உண்மையாக இந்தப் பிரதேசத்தில் மருந்து தட்டுப்பாடுகள் இருக்கவில்லை. ஆனால் நாங்கள் அவ்வாறு கூறும் பட்சத்திலே பலரது கவனத்தை ஈர்த்து யுத்தத்தை நிறுத்த வழி செய்ய முடியும் என்றனர்.

எட்டு தடவைகள் அரசாங்கம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக மருந்து, சத்துணவு போன்றவற்றை அனுப்பிவைத்திருந்தது. அவற்றில் பெரும் தொகையான மருந்துகளை புலிகள் எடுத்துச் சென்றனர் என்றனர். நாங்கள் காயமடைந்த சிவிலியன்களுக்கே அதிகமாக சிகிச்சை வழங்கியுள்ளோம். ஏனெனில் புலிகளுக்கு சிகிச்சை வழங்கவென தனியான வைத்தியசாலைகளை புலிகளின் மருத்துவக் குழுவினர் வைத்திருந்தனர். தேவையேற்படின் மாத்திரமே எம்மிடம் கொண்டு வருவார்கள் என்று டாக்டர் சன்முகராஜா தெரிவித்தார்.

இறுதியாக வந்த மூன்று கப்பல் பொருட்களையும் நாங்கள் பெற்றுக் கொண்டோம்.

எமது வைத்தியசாலையின் சுற்றுப் புறங்களில் புலிகளின் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. வைத்தியசாலை மீது ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது உண்மைக்கு புறம்பானது. எனினும் ஷெல் ஒன்று வைத்தியசாலைக்கு அருகில் வந்து விழுந்தது. நாங்கள் ஐ.சி.ஆர்.சி.க்கு அறிவித்தோம். பின்னர் புலிகளின் முகாம்களை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு அவர்கள் கூறினார்கள். நாங்கள் பல முறை தப்பிவர முற்பட்ட போதும் அது பலனளிக்க வில்லை. எமது குடும்பத்தினரும் உறவினர்களும் இங்கு சிக்கிக் கொண்டனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு, கிளிநொச்சி பிரதேசங்களில் நாங்கள் சேவையாற்றி வந்தோம். படையினர் முன்னேறி வர வர நாங்கள் எமது இருப்பிடங்களை மாற்றிக் கொண்டோம். இறுதியாக பொக்களை, புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் பிரதேசங்களில் தற்காலிக வைத்தியசாலைகளை அமைத்து சேவையாற்றினோம்.

இறுதியாக பாதுகாப்புப் படையினர் நாங்கள் இருக்கும் இடத்தை நெருங்கினர். வெடிச் சத்தம் குறைந்த நிலையில் நாங்கள் இருக்கும் இடத்தை ஐ.சி.ஆர்.சி. ஊடாக அறிவித்து எம்மை பாதுகாக்குமாறு தெரிவித்தோம். மே மாதம் 15ம் திகதி நாங்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்தோம். எங்களை பாதுகாத்தமைக்கான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் என்றனர்.

இராணுவத்தினரிடம் சரணடைந்து 50 நாட்கள் கடந்த நிலையிலேயே நீங்கள் செய்தியாளர் மாநாட்டை நடத்துகின்றீர்கள் என்ற ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மருத்துவர்கள். இராணுவத்தினரிடம் சரணடைந்த உடனடியாக எம்மால் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தக் கூடிய சூழ்நிலை இருக்கவில்லை. அதற்குப் பின்னர் நாம் பல சட்டப் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய தேவை இருந்தது.

அத்துடன் எமக்கு சில நோய்களும் ஏற்பட்டிருந்தன டாக்டர் வரதராஜா கையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்லவேண்டிய தேவையும் இருந்தது.  இது போன்ற இன்னோரன்ன காரணங்களுக்காகவே நாம் இக்கால தாமதத்துடன் இச்செய்தியாளர் மாநாட்டை நடத்தவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதெனத் தெரிவித்தனர்.

இதேவேளை, விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் அவர்களின் அச்சுறுத்தலில் பொதுமக்களின் இழப்புகள் குறித்து மிகைப்படுத்திய தரவுகளை வெளியிட்டதாகக் கூறிய நீங்கள் தற்பொழுது அரச கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு மாறுபட்ட தகவலைத் தருவதற்கு சாத்தியம் உள்ளது. அத்துடன் நீங்கள் விடுவிக்கப்பட்ட பின்னர் இன்னொரு நாட்டிலிருந்து இன்னொரு கருத்தையும் கூறும் சாத்தியம் உள்ளதே? எனக் கேட்டபோது.

இல்லை, நாம் தற்பொழுது சிறந்த முறையில் அரசினால் கவனிக்கப்பட்டு வருகின்றோம். எம்மை சிறையில் தடுத்து வைக்கவில்லை. குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் அலுவலகத்திலேயே தங்க வைக்கப்பட்டுள்ளோம். ஆதலால், நாம் தற்பொழுது கூறுவதுதான் உண்மை. இக்கருத்தையே நாம் என்றும் எங்கும் கூறுவோம் எனத் தெரிவித்தனர்.

வன்னி வைத்தியர்கள் அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாகவே  முன்பு வழங்கிய தகவல்களை மறுத்துள்ளனர் – புலிகளின் ஆதரவு இணையத்தளம்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் அழுத்தம் காரணமாகவே தாம் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டதாக வன்னியில் இருந்து வந்து கைதாகி தடுப்புக் காவலில் உள்ள வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் அழுத்தத்தின் பேரில் வெளியிட்டுள்ளதாக சர்வதேச உரிமை அமைப்புக்கள் கருத்து வெளியிட்டுள்ளன.

அரசின் அழுத்தம் காரணமாக இப்பேட்டிக்கு வரவில்லை – டாக்டர் ஷண்முகராஜா

டாக்டர் சண்முகராஜா பி.பி.ஸி. தமிழோசைக்கு விசேட பேட்டியொன்றை வழங்கியிருந்தார்.  தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை,  தமது குடும்பத்தினர் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டதாகவும், விரைவில் விசாரணைகள் முடிந்து பணிக்கு திரும்ப முடியும் என்று தாங்கள் எண்ணுவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், செய்தியாளர்களை சந்திக்க ஐந்து மருத்துவர்களும் தாங்களே முன்வந்ததாகவும், அரசின் அழுத்தம் காரணமாக வரவில்லை என்றும் தெரிவித்திருந்தார். அவரது பேட்டி நேற்றிரவு (08) பி.பி.ஸி.  தமிழோசையிலும் ஒலிபரப்பப்பட்டது.

மட்டக்களப்பில் புலி உறுப்பினர்கள் கைது

ltte_arrest.jpgமட்டக் களப்பு பகுதியில் புலி உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக  மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வுப் பொறுப்பதிகாரி ராசா உதயங்க தெரிவித்தார்.
மாமங்கம் மற்றும் கொக்குவில் பிரதேசங்களில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களில் ஒருவர் புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் என்றும் மற்றவர்  கடற்புலி உறுப்பினர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களிடமிருந்து 10 கிலோ எடையுடைய பாரிய அமுக்க வெடி ஒன்றுடன்  ஹையேஸ் ரக வேன் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கிழக்குப் பிராந்திய பிரதி பொலிஸ் அதிபர் எடிச குணதிலக்கவின் பணிப்புரையின் பேரில் தலைமை பொலிஸ் பரிசோதகர் எஸ். கிரியல்ல தலைமையிலான உயர்மட்ட பொலிஸார் விசாரணைகளைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர். 

சவூதி அரேபியாவின் மனிதாபிமான உதவி நேற்று இலங்கை வந்து சேர்ந்தது!

saudi-arabia.jpgவவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்காக சவுதி அரேபிய அரசாங்கம் வழங்கிய  மனிதாபிமான உதவிகளில் முதல் தொகுதி நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தக்கு வந்து சேர்ந்துள்ளது. 1000 கூடாரங்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய 100 மெட்ரிக் தொன் எடையுள்ள நிவாரணப் பொருட்களை அரச அதிகாரிகள் நேற்று பொறுப்பேற்றனர்.

மொத்தம் 33 கோடி ரூபா பெறுமதியான மனிதாபிமான உதவிகளை வழங்க சவுதி அரேபியா முன்வந்துள்ளது. இந்த உதவியின் இரண்டாவது தொகுதியான மேலும் 100 மெட்ரிக் தொன் எடைகொண்ட உதவிகள் அடுத்த வெள்ளிக்கிழமை விமானம் மூலம் இலங்கை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கப்டன் கெலாராடோ கொழும்பை வந்தடைந்தது – நிவராணப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் பொறுப்பேற்கும்

_vanankaman-captionali.jpgவடக்கி லிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு வணங்கா மண் கப்பலினூடாக அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்களைத் தாங்கிய எம்.வி. கப்டன் கெலாராடோ எனும் கப்பல் இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது. இது பற்றி இலங்கை செஞ்சிலுவைச் சங்க அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், இந்தியாவின் சென்னைத் துறைமுகத்திலிருந்து வந்துள்ள இக்கப்பலில் காணப்படும் 650 மெற்றிக் தொண் எடைகொண்ட நிவாரணப் பொருட்களை கொழும்புத் துறைமுகத்தில் வைத்து இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் கையேற்கவுள்ளது.

இப்பொருட்களை இலங்கை செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் இன்று முற்பகல் 11.00 மணியளவில் உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்கவுள்ளனர். 531 பெட்டகங்களிலுள்ள இந்நிவாரணப் பொருட்களுள் அத்தியவசிய உணவு வகைகள்,  சிறுவர் உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் ஆகியன அடங்கியுள்ளன. இந்நிவாரணப் பொருட்கள் இலங்கை அரசாங்கத்தின் வழிகாட்டலுடன்; வவுனியாவிலுள்ள இடம்பெயர்ந்தோருக்கு விநியோகிக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சார்க் சிறுவர்கள் தொடர்பான அதிகாரிகள் மட்ட மாநாடு இன்று ஆரம்பம்

சார்க அமைப்பின் சிறுவர்கள் தொடர்பான மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமாகிறது. இந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்காக இலங்கை வந்துள்ள சார்க் நாடுகளின் அதிகாரிகள் மட்ட மாநாடு இன்று காலை 9.30 மணிக்கு கொழும்பு,  ஹில்டன் ஹோட்டலில் ஆரம்பமாகவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

நான்காவது முறையாக நடைபெறும் இம்மாநாட்டின் இன்றைய அதிகாரிகள் மட்ட மாநாட்டில் சார்க அமைப்பின் செயலாளர் நாயகம் கலாநிதி சீல் கான்ட் ஷர்மா பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.  13 வருடங்களின் பின்னர் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அவர்களின் நலன்களை பிராந்திய மட்டத்தில் பேணுதல் போன்ற விடயங்கள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது. இதேவேளை சார்க  நாடுகளின் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர்கள் மட்டத்திலான மாநாடு நாளை நடைபெறவுள்ளது என்றும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.