சார்க அமைப்பின் சிறுவர்கள் தொடர்பான மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமாகிறது. இந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்காக இலங்கை வந்துள்ள சார்க் நாடுகளின் அதிகாரிகள் மட்ட மாநாடு இன்று காலை 9.30 மணிக்கு கொழும்பு, ஹில்டன் ஹோட்டலில் ஆரம்பமாகவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
நான்காவது முறையாக நடைபெறும் இம்மாநாட்டின் இன்றைய அதிகாரிகள் மட்ட மாநாட்டில் சார்க அமைப்பின் செயலாளர் நாயகம் கலாநிதி சீல் கான்ட் ஷர்மா பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார். 13 வருடங்களின் பின்னர் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அவர்களின் நலன்களை பிராந்திய மட்டத்தில் பேணுதல் போன்ற விடயங்கள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது. இதேவேளை சார்க நாடுகளின் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர்கள் மட்டத்திலான மாநாடு நாளை நடைபெறவுள்ளது என்றும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.