வடக்கி லிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு வணங்கா மண் கப்பலினூடாக அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்களைத் தாங்கிய எம்.வி. கப்டன் கெலாராடோ எனும் கப்பல் இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது. இது பற்றி இலங்கை செஞ்சிலுவைச் சங்க அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், இந்தியாவின் சென்னைத் துறைமுகத்திலிருந்து வந்துள்ள இக்கப்பலில் காணப்படும் 650 மெற்றிக் தொண் எடைகொண்ட நிவாரணப் பொருட்களை கொழும்புத் துறைமுகத்தில் வைத்து இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் கையேற்கவுள்ளது.
இப்பொருட்களை இலங்கை செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் இன்று முற்பகல் 11.00 மணியளவில் உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்கவுள்ளனர். 531 பெட்டகங்களிலுள்ள இந்நிவாரணப் பொருட்களுள் அத்தியவசிய உணவு வகைகள், சிறுவர் உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் ஆகியன அடங்கியுள்ளன. இந்நிவாரணப் பொருட்கள் இலங்கை அரசாங்கத்தின் வழிகாட்டலுடன்; வவுனியாவிலுள்ள இடம்பெயர்ந்தோருக்கு விநியோகிக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.