அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

கொலைக்குற்றம் சாட்டப்பட்டவருக்கு அமைச்சர் பதவி வழங்குவது முறையா? – ஆளும் கட்சி செய்தியாளர் மாநாட்டில் சலசலப்பு

கொலை குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவருக்கு அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருப்பது முறையானதா என்று நேற்று முன்தினம்  செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி ஒன்று எழுப்பப்பட்டதை அடுத்து அங்கு சலசலப்பொன்று ஏற்பட்டுள்ளது.

கொழும்பு, மகாவலி கேந்திர நிலையத்தில் சுதந்திர முன்னணியில் நேற்று முன்தினம்  நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வியொன்றை எழுப்பிய ஊடகவியலாளர் ஒருவர், இதுவரை எந்த அரசாங்கமும் செய்திராத வகையில் இந்த அரசாங்கத்தினால் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டமையானது மிகவும் மதிக்கத்தக்கதும், வரவேற்கத்தக்கதுமான விடயமாக இருக்கின்ற அதேநேரம், பியசிறி விஜேநாயக்க (விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் எம்.பி) போன்ற கொலை குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவருக்கு இந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டிருப்பது சரியா எனக் கேட்டார்.

இதற்கு பதிலளிக்கும் முகமாக பேசிய தேசிய சுதந்திர முன்னணியின் பொது செயலாளரும் சுற்றுலாத்துறை அமைச்சருமான நந்தன குணதிலக, ஒருவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரை அவரை குற்றவாளியெனக் கூற முடியாதென தெரிவித்தார்.

எனினும், சிவில் மயப்படுத்தப்பட்ட ஏனைய நாடுகளில் இவ்வாறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலே, எம்.பீ.க்கள் அல்லது அமைச்சர்கள் தங்களது பதவிகளை இராஜிநாமா செய்து விடுவதாக கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர் சுட்டிக் காட்டினர்.

ஊடகவியலாளரின் வாதத்தை ஏற்கொள்ளாத அமைச்சர் நந்தன குணதிலக்க, அப்படியென்றால் எவருக்கும் யார் மீதும் பொய்யன குற்றச்சாட்டுகளை சுமத்திவிட்டு அவரை குற்றவாளி என்று கூறி விட முடியுமே எனத் தெரிவிக்க, ஊடகவியாலாளரோ, அமைச்சர் பியசிறி விஜேநாயக்க கொலைக்குற்றசாட்டின் பேரில் ஏற்கனவே விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததை சுட்டிக் காட்டினார்.

இவ்வாறு அமைச்சருக்கு, ஊடகவியலாளருக்கும் இடையேயான வாதப் பிரதிவாதம் சூடும் பிடிக்கவே, அங்கிருந்த சக ஊடகவியலாளர்கள் அதை சுவரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

கண்ணிகள் அகற்றும் பணிக்கு 500 இந்திய இராணுவத்தினர்

sarath-pon-eka.jpgவடக்கு, கிழக்கில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் புலிகளால் புதைத்து வைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்கு உதவ 500 பேர் கொண்ட இந்திய இராணுவக் குழு வெகுவிரைவில் இலங்கை வரவுள்ளதாக புதிய பிரதான பாதுகாப்பு அதிகாரி ஜெனரல் சரத் பொன் சேகா தெரிவித்தார்.

மக்களை வெகுவிரைவில் மீளக் குடியமர்த்தும் நோக்குடன் எமது பாதுகாப்புப் படைப்பிரிவினரும் வெளிநாட்டு நிறுவனங்களும் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் அதேசமயம் இவர்களுடன் இணைந்து சேவையாற்றும் வகையிலேயே 500 இந்திய இராணுவ வீரர்களை அனுப்ப இணக்கம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய பிரதான பாதுகாப்பு அதிகாரியாக நேற்று கடமைகளை பொறுப்பேற்ற ஜெனரல் சரத் பொன்சேகா ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றும் போது மேலும் தகவல் தருகையில்:

புலிகளால் புதைத்து வைக்கப்பட்ட கண்ணிவெடிகளுக்கு மத்தியிலேயே எமது பாதுகாப்புப் படைவீரர்கள் களமுனையில் முன்னேறிச் சென்றனர். இதன் காரணமாக பலர் உயிர் நீத்ததுடன், மேலும் பலர் காயமடைந்தனர்.

வடக்கின் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட அதேசமயம் கிழக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் எமது படை வீரர்களும், வெளிநாட்டு நிறுவனங்களும் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.  இவற்றில் அதிகமாகவும், வேகமாகவும் இராணுவத்தினரே மீட்டெடுத்தனர்.

கண்ணிவெடி அகற்றும் பணி என்பது மிகவும் இலகுவானதும், சுருக்கமாக செய்யக்கூடியதுமான ஒரு காரியமல்ல. காட்டுப் பகுதிகளிலும், சதுப்பு நிலப் பரப்பிலும் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை மிக இலகுவாக அகற்ற முடியாது. எனினும் வெகுவிரைவில் அகற்றத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவை முழுமையாக அகற்றப்பட்ட பின்னர் மக்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தபால் மூலவாக்களிப்பு: வாக்குச்சீட்டுகள் நேற்று அனுப்பி வைப்பு

வவுனியா நகர சபை தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித் தவர்களில் தெரிவான 183 பேருக்குரிய வாக்குச் சீட்டு க்கள் நேற்று புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டதென மாவட்ட தேர்தல் உதவி ஆணையாளர் ஏ. எஸ். கருணாநிதி தெரிவித்தார்.

தபால் மூல வாக்களிப்பு இம்மாதம் 27ம், 28ம் திகதி களில் நடைபெறுமெனவும் அவர் சொன்னார்.

அடுத்த மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள வவுனியா நகர சபைத் தேர்தலுக்குரிய வாக்கு சீட்டுக்கள் வவுனியா தேர்தல் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்துள்ளன. மிகவும் பாதுகாப்பான முறையில் வாக்குச் சீட்டுக்கள் வைக்கப் பட்டுள்ளதென மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

ரஷ்யா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான் ஜனாதிபதிகள் 29, 30 இல் முக்கிய பேச்சுவார்த்தையில் பங்கேற்பர்

ரஷ்யா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் இம் மாதம் 29, 30 ம் திகதிகளில் சந்திக்கவுள்ளனர். தஜிகிஸ்தான் தலைநகர் டுஷான்பேயில் இச் சந்திப்பு இடம் பெறவுள்ளது.

எரிவாயு போக்குவரத்து, தொடர்பாடல், பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் சம்பந்தமாகப் பேச்சுவார்த்தை நடாத்தும் நோக்குடன் இத் தலைவர்கள் சந்திக்கவுள்ளதாக தஜிகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரஷ்ய ஜனாதிபதி மெத்விடில், பாகிஸ்தான் ஜனாதிபதி ஆஸிப் அலிசர்தாரி, ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமித் அல் கார்ஸாயி ஆகியோர் இரண்டு மாதங்க ளுக்கு முன்னர் ரஷ்யாவில் சந்தித்தனர். இதன் போது பிராந்திய பாதுகாப்பு, வர்த்தகம் பற்றிப் பேசினர்.

இப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் ஏற்பட்டுள்ள முன் னேற்றங்கள் அதிலுள்ள தடைகள் பற்றியும் தஜிகிஸ் தான் மாநாட்டில் ஆரா யப்படவுள்ளது.  சோவியத் ரஷ்யா உடைந்த பின்னர் தஜிகிஸ்தானும், ரஷ்யாவும் இறுக்கமான உறவுகளில் உள்ளன.

தஜிகிஸ்தானிலுள்ள மின்சார உற்பத்தித் திட்டங்கள் பலவற்றை ரஷ்யாவே நடாத்துகின்றது. இதனூடாக மத்தியாசியாவுக்கான மின்சாரத்தை விஸ்தரிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப் படவுள்ளன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஜனாதிப திகளும் இந்த மின்சாரத் திட்டங்களைப்பார்வையிடுவர். பல மில்லியன் ரூபா செலவில் இந்த மின்சாரம் ஏனைய நாடுகளுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது.

54 பணிப்பெண்கள் நாடு திரும்பினர்

housemaids.jpgசவூதி அரேபியாவில் பணிப்பெண்களாக பணிபுரிந்து வந்த 54 பெண்கள்  நாடு திரும்பியுள்ளனர்.  தாங்கள் பணிபுரிந்த இடங்களில் போதிய சம்பளம் வழங்கப்படவில்லையென்றும், கஷ்டமான வேலைகளை தங்களுக்கு வேலைத் தளங்களில் செய்யுமாறு வற்புறுத்தியதுமே நாடு திரும்பியதற்கான காரணம் என அவர்கள் தெரிவித்தனர்.

இவர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளது.

ஜென்துல்லா அமைப்பின் 13 பேர் ஈரானில் தூக்கிலிடப்பட்டனர்

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர் புடைய 13 பேர் கடந்த செவ்வாய்க்கிழமை ஈரானில் தூக்கிலிடப்பட்டனர். இவர்கள் ஷிஆ முஸ்லிம்களுக்கெதிரான பல்வேறு குற்றச் செயல்களுடன் ஈடுபட்டதால் நீண்ட காலமாக சிறையிலடைக்கப்பட்டனர்.

ஆட் கடத்தல், கொலை, கொள்ளை, போதைவஸ்து வியாபாரம் மற்றும் வெளிநாட்டோரைக் கடத்துதல் போன்ற பல்வேறு குற்றச் செயல்களை “ஜென்துல்லா” என்ற அமைப்புக்காகச் செய்து வந்தனர்.

சுன்னி முஸ்லிம்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் வாழும் ஷியா முஸ்லிம்களுக் கெதிராக சதி வேலைகள் செய்து ஈரானின் அமைதியான ஆட்சிக்குத் களங்கம் ஏற்படுத்தியோர்களாவர். ஈரானில் ஷியா முஸ்லிம்களே பெரும்பான்மையாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவர்கள் அனைவரும் ஷெஹ்டான் சிறைச் சாலையில் தூக்கிலிடப்பட்டதாகவும் இவர்களின் உறவினர்களும் இதற்காக அழைக்கப்பட்டு பொது மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டதாக மாகாண தலைமை நீதிபதி கூறினார்.

இதில் ஜென்துல்லா அமைப்பின் தலைவர் அப்துல்லா மலிகின் சகோதரரான அப்துல்லா ரஹீமும் தூக்கிலிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷெஹ்டான் ஈரானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரமாகும். இது ஆப் கான், பாகிஸ்தான் எல்லைகளிலுள்ளது. இங்கு தான் ஷெஹ்டான் சிறைச்சாலையுள்ளது.

போதை வஸ்துக் கடத்தல்கள் அதிகம் நடை பெறும் பகுதியான இங்கு ஈரான் அரசுக்கெதிராக ஜென்துல்லாக்கள் பல தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அண்மையில் ஷியா முஸ்லிம் பள்ளிவாசலில் நடந்த தாக்குதலில் 25 பேர் பலியாகினர். இதற்கு ஜென்துல்லாவே உரிமைகோரியது.

ஈரான் விமான விபத்தில் 169 பேர் பலி

iran-plane.jpgஈரானில் 169 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த அனைவரும் பலியாகிவிட்டதாக அஞ்சப்படுகிறது.

காஸ்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானம் தெஹ்ரானில் இருந்து ஆர்மீனிய தலைநகர் யெரவான் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது விழுந்து நொறுங்கியது.

தெஹ்ரானுக்கு வட மேற்கே 75 கி.மீ. தொலைவில் கஸ்வின் என்ற நகருக்கு அருகே ஜன்னதாபாத் என்ற கிராமத்தில் விமானம் விழுந்தது.

விமானம் சிதறிவிட்டதாகவும் அதன் பல பாகங்கள் எரிந்து நாசமாகிவிட்டதாகவும் கஸ்வின் அவசரகால உதவி மையம் தெரிவித்துள்ளது. இதனால் அதிலிருந்த யாரும் உயிர் தப்பியிருக்க வாய்ப்பிலை என்று தெரிகிறது.காஸ்பியன் ஏர்லைன்ஸ் ஈரான்-ரஷ்யா இணைந்து நடத்தி வரும் கூட்டு நிறுவனமாகும்.

ஜனாதிபதியுடன் பேச்சு நடத்த தமிழ் கூட்டமைப்பினர் ஆர்வம்

sampanthr.jpgவவுனியா முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் மூன்று லட்சம் தமிழ் அகதிகளின் வாழ்வியல் பிரச்சினைகள் மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு போன்ற முக்கிய விடயங்கள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தனித்துவமான சந்திப்பு ஒன்றை மேற்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகைய சந்திப்புக்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு கோரும் கடிதம் ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் அடுத்த ஓரிரு தினங்களில் ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பார் என தெரியவருகின்றது.

அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்குபற்றுவதற்காக எகிப்துக்குச் சென்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாடு திரும்பியதும்  பெரும்பாலும் இந்த வார இறுதியில் அவரது பரிசீலனைக்குக் கிடைக்கக்கூடியதாகக் கூட்டமைப்பின் தலைமைப்பீடம் இக்கடிதத்தை அவருக்கு அனுப்பிவைக்கும் என்றும் கூறப்படுகின்றது.
இக்கடிதம் கிடைத்து, கூட்டமைப்பினரைத் தனியாகச் சந்தித்துப் பேசுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இணங்குவாரானால்  பெரும்பாலும் அடுத்த வாரம் அளவில்  இந்தச் சந்திப்பு இடம்பெறக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன என்றும் கூறப்படுகின்றது.

இலங்கையில் பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாத்தமைக்கான விருது “உதயன்”, “சுடர் ஒளி” நிறுவனத்துக்கு

sudaroli_.gifஇலங் கையில் பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாத்தற்கான  அதிஉயர் கௌரவ விருது “உதயன்” “சுடர் ஒளி” பத்திரிகைக்கு வழங்கப் பட்டிருக்கிறது. இதழியல் துறையில் சிறந்த செயற்பாடுகளுக்கான விருது வழங்கும் விழா கொழும்பில் நேற்று இடம்பெற்ற போது இந்த விருது வழங்கப்பட்டது.

இலங்கைப் பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இலங்கைப் பத்திரிகை நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்து நடத்திவரும் இதழியல் துறையில் சிறந்த செயற்பாடு களுக்கான பத்தாவது விழா நேற்றிரவு கொழும்பு மவுண்ட்லவேனியா ஹொட்டலில் நடைபெற்றது. 2008 ஆம் ஆண்டில் சிறந்த இதழியல் பெறுபேறுக்கான இந்த விருது வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக இந்தியாவின் பிரபல்யமான சமூக செயற்பாட்டாளர் திருமதி அருணா றோய் பங்குபற்றினார்.

இந்த விருது வழங்கும் நிகழ்வில் முக்கிய அம்சமாக இலங்கையில் பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாத்தமைக்கான ” சேபால குணசேன”விருது வழங்கும் கௌரவம் இடம்பெற்றது. அச்சுறுத்தல்கள், வன்முறை மிரட்டல்கள், உச்ச நெருக்கடிகள் போன்றவற்றுக்கும் மத்தியிலும் யாழ்.குடாநாட்டில் இருந்து சளைக்காது போராடி வரும் “உதயன்”நிறுவனத்துக்கும் அதன் பிரதம ஆசிரியருக்கும் ஏனைய ஊழியர்களுக்கும் இந்த விருது வழங்கிக் கௌரவிக்கப்படுவதாக நிகழ்வில் அறிவிக்கப்பட்டது. பலத்த கரகோஷத்தின் மத்தியில் “உதயன்”,”சுடர் ஒளி”ஆசிரியர் என். வித்தியாதரன் விருதைப் பெற்றுக்கொண்டார்.
 
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வருடாந்த  விருது வழங்கும் நிகழ்வு ஆரம் பிக்கப்பட்ட போதும்  “துணிச்சலான பத்திரிகைக்கான விருது” உதயன் பத்திரிகைக்கு பத்திரிகை ஆசிரியர் சம்மேளனத்தால் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

நியூசிலாந்தை தாக்கிய பயங்கர நிலநடுக்கம்-சுனாமி எச்சரிக்கை

tsunami111.jpgநியூசிலாந் தில் இன்று மாபெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 7.8 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தையடுத்து பசிபிக் பெருங்கடலில் சுனாமி ஏற்பட்டு நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவைத் தாக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், சிறிய அளவிலேயே சுனாமி அலைகள் உருவானதால் அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுவிட்டது.

தெற்கு, மேற்கு என இரு பெரும் தீவுகளைக் கொண்ட நாடு நியூசிலாந்து. இதில் தென் தீவின் மேற்குப் பகுதியில் பியோர்ட்லாண்ட் என்ற இடத்தில் அந் நாட்டு நேரப்படி இரவு 8.22க்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அருகே நிலத்தின் அடியில் 5 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. இது ரிக்டர் அளவுகோளில் 7.8 புள்ளிகள் என்ற அளவுக்குப் பதிவானதையடுத்து பசிபிக் கடலில் சுனாமி ஏற்படலாம் என நியூசிலாந்து முழுவதும் எச்சரிக்கை விடப்பட்டது.

முதலில் தென் தீவையும் பின்னர் தலைநகர் ஆக்லாந்து மற்றும் முக்கிய நகரான வெலிங்டன் ஆகியவை அமைந்துள்ள வடக்குத் தீவையும் சுனாமி தாக்கக் கூடும் என அமெரிக்க வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. மேலும் இந்த அலைகள் ஆஸ்திரேலியாவையும் அடையக் கூடும் என்ற முன்னெச்சரிக்கையோடு அங்கு கிழக்குக் கடற்கரை பகுதிகளிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், சிறிய அளவிலான சுனாமி அலைகளே உருவானதாகவும் இதனால் அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்படுவதாகவும் ஆஸ்திரேலிய வானிலை மையம் பின்னர் அறிவித்துவிட்டது. இந்த அலைகள் ஆஸ்திரேலியாவின் தென் கிழக்குக் கடல் பகுதியை (டாஸ்மான் கடல் பகுதி) நோக்கி சீறியதாகவும் அந்த மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஆஸ்திரேலியாவின் தெற்குத் தீவில் உள்ள குயீன்ஸ்டெளன், கிரைஸ்ட்சர்ச் ஆகிய நகர்கள் உள்பட பெரும்பாலான பகுதிகளும் குலுங்கின. மக்கள் அலறியடித்துக் கொண்டு கட்டடங்களை விட்டு வெளியே ஓடிவந்தனர். நிலநடுக்கத்தையடுத்து தென் தீவு முழுவதும் மின்சாரம், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. நிலநடுக்கம் மிக பயங்கரமாக இருந்ததாக வனாகா என்ற நகரைச் சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.