அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

அரசியலமைப்புக்கான மாற்றங்கள் அனைத்தும் ஒரே தடவையில் -அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா

yappa.jpgஒவ்வொரு அரசியல் கட்சிகளின் தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் தேர்தல் விதிகளையோ அரசியல் அமைப் பையோ பகுதிபகுதியாக திருத்துவதற்கு அரசாங்கம் தயா ரில்லையென்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். நடைபெறவுள்ள தேர்தலில் மக்கள் வழங்கவுள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் நாட்டுக்கு நன்மை பயக்கும் வகையில், எல்லாத் திருத்தங்களை ஒரே நேரத்தில் செய்வதற்கே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயாராகவுள்ளார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அரசியல் தீர்வுக்காக தேசிய ஒருமைப்பாட்டுக்கு வருவதற்கு ஜனாதிபதி எண்ணியுள்ளாரென தெரிவித்த அமைச்சர், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அதனை மக்களுக்கு சமர்ப்பித்து அதன் அடிப்படையில் தீர்வைக்கான முற்படுவதாகவும் அவர் கூறினார். நாரஹேன் பிட்டியிலுள்ள தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சில் நேற்றுக்காலை விசேட செய்தியாளர் மாநாடு இடம்பெற்றது. இதன்போதே அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் இங்கு மேலும் உரையாற்றுகையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்ய வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி கோரியுள்ள போதிலும் அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்று கூறிய அமைச்சர், அன்று அரசுக்கு ஆதரவு வழங்கிய ஜே.வி.பி. திடீரென அரசிலிருந்து விலகி அரசுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியது. அரசாங்கத்துடன் ஒப்பந்தத்தை செய்து கொண்ட மக்கள் விடுதலை முன்னணியே அந்த ஒப்பந்தத்தை மீறி அரசி யலிலிருந்து விலகிக்கொண்டது.

நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகளின்படி தனியான ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்தவோ அரசியல் ரீதியில் வேறு ஒரு கட்சிக்கும் உதவி செய்ய தேவையான வாக்குப் பலமோ தற்பொழுது இல்லாமல் போயுள்ளது. இந்நிலையிலேயே ஜே.வி.பி. இவ்வாறான கோரிக்கைகளை விடுக்கின்றது. இந்நிலையில் பொதுவான மாற்றத்தை தவிர பகுதி பகுதியான மாற்றங்களை மேற்கொள்ள அரசு தயாரில்லை.

இதேவேளை, தேர்தல் ஆணைக்குழு ஒன்றை நியமித்து தென்மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணா திலக்க எம்.பி.யின் கூற்று தொடர்பாக கருத்துத் தெரிவித்த அமைச்சர், தேர்தல் ஆணைக்குழுவை நியமித்தோ சட்டதிட்டங்களை மாற்றியமைத்தோ தேர்தலை வெற்றி கொள்ள முடியாது. அதற்கு பதிலாக மக்கள் மத்தியில் சென்று மக்களின் மனதை வெல்லவேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

1977ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர்.ஜயவர்தனவும், 1996ம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும் தேர்தல் ஆணைக்குழுவை நியமித்தா வெற்றி கண்டனர் என்று அமைச்சர் கேள்வி எழுப்பினார். கிழக்கு மாகாணத்திலிருந்து தொடர்ச்சியாக நடை பெற்ற தேர்தல்களில் அரசுக்கு அதிகூடிய வெற்றிகள் கிடைத்ததாக தெரிவித்த அமைச்சர், ஊவாவை விட தென் மாகாண தேர்தலில் மக்களின் ஒத்துழைப்பு மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.
 

சசீந்திர ஊவா முதல்வராக இன்று சத்தியப் பிரமாணம்

shasendrakumararajapaksa.jpgஊவா மாகாண சபையின் முதலமைச்சராக சசீந்திர ராஜபக்ஷ இன்று பதவியேற்கவுள்ளார்.

இது தொடர்பாக அலரி மாளிகையில் இன்று நடைபெறும் நிகழ்வில் ஜனாதிபதி முன்னிலை யில் இவர் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார். நடந்து முடிந்த ஊவா மாகாண சபைத் தேர்த லில் 1,36,697 வாக்குகளைப் பெற்று இவர் சாதனை படைத்திருந்தார்.

இலங்கை அரசியல் வரலாற்றில் மாகாண அரசியலில் ஆக குறைந்த வயதில் முதல மைச்சராக தெரிவு செய்யப்படுபவர் இவராவார்.

1978 இல் ஜூன் மாதம் 28ம் திகதி பிறந்த இவர் ஜனாதிபதியின் மூத்த சகோ தரரும் துறைமுகங்கள், விமான சேவைகள், நெடுஞ்சாலை, நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் மகனாவார்.

ஆரம்ப கல்வியை கொழும்பு மகாநாம கல்லூரியிலும், இடை நிலைக் கல்வியை கல்கிஸ்ஸ சென்தோமஸ் கல்லூரியிலும் தொடர்ந்த சசீந்திர உயர் கல்வியை புது டில்லியில் உள்ள பல்கலைக்கழகமொன்றில் மேற்கொண்டு அரசியல் விஞ்ஞானத் துறையில் கெளரவப்பட்டம் பெற்றுக் கொண்டார்.

அத்தோடு கொழும்பு பல்கலைக்கழகத் தில் வர்த்தக முகாமைத்துவமும், பண்டார நாயக்க சர்வதேச கல்வி நிலையத்தில் சர்வதேச தொடர்பாடல் டிப்ளோமாவையும் பெற்றுக் கொண்டார்.

ஊவாவிற்கும் தென் மாகாணத்துக்கும் ஒரு உறவுப்பாலமாக அமையப்போகும் புதிய முதலமைச்சர் சசீந்திர குமார ராஜபக்ஷவின்மேல் ஊவா மக்கள் அபார நம் பிக்கையை வைத்திருப்பதை ஊவா மாகாண சபைத் தேர்தல் வெளிக்காட்டியது.

பா.ஜ.கவிலிருந்து ஜஸ்வந்த் சிங் நீக்கப்பட்டார்

_jaswantsingh.jpgபாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த் சிங் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.  எழுபத்தொரு வயதான ஜஸ்வந்த் சிங் எழுதி சமீபத்தில் வெளியிட்ட புத்தகத்தில், முகமது அலி ஜின்னாவைப் பாராட்டியிருப்பதுடன், நாட்டின் பிரிவினைக்கு நேருவும், சர்தார் படேலும்தான் காரணம் என்று குறிப்பிட்டிருக்கிறார். இது பா.ஜ.கவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

பாஜகவின் மூத்த தலைவர்களைக் கொண்ட சிறப்பு ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை சிம்லாவில் துவங்கியது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜஸ்வந்த் சிங்கும் அங்கு சென்றிருந்தார். ஆனால், அவர் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்று ராஜ்நாத் சிங் அவருக்கு தொலைபேசியில் தெரிவித்துவிட்டார்.

பின்னர் மீண்டும் தொலைபேசியில் ஜஸ்வந்த் சிங்கை தொடர்பு கொண்ட பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்த முடிவு தனக்கு மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக ஜஸ்வந்த் சிங் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் .கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும், தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக நீடிக்கப் போவதாக ஜஸ்வந்த் சிங் தெரிவித்துள்ளார்.

நல்லூர் தேர்த்திருவிழாவில் இலட்சக்கணக்கில் பக்தர்கள் – விமானங்கள் பூமழை பொழிய முருகன் வீதிஉலா

mainpic3.jpgசரித்திர பிரசித்திபெற்ற நல்லூர் கந்த சுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த்திரு விழா நேற்றுக் காலை சிறப்பாக நடந்தேறியது. காலை 7.15க்கு முருகப் பெருமான் தேரில் ஆரோகணித்து 9.15 மணியளவில் தனது இருப்பிடத்தை வந்தடைந்தார்.

இலட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் முருகப் பெருமானின் தேர் வலம் வந்து கொண்டிருந்த போது இலங்கை விமானப்படை விமானங்கள் வானிலிருந்து பூமழை பொழிந்தன. இது கண்கொள்ளாக் காட்சியாக இருந்ததோடு அனைவரையும் மெய்ச்சிலிர்க்கச் செய்தது.

குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இலங்கையின் தென்பகுதி மற்றும் ஏனைய பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து நல்லைநகர் கந்தனின் தேர் உற்சவத்தைக் கண்டுகளித்தனர்.

இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சு தென் இலங்கையில் இருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வரும் பக்தர்களின் வருகைக்காக மிகக் குறைந்த செலவில் கொழும்பு யாழ்ப்பாணத்திற்கான விமான சேவையினை வழங்கியிருந்தது. அத்துடன் பக்தர்களுக்கான தாக சாந்திக்காக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் போத்தல்களையும் வழங்கியிருந்தது.

அத்துடன் ஆலய வீதிகளிலும் யாழ்குடா நாட்டின் பல இடங்களிலுள்ள வீதியோரங்களிலும் ஆலயம் சென்று வரும் பக்தர்கள் தங்கி இளைப்பாறி செல்வதற்கும் தாகசாந்திக்கும் தாகசாந்தி நிலையங்களும் அமைக்கப்பட்டிருந்தன.

தேர்தொடங்கி இருப்பிடம் வரும்வரை வீதியில் கற்பூரம் எரிப்பதற்கு தடை செய்யப்பட்டிருந்தது. அத்துடன் தூக்குக்காவடிகள் என்பனவும் தேர் வெளிவீதியுலா தொடங்கி முடியும்வரை ஆலய வீதிக்கு வருவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததுடன் ஆலய வீதியில் ஒலி பெருக்கி (வெளியார்) பாவிப்பதும் தடை செய்யப்பட்டிருந்தது.

யாழ் மாநகர சபை நிர்வாகம் பக்தர்களினது வசதி கருதி ஆலய வீதிகளுக்கு சமீபமாக பல மலசல கூடங்களை அமைத்திருந்ததுடன், ஆங்காங்கே குடிதண்ணீர் நிரப்பப்பட்ட கொள்கலன்களையும் மக்களின் பாவனைக்கென வைத்திருந்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை பொலிஸாரும், இராணுவத்தினரும்கூட்டாக இணைந்து ஈடுபட்டிருந்தனர். சென்யோன் முதலுதவிப் படையினர் கே. செல்வரஞ்சன், யாழ் மாவட்ட இணைப்பாளர் தலைமையிலும் மக்கள் நலன்புரி சங்கத்தினர் எஸ். சதீஸ் தலைமையிலும், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் எஸ். சாந்தா தலைமையிலும் தொண்டர் சேவைகளை ஆற்றியிருந்தனர்.

நல்லை ஆதீனம் உட்பட ஆலய சூழலில் உள்ள அன்னதான மடங்களிலும் ஆலயங்களிலும், தனியார் வீடுகளிலும் பக்தர்களுக்கு அன்னதான நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

இலங்கைக்கான ஆயுத ஏற்றுமதி அனுமதிகளை மீள் பரிசீலனை செய்யக் கோரிக்கை

இலங்கைக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதற்கான அனைத்து ஏற்றுமதி அனுமதி பத்திரங்களையும் பிரிட்டிஷ் அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று கேட்டிருக்கிறது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை இராணுவ படைகளினால், பிரிட்டனில் இருந்து விநியோகிக்கப்பட்ட எந்த ஆயுதங்கள் அல்லது உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதை பிரிட்டிஷ் அமைச்சர்கள் அறிவிக்க வேண்டும் என்றும் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மையில் காசாவில் 1300 பேர்கள் என்று மதிப்பிடப்பட்ட எண்ணிக்கையிலான பாலத்தீனர்கள் கொல்லப்பட்ட நடவடிக்கைகளின் போதும், இஸ்ரேலிய சிப்பாய்களால், பிரிட்டனால் விநியோகிக்கப்பட்ட உபரணங்கள் அநேகமாக பயன்படுத்தப்பட்டன என்றும் அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கை கூறுகிறது.

தமிழருடன் அதிகாரப்பகிர்வை தவறவிட்டால் மீண்டும் வன்முறைகள் தோன்ற வழிவகுக்கும்

சிறுபான்மை தமிழ்மக்களுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் தவறுமானால் வன்முறைகள் மீண்டும் ஏற்பட வழிவகுக்கும் என்று அமெரிக்க உதவி வெளிவிவகார அமைச்சர் ரொபேட் பிளேக் எச்சரித்துள்ளார். அதிகாரப்பகிர்வில் தாமதம் காட்டுவதானது விடுதலைப் புலிகள் மீண்டும் ஒன்று சேருவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திவிடும் என்று பிளேக் பி.பி.சி.க்கு தெரிவித்திருக்கிறார்.

யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களை அரசாங்கம் துரிதமாக மீளக்குடியேற்ற வேண்டும். இந்த விடயத்திலேயே அமெரிக்காவின் உதவி தங்கியுள்ளது. இலங்கையில் உள்ள தமிழர்களுடன் மட்டுமன்றி வெளியேயுள்ள தமிழர்களுடனும் இலங்கை பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது மிகமிக முக்கியமானதாகும்.

தமிழ் சமூகத்தை அவர்கள் மேலும் அந்நியப்படுத்துவதற்கான சாத்தியம் உள்ளது. இது பிரிவினைகளை மேலும் அதிகரிக்கும். சிலசமயம் புலிகள் ஒழுங்கமைப்பை மேற்கொள்வதற்கான புதிய வாய்ப்புகளையும் ஏற்படுத்தும். அதனால் இலங்கைத் தமிழ் மக்களுடன் பேச்சுவார்த்தையை இலங்கை மேற்கொள்வது மிகவும் முக்கியமானதாகும். நல்லிணக்க நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தவேண்டும்.

இடம்பெயர்ந்த மக்களை துரிதமாக மீளக்குடியமர்த்த வேண்டும். இந்த இடம் பெயர்ந்த மக்களின் நிலைமைக்கும் அமெரிக்கா இலங்கைக்கு வழங்கும் நிதியுதவிக்கும் தொடர்பு உள்ளது. இடம் பெயர்ந்த மக்களை சாத்தியமான அளவுக்கு துரிதமாக மீளக்குடியமர்த்துவதென்ற தனது உறுதிமொழிக்கு அமைவாக இலங்கை செயற்படும் தன்மையிலேயே புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், ஜீவாதாரத்தை ஏற்படுத்துதல் என்பன வற்றுக்காக நாம் வழங்கும் நிதி தங்கியுள்ளது.

இரண்டாவதாக அரசியல் நல்லிணக்கம், அதிகாரப்பகிர்வு என்பனவற்றில் இலங்கை முன்னேற்றம் காணவேண்டும் என்றும் பிளேக் கூறியுள்ளார்.

முகாம் அகதிகளை உடன் விடுவிக்காவிடின் ஆயிரக்கணக்கில் மரணங்கள் சம்பவிக்கும் – ஐ.தே.க.

flood.jpgஅகதி முகாம்களிலுள்ள 2 இலட்சத்து 70 ஆயிரம் மக்களின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் என்றும் அவதிப்படும் அந்த மக்களில் சிறுவர்கள், முதியவர்களையாவது உடனடியாக விடுவிக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, உலகில் இந்தநிலைமை எங்குமே கிடையாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. முகாம் மக்களை உடனடியாக விடுவிக்காவிடின் ஆயிரக்கணக்கில் மரணங்கள் சம்பவிக்கும் நிலைமை இருப்பதாக கண்டி மாவட்ட ஐ.தே.க. எம்.பி. லக்ஷ்மன் கிரியல்ல செவ்வாய்க்கிழமை எச்சரித்தார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் இதனை தெரிவித்த லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி.மேலும் கூறியதாவது; யுத்தத்தின் போது பலவந்தமாக அடைத்து வைக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டனர். இந்நிலையில் அவர்களை அரசாங்கம் தடுத்து வைத்துள்ளது. அம் மக்கள் அனைவரும் பயங்கரவாதிகள் அல்ல. எனவே, பிள்ளைகள் மற்றும் வயது முதிர்ந்த ஆண்கள், பெண்களை விடுவிக்குமாறு கேட்கின்றேன்.

இவ்வாறான நிலைமை உலகில் எங்கும் கிடையாது. இந்த மக்கள் எமது பிரஜைகளே. அண்மையில் எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்க வன்னியில் 70 சதவீதமான வீடுகள் சிறுசேதத்துக்குள்ளானதால் முகாம்களிலுள்ள மக்களை மீளக் குடியமர்த்துமாறு கோரினார்.  ஐ.நா. மற்றும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் வாக்குறுதியளித்ததன் பிரகாரம் 6 மாதத்தில் குடியமர்த்தப்பட வேண்டும் இதற்கான உதவிகளை வெளிநாடுகள் அளிக்கவுள்ளதாக கூறியபோதும் மீளக்குடியமத்தல் செயற்பாட்டு முறைமை சம்பந்தமான அறிக்கையை தூதரங்களுக்குச் சமர்ப்பிக்காமையாலேயே இவ்வுதவிகள் கிடைக்கவில்லை. முகாம்களில் குறைபாடுள்ளதை அரசாங்கமே ஏற்றுள்ளது.

பயங்கரவாதிகளைக் கைது செய்து தனியாக வைக்க வேண்டுமென்பதில் எமக்கு மாற்றுக் கருத்து இல்லை. நாம் எதிர்க்கவில்லை. இந்நிலையில் முகாம்களிலுள்ள 2 இலட்சத்து 70 ஆயிரம் மக்களுடன் அரசு விளையாடக் கூடாது. முகாம்களிலுள்ளவர்களுக்கு நாடெங்கும் அதேபோல் வெளிநாடுகளிலும் உறவினர்கள் உள்ளனர். அவர்கள் தடுக்கப்படாது விட்டால் உறவினர்களின் உதவியைப் பெற்றுத் தமது வாழ்வை அவர்களால் கட்டியெழுப்ப முடியும்.

முகாம்களிலுள்ளவர்களை தடுத்து வைப்பதானது மனித உரிமை மீறல் ஆகும். ஜெனீவாவில் மனித உரிமை ஆணைக்குழுவில் அரசு வெற்றி பெற்றதற்குக் காரணம் எதிர்காலத்தில் மனித உரிமை மீறப்படாதென உறுதியளித்த காரணத்தினாலாகும்.

யுத்த வேளையில் மனித உரிமைகள் சில சமயம் மீறப்பட்டதெனினும் எதிர்காலத்தில் மீறப்படாதென உறுதியளித்ததன் பேரிலேயே வெளிநாடுகள் அதனை ஏற்று மனித உரிமை ஆணைக்குழு விவாதத்தில் ஆதரவளித்தன. சுமார் 3 இலட்சம் மக்களை அடைத்து வைப்பது என்ன நீதியென கேட்கின்றேன்?

இவ்வாறு அடைத்து வைப்பதன் மூலம் நாட்டில் நீதி உள்ளதா இல்லையா என்பது உலகத்திற்குத் தெரியும். முகாம்களுக்குள் எதிர்க்கட்சிப்பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்லவிடாது தடுக்கப்பட்டுள்ளனர். அரச தரப்பினர் செல்லும் போது எதிர்க்கட்சியினர் அங்கு செல்வதற்கு அனுமதி கேட்கப்படுகின்றது.

யுத்தம் முடிந்துள்ள நிலையில் பொலிஸாரின் அடாவடித்தனம் தலைதூக்கியுள்ளது. பொலிஸில் 90 சதவீதமானவர்கள் நல்லவர்கள் உள்ள நிலையில் மீதியானோரே அரசுக்காக தேவையற்ற வேலைகளை மேற்கொள்கின்றனர். அங்குலான தாக்குதலை மேற்கொண்டது புலிகளா? என்னைவிட உங்களுக்கு நன்கு தெரியும் லசந்த மற்றும் ரவிராஜ், மகேஸ்வரன் மீதான தாக்குதலில் திரைமறைவில் யார் இருந்துள்ளது என்பது தற்போது வெளிப்பட்டுள்ளது.

வடக்கில் யுத்தம் முடிந்துள்ள நிலையில் அது தெற்கிற்குப் பரவியுள்ளது. வடமேல் மாகாண சபைத் தேர்தலில் ஜோன் பிள்ளையின் வீட்டின்மீது எண்ணெய்யூற்ற அரச தரப்பினரே எடுத்துக் கொடுத்தனர். மற்றவர்களுக்கு நடக்கின்ற போது மௌனம் காத்தால் எமக்கு நடக்கும் போது கதைப்பதற்கு யாரும் இருக்கார்.

பயங்கரவாதிகள் அழிக்கப்பட்ட நிலையில் ஜனநாயகத்தை நிலை நிறுத்துமாறு பிள்ளைகள், பெற்றோர்கள் கேட்கின்றனர். வடக்கிலும் தெற்கிலும் சாதாரணமாக தேர்தல் இடம்பெற 17 ஆவது அரசியல் திருத்தத்தை அமுல்படுத்துமாறு கேட்கின்றனர். அரசு அதனைச் செய்யாது புலிகளை ஒழித்ததாகக் கூறி அரச பயங்கரவாதத்தை ஆரம்பித்துள்ளது. இதனை மக்களால் தாங்க முடியாது.

அரசாங்கம் பயங்கரவாதிகளை அழித்த நிலையில் நாட்டின் அபிவிருத்தி ஏற்பட வேண்டுமென்றால் மனித உரிமை பாதுகாக்கப்பட்டு நீதியை நடைமுறைப்படுத்த வேண்டும். இதனை அரசு உணராதுள்ளது. யுத்தம் முடிந்த நிலையில் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு முன்வைக்க வேண்டும். ஐ.நா. வின் இலங்கைப் பிரதிநிதியான தயான் ஜயதிலக அரசியல் தீர்வாக 13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்படுமென ஜெனீவாவில் கூறி மனித உரிமை ஆணைக்குழுவில் வெற்றி பெறவைத்தார். அவருக்கு என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும்.

முகாம்களிலுள்ள மக்களைத் தடுத்து வைத்திருப்பதானது பௌத்த சமய கலாசாரத்தை அவமதிப்பதாகும். புலிகள் இருப்பின் அவர்களைத் தனித்தனியாக தடுத்து வைக்க வேண்டும். இதை எதிர்க்கவில்லை. முகாம்களில் 3 அடி அளவுக்கு நீர் உள்ளது. இப்படங்கள் பத்திரிகையில் வெளியாகியுள்ளன. இவர்களை அரசாங்கம் விடுதலை செய்யாது விடின் எதிர்காலத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் பலியாவர். இதனால் நாட்டுக்கு அவமானம் ஏற்படும். எனவே, இதனை அரசு கவனத்திலெடுக்க வேண்டுமென கேட்கின்றேன் என்றார்.

600 மில்லியன் ரூபா செலவில் மீன்களுக்கென தனி ஆஸ்பத்திரி

26parliament.jpgமீன்களுக் கென பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் தனியான ஆஸ்பத்திரியொன்று அமைக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் மீன்பிடித்துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்தார். ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் பிரேமசிறி மானகே எழுப்பிய வாய்மூல விடைக்கான வினாவுக்கு பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:-

இந்த ஆஸ்பத்திரிக்கு 600 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மீன்களுக்கு ஏற்படும் நோய்களை தடுக்கும் வகையில் இந்த ஆஸ்பத்திரி அமைக்கப்பட்டு வருகிறது. நன்னீர் மீன் பிடித்துறையை மேலும் அபிவிருத்தி செய்யும் வகையில் இந்த ஆஸ்பத்திரியை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடந்த வருடம் நன்னீர் மீன் பிடித்துறைக்கென நிரந்தர வாவிகள் அமைக்கப்பட்டதோடு இறால் வளர்ப்பிற்கென 281 வாவிகள் அமைக்கப்பட்டன. இவற்றின் மூலம் கடந்த வருடம் 43,390 மெற்றிக் தொன் மீன் உற்பத்தி செய்யப்பட்டது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் நன்னீர் மீன்பிடி மூலம் கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது என்றார்.

இராக் குண்டுத் தாக்குதலில் 86 பேர் பலி

இராக் கின் தலைநகர் பாக்தாதின் மத்திய பகுதியில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில் குறைந்தது 86 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 400 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். பாக்தாதில் இந்த ஆண்டில் நடந்த மிக மோசமான வன்செயல் இதுவேயாகும்

ஒரு சில நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து ஆறு குண்டு வெடிப்புகள் இராக்கின் அரசு அமைச்சுகள் இருக்கும் பகுதிகளுக்கு அருகே நடந்துள்ளது. தலைநகரின் பாதுகாப்பு வலயமான கீரி்ன் சோன் என்ற பகுதிக்கு சற்று வெளியேயுள்ள வெளிநாட்டு அமைச்சுக்கு அருகேதான் மிகவும் சக்தி வாய்ந்த குண்டு வெடித்துள்ளது.

பாதுகாப்புச் சூழல் குறித்து இராக்கிய அரசு சமீபத்தில் வெளியிட்டு வரும் நம்பிக்கை அறிக்கைகளை இது கேள்விக்குறியாக்குகிறது. இதற்கு முந்தைய தாக்குதல்கள் நகரின் வறுமை மிக்க, பாதுகாப்பு குறைவான பகுதிகளில் நடைபெற்றதாகவும், இந்த வகையில் தற்போது நடைபெற்ற தாக்குதல்கள் அசாதாரணமானவை என்றும் பாக்தாதில் இருக்கும் பி பி சி செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

கண்ணி அகற்றும் பணிக்கு அமெ. மேலும் நிதி உதவி – 6 மில்லியன் டொலர் நன்கொடை

வட மாகாணத்தில் கண்ணி வெடிகளை அகற்றும் நட வடிக்கைகளை துரிதப்படு த்துவதற்காக அமெரிக்க அர சாங்கம் மேலும் ஆறு மில்லியன் அமெரிக்க டொலர் களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

ஐக்கிய அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஆயுத அகற்றலும் தணித்தலும் பற்றிய அரசியல், இராணுவ விவகார அலுவல் பணி யகத்தினூடாக இந்நிதி, இலங்கையில் கண்ணி வெடி களை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நான்கு அரச சார்பற்ற அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கண்ணி வெடிகளை அகற்றுதல் தொடர்பான தமது ஆற்றலை அதிகரிப்பதற்கும் அடுத்துவரும் 12 மாதங்களில் தமது பணியை விஸ்தரிப்பதற்கும் இம் மேலதிக நிதி வழங்கப்பட்டுள்ளது.

டென்மார்க் கண்ணி வெடி அகற்றும் குழு கண்ணி வெடி நடவடிக்கைகளுக்கான ஸ்விஸ் மன்றம், ஹேலோ நம்பிக்கைப் பொறுப்பு, கண்ணிவெடி மதியுரைக் குழு ணிதிமி) ஆகியன இந்நிதியை தமது நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தவுள்ளன.

“இலங்கையின் வட பகுதியில் கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக இந்நிதி அளிப்பது குறித்து ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் மகிழ்ச்சியடைகிறது” என்று பிரதித் தூதுவர் ஜேம்ஸ் ஆர். மூர் கூறினார்.

ஐக்கிய அமெரிக்க இராஜ்யத்தின் கண்ணி வெடி அகற்றும் நிபுணர்களைக் கொண்ட குழு கடந்த ஜுன் மாதம் இலங்கை வந்திருந்தது. அவர்கள் இங்கு நான்கு நாட்கள் தங்கியிருந்தபோது கண்ணி வெடி அகற்றலுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து தேவைகள் மற்றும் உதவிகள் குறித்து உரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.