தமிழருடன் அதிகாரப்பகிர்வை தவறவிட்டால் மீண்டும் வன்முறைகள் தோன்ற வழிவகுக்கும்

சிறுபான்மை தமிழ்மக்களுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் தவறுமானால் வன்முறைகள் மீண்டும் ஏற்பட வழிவகுக்கும் என்று அமெரிக்க உதவி வெளிவிவகார அமைச்சர் ரொபேட் பிளேக் எச்சரித்துள்ளார். அதிகாரப்பகிர்வில் தாமதம் காட்டுவதானது விடுதலைப் புலிகள் மீண்டும் ஒன்று சேருவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திவிடும் என்று பிளேக் பி.பி.சி.க்கு தெரிவித்திருக்கிறார்.

யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களை அரசாங்கம் துரிதமாக மீளக்குடியேற்ற வேண்டும். இந்த விடயத்திலேயே அமெரிக்காவின் உதவி தங்கியுள்ளது. இலங்கையில் உள்ள தமிழர்களுடன் மட்டுமன்றி வெளியேயுள்ள தமிழர்களுடனும் இலங்கை பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது மிகமிக முக்கியமானதாகும்.

தமிழ் சமூகத்தை அவர்கள் மேலும் அந்நியப்படுத்துவதற்கான சாத்தியம் உள்ளது. இது பிரிவினைகளை மேலும் அதிகரிக்கும். சிலசமயம் புலிகள் ஒழுங்கமைப்பை மேற்கொள்வதற்கான புதிய வாய்ப்புகளையும் ஏற்படுத்தும். அதனால் இலங்கைத் தமிழ் மக்களுடன் பேச்சுவார்த்தையை இலங்கை மேற்கொள்வது மிகவும் முக்கியமானதாகும். நல்லிணக்க நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தவேண்டும்.

இடம்பெயர்ந்த மக்களை துரிதமாக மீளக்குடியமர்த்த வேண்டும். இந்த இடம் பெயர்ந்த மக்களின் நிலைமைக்கும் அமெரிக்கா இலங்கைக்கு வழங்கும் நிதியுதவிக்கும் தொடர்பு உள்ளது. இடம் பெயர்ந்த மக்களை சாத்தியமான அளவுக்கு துரிதமாக மீளக்குடியமர்த்துவதென்ற தனது உறுதிமொழிக்கு அமைவாக இலங்கை செயற்படும் தன்மையிலேயே புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், ஜீவாதாரத்தை ஏற்படுத்துதல் என்பன வற்றுக்காக நாம் வழங்கும் நிதி தங்கியுள்ளது.

இரண்டாவதாக அரசியல் நல்லிணக்கம், அதிகாரப்பகிர்வு என்பனவற்றில் இலங்கை முன்னேற்றம் காணவேண்டும் என்றும் பிளேக் கூறியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *