அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

மின்சார சபை ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து

ecblogo.jpgஇலங்கை மின்சார சபை ஊழியர்களின் விடுமுறைகள் காலவரையின்றி இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவிக்கிறது.

இன்று 28 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் விதத்தில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் மறு அறிவித்தல் வரை  விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபையின் தலைவர் கே. ரணவீர அறிவித்துள்ளார். நாட்டினது அத்தியாவசிய சேவையாகக் கருதப்படும் மின்சார விநியோக சேவையை சீராகவும் தொடர்ச்சியாகவும் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே சபை இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

எவ்விதத் தடையும் இன்றி ஊழியர்களுக்கு சேவையை மேற்கொள்வதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் மின்சார சபையின் தலைவர் மேலும் தெரிவித்தார். 

கிராமோதய நிதிச்சட்டத்தில் திருத்தம்!

janakabandarathennakoon.jpgகிராமோதய நிதிச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும் வகையில் ஜனதிரிய நிதியத்தை ஏயற்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்கோன் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

இதன்மூலம் கிராமோதய சபைகளின் செயற்பாடுகளை மேலும் மேம்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சட்டவரைவை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துக்கு விடவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

மட்டு.- கொழும்பு கடுகதி ரயில் சேவையில் மாற்றம்

train0000.jpgமட்டக் களப்புக்கும் கொழும்புக்கும் இடையிலான கடுகதி ரயில் சேவையில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் மாற்றம் கொண்டு வரப்படவிருப்பதாக ரயில்வே திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயணிகளின் நலன் கருதியே இம்மாற்றத்தைக் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன் பிரகாரம் தற்போது காலை சேவையில் ஈடுபட்டுள்ள ‘உதயதேவி’ கடுகதி ரயில் சேவை இரவு ரயில் சேவையாக மாற்றப்படும்.

ஆனால் உறங்கல் வசதிகள் இதில் இருக்க மாட்டா. அப்பெட்டிகளுக்குப் பதிலாக இரண்டாம் வகுப்பு உறங்கலிருக்கை ஆசன வசதிகள் கொண்ட பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.

தற்போது இரவு நேர சேவையில் ஈடுபட்டுள்ள ரயில், காலை நேர சேவையாக, இதற்குப் பதிலாக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. உத்தேசிக்கப்பட்டுள்ள இம் மாற்றம் காரணமாக மட்டக்களப்புக்கும் கொழும்புக்கும் இடையிலான ஆசன முன்பதிவுகள் எதிர்வரும் முதலாம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

மின்சார சபை வேலை நிறுத்தத்திற்கு பொறியியலாளர், முக்கிய சங்கங்கள் எதிர்ப்பு

ecblogo.jpgஅரசாங் கம் ஒரு இலக்கை நோக்கி உத்வேகத்துடன் பயணிக்கும் இத்தருணத்தில் வேலை நிறுத்தத்தில் குதித்து அரசை அசெளகரியத்துக்கு உள்ளாக்க வேண்டாமென அமைச்சர் ஜோன் செனவிரத்ன மின்சார சபை ஊழியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கை மின்சார சபையின் சில தொழிற்சங்கங்கள் இன்று சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தப் போராட்டமொன்றை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளன.இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர்; பொது மக்களின் நலனையும், மின்சார சபையின் கீர்த்தியையும் மதித்து வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு சகல ஊழியர்களும் வேலைக்குத் திரும்ப வேண்டுமெனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது :-

மின்சார சபைத் தொழிற்சங்கங்கள் இன்று மேற்கொள்ளத் தீர்மானித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பதில்லையெனவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லையெனவும் மின்சார சபை பொறியியலாளர் உட்பட பல முக்கிய தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. அத்தொழிற்சங்கங்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.ஊழியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் எவ்வித அழுத்தங்களுக்கும் அடிபணியாது கடமைக்குச் சமுகமளிக்குமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் 2009 ஆண்டுக்கான சம்பள உயர்வைப் பெற்றுத் தருமாறு கோரி மேற்படி வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்று மேற்கொள்கின்றன. எனினும் பத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பத்தாயிரத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் இதில் பங்கேற்கமாட்டார்களென மின் வலு எரிசக்தி அமைச்சு தெரிவித்தது.

கடந்த 30 வருட காலம் தொடர்ந்த பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தைப் பாதுகாத்துள்ள நிலையில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை மேற்கொள்வதில்லையென ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்தை சகல அரச ஊழியர்களும் ஏற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் மேற்படி வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை எனத் தீர்மானித்துள்ள தொழிற்சங்கங்களுக்கு அரசாங்கம் தமது நன்றியைத் தெரிவிப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்மானப்பணிகள் விரைவில் நிறைவு பெறும்

hambantota_harbour.jpgஹம்பாந் தோட்டை துறைமுக நிர்மானப்பணிகள் அடுத்த ஒன்றரை வருடத்தில்  நிறைவடையவுள்ளன. இது வரையில் அதன் நிர்மானப்பணிகளின் 40 வீதமான வேலைகள் பூர்த்தியடைந்துள்ளன.

இத்துறைமுக கடற்பிரதேசத்தின் ஆழம் 17 மீற்றர்களாகும. இதன் வேலைத்திட்டம் பூர்த்தியானதன் பின்னர் தனியார் கைத்தொழிற்றுறையும் ஏனைய தொழிற்றுறைகளும் விருத்தியடையும்.  இத்துறைமுகத்தினால் தெற்கில் பெரியளவிலான வர்த்தக மேம்பாடு ஏற்படுவதுடன் எதிர்காலத்தில் அதிகமான வேலைவாய்ப்புக்கள்  உருவாவதற்கும் சந்தர்ப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இடம்பெயர்ந்த மக்களை முகாம்களில் வைத்திருக்க அரசுக்கு எவ்வித தேவையும் இல்லை

anurapriyadarsanayapa.jpgஇடம் பெயர்ந்த மக்களை முகாம்களில் தொடர்ந்து வைத்திருக்க அரசாங்கத்துக்கு எவ்வித தேவையும் இல்லை என்றும் அவர்களின் தேவைகள் அனைத்தையும் அரசு நிறைவேற்றி வருகிறது என்றும் தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாபா தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அகதிகளின் வாக்குகளை சுறையாடி அரசாங்கம் தேர்தலை வெல்ல முயற்சிப்பதாக நாளிதழ் ஒன்றில் வெளிவந்திருந்த செய்தியைச் சட்டிக்காட்டியே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அரசாங்கத்தை விமர்சிக்கும் வகையில் பலர் பல கருத்துக்களை கூறி வருகின்ற போதிலும் அவர்களால் அதற்கான உரிய விளக்கத்தை அளிக்க முடியவில்லை. இடம்பெயர்ந்த மக்களுக்காக அரசாங்கம் பலதரப்பட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அண்மையில்கூட முகாம்களில் பாடசாலை ஒன்றை அமைப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டது.

கண்ணிவெடிகளை அகற்றுவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. அதனை சீராக செய்து முடித்த பின்னரே அவர்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அதுவரைக்கும் அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் நிறைவேற்றி வருகின்றது என அமைச்சர் மேலும் கூறினார்.

கொட்டாவை – கடுவளை புறச் சுற்றுவட்டப்பாதை

pr-mahi.jpgநகர்ப்புற போக்குவரத்து அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கொழும்பு நகருக்கான இலகு பிரவேச தென்பகுதி சுற்றுவட்டப்பாதை ஒன்றை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி கொட்டாவையில் இருந்து கடுவளை வரையிலான சுற்றுவட்டப்பாதை அமைப்புக்கான அமைச்சரவைப் பத்திரத்தை நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமர்பித்திருந்தார்.

சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பான் வங்கி இதற்கு நிதியுதவி வழங்குகிறது. இத்திட்டத்துக்கு 2498 கோடியே 26 இலட்சத்து 1824 ரூபா செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

கெழும்புக்கு 10 முதல் 15 கிலோ மீட்டர் வெளிப்புறமாகச்; செல்லும் இச்சுற்றுவட்டப்பாதையின் முழு நீளம் 29.10 கிலோ மீட்டர் ஆகும். கடுவளைக்கும் கொட்டாவைக்கும் இடையில் அமைக்கப்படவுள்ள இதன் முதல் கட்டத்தின் நீளம் 11 கிலோ மீட்டராகும். இதன் நிர்மானப்பணிகள் சீன ஹாபர் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்பட்டுள்ளது.

கல்முனை மற்றும் சாய்ந்தமருது வீடமைப்புத் திட்டம்

home.jpgஅம்பாரை கரையோர மாவட்டத்தில் கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசப் பிரிவுகளில் சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான விசேட வீடமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேசத்தைக் கட்டி எழுப்பும் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் என்ற வகையில் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார். இரண்டாம் கட்டத்துக்கு நிதியுதவி வழங்க கொரியாவின் பொருளாதார அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் அமெரிக்கா இதற்கு 6.653 மில்லியன் டொலரை வழங்குகிறது.

இரண்டாம் கட்ட செயற்பாட்டுக்கு 63,45,604 டொலர் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

பீ. பி. ஜயசுந்தரவின் மனுவை விசாரிக்க ஏழு பேர் கொண்ட நீதியரசர் குழுமம் – செப். 24 இல் விசாரணை

00000court.jpgதிறை சேரியின் முன்னாள் செயலாளர் பீ. பி. ஜயசுந்தர தனக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை இல்லாமல் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுமீதான விசாரணை அடுத்த மாதம் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இதற்காக ஏழு நீதியரசர்கள் கொண்ட குழுமம் ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா தலைமையிலான நீதியரசர்கள் குழுவினர் நேற்று பீ. பி. ஜயசுந்தரவின் மனு தொடர்பாக ஆராய்ந்தனர். இந்த மனு தொடர்பாக ஆராய்வதற்காக ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழுமம் நியமிக்கப்பட்டிருப்பதாக உச்ச நீதிமன்றம் நேற்று அறிவித்தது.

இந்த வழக்கின் பிரதிவாதியான வாசுதேவ நாணயக்கார சார்பில் ஆஜரான எம். ஏ. சுமந்திரன், ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழுமத்தின் நியமனத்தை எதிர்த்து வாதிட்டதுடன் 05 பேர் கொண்ட குழுமத்தை நியமிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா பீ. பி. ஜயசுந்தரவின் மனு தொடர்பாக ஆராய்வதற்காக ஐந்து பேர் கொண்ட நீதியரசர்கள் குழுமத்தினை நியமித்திருந்தார்.

அவர் ஓய்வுபெற்றதையடுத்து வழக்கை நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட புதிய பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா தலைமையிலான குழுவினர், ஐந்து பேர் கொண்ட நீதியரசர்கள் குழுமத்திற்கு மேலதிகமாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளான சிராணி திலக்கவர்தன மற்றும் பி. ஏ. இரத்நாயக்க ஆகியோரையும் இக்குழுமத்தில் நியமித்துள்ளனர்.

‘இலங்கை போர்க் குற்றம் குறித்து ஆராய சர்வதேச விசாரணை தேவை’- ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்

1111srilanka_army.jpgஇலங்கை படையினர் என்று கூறப்படுபவர்களால், தடுத்து வைக்கப்பட்டிருந்த சிலர் கொல்லப்படுவதாக குற்றஞ்சாட்டி அண்மையில் வெளியாகியிருக்கின்ற வீடியோ காட்சிகள், இலங்கையில் இடம்பெற்றிருக்கக் கூடிய போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச ஆணைக்குழு ஒன்றின் விசாரணை அவசியம் என்பதை கோடி காட்டுவதாக, ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு கூறியிருக்கிறது.

கடந்த பல வருடங்களாக தொடர்ந்த இரு தரப்புக்கும் இடையிலான போரின் போது இரு தரப்பினாலும், போர் சட்டங்கள் மீறப்பட்டதாக முறைப்பாடுகள் பல வந்தாலும், அங்கு சுயாதீன கண்காணிப்பாளர்கள் எவரும் செல்ல அனுமதிக்கப்படாத நிலை காரணமாக அவை குறித்த உறுதியான தகவல்களை பெறமுடியாது இருந்து வந்துள்ளது என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஆகவே இரத்தக்களரி மிகுந்த இலங்கை போரில் இடம்பெற்ற குற்றங்கள் குறித்து ஆராய சுயாதீனமான சர்வதேச விசாரணை ஆணையம் ஒன்று தேவை என்றும் அது வலியுறுத்தியுள்ளது.

இதற்கிடையே, ஊடகங்களில் வெளியான இந்த வீடியோ ஒளிக்கீற்று போலியானது என்று மீண்டும் மறுத்திருக்கின்ற இலங்கை அரசாங்கம், இது குறித்த செய்தியை முதலில் வெளியிட்ட ”சானல் 4” நிறுவனத்துக்கு எதிராக பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்யப்ப்போவதாக கூறியுள்ளது.

இது குறித்து இராஜதந்திர ரீதியிலான முறையான கண்டனத்தை பிரித்தானிய அரசாங்கத்திடம் தெரிவிக்கவிருப்பதாக இலங்கையின் அமைச்சரவைப் பேச்சாளரான அநுர பிரிய தர்சன யாப்பா அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.