அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

ஆயுதங்களுடன் கொல்கட்டாவில் தரையிறங்கிய ஐக்கிய அரபு நாட்டு விமானம்!

abu-dhabi-flight.jpgகொல் கட்டாவில் எரிபொருள் நிரப்ப தரையிறங்கிய ஐக்கிய அரபு நாடுகளின் விமானத்தில் ஆயுதங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்த அந்த விமானமும், அதன் விமானி மற்றும் ஊழியர்களும் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். அபு தாபியில் இருந்து சீனாவிற்குப் பறந்து கொண்டிருந்த அந்த விமானம், எரிபொருள் நிரப்பிக் கொள்வதற்காக கொல்கட்டா நேத்தாஜி சுபாஸ் சந்திர போஸ் விமான நிலையத்தில் தரையிருங்க அனுமதி கோரியது. விமானத்தில் ஆயுதங்கள் ஏதும் இல்லையென்று உறுதியளித்தால் தரையிரங்க அனுமதி வழங்கப்படும் என்று கட்டுப்பாட்டு மையத்திலிருந்து நிபந்தனை விதிக்கப்பட்டது. அதனை விமானி ஏற்றுக் கொண்டதையடுத்து, கொல்கட்டா விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்கியது.

தரையிருங்கிய பிறகு விமானத்தில் ஆயுதங்கள் உள்ளதென தலைமை விமானி கூற, சோதனையிடச் சென்ற இந்திய சுங்க இலாகா அதிகாரிகள் அதில் ஆயுதங்கள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். இதனையடுத்து விமானத்தை ஒடுகளத்திலேயே பிடித்து வைத்தனர். விமானியும், மற்ற ஊழியர்களும் தங்கியிருந்த விடுதியிலேயே பிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஆயுதங்களுடன் தரையிறங்கியதற்காக ஐக்கிய அரபு நாடுகளின் விமானத்தின் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து இந்திய விமான தள ஆணையம், சுங்கத் துறை, குடியேற்றத் துறை ஆகியவற்றின் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். அபு தாபியில் இருந்து சீனத்தின் ஹான்யாங் நகருக்கு அந்த விமானம் செல்லவிருந்தது.

வவுனியா நலன்புரி நிலையம்: க. பொ. த. சா/த மாணவர்க்கு அடுத்த வாரம் முதல் வகுப்புகள்

வவுனியா நலன்புரி கிராமங்களிலுள்ள க. பொ. த. சாதாரண தரப் பரீசைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு அடுத்த வாரம் முதல் விசேட வகுப்புகள் நடத்தவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்தது.

இவர்களுக்கு பாட நூல்கள், பாடக் குறிப்புகள் என்பனவும் வழங்கப்படவுள்ளன. டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள க. பொ. த. சாதாரண தர பரீட்சைக்கு தயார்படுத்தும் வகையில் இந்த விசேட வகுப்புக்கள் நடத்தப்படவுள்ளன.

வவுனியா மாவட்டத்திலுள்ள தேசிய பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் இந்த விசேட பயிற்சி வகுப்புகளை நடத்தவுள்ளதாக தேசிய பாடசாலைகளுக்குப் பொறுப்பான கல்விப் பணிப்பாளர் எஸ். ரோனிஸ் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் க. பொ. த. உயர்தர மாணவர்கள் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் ஆகியோருக்கும் இவ்வாறான விசேட வகுப்புகள் நடத்தப்பட்டன.

செனல் – 4 வீடியோ காட்சிகள் குறித்து 4 கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டன : அமைச்சர் சமரசிங்க

pree-7-9-9.jpgபிரித்தா னியாவின் செனல் 4 தொலைக்காட்சி, இலங்கை இராணுவத்திற்குப் பாரிய அபகீர்த்தியை ஏற்படுத்தும் வீடியோக் காட்சிகள் தொடர்பாக ஜனாதிபதியின் விதப்புரைக்கமைய நான்கு கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டன என இடர் முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

இன்று தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

“அண்மையில் நான் ஜெனீவாவுக்கு சென்றிருந்த போது, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினேன். பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சி ஒலிபரப்பிய வீடியோ தொடர்பில் ஒரு மணி நேரம் அவருடன் கலந்துரையாடினேன். செனல் 4 தொலைக்காட்சி தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்ன என அவர் என்னிடம் வினவினார்.

இது போலியாகச் சித்திரிக்கப்பட்ட வீடியோக் காட்சி என்று அரசு உறுதிபடக் கூறுவதாக நான் அவரிடம் தெரிவித்தேன். வீடியோக் காட்சிகள் குறித்த அறிக்கை நாளை மறுதினமளவில் வெளியிடப்படும். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீமூனிடம் அறிக்கை கையளிக்கப்படும்.

இவை போன்ற குற்றச்சாட்டுகள் எமக்கு ஒன்றும் புதிதல்ல. பல சர்வதேச ஊடகங்கள், வன்னியில் இருந்த 4 மருத்துவர்களின் அறிக்கையை வைத்துக் கொண்டு இலங்கை இராணுவத்தினருக்கு எதிராகப் பல குற்றச்சாட்டுகளை சுமத்தின. சிலியன்களை இலக்கு வைத்துத் தாக்கியதாகவும் வைத்தியசாலைகள் மீது மோட்டார் தாக்குதல் நடத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. மருத்துவர்கள் நால்வரும் விடுதலைப் புலிகளே எம்மை இவ்வாறு அறிக்கைகள் சமர்ப்பிக்குமாறு வற்புறுத்தியதாக அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தனர்.

இதே போன்று கனடாவில் உள்ள மனித உரிமைகள் அமைப்புக்கள், இவை போன்ற வீடியோக் காட்சிகளை வெளியிட்டுப் பல குற்றச்சாட்டுகளைச் சுமத்தின. இதுவும் போலியானவை என நாம் உறுதிப்படுத்தினோம். மேற்படித் தொலைக்காட்சி தொடர்பிலான விசாரணைகளை டாக்டர் சுனில் ஹே வித்தாரண ( இவர் உலகளாவிய ரீதியில் பிரசித்திபெற்ற வீடியோ பரிசோதகர் ), மொறட்டுவை பல்கலைக் கழகத்தின் தலைமை தொழில்நுட்ப விரிவுரையாளர் சத்துர டி சில்வா, சிரேஷ்ட சமிக்ஞைகள் அதிகாரி பிரசாத் சமரசிங்க, மேஜர் ஜெனரல் பி. ஏ. பண்டார போன்றோர் நடத்தினர்.

அவர்களின் அறிக்கையில், இந்த வீடியோ காட்சிகள் ‘கேம் கோடர்’ (Camcoder) மூலமாகவே ஒளிப்பதிவு செய்யப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கையடக்கத் தொலைபேசியில் அல்ல எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் போலியான ஒலிப்பதிவு (Audio) நவீன தொழில்நுட்பத்தின் மூலம் பதிவாக்கப்பட்டது எனவும் உறுதிப்டுத்தப்பட்டுள்ளது” 

ஐ.நா. ஊழியர்களை விடுதலை செய்யக்கோரி விரைவில் மனுத் தாக்கல்

un-7777.jpgநீண்ட காலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் ஐ.நா. ஊழியர்கள் இருவரை விடுதலை செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளதாக இணையத் தள செய்தி ஒன்றில் தெரிவிக்கப்படுகிறது.

ஐ.நா. ஊழியர்களான சார்ள்ஸ் ரவீந்திரன், கந்தசாமி சுரேந்திரன் ஆகியோர் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை ஆட்சேபித்து இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என்றும் இம்மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் பூர்த்தியாகும் நிலையில் உள்ளன என்றும் மனித உரிமைகள் சட்டத்தரணிகளில் ஒருவரான எஸ்.செலஸ்டின் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

ஐ.நா. ஊழியர்கள் இருவரும் ஜூன் மாத நடுப்பகுதியில் வவுனியாவில் வைத்து இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களால் அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்றும், தற்போது இவர்கள் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் ஐ.நா. வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளிவந்துள்ளன. 

இலவச உம்றா விசாக்கள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவினால் இன்று கையளிப்பு

visa.jpgரமழான் மாத காலத்தில் உம்றா கடமையை நிறைவேற்றுவதற்கு மக்கா செல்வதற்காக சவூதி அரேபிய அரசாங்கம் வழங்கிய 100 இலவச விசாக்கள் இன்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவினால் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் ஆண், பெண் யாத்திரிகர்களுக்கு வழங்கப்பட்டன.
 
இது தொடர்பான வைபவம் கொழும்பிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் கற்கை நிலையத்தில் இன்று முற்பகல் நடைபெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் ரமழான் மாதத்தில் முஸ்லிம்களுக்கான இலவச விசாக்களை வழங்கியமையானது, ஜனாதிபதி மீது சவூதி அரேபிய அரசாங்கம் வைத்துள்ள நம்பிக்கைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் சவூதி அரேபிய அரசாங்கத்துக்கும் சவூதி அரேபியத் தூதுவர் ஜமாசுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

அதிகாரியின் விசா ரத்து செய்யப்பட்டது குறித்து யுனிசெவ் விளக்கம் கோருகிறது

uni4444.jpgஇலங்கை யில் பணியாற்றும் ஐக்கியநாடுகள் சிறுவர் நிதிய பேச்சாளர் ஜேம்ஸ் எல்டரின் விசாவை ரத்து செய்வதென இலங்கை அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு காரணம் கூறுமாறு யுனிசெவ் நிறுவனம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது. இலங்கையில் மிக மோசமாக இடர்களை எதிர்நோக்கியிருக்கும் பெண்கள், சிறுவர்களுக்காக ஒரு பாரபட்சமற்ற தன்னார்வ பணியாளராக எல்டர் தொடர்ந்தும் பணியாற்ற வேண்டுமென தாங்கள் திடமாக நம்புவதாக புதுடில்லியிலிருந்து பணியாற்றும் யுனிசெவ் பிராந்திய தொடர்பாடல் அதிபர் சாரா குறோவ் ஏஎப்பி செய்தி ஸ்தாதபனத்திடம் தெரிவித்தார். சிறுவர்கள் மற்றும் மிக மோசமாக ஆபத்தை எதிர்நோக்கும் நாதியற்ற மக்களின் விமோசனத்திற்காக யுனிசெவ் சார்பில் பாடுபட்டுவருபவர் எவ்டர் என்று அவர் கூறினார்.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கெதிராக அண்மையில் நடந்து முடிந்த யுத்தம் குறித்து தெரிவித்த கருத்துக்கள் காரணமாக இலங்கையில் பணியாற்றும் சிரேஷ்ட ஐக்கியநாடுகள் அதிகாரி ஒருவரை நாட்டிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளதாக அரசாங்கம் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தது.இலங்கையில் இரத்தக் களறியை ஏற்படுத்திவரும் இன யுத்தம் குறித்தும் இளம் பராயத்தவர்கள் மீது அதன் தாக்கம் குறித்தும் ஜேம்ஸ் எல்டர் அண்மைக் காலமாக வெளிநாட்டு தொலைக்காட்சி செய்தி அலைவரிசைகளிலும் அச்சு ஊடகங்களிலும் அடிக்கடி கருத்து தெரிவித்து வந்துள்ளார்.

செப்ரெம்பர் மாதம் 7ஆம் திகதியிலிருந்து அவரது விசா ரத்து செய்யப்பட்டதுடன் அவரை உடனடியாக நாட்டிலிருந்து வெளியேறுமாறும் உத்தரவிடப்பட்டது. ஆனால் ஐக்கியநாடுகள் ஸ்தாபனம் கால அவகாசம் கோரியதன் பேரில் செப்ரெம்பர் மாதம் 21ஆம் திகதி வரை அவரது விசாகாலம் நீடிக்கப்பட்டுள்ளது என்று குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டதிகாரி பி.பி.அபேக்கோன் தெரிவித்தார். ஜேம்ஸ் எல்டர் பாதகமான கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவித்ததால் அரசாங்கம் சில மாதங்களுக்கு முன்னரே அவரை நாட்டிலிருந்து வெளியேற்றும் தீர்மானத்தை எடுத்தது என்றும் அபேக்கோன் மேலும் கூறினார்.

இலங்கையில் பாகிஸ்தான் கப்பல்!

ships000.jpgநல் லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் யுத்தக் கப்பலான ‘சுல்பிகார்’ கப்பலின் கட்டளை அதிகாரிக்கும் இலங்கை கடற்படைத் தளபதிக்குமிடையில் சந்திப்பொன்று  இடம்பெற்றுள்ளது. கெப்டன் சாஹித் இல்யாஸ¤க்கும்,  இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திஸர சமரசிங்கவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் உள்ள கடற்படைத் தலைமையகத்தில் ‘சுல்பிகார்’ கப்பலின் கப்டன் சாஹித் இல்யாஸ_ம் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திஸர சமரசிங்கவும் நேற்று முன்தினம் சந்தித்து உரையாடினர். இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்தாலோசித்துள்ளனர்.

நான்கு நாள் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தானின் ‘சுல்பிகார்’ கப்பல் இலங்கை வந்தது. 14 அதிகாரிகள் மற்றும் 188 கடற்படை வீரர்களுடன் வருகை தந்துள்ள சுல்பிகார் எனும் இந்தப் போர்க் கப்பல் 123 மீற்றர் நீளத்தையும், 13.2 மீற்றர் அகலத்தையும், 30.7 மீற்றர் உயரத்தையும் கொண்டது.

இந்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்திலிருந்து இன்று பாகிஸ்தான் நோக்கி புறப்பட்டுச் செல்லவுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் டி. கே. பி. தஸநாயக்க தெரிவித்தார்.

தொடர்ந்து இரு தினங்கள் கடும் மழை : மவுசகலை அணைக்கட்டின் மதகு திறப்பு

0000rain.jpgமவுசகலை, கித்துள்கலை, யட்டியந்தோட்ட மற்றும் அவிசாவளை ஆகிய பகுதிகளில் கடந்த இரு நாட்களாக பெய்த கடும் மழை காரணமாக மவுசகலை அணைக்கட்டின் மதகு திறந்து விடப்பட்டுள்ளது.

மத்திய மாகாணத்தில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக வெள்ள அபாயம் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று காலை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்படிப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் அவதானமாக இருக்கும்படியும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பன்றிக்காய்ச்சலால் 2.5 லட்சம் பேர் பாதிப்பு – 2840 பேர் உயிரிழப்பு

swine.jpgஉலக அளவில் பன்றிக் காய்ச்சலால் இதுவரை 2.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள பரிசோதனைக் கூடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, 2.5 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை, 2,840 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரியான கிரிகோரி ஹர்டல் தெரிவித்துள்ளார்.

பன்றிக் காய்ச்சலுக்கு காரணமான வைரஸ் வேகமாக பரவி வருவதே இதற்கு முக்கிய காரணம். தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குறிப்பாக,  இந்தியா, வங்கதேசம், மியன்மர்,தாய்லாந்து, கம்போடியாää இலங்கை மற்றும் இந்தோனேசியாவில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்;.

குறைந்தளவு பவன அமுக்கம் : மன்னாரில் கடும் சூறைக்காற்று

070909.jpgவங்காள விரிகுடாவில் ஏற்பட்ட குறைந்த அளவிலான பவன அமுக்கத்தின் விளைவாக சில தினங்களாக மன்னாரில் கடும் சூறைகாற்று வீசி வருகின்றது.

இதனால் மன்னார் மக்களின் அன்றாட வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளது.இதன் விளைவாக அடிக்கடி மின் தடங்கல் ஏற்பட்டு வருகின்றது. மரங்கள் சரிந்து கிடக்கின்றன. தோட்டங்களில் உள்ள வாழை, முருங்கை மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. சூரைக்காற்றுடன் மண் புழுதியும் கிளம்புவதால் மக்கள் வீதிகளில் நடமாட முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது