அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை அறிவித்தால் ஆதரவு வழங்க தயார் – மனோ கணேசன் எம்.பி.

இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெளிவாகக் கூறுவாராயின் அவருக்குப் பூரண ஆதரவை வழங்கத் தயாராக உள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார். ஜனாதிபதி தனது நிலைப்பாட்டைத் தெளிவாக அறிவித்தால், அவருக்கு ஆதரவு வழங்குவதில் எந்தத் தடையும் கிடையாதென மனோ கணேசன் கூறினார்.

கொழும்பில் நேற்று முன்தினம் (24) மாலை நடைபெற்ற மேல் மாகாண தமிழ் சாகித்திய விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை அறிவித்தார்.

எமக்கு உள்ளது ஒரே நாடும் ஒரே அரசும்தான். நாம் தற்போது அரசாங்கத்தில் பங்காளர்களாக இல்லாவிட்டாலும் அரசில் இருக்கின்றோம். அனைவரும் ஒற்றுமையாக ஒன்றாக இணைந்து வாழவேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.

இனங்களின் தனித்துவத்தைப் பேணும் அதேநேரம் ஒற்றுமையாகவும் வாழவேண்டும். ஜனா திபதியின் தலைமையிலான அரசாங்கத் திற்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளோம். ஆனால், இனப் பிரச்சினை குறித்த உறுதியான நிலைப்பாட்டை ஜனாதிபதி அறிவிக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

மேல் மாகாண கலை, கலாசார அமைச்சின் ஏற்பாட்டில் மருதானை எல்பின்ஸ்ரன் அரங்கில் நடைபெற்ற நிகழ்வுக்கு மேல் மாகாண சபை உறுப் பினர் எஸ். இராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

க.பொ.த. (சா/த) டிச. 11 இல்: சகல ஏற்பாடுகளும் பூர்த்தி 5 இலட்சத்து 45 ஆயிரம் பரீட்சார்த்திகள்

sri-lankan-students.jpgக.பொ.த.  சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் 11 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை நடைபெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்தார்.

இம்முறை நடைபெறவுள்ள இப்பரீட்சைக்கு 5 லட்சத்து 45 ஆயிரத்து 132 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். நிவாரணக் கிராமம் மற்றும் மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதி நீங்கலாக நாடு முழுவதும் 3215 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

4 லட்சத்து 05 ஆயிரத்து 257 பாடசாலை பரீட்சார்த்திகளும் எஞ்சியவர்கள் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் என்றும் பரீட்சைத் திணைக்களம் அறிவிக்கிறது. 4 லட்சத்து 10 ஆயிரத்து 274 மாணவர்கள் புதிய பாடத் திட்டத்தின் கீழும், 1 லட்சத்து 34 ஆயிர த்து 858 மாணவர்கள் பழைய பாடத்திட்ட த்தின் கீழும் தோற்றவுள்ளனர்.

3215 பரீட்சை நிலையங்களுக்கும் 504 ஒருங்கிணைப்பு நிலையங்கள் அமைக்கப்படுவதுடன் சுமார் 70,000 பேர் பரீட்சைக் கடமைகளிலும் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

அவுஸ்திரேலியா செல்லும்போது ஆழ்கடலில் கைதானவர்களின் விசாரணை சிஐடியிடம்

படகுகள் மூலம் சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்டபோது கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பு இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடற்படையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்ட 69 பேரும் சி.ஐ.டியினரின் மேலதிக விசாரணைகளுக்காக நீதிமன்ற உத்தரவின்பேரில் காலி, பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஐ.எம். கருணாரட்ன தெரிவித்தார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள 69 பேரில் 63 தமிழர்களும், 6 சிங்களவர்களும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.

ஏ(எச்1 என்1) அச்சம்: கைகளை அடிக்கடி கழுவி சுகாதாரம் பேணுமாறு அறிவுறுத்து

influenza-a.jpgபுதிய இன்புளுவென்ஸா ஏ (எச் 1 என் 1) நோய் நாடெங்கிலும் பரவியுள்ளதால் பொது மக்கள் தங்கள் கரங்களை அடிக்கடி சவர்க்காரமிட்டுக் கழுவிக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் நோய் பரவுகைத் தடுப்பு பிரிவு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இதேநேரம் மருத்துவர்கள் ஒவ்வொரு நோயாளியையும் பார்வையிட்டதும் தங்கள் கரங்களை சவர்க்காரமிட்டுக் கழுவிக்கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்கு துறை அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

அதேவேளை தும்மும் போதும், இருமும் போதும் ஒவ்வொருவரும் சுத்தமான துணித் துண்டைப் பயன்படுத்து மாறும் நோய் பரவுகை தடுப்பு பிரிவு மக்களிடம் கேட்டுள்ளது.

இது தொடர்பாக நோய் பரவுகைத் தடுப்பு பிரிவு தொற்று நோயியல் மருத்துவ நிபுணர் நவரட்ணசிங்கம் ஜனகன் கூறுகையில் :- புதிய இன்புளுவென்ஸா ஏ (எச் 1 என் 1) வைரஸ் நோய் நாட்டின் பல பிரதேசங்களில் பரவியுள்ளது.

இது இரண்டு வயதுக்குக் குறைந்த குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள், நீரிழிவு, தலசீமியா, சுவாசத் தொகுதி நோய்கள், புற்று நோய், இருதய நோய்கள் போன்ற நோய்களுக்கு உள்ளாகி இருப்பவர்கள் எளிதில் இந்நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது.

அதனால் இவ்வாறானவர்கள் மிகுந்த அவதானத்துடன் நடந்துகொள்ள வேண்டும். இது காற்றின் மூலம் பரவும் ஒரு தொற்று நோய் என்றாலும் இருமும் போதும், தும்மும் போதும் வெளிப்படுகின்ற எச்சில் சிதறல்கள் மூலமே பெரிதும் பரவுகின்றது.

இவ்வாறு வெளிப்படும் வைரஸ் சுற்றாடலிலுள்ள பொருட்களில் படிந்திருக்கும். அவற்றை அறியாமலேயே தொடுபவர்கள் கண்கள், வாய், மூக்கு என்பவற்றை தொடும் போது இவ்வைரஸ் தொற்றிக்கொள்ளுகின்றது. இதனைத் தவிர்க்கும் பொருட்டே அடிக்கடி கைகழுவ வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது. அதேநேரம் சளி, இருமல் நோய்களுக்கு உள்ளாகி இருப்பவர்கள் மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இதேவேளை ஆஸ்பத்திரி ஊழியர்கள் சகலரும் முகமூடி அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பு மருந்து

இந்நோய்க்குரிய தடுப்பு மருந்து எதிர்வரும் ஜனவரி மாத முற்பகுதியிலேயே இலங்கைக்குள் கொண்டு வரப்படவிருக்கின்றது. உலக சுகாதார ஸ்தாபனம் சுமார் நான்கு இலட்சம் தடுப்பு மருந்துகளை இலவசமாக வழங்கவுள்ளது. இத்தடுப்பு மருந்தை இந்நோய்க்கு சிகிச்சை அளிப்பவர்களுக்கும், நோய் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்திருப்பவர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

யாழ்ப்பாணத்துக்கு இந்தியத் தூதர் விஜயம்

இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டிற்கு இலங்கைக்கான ஐந்து நாடுகளின் தூதுவர்கள் விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகள் குறித்து கண்டறிந்திருக்கின்றார்கள். தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேசியா, தென்கொரியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் தூதுவர்களே இவ்வாறு யாழ்ப்பாணத்திற்கு புதன்கிழமை விஜயம் செய்திருக்கின்றார்கள்.

இந்தியத் தூதுவர் அலோக் கே காந்த் தவிர ஏனையோர் யாழ் அரசாங்க அதிபரைச் சந்தித்து யாழ் நிலைமைகள் குறித்து கேட்டறிந்ததுடன், தென்மாராட்சியில் உள்ள இடம்பெயர்ந்தோருக்கான ராமாவில் நலன்புரி நிலையத்தையும் பார்வையிட்டு, அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளவர்களிடம் கலந்துரையாடியுள்ளார்கள்.

இந்தியத் தூதுவர் யாழ் மாநகரசபையில் யாழ் மேயர் உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன், அங்கு நடைபெற்ற கூட்டத்திலும் உரையாற்றியிருக்கின்றார். இந்தியா இலங்கையின் வடபகுதியைக் கட்டியெழுப்புவதற்கும் இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் தயாராக இருப்பதாகவும், இதற்காகவே இந்திய வரவுசெலவுத்திட்டத்தில் 500 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அலோக் கே காந்த் தெரிவித்துள்ளார்.

முகாம் மக்கள் விடுதலை:ஹுயூமன் ரைட்ஸ் வாட்ச் வரவேற்பு

IDPs_Cookingவிடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் காரணமாக இலங்கையின் வடக்கே இடம் பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் அனைவரையும் விடுவிப்பது என்ற இலங்கை அரசின் முடிவை அமெரிக்காவின் நீயூயார்க்கை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஹூமன் ரைட்ஸ் வாட்ச் எனும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு வரவேற்றுள்ளது.

அதே ரேம் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சட்டத்துக்குப் புறம்பாக ஆயிரக்கணக்கானோர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு அது கூறியுள்ளது.

டிசம்பர் மாதம் முதல், முகாம்களில் இருக்கும் 1 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு நடமாடும் சுதந்திரம் அளிக்கப்படும் என்றும் இலங்கை அரசு சமீபத்தில் அறிவித்தது.

வெள்ளைமுள்ளி வாய்க்காலில் பெருமளவு வெடிபொருட்கள், ஆயுதங்கள் மீட்பு பரலினுள் புதைத்த நிலையில் கண்டுபிடிப்பு

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது புலிகள் இயக்கம் மறைத்து வைத்திருந்த அதிசக்தி வாய்ந்த பெருமளவு வெடி பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் என்பன முல்லைத்தீவு வெள்ளைமுள்ளி வாய்க்கால் பகுதியில் இருந்து மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ. எம். கருணா ரத்ன தெரிவித்தார்.

இந்த வெடிபொருட்கள் பிளாஸ்டிக் பரல்களில் இடப்பட்டு வெள்ளைமுள்ளி வாய்க்காலில் இரு இடங்களில் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். இந்தத் தேடுதலின் போது 15 கிலோ கிராம் எடையுள்ள 74 பொறிக்குண்டுகளும் ஒரு கிலோ கிராம் எடையுள்ள 38 பொறி குண்டுகளும் ஐந்து கிலோகிராம் எடையுள்ள இரு கிளைமோர் குண்டுகளும் இரண்டு கிலோகிராம் எடையுள்ள 10 கிளேமோர் குண்டுகளும் மீட்கப்பட்டன.

இது தவிர 500 கிராம் எடையுள்ள 12 வெடிபொருள் பெட்டிகள், 500 கிராம் எடையுள்ள 11 பொறிக் குண்டுகள் புலிகளால் தயாரிக்கப்பட்ட 125 கைக்குண்டுகள், புலிகளின் தமிழன் படையணிக்கென தயாரிக்கப்பட்ட 81 குண்டுகள், ரீ 56 ரக துப்பாக்கிப் பாகங்கள், எம். பி. எம். பி. குண்டுகள் 200, 5 கிலோகிராம் எடையுள்ள 27 குண்டுகள் 12.07 மற்றும் 7.62 மி.மீ. ரக ரவைகள் 10 ஆயிரம் ஆர்.பி.ஜி. குண்டுகள் 7, ஆர்.பி.ஜி. சார்ஜர்கள் 4, புலிகளின் பாண்டியன் படையணிக்கென தயாரிக்கப்பட்ட 16 கிளேமோர் குண்டுகள் என்பனவும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

வெள்ளை முள்ளிவாய்க்காலின் மற்றொரு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் 125 கைக்குண்டுகளும் புலிகளினால் தயாரிக்கப்பட்ட 81 கைக் குண்டுகளும் 5 கிலோகிராம் எடையுள்ள 27 குண்டுகளும் 16 ‘பாண்டியன்’ குண்டு களும் மீட்கப்பட்டுள்ளன.

ஐ. ம. சு. முவின் தேர்தல் விஞ்ஞாபனமாக மஹிந்த சிந்தனையின் 2 ஆம் பாகம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனமாக “மஹிந்த சிந்தனை”யின் இரண்டாம் பாகம் வெளியிடப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.

2005 ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த சிந்தனையின் முதலாவது பாகம் வெளியிடப்பட்டு மக்கள் ஆணை கோரப்பட்டது. இதன் படி மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியில் அமர்த்தினர்.

மக்களின் ஆணைப்படி மஹிந்த சிந்தனையின் முதலாம் பாகத்திலுள்ள பெரும்பாலான அம்சங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், எதிர்வரும் தேர்தலில் மக்களின் ஆணையைப் பெறுவதற்காக மஹிந்த சிந்தனையின் இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் தீர்வு யோசனை, பாரிய அபிவிருத்தித் திட்ட யோசனைகள் அடங்கலான பல முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தனது முதலாவது பதவிக் காலத்தில் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இரண்டாவது பதவிக் காலத்தில் நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக பயன்படுத்த உள்ளார்.

ஏற்கனவே பல பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த அபிவிருத்தித் திட்டங்களினூடாக நாட்டின் பொருளாதாரம் மேலும் வளர்ச்சியடைந்து தெற்காசியாவில் தலை சிறந்த நாடாக மாறும் என்றார்.

படுகொலைகளைப் புரிந்த குற்றவாளிகள் சட்டத்தின்பிடியிலிருந்து தப்பிக்க முடியாது – பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி

பிலிப் பைன்ஸ் படுகொலைகளை வன்மையாக கண்டித்த ஜனாதிபதி கலோரியா அரோயா குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின்முன் கொண்டுவரப்படுவரென சூளுரைத்துள்ளார்.

பிலிப்பைன்ஸில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கு நியமனப்பத்திரம் தாக்கல் செய்யச் சென்ற அரசியல்வாதிகள் ஆதரவாளர்கள் ஊடகவியலாளர்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

pili.bmpதேர்தலைப் பகிஷ்கரிக்குமாறு எச்சரிக்கை விடுத்த குழுவொன்றே இப்படுகொலைக ளைப் புரிந்துள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது ஆரம்பத்தில் 21 பேரின் சடலங்கள் கண் டெடுக்கப்பட்டன. பின்னர் 41 பேரின் சடலங்களைப் பொலிஸார் கண்டெடுத்தனர். தேடுதல் நடவடிக்கைகள் இன்னும் தொடர்கின்றன.

பெண்கள், ஊடகவியலாளர்கள் இதில் மிகமோசமாகக் கொலைசெய்யப்பட்டு தலைகள் துண்டிக்கப்பட்டிருந்தன. இதையடுத்து பிலிப்பைன்ஸின் சில இடங்களில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அரசியல் நோக்கங்களுக்காக இப்படுகொலைகள் நடந்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார் அரசியல்வாதிகள் சிலருக்கும் இக்கொலைகளில் சம்மந்தமுள்ளதாகத் தெரிவித்தனர். இது குறித்து ஜனாதிபதி அரோயா கூறியதாவது,

படுகொலைகளுக்கு பின்னால் யார் இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் கொண்டு வந்து தண்டிக்கப்படுவர். கொலையாளிகள் தண்டனையிலிருந்து தப்பிக்கமுடியாது மனித குலத்துக்கெதிரான இப்பாரிய கொலையால் பிலிப்பைன்ஸ் அதிர்ச்சியடைந்தது இப்படுகொலைகளை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றார்.

40 ஆயிரம் டொலர் செலுத்தி விமானம் மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் அகதிகள்

அவுஸ்திரேலியாவுக்கு படகுகளில் புகலிடம் கோரி வருவோர் தொகை குறைவடைந்துள்ள நிலையில், 40 ஆயிரம் டொலர் செலுத்தி இப்போது விமான மூலம் சட்டவிரோத குடியேற்றவாசிகள் வந்து கொண்டிருப்பதாக அந்த நாட்டு பத்திரிகையொன்று நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக ஆட்களை கடத்திக் கொண்டு வருவோருக்கு 40 ஆயிரம் டொலர்கள் கொடுக்கப்படுவதாகவும் விமானக் கட்டணம், போலிக் கடவுச்சீட்டு, போலி அவுஸ்திரேலிய விசா என்பனவற்றுக்கான கட்டணங்களும் இதில் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.