::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

வீதி வீதியாக பிரசாரம் வேண்டாம் மனித வெடிகுண்டு அபாயம் இருப்பதால் தலைவர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

2009-india.jpgமனித குண்டு தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதால் வீதிவீதியாக சென்று பிரசாரம் செய்ய வேண்டாம் என்று முக்கிய தலைவர்களை மத்திய அரசு எச்சரித்துள்ளது. குறிப்பாக சாலையோர பிரசார கூட்டங்களை தவிர்க்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ஆகியோருக்கு அறிவுறுத்தியுள்ளது.

தேர்தல் பிரசாரத்தின்போது, மக்களோடு மக்களாக மனித வெடிகுண்டுகளை ஊடுருவச்செய்து முக்கிய தலைவர்களை கொலை செய்ய தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.  இந்த தகவலை மத்திய அரசுக்கு உளவுத்துறை அனுப்பியது. இதையடுத்து, வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து பிரசாரம் செய்ய வேண்டாம் என்று முக்கிய தலைவர்களை மத்திய அரசு எச்சரித்துள்ளது.

சோனியாவும் ராகுலும், பொதுக் கூட்டங்களில் பேசுவதை விட சாலையோரங்களில் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அப்போது, மக்களுடன் நெருங்கி பேசுவதும் கைகுலுக்குவதும் வழக்கம். சோனியா, ராகுல் ஆகியோருக்கு சிறப்பு அதிரடிப்படை பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

‘சோனியாவும் ராகுலும் பாதுகாப்பு வளையத்தை மீறி கூட்டத்தினருடன் கலந்து விடுகிறார்கள். இதனால் பாதுகாப்பு அளிப்பதில் தங்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது’ என்று உள்துறை அமைச்சகத்திடம் சிறப்பு அதிரடிப்படை இயக்குனர் வாங்கூர் தெரிவித்துள்ளார். மனித குண்டு தாக்குதல் அபாயம் இருப்பதால், கூட்டத்துக்குள் செல்வது, அவர்களுடன் கைகுலுக்குவது ஆகியவற்றை தவிர்க்குமாறு சோனியாகாந்தியையும் ராகுல் காந்தியையும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

மற்ற முக்கிய கட்சிகளின் தலைவர்களும் வீதிவீதியாக சென்று பிரசாரம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் பிரசாரத்தின்போது, பாதுகாப்பு வளையத்தை மீறாமல், பாதுகாப்பு படையினருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

ஏழை பெண்களுக்கு ரூ.1 லட்சம் திருமண உதவி; சிரஞ்சீவி வாக்குறுதி

shiranjeevi.jpgபிரஜா ராஜ்ஜியம் கட்சி தலைவர் நடிகர் சிரஞ்சீவி அந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் துனி நகரில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-ஆந்திராவில் இதுநாள் வரை தெலுங்கு தேசம்- காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன.அவர்களால் ஏழைகள் வாழ்வில் எந்தவித முன்னேற்றமும் ஏற்பட வில்லை.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளின் வறுமை ஒழிக்கப்படும்.
 
திருமணமாகாத ஏழை பெண்களுக்கு ரூ.1லட்சம் திருமண உதவித்தொகை வழங்குவோம். இத்திட்டத்திற்காக அரசு சார்பில் வங்கியில் ஒரு டெபாசிட் செய்யப்படும். அனைவருக்கும் இலவசமாக கியாஸ் இணைப்பு வழங்கப்படும்.
 
இதேபோல் கியாஸ் சிலிண்டர் ரூ.100-க்கு வழங்கப்படும்.மேலும் ஒரு வீட்டுக்கு தேவையான சமையல் பொருட்களை ரூ.100-க்கு வழங்கப்படும். கடன் எதுவும் வாங்காமல் நிம்மதியாக வாழ இத்தகைய திட்டங்கள் செயல் படுத்தப்பபடும். இவ்வாறு அவர் கூறினார்.

கலாமுக்கு ஹோவர் மெடல்: அமெரிக்கா வழங்குகிறது

அமெரிக்காவில் உள்ள 5 என்ஜினீயர்கள் அமைப்புகள் சேர்ந்து ஒரு கமிட்டியை அமைத்து உள்ளன. அந்த அமைப்பின் சார்பில் உலக அளவில் சிறந்த மனிதாபிமான சேவை, தன்னலமற்ற பணி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் என்ஜினீயர்களுக்கு, ஆண்டு தோறும் ‘ஹோவர் மெடல்” வழங்கி வருகிறது.

இதில் 2008-ம் ஆண்டுக்கான ஹோவர் மெடலுக்கு, இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தேர்ந்து எடுக்கப்பட்டு இருப்பதாக, நியூயார்க் நகரில் அறிவிக்கப்பட்டது. இந்த விருதை பெறும் முதல் இந்தியர் இவரே. விருது வழங்கும் விழா, ஏப்ரல் 28-ந் தேதி நடைபெறுகிறது.

பாகிஸ்தான் பள்ளிவாசலில் குண்டு தாக்குதல்; 56 பேர் பலி 80 பேர் காயம்

moq-pak.jpgபாகிஸ்தானின் வடமேற்கே கூட்டம் நிறைந்த பள்ளிவாசல் ஒன்றில் வெள்ளிக்கிழமை தொழுகை ஆரம்பமான நேரத்தில் தற்கொலை குண்டுதாரி தாக்கியதில் குறைந்தபட்சம் 56 பேர் கொல்லப்பட்டும் 80 பேர் காயமடைந்தும் இருக்கின்றனர்

இந்நிலையில் காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், இறந்தவர்கள் தொகை மென்மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவம் நடைபெற்றபோது மேற்படி பள்ளிவாசலில் 250 பேர் வரை வெள்ளிக்கிழமை தொழுகைக்காக கூடியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.  தாக்குதலின் உக்கிரத்தில் பள்ளிவாசல் கட்டிடம் சேதமடைந்தது. ஆப்கானிஸ்தான் செல்லும் பாதையில் அமைந்துள்ள கைபர் கணவாய் அருகே இருக்கும் ஜம்ருத் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்தோனேஷிய அணைக்கட்டு உடைந்ததில் 58 பேர் பலி

indo.jpg
இந்தோனேஷியத் தலைநகர் ஜகார்தாவின் அருகே அணைக்கட்டு ஒன்று உடைந்ததில் குறைந்தது ஐம்பத்து எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் காணாமல் போயுள்ள டஜன் கணக்கானவர்களை மீட்புப் பணியாளர்கள் தேடிவருகிறார்கள்.

டாங்கெரங் வட்டகையில் நகரவாசிகள் தூங்கிக்கொண்டிருந்த வேளையில் வந்த வெள்ளம் கார்களை அடித்துச் சென்றதோடு பள்ளங்களை நிறைத்தது. நீரில் மூழ்கியுள்ள பகுதிகளில் சடலங்களும் குப்பைகூளங்களும் மிதக்க ரப்பர் படகுகளில் மீட்புப் பணியாளர்கள் பயணிக்கிறார்கள். சென்ற நூற்றாண்டில் கட்டப்பட்டிருந்த இந்த களி மண் அணைக்கட்டு கடும் மழையை அடுத்து உடைந்திருந்தது.

ராமதாசுடன் சந்திப்புக்கு ஜெயலலிதா போட்ட திடீர் நிபந்தனை

jaya-ram.jpgஅதிமுக வில் சேர முடிவெடுத்து விட்டதைத் தொடர்ந்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நாளை சந்திக்கிறார். அதிமுக கூட்டணியில் இணைய நேற்று பாமக பொதுக்குழுக் கூட்டம் சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து அதிமுக கூட்டணிக்கு வருகிறது பாமக.

பொதுக்குழுக் கூட்டம் முடிந்ததும், ஜெயலலிதாவை, ராமதாஸ் சென்று சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. மாலை 4 மணிக்கு அப்பாயின்ட்மென்ட் வாங்கப்பட்டிருந்தது. ஆனால் அப்படி எந்த சந்திப்பும் நேற்று நடைபெறவில்லை. அதேசமயம், அதிமுக தரப்பிலிருந்தும் பாமக முடிவு குறித்து எந்தவித ரியாக்ஷனும் வெளியாகவில்லை. இதனால் பாமக தரப்பில் லேசான பீதி பரவியது.

மத்திய அமைச்சர்கள் அன்புமணியும், வேலுவும் ராஜினாமா செய்துவிட்டு வந்த பிறகு சந்திக்கலாம் என்று ராமதாசுக்கு ஜெயலலிதா திடீர் நிபந்தனை போட்டதால் தான் இந்தச் சந்திப்பு நடக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. நாளை இருவரும் டெல்லி சென்று பிரதமரிடம் ராஜினாமா கடிதம் தரவுள்ளனர். இதையடுத்து ராமதாஸ் நாளை காலை 10 மணிக்கு ஜெயலலிதா சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் தரப்பட்டுள்ளது.

பாமக தேர்தல் அறிக்கையில் தனி ஈழம்

26-ramsoss.jpgஇலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு உருவாக பாமக பாடுபடும் என்று அக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாமகவின் தேர்தல் அறிக்கையை அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டார். அதில் மொத்தம் 44 தலைப்புகளில் திட்டங்கள், கொள்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

ஈழத் தமிழர்கள் பிரச்சனையைத் தீர்க்க அங்கு தமிழர்களுக்கு தனி நாடு அமைவது தான் ஒரே வழி. அதை உருவாக்க பாடுபடுவோம். இந்தப் பிரச்சனையை தீர்க்க வேண்டியது இந்தியாவின் கடமையாகும். இந்தியா தனது கடமையை ஆற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை பாமக எடுக்கும்.

கச்சத் தீவை மீட்க நடவடிக்கை எடுப்போம்.

நாட்டை சிறப்பாக ஆளும் வகையில் மாநிலங்களைப் பிரித்து சிறியதாக 50 மாநிலங்களை உருவாக்க மத்திய அரசை நெருக்குவோம். என்று கூறப்பட்டுள்ளது.

வருண் காந்தி இன்று பிலிபித்தில் கைதாகலாம்?

20-varun-ganthi.jpgவருண் காந்தியின் முன்ஜாமீன் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து இன்று பிலிபித் தொகுதிக்கு வருண் காந்தி செல்கிறார். அங்கு போலீஸாரிடம் கைதாக அவர் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. பிலிபித் தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வருண் காந்தி, அங்கு நடந்த கூட்டத்தில், இஸ்லாமியர்களை தலையை வெட்டுவேன், கையை வெட்டுவேன் என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் புகாரின் பேரில் பிலிபித் தொகுதிக்குட்பட்ட காவல் நிலையத்தில் வருண் காந்தி மீது இரு மதப் பிரிவினருக்கிடையே மோதலை உருவாக்கும் வகையில் பேசுதல், அரசு அதிகாரியின் உத்தரவை மீறுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை ரத்து செய்யக் கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார் வருண் காந்தி. மேலும், முன்ஜாமீ்ன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்திலும் மனு செய்தார். இதில் அவருக்கு முன்ஜாமீன் கிடைத்தது. இந்த முன்ஜாமீன் இன்றுடன் முடிகிறது.

அதேசமயம், அலகாபாத் நீதிமன்றம், வருண் காந்தியின் கோரிக்கையை தள்ளுபடி செய்து விட்டது.  இந்தச் சூழ்நிலையில் தனது முன்ஜாமீனை நீட்டிக்க விரும்பாமல் கைதாக முடிவு செய்து விட்டாராம் வருண் காந்தி. அதன்படி இன்று பாஜகவினருடன் அவர் பிலிபித் செல்கிறார். அங்கு அவர் போலீஸாரிடம் கைதாவார் என்று கூறப்படுகிறது. மேலும் வருண் காந்தியின் முன்ஜாமீன் மனுவை இன்று அவரது வக்கீல்கள் உயர்நீதிமன்றத்தில் வாபஸ் பெறலாம் என்றும் கூறப்படுகிறது.

முன்ஜாமீனை நீட்டிக்காமல், அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்யாமல் கைதாக வருண் காந்தி முடிவு செய்திருப்பது அரசியல் லாபம் கருதியே என்று கூறப்படுகிறது. தான் கைதானால் அதனால் அனுதாபம் ஏற்படும், அது தனக்கும், பாஜகவுக்கும் லாபமாக அமையும் என்பதால் இந்த முடிவை வருண் காந்தி எடுத்திருப்பதாக தெரிகிறது. ஆனால் தனது முடிவை இதுவரை வருண் காந்தி கட்சி மேலிடத்தில் சொல்லவில்லையாம். இருப்பினும் எது செய்தாலும், சட்டத்திற்கு உட்பட்டு செய்யுமாறு வருண் காந்திக்கு கட்சி மேலிடம் அறிவுரை கூறியுள்ளதாம்.

தேர்தல் ஆணைய வழக்கு-வருண் மனு தள்ளுபடி

20-varun-ganthi.jpgபிலிபித் தொகுதியில் தான் பேசியது தொடர்பாக தன் மீது தேர்தல் ஆணையம் தொடர்ந்துள்ள மத துவேஷ வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிய வருண் காந்தியின் மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டை அணுக பாஜக முடிவு செய்துள்ளது.

பிலிபித் தொகுதியில் முஸ்லீம்களுக்கு எதிராக வெறித்தனமாக பேசியிருந்தார் வருண் காந்தி. இதுதொடர்பான சிடி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய தேர்தல் ஆணையம், வருண் காந்தி, பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. வருண் காந்தி மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய உ.பி. தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து தேர்தல் அதிகாரியின் புகாரின் பேரில், வருண் காந்தி பிலிபித் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வருண் காந்தி மனு தாக்கல் செய்தார். மேலும் முன்ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.

டெல்லி உயர்நீதிமன்றம், விசாரணை நடத்தி, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வருண் காந்தி தொடர்ந்துள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை அவரைக் கைது செய்ய தடை விதித்தது.  இந்த நிலையில் அலகாபாத் உயர்நீதிமன்றம், வருண் காந்தியின் மனுவை இன்று தள்ளுபடி செய்து விட்டது. இந்த மனுவைத் தள்ளுபடி செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம், வருண் காந்தி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே முன்ஜாமீன் பெற்றுள்ளதால், அவரது கைதுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளது.

ஆனால் இந்த முன்ஜாமீன் 27ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே அதன் பின்னர் வருண் காந்தி கைது செய்யப்படக் கூடியவாய்ப்புகள் உள்ளன. எனவே அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது.

இலங்கை இனநெருக்கடிக்கு கௌரவமான தீர்வுக்கு காங்கிரஸ் வலியுறுத்தும்

இலங் கையின் இனப்பிரச்சினைக்கு கௌரவமான தீர்வைக்காண்பதற்கு காங்கிரஸ் கட்சி வலியுறுத்தும் என்று அக்கட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளது.  பிராந்திய அபிலாஷைகளில் உணர்வு பூர்வமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் கட்சி, இலங்கையின் இனநெருக்கடிக்கு சகல சமூகங்களினதும், விசேடமாக தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளை உத்தரவாதப்படுத்தும் கௌரவமான தீர்வை கட்சி வலியுறுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.

அத்துடன் ஐக்கிய இலங்கைக்குள் சமவுரிமைகளை உறுதிப்படுத்தும் தீர்வையே காங்கிரஸ் கட்சி வலியுறுத்துவதாகவும் அக் கட்சி கூறியுள்ளது. கட்சியின் வெளிநாட்டுக் கொள்கையானது சுயாதீனமானது என்றும் அதேசமயம், பொறுமையுடன் ஆனால் வலுவான இராஜதந்திரத்தை மும்பைத் தாக்குதல் விவகாரத்தில் கையாண்டதாகவும் அக்கட்சி கூறியுள்ளது.

இதேவேளை, இலங்கை உட்பட இந்தியாவின் அயல் நாடுகள் ஸ்திரமின்றி இருப்பதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் செவ்வாய்க்கிழமை கவலை தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்து உரையாற்றிய இந்தியப்பிரமர் இந்தியாவை சூழவுள்ள சவால்களை நான் பார்த்தால், “ஸ்திரமின்மையை காண்கிறேன். பாகிஸ்தான் பயங்கரவாதத்தை எதிர்நோக்கியுள்ளது. நேபாளம், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும் இடம்பெறுபவை தெற்காசியாவின் எதிர்காலம் குறித்த கவலைக்கு காரணமாக உள்ளன என்றும் கூறினார்.

நாடு பலமானதாகவும் இலக்குடைய அரசாங்கத்தையும் கொண்டிருந்தால் ?தெற்காசியாவை சமத்துவம் மிக்கதாகவும் அதிக சுபிட்சமுடையதாகவும் மீளக்கட்டியெழுப்புவதற்கான ஊக்குவிப்பு சக்தியாக இந்தியாவால் விளங்கமுடியும்’ என்றும் மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.

பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா இனவாத நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுப்பதாகவும் மக்கள் மத்தியில் பிரிவினையை தூண்டுவதாகவும் அவர் சாடியுள்ளதுடன், பாரதியஜனதாவும் இடதுசாரிகளும் எதிர்மறையான மனப்பாங்குடன் இருப்பதாகவும் இது நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லாது என்றும் கூறியுள்ளார்.