::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

நடிகர் விஜய்க்கு விரைவில் ராஜ்யசபா எம்.பி. பதவி – காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல்

rahul_vijay.jpgகாங்கிரஸ் கட்சியின் தலைவி திருமதி சோனியா காந்தி முன்னிலையில் நடிகர் விஜய், விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளாரென்றும் அவருக்கு அகில இந்திய அளவில் கட்சியில் முக்கிய பொறுப்பும்,  ராஜ்யசபா எம்.பி., பதவியும் வழங்கப்படும் எனவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி முனைப்பாக இறங்கி உள்ளார்.

நடிகர் விஜய், கடந்த 24ஆம் திகதி டில்லியில் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார். தன் ரசிகர்களை காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்ள இச்சந்திப்பில் விஜய் விருப்பம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் விஜய் இணைவதன் மூலம், எதிர்வரும் 2011ம் ஆண்டில் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியும் என காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் நம்புகின்றனர். காங்கிரஸ் கட்சியில் விஜய் இணைந்தால் முழு மனதுடன் வரவேற்போம் என,  தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அறிவித்துள்ளார். திரையுலகில் இளைஞர்களை ஈர்க்கும் சக்தியாக நடிகர் விஜய் வலம் வருவதால், அவரது வரவு கட்சிக்கு பலத்தைத் தரும் என காங்கிரஸ் கட்சியினர் கருதுகின்றனர்.

2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பிரசார பீரங்கியாக விஜயை பயன்படுத்திக் கொள்ளவும் காங்கிரஸ் கட்சியினர்  திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன்னர் அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பும்,  ராஜ்யசபா எம்.பி., பதவியும் அவருக்கு வழங்கப்படலாமென அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அணுச் சோதனை தோல்வி என்ற இந்திய விஞ்ஞானியின் கருத்தால் சர்ச்சை

santhanam-nuclear_blast.jpgஇந்தியா 1998 ஆம் ஆண்டு நடத்திய அணுகுண்டு சோதனை முழு வெற்றி அடையவில்லை என்று அந்த சோதனையில் ஈடுபட்ட விஞ்ஞானிகளில் ஒருவரான கே. சந்தானம் தெரிவித்த கருத்தையடுத்து, இந்தியாவின் அணுசக்தித் திறன் தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

அணுசக்திப் பரவல் தடை ஒப்பந்தம் தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசும்போது, சந்தானம் இந்தக் கருத்தை வெளியிட்டார். கடந்த 1998 ஆம் ஆண்டு வாஜபேயி பிரதமராக இருந்தபோது போக்ரானில் நடத்தப்பட்ட இரண்டாவது அணுகுண்டு சோதனையில், டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் பிரதிநிதியாக அவரும் கலந்துகொண்டார்.

அந்த அணுகுண்டு சோதனை முழு வெற்றியடையாத நிலையில், இந்தியா மேலும் அணுகுண்டு சோதனைகளை நடத்த வேண்டும் என்றும், அவசரப்பட்டு, சிடிபிடி ஒப்பந்தத்தில் கையெழுத்திடக்கூடாது என்றும் சந்தானம் வலியுறுத்தியுள்ளார்.

போக்ரன் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டு 11 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்படிப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்று அவரிடம் கேட்டபோது, “அணுப்பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று இந்தியாவின் மீது நிர்ப்பந்தம் அதிகரித்து வருகிறது. அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், அதன்பிறகு அணுகுண்டு சோதனை நடத்துவதற்கான வாய்ப்புக்கள் முற்றிலும் அடைக்கப்படும். அதனால், தற்போதுள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி இந்தியா இரண்டு அல்லது மூன்று அணுகுண்டு சோதனைகளை நடத்தி, தனது அணுத்திறனை அதிகரித்துக் கொள்ள வேண்டும்’’ என்றார் விஞ்ஞானி சந்தானம்.

ஆனால், இந்திய அரசு சந்தானத்தின் கருத்தை ஏற்கவில்லை. உள்துறை அமைச்சர் சிதம்பரம் இதுபற்றிக் கருத்துத் தெரிவிக்கும்போது, சந்தானத்தின் கருத்தைக் கேட்டு தான் குழப்பமடைந்ததாகத் தெரிவித்தார்.

அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டபோது, டிஆர்டிஓ அமைப்பின் தலைவராக இருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், சந்தானத்தின் கருத்தை மறுத்திருக்கிறார். போக்ரான் அணுகுண்டு சோதனையில் தேவையான முடிவு கிடைத்ததாக அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இப்படியும் இந்தியாவில்..

இந்திய கிரிக்கெட் அணியின் கப்டன் டோனியுடன் ஒரே ஒரு போட்டோ எடுப்பதற்காக தனக்கு வருமானம் தந்த ஒரே சி.டி. கடையையும் விற்று போண்டி ஆகி உள்ளார் ஒரு வாலிபர். அவரது பெயர் ரவீந்திரகுமார் சைனி. 23 வயதான இவர் உத்தர பிரதேச மாநிலம் சஹராங்பூரை சேர்ந்தவர்.

இவருக்கு விரைவில் சோனியா என்ற பெண்ணுடன் திருமணம் நடக்க உள்ளது. இருவரும் டோனியின் தீவிர ரசிகர்கள் என்றாலும் சோனியாவை விட சைனிக்கே டோனி என்றால் கொள்ளைப் பிரியம். ‘டோனியுடன் இணைந்து உங்களால் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள முடியுமா?’ என்று சோனியா ஒரு நாள் சவால் விட்டார். சவால் மட்டுமல்ல, தனது ஆசையும் அது தான் என்று சைனியிடம் கூறினார்.

இதையடுத்து வருங்கால மனைவியின் ஆசையை நிறைவேற்ற ரூ. 25 ஆயிரம் முதலீடு போட்டு ஆரம்பித்த கடையை வெறும் ரூ. 15 ஆயிரத்திற்கு விற்று விட்டு டோனியை பார்க்க ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு கிளம்பினார் சைனி. ஆனால் பாதுகாப்பு வலயத்தில் உள்ள டோனியை அவரால் எளிதாக சந்திக்க முடியவில்லை.

அங்குள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு முயற்சிகளில் இறங்கினார். டோனியின் சகோதரர் நரேந்திராவை சந்தித்து பேசியும் கூட, டோனியை பார்க்க இயலவில்லை. இப்படி 35 நாட்கள் தவம் கிடந்த அவரது கனவை கடைசியில் சில பத்திரிகையாளர்கள் நிறைவேற்றினர்.

அவர்கள் உதவியுடன் மும்பைக்கு புறப்பட இருந்த டோனியை ராஞ்சி விமான நிலையத்தில் சைனி சந்தித்தார். அப்போது தனது வருங்கால மனைவியின் சவால் மற்றும் ஆசையைபற்றி எடுத்து கூறி அவருடன் கைகுலுக்கி உற்சாகமாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

தனது வருங்கால மனைவிக்காக தான் நடத்திய கடையை விற்று ஒரு மாத காலம் அலைந்து திரிந்து இதை செய்ததில் சைனிக்கு துளி கூட வருத்தம் இல்லையாம். புகைப்படம் எடுத்து கொண்ட தகவல் அறிந்ததும் சோனியா ரொம்ப ஆச்சரியப்பட்டதாக சைனி தெரிவித்தார்.

ஆனால் இந்த மகிழ்ச்சியை அவருடன் நேரில் உடனடியாக பகிர்ந்து கொள்ள முடியவில்லை. காரணம் கொண்டு வந்த பணம் எல்லாம் காலியாகி விட்டது. இதனால் வேறு வழியில்லாமல் ராஞ்சியில் ஜெய்பால்சிங் மைதானம் அருகே உள்ள ஒரு பர்னிச்சர் கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.  அது சைனியின் ஊரைச் சேர்ந்தவர்கள் நடத்தும் கடை. ரயில் டிக்கெட் எடுக்க பணம் தருவதாக அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் சொந்த ஊருக்கு திரும்பி விடுவேன் என்றும் சைனி தெரிவித்தார்.

அமெரிக்காவில் 18 ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்ட பெண் தற்போது குழந்தைகளுடன் மீட்பு

அமெரிக்காவில் பெண்ணொருவர் சிறுமியாக இருந்தபோது கடத்தப்பட்டு பதினெட்டு ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டிருந்த இடம் எனத் தெரியும் வீடொன்றை பொலிசார் சோதனையிட்டு வருகின்றனர்.

11 வயதிருந்தபோது இந்தப் பெண் காணாமல் போயிருந்தார். ஜெய்சி டூகர்ட் என்ற இந்தப் பெண்ணும் அவரது பிள்ளைகள் இருவரும் இவ்வளவு காலமும் கட்டடங்கள் மற்றும் கூடாரங்களில் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர். இந்தப் பிள்ளைகள், ஜெய்சியைக் கடத்தி அடைத்துவைத்திருந்தவருக்கு பிறந்த குழந்தைகள் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

ஜெய்சியின் குழந்தைகளுக்கு தந்தையென குற்றஞ்சாட்டப்படுபவர்
இந்தப் பிள்ளைகள் ஒருபோதும் பள்ளிக்கூடமோ மருத்துவமனையோ சென்றதில்லை என பொலிசார் கூறுகின்றனர். 1991ஆம் ஆண்டு பள்ளியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தபோது ஜெய்சீ காரில் கடத்திச் செல்லப்பட்டிருந்தார்.

ஜெய்சி,கடத்தியதாகக் குற்றம்சாட்டப்படுபவருடன் பிள்ளைகளோடு அவர்கள் தங்கியிருந்த சான்ஃபிரான்ஸிஸ்கோ பொலிஸ் நிலையம் வரும் வரை அவர் பற்றி எந்தத் தகவலும் இல்லாதிருந்தது.

பாக். தற்கொலை தாக்குதல்-50 பேர் பலி

பாகிஸ்தானில் நேற்று நடந்த தற்கொலை தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் 50 பேர் பலியானார்கள். ஆப்கானிஸ்தானின் எல்லைப்புறத்தில் இருக்கும் பாகிஸ்தானின் கைபர் பகுதியில் நேற்று சோதனை சாவடி ஒன்றில் தீவிரவாதிகள் தற்கொலை  படைதாக்குதல்  நடத்தினர்.

அந்த தீவிரவாதி, ஆப்கானிஸ்தான் போலீசார் நேற்று ரமலான் நோன்பை முடித்துவிட்டு உணவு அருந்தும் நேரத்தில் வெடிகுண்டுகளை வெடிக்க செய்தான். இதில் அந்த தீவிரவாதி உட்பட 22 பேர் பலியானார்கள். இதில் பெரும்பான்மையோனோர் போலீசார் தான். மேலும், 27 பேர் படுகாயம் அடைந்தார்கள்.

இந்த சம்பவத்துக்கு தாலிபான்களுடன் தொடர்புடைய அப்துல்லா அசம் சாகீத் படை என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில் தெற்கு வசிரிஸ்தான் பகுதியில் அமெரிக்க விமானங்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் சுமார் 8 தீவிரவாதிகள் பலியாகியுள்ளனர். தாலிபான் அமைப்பின் பாகிஸ்தான் பிரிவு தலைவராக புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஹகிமுல்லா மசூத்தை கொல்ல அமெரிக்கா  இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரிகிறது. இதை தொடர்ந்து அப்பகுதியில் பாகிஸ்தான்  போலீசாருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையில் நடந்த மோதலில் 9 தீவிரவாதிகள்  கொல்லப்பட்டனர். 35 தீவிரவாதிகள் பிடிபட்டனர்.அதேபோல் மாலகன்ட் பகுதியில் 4 தீவிரவாதிகளும், பனர் மாவட்டத்தில் 7 தீவிரவாதிகளையும் போலீசார் சுட்டு கொன்றனர்.

இந்தியாவின் பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை 83

10092009.jpgஇந்தியா வின் பன்றிக் காய்ச்சல் எண்ணிகை 83 ஆக உயர்ந்துள்ளது.  மகாராஷ்டிராவில் இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகத்தில் மட்டும் இதுவரை 19 பேர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளனர்.

இதுவரை இந்தியாவில் 17,777 பேரின் மாதிரிகள் பன்றிக் காய்ச்சல் சந்தேகம் தொடர்பாக சோதனை நடத்தப்பட்டது. அதில் 3273 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கார் குண்டுத் தாக்குதல்; 36 பேர் பலி: 60 பேர் காயம்

ஆப்கானிஸ்தானின் தென் மாகாணத்தின் தலைநகர் கந்தஹாரில் கடந்த செவ்வாய்க் கிழமை இடம்பெற்ற மிக மோசமான குண்டு வெடிப்பில் முப்பது பேர் பலியானதுடன் அறுபது பேர் வரை காயமடைந்தனர். பலியான அனைவரும் பொது மக்கள் என கந்தஹார் பொலிஸ் தலைமையதிகாரி கூறினார்.

புலனாய்வுத் தலைமையகம், ஜனாதிபதி ஹமீத் அல் கார்ஸாயியின் சகோதரர் அஹமட் வலி கார்ஸாயியின் வீடு என்பன குண்டு வெடித்த இடத்துக்கருகாமையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. கந்தஹாரின் பிரமாண்டமான கட்டடக் கம்பனியும் அரசாங்கத்தின் முக்கிய அலுவலகமும் இதனால் சேதமடைந்தன. அருகில் இருந்த கட்டடங்கள், வீடுகளும் இக்குண்டு வெடிப்பில் சேதமடைந்ததாகவும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

இடிபாடுகளுக்குள் சடலங்கள் புதைந்துள்ளதால் மீட்புப் பணிகள் தொடர்வதாகவும் பலியானோரின் உடல்கள் உருக்குலைந்து சிதைந்துள்ளமை பிரேதங்களை அடையாளங் காண்பதில் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக் கப்படுகின்றனர்.

வெளிநாட்டு உல்லாசப் பயணிகளைக் கவரும் இடமான கந்தஹார் தலிபான்களின் செல்வாக்குள்ள பிரதேசம். நேட்டோப் படைகள் இங்கே கடும் சவால்களை எதிர்கொள்கின்றன. செவ்வாய்க்கிழமை நடந்த குண்டுத் தாக்குதல் 2008 ஜுலை 07ல் காபூல் நகரில் இந்தியத் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலையும் விட பயங்கரமானதெனக் கருதப்படுகின்றது.

குண்டு வெடித்தபோது பூமியதிர்ச்சி ஏற்பட்டதாக உணர்ந்தேன். பொலிஸ் நிலையத்துடன் தொடர்புகொண்டு கேட்ட போது, குண்டு வெடித்ததாகக் கூறினர் என்று பிரதேச வாசியொருவர் சொன்னார்.  ஐந்து கார்களில் குண்டு பொருத்தப்பட்டு அனைத்தும் ஒரே நேரத்தில் வெடிக்க வைக்கப்பட்டது. எதை இலக்காக வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதென்பதை உறுதியாகக் கூறமுடியாதெனக் கூறும் பொலிஸார் இது கார் குண்டுத் தாக்குதல் எனக் குறிப்பிட்டனர்.

ஆப்கானிஸ்தானில் வீதியோரக் குண்டு வெடிப்புகள், தற்கொலைத் தாக்குதல்கள் சர்வசாதாரணமாகி விட்டன. இங்கு பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ள நிலையிலும் வன்முறைகள் இடம் பெறுகின்றமை பாதுகாப்புக் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.

இந்தியாவில் பன்றி காய்ச்சலுக்கு 77வது பலி

10092009.jpgபன்றி காய்ச்சல் நோய்க்கு நேற்று வரை இந்தியாவில் 76 பேர் பலியாகியாகி இருந்தனர்.

இந்நிலையில் புனேவில் நடுத்தர வயதுடைய ஷபானா ஷேய்க் என்ற பெண்மணி பன்றி காய்ச்சல் பாதிப்புடன் கடந்த 22ம் தேதி சாஷூன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சு திணறல் அதிகரித்ததை அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு, வந்தது. இநநிலையில் இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணமடைந்தார். இதையடுத்து புனேவில் இந்த நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆகவும், இந்திய அளவில் 77 ஆகவும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் புனேவில் 24ம் தேதி மூடப்பட்டிருந்த பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. ஆனால், பெற்றோர்களின் மத்தியில் பன்றி காய்ச்சல் பீதி நீங்காததை அடுத்து பள்ளிக்கு மாணவர்கள் வருவது வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநில நிர்வாகம் மக்களை முடிந்தவரை அதிக கூட்டமான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என கேட்டு கொண்டுள்ளது. இதையடுத்து இந்த ஆண்டு விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்களும் சில இடங்களில் பாதிக்கப்பட்டன

செனட்டர் எட்வர்ட் கென்னடி காலமானார்!

edward-kennedy-democrat.jpgஅமெரிக்க வரலாற்றில் அதிக செல்வாக்குடன் நீண்ட காலமாக செனட்டராகப் பணியாற்றியவர் எட்வர்ட் கென்னடி. நேற்று தமது 77 ஆவது வயதில் மரணமானார். இவர் 2008  ஆம் ஆண்டு முதல் மூளைப் புற்று நோயால் பாதிக்கப்பட்டார்.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இவர் அமெரிக்க ஜனாதிபதிகளில் அதிக செல்வாக்குப் பெற்ற ஜனாதிபதி என்று பெயரெடுத்த ஜோன் எப். கென்னடியின் சகோதரர் ஆவார்.

இது குறித்து எட்வர்ட் கென்னடி குடும்பம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ஹேன்னிஸ்போரட்டில் உள்ள தனது வீட்டில் வாழ்ந்து வந்த எட்வர்ட் கென்னடி செவ்வாய் இரவு இறந்துவிட்டார். எங்கள் குடும்பத்தின் மையமாகவும் எங்கள் சந்தோஷமாகவும் இருந்தவர் இறந்துவிட்டார்” என்று தெரிவித்திருக்கின்றனர்.

கென்னடி குடும்பத்தில், ஜனாதிபதியாக இருந்த ஜோன் எப். கென்னடி 1963 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இன்னொரு சகோதரர் ரொபர்ட் கென்னடியும் 1968ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிபிடத்தக்கது.

அபாயமான மயக்க மருந்தே ஜாக்ஸனின் மரணத்துக்குக் காரணம் : மருத்துவ தடயவியல் நிபுணர்

lakshmanan.jpgபொப் இசை மேதை மைக்கல் ஜாக்ஸன் மறைவுக்கு, அவருக்கு அபாயகரமான மயக்க மருந்தான புரோபபால், மிக அதிக அளவில் கொடுக்கப்பட்டதே காரணம் என்று லொஸ் ஏஞ்சல்ஸ் தலைமை மருத்துவ தடயவியல் நிபுணர் டாக்டர் லட்சுமணன் சத்யவாகீஸ்வரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஜாக்ஸன் மரணம் ஒரு கொலை வழக்காக லொஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸார் மாற்றவுள்ளனர்.

ஜாக்ஸன் உடலில் நடத்தப்பட்ட மருத்துவ தடயவியல் சோதனை முடிவுகள் இதுவரை வெளியிடப்படாமல் இருந்தது. இதனால் ஜாக்ஸன் மரணத்திற்கு என்ன காரணம் என்றும் தெரியாமல் இருந்தது. ஆனால் ஜாக்ஸனின் டாக்டர் கான்ராட் முர்ரே கடைசியாகக் கொடுத்த அபாயகரமான மயக்க மருந்தான புரோபபால்தான் அவரது உயிரைக் குடித்ததாகச் சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து முர்ரே வீடு, அலுவலகங்களில் சோதனைகள் நடைபெற்றன. தீவிர விசாரணையும் நடந்து வருகிறது. இதில் முர்ரேவுக்கு எதிரான ஆதாரங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து முர்ரே எந்த நேரத்திலும் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுக் கைது செய்யப்படக் கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வெளியிடப்படாமல் இருந்து வந்த மருத்துவ தடயவியல் அறிக்கையை லொஸ் ஏஞ்சல்ஸ் தலைமை மருத்துவ தடவியல் நிபுணர் டாக்டர் லட்சுமணன் சத்யவாகீஸ்ரவன், ஹூஸ்டன் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளார்.

இதையடுத்து ஜாக்ஸனின் டாக்டர் கான்ராட் முர்ரேவுக்கு எதிராக கலிபோர்னியா நீதிமன்றம் தேடுதல் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில், லொஸ் ஏஞ்சல்ஸ் தலைமை மருத்துவ தடயவியல் நிபுணர் டாக்டர் சத்யவாகீஸ்வரன் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், மைக்கல் ஜாக்ஸனின் மரணத்திற்கு அதிகளவிலான, அபாயகரமான புரோபபால் மருந்து கொடுக்கப்பட்டதே காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து ஜாக்ஸனின் மரணம் கொலை எனப் பதிவாகி வழக்குத் தாக்கல் செய்யப்படவிருக்கின்றது.டாக்டர் கான்ராட் முர்ரேயும் கைது செய்யப்படவுள்ளார்.

ஜாக்ஸன் உடலில் மருத்துவ தடயவியல் சோதனைகளைச் செய்த டாக்டர் லட்சுமணன் சத்யவாகீஸ்வரன் சென்னையைச் சேர்ந்த தமிழராவார். கடந்த 1992ஆம் ஆண்டு அவர் லொஸ் ஏஞ்சல்ஸ் தலைமை மருத்துவ தடயவியல் நிபுணராகப் பொறுப்பேற்றார். அதற்கு முன்பு துணை மருத்துவ தடயவியல் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்.

புகழ் பெற்ற ஓ.ஜே. சிம்ப்சன் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்கு இவர்தான் மருத்துவப் பிரேதப் பரிசோதனை அதிகாரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் 26ஆம் திகதி மைக்கல் ஜாக்ஸன் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்தார் டாக்டர் சத்யவாகீஸ்வரன்.