ஆப்கானிஸ்தானின் தென் மாகாணத்தின் தலைநகர் கந்தஹாரில் கடந்த செவ்வாய்க் கிழமை இடம்பெற்ற மிக மோசமான குண்டு வெடிப்பில் முப்பது பேர் பலியானதுடன் அறுபது பேர் வரை காயமடைந்தனர். பலியான அனைவரும் பொது மக்கள் என கந்தஹார் பொலிஸ் தலைமையதிகாரி கூறினார்.
புலனாய்வுத் தலைமையகம், ஜனாதிபதி ஹமீத் அல் கார்ஸாயியின் சகோதரர் அஹமட் வலி கார்ஸாயியின் வீடு என்பன குண்டு வெடித்த இடத்துக்கருகாமையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. கந்தஹாரின் பிரமாண்டமான கட்டடக் கம்பனியும் அரசாங்கத்தின் முக்கிய அலுவலகமும் இதனால் சேதமடைந்தன. அருகில் இருந்த கட்டடங்கள், வீடுகளும் இக்குண்டு வெடிப்பில் சேதமடைந்ததாகவும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
இடிபாடுகளுக்குள் சடலங்கள் புதைந்துள்ளதால் மீட்புப் பணிகள் தொடர்வதாகவும் பலியானோரின் உடல்கள் உருக்குலைந்து சிதைந்துள்ளமை பிரேதங்களை அடையாளங் காண்பதில் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக் கப்படுகின்றனர்.
வெளிநாட்டு உல்லாசப் பயணிகளைக் கவரும் இடமான கந்தஹார் தலிபான்களின் செல்வாக்குள்ள பிரதேசம். நேட்டோப் படைகள் இங்கே கடும் சவால்களை எதிர்கொள்கின்றன. செவ்வாய்க்கிழமை நடந்த குண்டுத் தாக்குதல் 2008 ஜுலை 07ல் காபூல் நகரில் இந்தியத் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலையும் விட பயங்கரமானதெனக் கருதப்படுகின்றது.
குண்டு வெடித்தபோது பூமியதிர்ச்சி ஏற்பட்டதாக உணர்ந்தேன். பொலிஸ் நிலையத்துடன் தொடர்புகொண்டு கேட்ட போது, குண்டு வெடித்ததாகக் கூறினர் என்று பிரதேச வாசியொருவர் சொன்னார். ஐந்து கார்களில் குண்டு பொருத்தப்பட்டு அனைத்தும் ஒரே நேரத்தில் வெடிக்க வைக்கப்பட்டது. எதை இலக்காக வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதென்பதை உறுதியாகக் கூறமுடியாதெனக் கூறும் பொலிஸார் இது கார் குண்டுத் தாக்குதல் எனக் குறிப்பிட்டனர்.
ஆப்கானிஸ்தானில் வீதியோரக் குண்டு வெடிப்புகள், தற்கொலைத் தாக்குதல்கள் சர்வசாதாரணமாகி விட்டன. இங்கு பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ள நிலையிலும் வன்முறைகள் இடம் பெறுகின்றமை பாதுகாப்புக் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.