மலைய கத்தில் உள்ள 16 வயதுக்குக் குறைந்தவர்களைப் பணியாட்களாக அமர்த்துவதைத் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென நீதி, சட்ட மறு சீரமைப்பு பிரதியமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்தார்.
இது தொடர்பாக, நடைமுறையில் உள்ள சட்டங்களை இறுக்கமாக அமுல்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதியமைச்சர் கூறினார்.
அதேநேரம், மலையகத்திலிருந்து வந்து கொழும்பில் பணிப்பெண்களாகப் பணியாற்றுவோரின் பாதுகாப்பையும், மனித உரிமையையும் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து வழிமுறைகளையும் மேற்கொள்வதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கையில் 16 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்களைத் தொழிலில் அமர்த்தக் கூடாதென சட்டம் உள்ளது. ஆனால், மலையகத்துச் சிறார்களைச் சிலர் கொழும்பில் வீட்டு வேலைக்குக் கூட்டிச் செல்வது தொடர்ந்து வருகிறது. இவ்வாறானவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பிரதி அமைச்சர் புத்திரசிகாமணி கூறினார்.
இதேவேளை, முதலாளிமார் சம்மேளனத்துடனான கூட்டு ஒப்பந்தத்தில் தோட்டத் தொழிலாளர்களின் எதிர்பார்ப்புகளும் உள்ளடக்கப்பட வேண்டுமென்று பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பில் கொட்டகலையில் நடைபெற்ற கூட்டமொன்றிலும் அமைச்சர் வலியுறுத்தினார்.
சங்கத்தின் உதவிச் செயலாளர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தொடர்ந்து பேசிய பிரதி அமைச்சர், ஐக்கியப்பட்டு குரல் கொடுக்க வேண்டிய வியடங்களை தனிப்பட்ட அரசியல் லாபம் கருதி குரல் கொடுக்க முயற்சித்தால் எமது உரிமைக்குரல் நசுக்கப்படும். மலையக மக் களின் நலனுக்காக சேவை செய்கின்றோம் என்கின்றவர்கள் ஐக்கியப்பட்டு குரல் கொடுக்க முன்வர வேண்டும்.
கூட்டு ஒப்பந்தத்தில் மக்களின் உணர்வுகள் உள்ளடக்கப்படல் வேண்டும். திருத்தங்கள் செய்யப்பட்டவைகளாக எல்லோரினாலும் அங்கீகரிக்கப்பட்டதாக அது இருக்க வேண்டும்.
இரகசியங்கள் இருக்கக் கூடாது. மக்களின் நலனுக்கு காலத்திற்கு ஏற்ற விதமாக ஒப்பந்தங்கள் அமைய வேண்டும் என்று குறிப்பிட்டதுடன்,
வீட்டுப் பணிப்பெண்களாகச் செல்லும் எமது மக்களின் பாதுகாப்புக்கும் அவர்களின் மனித உரிமைக்குமான சட்டதிட்டங்களை நாம் உருவாக்க முயற்சி செய்வோம். அடிப்படை சட்ட சம்பந்தமான செயலமர்வுகளை விரைவில் மலையகமெங்கும் எமது அமைச்சின் ஊடாக செய்ய தீர்மானித்துள்ளேன் என்றார். இக்கூட்டத்தில் அமைப்பாளர் டி. மாதவன் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் வீ. பாலேந்திரன் மற்றும் பலரும் உரையாற்றினர்.