அணுச் சோதனை தோல்வி என்ற இந்திய விஞ்ஞானியின் கருத்தால் சர்ச்சை

santhanam-nuclear_blast.jpgஇந்தியா 1998 ஆம் ஆண்டு நடத்திய அணுகுண்டு சோதனை முழு வெற்றி அடையவில்லை என்று அந்த சோதனையில் ஈடுபட்ட விஞ்ஞானிகளில் ஒருவரான கே. சந்தானம் தெரிவித்த கருத்தையடுத்து, இந்தியாவின் அணுசக்தித் திறன் தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

அணுசக்திப் பரவல் தடை ஒப்பந்தம் தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசும்போது, சந்தானம் இந்தக் கருத்தை வெளியிட்டார். கடந்த 1998 ஆம் ஆண்டு வாஜபேயி பிரதமராக இருந்தபோது போக்ரானில் நடத்தப்பட்ட இரண்டாவது அணுகுண்டு சோதனையில், டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் பிரதிநிதியாக அவரும் கலந்துகொண்டார்.

அந்த அணுகுண்டு சோதனை முழு வெற்றியடையாத நிலையில், இந்தியா மேலும் அணுகுண்டு சோதனைகளை நடத்த வேண்டும் என்றும், அவசரப்பட்டு, சிடிபிடி ஒப்பந்தத்தில் கையெழுத்திடக்கூடாது என்றும் சந்தானம் வலியுறுத்தியுள்ளார்.

போக்ரன் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டு 11 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்படிப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்று அவரிடம் கேட்டபோது, “அணுப்பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று இந்தியாவின் மீது நிர்ப்பந்தம் அதிகரித்து வருகிறது. அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், அதன்பிறகு அணுகுண்டு சோதனை நடத்துவதற்கான வாய்ப்புக்கள் முற்றிலும் அடைக்கப்படும். அதனால், தற்போதுள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி இந்தியா இரண்டு அல்லது மூன்று அணுகுண்டு சோதனைகளை நடத்தி, தனது அணுத்திறனை அதிகரித்துக் கொள்ள வேண்டும்’’ என்றார் விஞ்ஞானி சந்தானம்.

ஆனால், இந்திய அரசு சந்தானத்தின் கருத்தை ஏற்கவில்லை. உள்துறை அமைச்சர் சிதம்பரம் இதுபற்றிக் கருத்துத் தெரிவிக்கும்போது, சந்தானத்தின் கருத்தைக் கேட்டு தான் குழப்பமடைந்ததாகத் தெரிவித்தார்.

அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டபோது, டிஆர்டிஓ அமைப்பின் தலைவராக இருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், சந்தானத்தின் கருத்தை மறுத்திருக்கிறார். போக்ரான் அணுகுண்டு சோதனையில் தேவையான முடிவு கிடைத்ததாக அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *