கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

நேபால் மாவோயிஸ்ட்டுக்களின் தொடரும் போராட்டம்

Nepal_Maoists_Protestநவம்பர் 12ல் நேபால் மாவோயிஸ்ட்டுக்கள் மிகப்பெரும் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். தலைநகர் காத்மண்டு வீதிகளில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அரச கட்டிடத் தொகுதியை சுற்றி வளைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அதன் அனைத்து நுழைவாயில்களையும் அடைத்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்புகையையும் குண்டாந்தடி அடியையும் பயன்படுத்தி கடுமையாக நடந்த கொண்டனர். மாணவர்களும் இளையவர்களும் இவ்வார்ப்பாட்டத்தில் பெருமளவில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதியுடைய அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டது தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Nepal_Maoists_Protestஆயுதப் போராட்டத்தில் இருந்து சமாதான உடன்பாட்டுக்கு வந்த மாவோயிஸ்ட்டுக்கள் சென்ற தேர்தலில் அதிகப்படியான ஆசனங்களைப் பெற்று கூட்டாட்சியை ஏற்படுத்தினர். தங்களது போராளிகளை நேபாள இராணுவத்தில் இணைப்பதற்கு இராணுவத் தளபதி சம்மதிக்காததால் அவரை பதவிநீக்கம் செய்தனர். அரசியலமைப்புக்கு மாறாக ஜனாதிபதி இப்பதவி நீக்கத்தை நிராகரித்து இராணுவத் தளபதியை மீண்டும் பதவியில் அமர்த்தியதை அடுத்து மாவோயிஸ்ட்டுக்களின் ஆட்சி தடம்புரண்டது.

அண்மைக் காலத்தில் ஆயுதப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி அரசியல் ரீதியாகவும் அதிகாரத்தைக் கைப்பற்றிய ஒரு முன்ணுதாரணமாக நேபால் மாவோயிஸ்ட்டுக்களின் போராட்டம் அமைந்திருந்தது. பிராந்திய மற்றும் சர்வதேச வல்லரசுகளின் பல்வேறுபட்ட நெருக்குவாரங்கள் மத்தியிலும் மாவோயிஸ்ட்டுக்கள் தங்கள் அரசியல் வல்லமையை நிரூபித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு தசாப்தத்திற்குப் பின்னரேயே மாவோயிஸ்ட்டுக்களின் போராட்டம் தீவிரமடைந்தது. இலங்கையில் மார்க்ஸிய அமைப்புகள் சில உருவான போதும் அவை போராட்டத்திற்கு தலைமை தாங்கக் கூடிய ஆளுமையைக் கொண்டிருக்கவில்லை. இன்று இலங்கையில் புரட்சி பற்றி பேசுபவர்கள் பெரும்பாலும் இலங்கைக்கு வெளியிலேயே வாழ்கின்றனர். இவர்கள் கீ போட் மார்க்ஸிட்டுக்களாகவே உள்ளனர். ஆனால் நேபாளில் புரட்சி பற்றிப் பேசும் மாவோயிஸ்ட்டுக்கள் காத்மண்டு வீதிகளில் போராட்டத்தை நடத்துகின்றனர். அதனால் அங்கு புரட்சி சாத்தியமாவதற்கான வாய்ப்பும் அதிகம் காணப்பட்டது.

”ரெலோ, சிறிரெலோ தலைமைகள் கைவிட்டதாலேயே சுதந்திரக் கட்சியில் இணைந்தோம்.” சு க இணைந்த ரெலோ உறுப்பினர் சிவம்: ரி சோதிலிங்கம்

Sri_TELOநவம்பர் 09ல் இடம்பெற்ற ஜனாதிபதியுடனான சந்திப்பில் பல அமைப்புக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் சிறிரெலோ உறுப்பினர்கள் பதினொருவர் சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டு தமது கருத்துக்களையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

இவர்கள் தமது முன்னைய அமைப்பான ரெலோ அமைப்பிலிருந்து என்ன குற்றச்சாட்டுக்களைக் கொண்டு பிரிந்து சிறிரெலோவை உருவாக்கினார்களோ, அதே குற்றச்சாட்டுக்களினால் பின்னர் சிறீரெலோவிலிருந்தும் வெளியேறி சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளனர்.

ரெலோ மற்றும் சிறிரெலோ அமைப்பினர் தமது உறுப்பினர்கள் மீது அக்கறையற்று இருப்பதாகவும் இவர்களும் கடந்தகால மிதவாத அரசியல்வாதிகள் போன்றே செயற்ப்படுவதாகவும் சுதந்திரக் கட்சியில் இணைந்தவர்கள் சார்பாக சிறீரெலோ சிவம் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார்.

”ரெலோ இயக்கத்திற்கு பல தோழர்கள் தமது வாழ்க்கையையும் உயிர்களையும் அளித்துள்ளனர். ஆனால் தற்போது இக்கட்சியின் தலைவர்கள் தமது சொந்த நலனிலேயே அக்கறையுடன் இருக்கின்றனர். நானும் இன்னும் பல தோழர்களும் ஒருவேளை சோற்றுக்குக் கூட வழியில்லாமல் அவஸ்தைப்படுகின்றோம். அதேவேளை ரெலோ தலைவர்கள் எனப்படுவோர் தமக்கென சொத்துக்களை வெளிநாடுகளிலும் தமது குடும்பங்களை வெளிநாடுகளில் குடியேற்றியும் உள்ளார்கள். சிலவேளை பாராளுமன்றப் பதவி பறிபோனால் இவர்கள் உடனடியாகவே வெளிநாடு சென்று அங்கு குடியேறி விடுவார்கள். அதிலும் சில தலைவர்கள் பாராளுமன்ற பதவிகளை பெற்றதே இதன் மூலம் தமது குடும்பங்களுக்கு சொத்து சேர்ப்பதற்கே தவிர மக்களுக்கு உதவிசெய்யும் நோக்கில் அல்ல. மேலும் இவர்கள் தமது அமைப்பின் கீழ்மட்ட உறுப்பினர்க்கும் எவ்வுதவிகளும் செய்பவர்களாக இல்லை, செய்யும் நோக்கமும் இல்லை” என்று சிவம் கூறினார்.

”போராட்டம் என்று கூறி தலைவர்களால் மக்களும் இயக்க உறுப்பினர்களும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஏமாற்றப்படுகின்றனர். இவர்கள் மக்களின் அரசியலை வென்றெக்க செய்தது ஒன்றுமில்லை. அல்லது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவாவது ஏதும் செய்தார்களா என்றால் ஒன்றுமில்லை. இவர்களால் மக்களுக்கு ஒருவித பிரயோசனமும் இல்லை. மக்களுக்கென இவர்கள் செய்த சேவைகள் என்ன என்று ஒருவிடயத்தை இவர்கள் எமக்கு தெரியப்படுத்தட்டும் நாங்களும் பதில் அளிக்க தயாராக உள்ளோம்.

இன்று ஜனாதிபதி ராஜபக்ச ஆட்சிக்கு வந்து பயங்கரவாதத்தை ஒழித்து உடனடியாகவே மக்களுக்கான உதவிகளை செயற்படுத்த ஆரம்பித்துள்ளார். ஆகவே எமது நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்லும் ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்துவதன் மூலமே நாமும் எமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்து கொள்ள முடியும். கடந்த 40 வருடங்களாக அபிவிருத்தி நடைபெறாது போன எமது பிரதேசங்களை நாம் அபிவிருத்தி செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம்.

இவ்வளவு காலமாக இயக்கங்களின் கீழ்மட்ட உறுப்பினர்களை மட்டுமல்ல மக்களையும் மறந்து தனிநாடு என்ற கனவு கோசத்தின் பின்னால் திரிந்தவர்கள் இன்று மீண்டும் தேர்தல் நெருங்கியவுடன் மக்களுக்கு ஏமாற்றுக் கதைகள் சொல்வதற்கு வந்துவிட்டார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு இனியும் இடமளிக்கமாட்டோம்” என்றும் சிறீரெலோ சிவம் தெரிவித்தார்.

தாம் இந்த விடயங்களை – தமக்குள்ள பிரச்சினைகளை ஜனாதிபதியிடம் கூறியதாகவும் ஜனாதிபதி தமது பிரச்சினைகளை புரிந்து கொண்டுள்ளதாகவும் சிவம் தெரிவித்தார். தம்மோடு உள்ள பல தோழர்கள் சுதந்திரக்கட்சியில் இணைவதைவிட வேறு வழியில்லை எனவும் இதுவே இன்றுள்ள யதார்த்தம் எனவும் தமக்கு சுதந்திரக்கட்சியின் பல மூத்த தலைவர்களின் ஆதரவும் ஒத்தாசைகளும் கிடைக்கும் எனவும் சிவம் நம்பிக்கை கொள்கிறார்.

இன்று நாட்டிலுள்ள நிலைமையிலும் பெரும்பான்மை மக்கள் சுதந்திரக் கட்சியுடனேயே இணைய விருப்பமாக இருப்பதாகவும் சுதந்திரக்கட்சி மூலமே நாட்டில் தற்போது அமைதியான சூழ்நிலை உருவாக்கப் பட்டிருப்பதாகவும் இல்லையேல் இன்றும் இந்நாட்டில் தமிழர்களின் இரத்த ஆறு ஓடிக்கொண்டிருக்கும் என்றும் சிவம் தெரிவித்தார்.

சிறீரெலோவில் உள்ள பல தோழர்கள் சுதந்திரக்கட்சியில் இணையவுள்ளார்கள், இவர்களும் ரெலோ தலைவர்களால் கைவிடப்பட்டவர்கள். தற்போது ரெலோவினர் தமது வெளிநாட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் மீண்டும் தேர்தல் மூலம் தமது வருவாயீட்டும் தொழிலை ஆரம்பிக்க உள்ளனர். ரெலோ பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தொலைபேசி மூலம் அழைத்து தம்மை ஏன் சுதந்திரக்கட்சியில் இணைகிறீர்கள் என்று கேட்டபோது இவற்றையே தான் கூறியதாகவும் சிவம் தேசம்நெற்றுக்கு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பலர் சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டதாகவும் மேலும் பலர் பல மாவட்டங்களிலிருந்தும் இணைய உள்ளதாகவும் இது ஒரு பாரிய மாற்றத்தை ரெலோவின் உறுப்பினர்களுக்கும் முன்னாள் உறுப்பினர்களுக்கும் கொடுக்கும் என்றும் சிவம் தெரிவித்தார்.

தாம் ஜனாதிபதியுடன் பேசும்போது திருகோணமலையில் நடைபெறும் அத்துமீறிய குடியேற்றங்கள் பற்றியும் கிழக்கு மாகாணத்து விதவைகள் பிரச்சினை பற்றியும் எடுத்து கூறியதாகவும் இப்பிரச்சினைகள் வெகுவிரைவில் தீர்த்து வைக்கப்படும் எனவும் கிழக்கு மாகாணத்தில் உள்ள பல தமிழ் மக்கள் தற்போது உறுதிகள் அற்ற அரச காணிகளிலேயே வாழ்வதையும் சிலர் பல வருடங்களாக அவ்வாறே வாழ்வதையும் தாம் ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறியபோது இவர்களுக்கான உறுதிகள் வழங்கப்படும் என ஜனாதிபதி தமக்குத் தெரிவித்தாகவும் கூறினார்.

வட கிழக்க மாகாணத் தமிழர்களின் அரசியல்ப் பிரச்சினைக்கு தீர்வு தனது அரசாட்சிக் காலத்தில் நிச்சயமாக வைக்கப்படும் எனவும் தான் அரசியல்த்தீர்வு முன்வைக்கும்போது எல்லா அரசியல் கட்சிகளும் இதை ஆதரித்து தனக்கு ஒத்தழைப்பு வழங்கும் இதை நம்புங்கள் என ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும் சிவம் தெரிவித்தார்.

சிறிரெலோ தமிழர்களில் பலர் இராணுவ பொலீஸ் பதவிகளில் சேர்வதை ஊக்குவிப்பதாகவும் இதன் மூலமே எமது தமிழ் பிரதேசத்தில் எமது நிர்வாகங்களை தமிழில் நடாத்த முடியும் எனவும் எமது பிரதேசங்களில் வழங்கப்படும் உதவிகள் வேலைவாய்ப்புக்களில் விதவைகளிட்கு ஒரு குறிக்கப்பட்ட விகிதம் ஒதுக்கப்படுவதை தாம் விரும்புவதாயும் சிவம் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி தான் கிளிநொச்சியில் தங்கியிருந்து, தமிழ் மக்களின் அந்தப் பிராந்திய மக்களின் அபிவிருத்தியில் கவனம் எடுப்பேன் இது மிக விரைவில் நடக்கும் என்று கூறியதாகவும் சிவம் தெரிவித்தார்.

இலங்கையில் உடனடியாக தேவையாக உள்ளது ஜனாதிபதி தேர்தலா அல்லது பாராளுமன்றத் தேர்தலா என்று வினவியதாகவும் பலரும் பல கருத்துக்களை முன்வைத்த போதும் சுதந்திரக் கட்சியின் கிழக்கு மாகாண செயலாளர் திரு புஞ்சிநிலமே இப்போதுள்ள பிரச்சினை வட – கிழக்கில் உள்ள மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளே என்றும் இவைகள் தீர்க்கப்பட்ட பின்பே தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என கருத்து முன்வைத்ததாகவும் சிவம் தெரிவித்தார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் கருணா தங்களுடன் நன்றாக உரையாடியதாகவும் தன்னுடன் சிறீரெலோவை கைகோர்த்து வேலைசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் சிவம் தெரிவித்தார்.

இந்த சந்திப்பு தனியாகவும் கூட்டாகவும் நடந்ததாகவும் சந்திப்பு முழுக்க முழுக்க தமிழிலேயே நடைபெற்றதாகவும் ஜனாதிபதி தமிழில் சரளமாக பேசியதாகவும் தெரிவித்தார்.

எது எப்படி இருப்பினும் தமக்கும் சிறீசபாரத்தினத்தின் மீதான மதிப்பும் மரியாதையும் என்றும் குறையாமல் இருக்கும் என்றும் சிவம் கூறினார்.

பிரிவுற்ற சிறீரெலோவின் இணைப்பாளராக பாரிசில் வதியும் திரு சாந்தகுமார் இயங்குகிறார்.

தமிழ் தேசியத்தின் வறட்சியும் வடக்கின் வசந்தமும் : த ஜெயபாலன்

Basil Rajaparksa in Jaffna Paddy Fieldஇலங்கை அரசின் ‘வடக்கின் வசந்தம்’ திட்டம் பற்றிய விவரணம் வெளிவந்துள்ளது. வடக்கின் அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிய புள்ளி விபரங்களுடன் இது வெளியாகி உள்ளது. (முழுமையாகப் பார்வையிட http://www.np.gov.lk/pdf/development.pdf  ) ‘கிழக்கின் உதயம்’ திட்டம் அறிவிக்கப்பட்டு மட்டுப்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. தற்போது 180 நாள் மட்டுப்படுத்தப்பட்ட ‘வடக்கின் வசந்தம்’ அபிவிருத்தித் திட்டத்தை அரசு மேற்கொண்டு வருகின்றது.

வடக்கு, கிழக்கில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்துள்ள போதும் உள்நாட்டு யுத்தத்திற்கான காரணிகள் நீக்கப்படவில்லை என்பதை உலக வங்கி ஒக்ரோபர் இறுதியில் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டி இருந்தது. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்திற்குக் காரணமாக இருந்த இனமுரண்பாட்டுக்கு தீர்வு காணாதவரை நீண்டகால உறுதித்தன்மையை தக்க வைக்கவோ மூலதனத்தை கவரவோ முடியாது என உலக வங்கி அறிக்கை தெரிவித்து இருந்தது. மாநிலங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குவதே ஏற்புடைய செயன்முறையாக இருக்கும் என்றும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டியது. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள அரிய சூழல் ஏற்பட்டு உள்ளது என்று தெரிவிக்கும் உலக வங்கி அறிக்கை இச்சந்தர்ப்பத்தை முழுமையாகப் பயன்படுத்தி தமிழ் மக்களுடைய அரசியல் குற்றச்சாட்டுக்களை திருப்திப்படுத்துகின்ற தீர்வை முன் வைக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டி இருந்தது.

ஆனால் அடுத்த தேர்தல் முடியும் வரை அரசியல் தீர்வு பற்றிய பேச்சுக்கே இடமில்லை என ஆளும் கட்சி அறிவித்துள்ளது. வடக்கு கிழக்கில் மட்டுப்படுத்தப்பட்ட அபிவிருத்தியை மேற்கொள்வதன் மூலம் அரசியல் தீர்வை பின்னடிக்கலாம் அல்லது கைவிடலாம் என்றளவில் அரசின் தற்போதைய நடவடிக்கைகள் அமைந்துள்ளதாக இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் தலைமைகள் நம்புகின்றன. ஆனாலும் அரசியல் தீர்வுக்கு அழுத்தம் கொடுக்கின்ற அளவுக்கு இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் தலைமைகள் பலமான நிலையில் இல்லை. இதனால் அந்த அபிவிருத்தியில் பங்கெடுப்பதற்கு என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அணியில் நின்ற உள்ளுராட்சி உறுப்பினர்கள் சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளனர். இந்த இணைவு எதிர்காலத்தில் இவ்வாறான பல இணைவுகள் ஏற்படப் போகின்றது என்பதை முன்கூட்டியே அறிவித்துள்ளது.

இவ்வாறான இணைவுகள் தமிழ் மக்களின் தனித்துவ அரசியலை தவிர்க்க முடியாமல் பலவீனப்படுத்தப் போகின்றது. இதைத் தடுக்கின்ற அல்லது மட்டுமப்படுத்துகின்ற அரசியல் பலம் காலத்திற்குக் காலம் தோண்றிய தமிழர் விடுதலைக் கூட்டணி முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் வரையான தமிழ் தேசியத் தலைமைகளாலேயே அழிக்கப்பட்டு உள்ளது. கடந்த காலங்களில் இத்தலைமைகள் தங்கள் போராட்டத்தினூடாக தமிழ் மக்களுக்கு வாழ்வுக்குப் பதிலாக அழிவையே வழங்கி உள்ளனர். தமிழ் தேசியத் தலைமைகளிடம் உள்ள அரசியல் வறட்சி அவர்களை தமிழ் மக்களிடம் இருந்து அன்னியப்படுத்தி உள்ளது. அதனை மிகத்திட்டமிட்ட முறையில் பயன்படுத்திக் கொள்ளும் அரசு தமிழ் தேசியத் தலைமைகளுக்கு மாற்றீடாக தனது தலைமையை முன்வைக்கின்றது.

வன்னி முகாம் மக்களை சென்று பார்ப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அனுமதிக்கப்படவில்லை. அதற்காக அவர்கள் போராடவும் இல்லை. அவர்களில் சிலர் பல மாதங்களின் பின்னர் தற்போது தான் இலங்கைக்கே சென்றுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டுமல்ல கொழும்பு தமிழ் கட்சிகள் கூட அனுமதிக்கப்படவில்லை. ஆளும் அரசு தான் மட்டுமே அந்த மக்களில் அக்கறைகொண்டுள்ளதான தோற்றப்பாட்டை உருவாக்குகின்றது. தனக்குள்ள அனைத்து வழங்களையும் பயன்படுத்தி அதனை நிறுவ முற்பட்டுள்ளது. மே 18 வரை அரசியல் வன்முறைமூலம் தனது அரசியல் ஆதிக்கத்தை நிறுவிய அரசு தற்போது தமிழ் மக்கள் மீது கருத்தியல் மேலாதிக்கத்தை நிறுவ முற்பட்டுள்ளது. வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டம் கூட தெற்கில் உள்ள அமைச்சர்களின் தலைமையிலேயே நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 13 பேர் கொண்ட யாழ் அபிவிருத்தியில் மலையக அமைச்சர் ஒருவரே தமிழராக உள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக் கூடிய அடிப்படை ஜனநாயக விழுமியங்களையே இல்லாதொழித்த நிலையில் அரசு தனது கருத்தியல் மேலாதிக்கத்தை நிறுவுவதற்கு எவ்வித தடையும் இருப்பதாகத் தெரியவில்லை.

சினிமாப் படங்களில் எல்லாம் நடந்து முடிந்தபின் பொலிஸ் ஜீப் அல்லது கார் வருவது போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மார்க்சிய அறிஞர்களும் வெளியே தலைகாட்ட ஆரம்பித்துள்ளனர். மே 18 வரை மௌனம் காத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மார்க்ஸிய அறிஞர்களும் வே பிரபாகரன் எரிக்கப்பட்ட அல்லது புதைக்கப்பட்ட இடத்தில் புல்லும் முளைத்தபின் ‘தமிழீழ விடுதலைப் புலிகள் ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள்’ என்ற தங்கள் அறிவியல் விலாசத்தை எடுத்துவிடுகின்றனர்.

மிகப் பெரும் அவலத்தைக் கடந்து வந்த மக்களுக்கும் கடந்த 30 ஆண்டுகளாக செல் தாக்குதல்களுக்குள்ளும் குண்டுவெடிப்புகளுக்குள்ளும் வாழ்ந்த மக்களுக்கும் வழங்குவதற்கு தமிழ் தேசியத் தலைமைகளிடம் எதுவும் இல்லை. மீண்டும் குண்டுகள் வெடிக்கும் என்று எச்சரிப்பதைத் தவிர. ஓரிரு குண்டுவெடிப்புகளைச் செய்து தங்கள் தேசியத் தலைமையைக் காப்பாற்றுவதன் மூலம் தங்கள் இருப்பை உறுதிப்படுத்துவதற்கு சில புலம்பெயர் சக்திகள் முனைகின்றன. இது ஏற்படுத்தப் போகும் அரசியல் விளைவு பற்றிய அக்கறையிலும் பார்க்க தங்கள் இருப்பை உறுதிப்படுத்தி தங்கள் பொருளாதார நலன்களைப் பேணிக் கொள்வதில் அவர்கள் மிகுந்த அக்கறையாக உள்ளனர். மாவீரர் தினத்தை குறிக்கும் வைகயில் ஓரிரு குண்டுவெடிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கான அழுத்தங்களை புலம்பெயர் தமிழ் தேசிய ஆதரவு சக்திகள் வழங்கிவருவதை உணர முடிகிறது.

தமிழ் தேசியத்தின் பலம் இலங்கை அரசின் நேரடியான ஒடுக்குமுறையை வைத்தே கட்டமைக்கப்பட்டது. தமிழ் தேசியம் பலம்பெறுவதற்கு தமிழ் மக்கள் ஆயிரக் கணக்கில் கொல்லப்பட வேண்டும், தமிழ் பெண்கள் நூற்றுக் கணக்கில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இரத்தமும் சதையும் இல்லாமல் தமிழ் தேசியத்தால் நின்று பிடிக்க இயலாது. இதனையே மே 18க்குப் பின் காணக் கூடியதாக உள்ளது.

இலங்கை அரசு மேற்கொள்கின்ற நுண் அரசியலை மறைமுகமான இனச்சுத்திகரிப்பை கண்டுகொள்ளவோ எதிர்கொள்ளவோ தமிழ்த் தேசியம் தவறிவிட்டது. அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் ‘வடக்கின் வசந்தம்’ பாலம் கட்டினால் ‘தமிழ் தேசியம்’ குண்டு வைத்து தகர்க்கும் என்பதுதான். அந்த மக்களுக்கு தோளோடு தோள் கொடுக்காமல் ஒப்புக்கு மாரடிக்கும் போராட்டங்களும், ஆபத்தில் மக்களுக்கு உதவாத கோசங்களும் அரசியல் வறட்சியின் வெளிப்பாடாகவே உள்ளது. ஊரில் சொல்வார்கள் ‘பத்துப் பிள்ளை பெத்தவளுக்கு ஒரு பிள்ளை பெத்தவள் முக்கிக் காட்டினாள்’ என்று அது மாதிரியான நிலையிலேயே புலத்துப் போராட்டங்கள் அமைகின்றன.

கனிமொழி பெற்றது பரிசா இல்லை பணமா?: யூட் ரட்ணசிங்கம்

Rajapaksa_and_Indian_Delegationசென்ற மாதம் சிறீலங்கா சென்றிருந்த தமிழ்நாட்டு சில அரசியல் கட்சிகளின் குழு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை சந்தித்தபோது ஜனாதிபதிக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தவேளை ஜனாதிபதியும் நன்றிக் கடனாகவும் நினைவுச் சின்னமாகவும் ஏதோ பெட்டியொன்றை அந்தக் குழுவில் சென்ற கலைஞர் கருணாநிதியின் மகளான கனிமொழியிடம் கொடுத்ததை அத்தனை தொலைக்காட்சிகளும் தொடர்ச்சியாக காட்டிக்கொண்டிருந்தன.

பெற்றுக்கொண்ட பெட்டிக்குள் பணப்பொதிகள் இருந்தன என்று ஈழத்தமிழர் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது. சிறீலங்கா அரசத்தலைவரிடம் பணம்பெற்று தமிழீழப் போராட்டத்தை காட்டிக்கொடுத்து விட்டார்கள் என்ற கோணத்திலேயே புலத்திலும் தமிழ்நாட்டு புலிசார் அரசியல் மட்டத்திலும் இது ஏதோ முதன்முறையாக நடைபெற்ற சம்பவம்போல் மாறி மாறி பிரச்சாரம் செய்கிறார்கள்.

இந்த அரசியல்வாதிகளை ராணுவத்தளபதி சரத்பொன்சேகா அரசியல் கோமாளிகள் என்று அழைத்தது மிகவும் பொருத்தமானது என்று வேறுசிலர் தொலைபேசியில் அழைத்து தொலைக்காட்சியில் பேசுகிறார்கள்.

இந்தத் தமிழர்கள் கூறுவதுபோல் பணத்தைப் பெற்று தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் போராட்டத்தை காட்டிக்கொடுத்தது உண்மையென்றால் தமிழர் வரலாற்றில் பணம் பரிமாறப்பட்டது இதுவா முதல்தடவை? இவர்களா முதல் துரோகிகள்?

80 காலப்பகுதியில் JR ஜெயவர்தனாவினுடைய முதல் ஜனாதிபதி காலப்பகுதி முடிந்து இரண்டாவது ஜனாதிபதித் தேர்தல் வந்தபோது அவரை எதிர்த்து திரு கொபேகடுவ ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அந்தத் தேர்தலில் JRன் வெற்றிவாய்ப்பு மிக அரிதாகவே காணப்பட்டது. அன்றய காலத்தில் தமிழ் மக்களுக்கெதிராக மிக மோசமான அரச அடக்குமுறைகள் JR ரால் கட்டவிழ்த்து விடப்பட்ட நேரம் தமிழ் மக்களின் வாக்கே தேர்தல் முடிவை தீர்மானிக்கும் சக்தியாக இருந்தது.

தமிழ் மக்களின் தலைவராக அன்று திரு அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் இருந்தார். அவரின் ஆலோசனையின்படியே தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்பதை அறிய காத்திருந்தார்கள். தேர்தலும் அண்மித்தது திடீரென அவரும் அவர் பாரியாரும் லிபியாவுக்கு விடுமுறையைக் களிப்பதற்காக சென்றுவிட்டார்கள் என்று பத்திரிகைச் செய்திகள் வந்தன.

தமிழ் மக்களுக்கு எதுவுமே சொல்லப்படவில்லை தேர்தலும் வந்தது தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்று தெரியாது அங்கலாய்த்தார்கள். தமிழ் மக்களால் தோற்கடிக்கப்பட வேண்டிய JR வெற்றிபெற்று மீண்டும் ஜனாதிபதியானார். அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும் TULFன் தலைவருமான அமிர்தலிங்கத்தையும் அவர் பாரியாரையும் விடுமுறையில் லிபியாவுக்கு உல்லாசப் பயணம் அனுப்பி வைத்தவர் அன்றய JR என்று அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டது. அவர்களின் லிபியப் பயணமே JR ஐ மீண்டும் ஜனாதிபதியாக்க உதவியது என்று அன்றய அரசியல் விமர்சகர்கள் தமது விசனத்தை தெரிவித்தார்கள்.

திரு அமிர் அவர்கள் விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டபோது அவருடைய வரலாற்றுத் தவறுகளில் இதுவும் முதன்மையானதாகப் பேசப்பட்டது.

அதன்பின் 2004 ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் தமிழ் மக்களின் வாக்கே தீர்மான சக்தியாக இருந்தது. UNP வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெறும் வாய்ப்பு அதிகமாக இருந்ததாக அன்றய கணிப்புகள் தெரிவித்தன. தமிழ் மக்களின் தலைவனாக மேதகு வே. பிரபாகரன் இருந்தார். இம்முறை அவர் தமிழ் மக்களை வாக்களிக்கவிடாது தடுத்ததன் மூலம் ரணில் தோற்கடிக்கப்பட்டு மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியானார். மகிந்த ராஜபக்சவின் வெற்றிக்குப் பின்னால் தேசியத் தலைவர் இருந்ததாக செய்திகள் வந்தன. மகிந்தவிடம் விடுதலைப் புலிகள் 100 கோடி ரூபாய் பணம் பெற்ற அரசியல் அசிங்கத்தை பத்திரிகைகள் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தன.

மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களிலிருந்து கீழ்க்காணும் வினாக்களுக்கு விடைகாண்க!
கொடுக்கப்பட்டுள்ள நேரம் மிகக் குறுகியது என்பதை கவனத்தில் கொள்க. தவறும் பட்சத்தில் மேலுமொரு துரோகி தமிழ் மண்ணில் உருவாகிவிடுவார்.

மகிந்தவிடம் கனிமொழி பணம் பெற்றது காட்டிக்கொடுப்பென்றால் இதே மகிந்தவிடம் 100 கோடி பணம் பெற்று அவரை ஜனாதிபதியாக்கியதை எதற்குள் அடக்குவது?

மகிந்தவிடம் முதன்முதல் பணப்பெட்டி பெற்றது கனிமொழியா ? ——

கனிமொழியும் அந்தக் குழுவினரும் துரோகிகள் என்றால் 100 கோடி வாங்கியவர்கள் ? ——-

நிற்க! இனி அடுத்த குற்றச்சாட்டான அரசியல் கோமாளிகள் என்ற வாதம் உண்மைதானா என்பதைப் பார்ப்போம். அந்த உண்மைநிலையை அறிய நமது வரலாற்றில் பின்நோக்கிப் பயணிப்போம்.

ஈழத்திலேயிருந்த விடுதலைப் போராட்டத்தை படகுகளிலேற்றி இந்தியக்கரைக்கு இழுத்துச் சென்றவர்கள் ஈழப் போராளிகளே.

போனவர்கள் அங்கே தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் வீட்டுவாசல்களில் மண்டியிட்டுக் கிடந்தார்கள். அன்று முதலமைச்சராக இருந்த M G ராமச்சந்திரனிடம் 2 கோடி ரூபாய் பணத்தை பெற்றதன் மூலம் போராட்டத்தை விற்று தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை ஈழப்போராட்டத்தின் பங்குதாரர்களாக இழுத்துவந்தவர்கள் முன்னாள் தேசியத்தலைவர் மேதகு திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரனும் அவர் LTTE அமைப்புமே.

இரண்டு கோடி ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டபோது மற்றய இயக்கங்களை மிகவிரைவில் அழித்துவிடலாம் என்ற வெறி பணம்கொடுத்து ஈழப்போராட்டத்தை இவர்கள் தமதாக்கிக் கொள்கிறார்கள் என்ற அரசியல் யதார்த்தத்தை அவர்களின் கண்களிலிருந்து மறைத்தது.

கொடுக்கப்பட்ட கோடி MGR ன் சொந்தப் பணமா? இல்லை MGRக்கு மூன்றாம் தரப்பால் கொடுக்கப்பட்ட பணமா என்பதை யாரறிவார்?

இவ்வாறான புலிகளின் வரறாற்றுத் தவறுகளையெல்லாம் மூடிமறைத்து விட்டு இன்று தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை சுண்டுவிரல் காட்டி அரசியல் கோமாளிகள் என்கிறார்கள்.

point_the_fingerஅடுத்தவர்முன் சுண்டு விரலைக் காட்டுகின்ற போது மூன்று விரல்கள் காட்டுபவரை காட்டுகின்றன என்ற யதார்த்தத்தை புலிச் சமூகம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை.

தமிழ்நாட்டு மண்ணில் 17 அப்பாவி இந்தியத் தமிழர்கள் ஈழத் தமிழருக்காக தம்மைத்தாமே எரித்து தம்முயிரை தியாகம் செய்தபோது தொப்புள்கொடி உறவென்றார்கள்.

அப்பாவி இளைஞர்களை உசுப்பேத்தி மூளையைச் சலவை செய்து முத்துகுமார்களை உருவாக்கிக் கொடுத்தபோது இந்த அரசியல் கோமாளிகள் ஈழப்போராட்டத்தின் நம்பிக்கை நாயகர்களாக வர்ணிக்கப்பட்டார்கள்.

வீர வரலாற்றோடு ஆரம்பித்த ஈழப்போராட்டத்தை இறுதியில் ஐநாவின் முன் பெற்றோல் ஊற்றி தன்னைத்தானே எரித்துக்கொள்ளுகின்ற கொடூரமான தமிழ்நாட்டு அரசியலாக மாற்றியவர்கள், ஒட்டுமொத்த விடுதலைக்காக ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தை இறுதியில் தானத் தலைவனைப் போற்றிப் புகழும் ஈனப் போராட்டமாக மாற்றி தமிழ்நாட்டின் தரம்கெட்ட அரசியலாக மாற்றியவர்களும் இவர்களே.

Pirabaharan_MGRMGRமுன் கைகூப்பி ஓர் பண்ணை அடிமையைப்போல் நின்ற பிரபாகரனின் புகைப்படத்தை ஏதோ வரலாற்றுப் பதிவுபோல் அடிக்கடி காட்டிப் பெருமைப்படும் இந்த புலிச்சமூகம் இன்று தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை அரசியல் கோமாளிகளென்று வாய்கூசாது அழைக்கிறது.

ஈழப்போராட்டத்துக்கு இவர்கள் செய்த துரோகத்தையும் எதிர்காலம் இல்லாது ஏற்படுத்திய இடைவெளியையும் மூடி மறைப்பதற்காக தொடர்ந்தும் வேறு யார்மீதும் பழியைப் போட்டு தப்பித்துக்கொள்ள பார்க்கிறார்கள்.

எமது போராட்டத்தை ஆரம்பம் தொட்டே அழித்துவிட வேண்டுமென்ற கபட நோக்கம்கொண்ட சக்திகள் இவர்களின் பலவீனத்தை பற்றிக்கொண்டன. பணத்துக்காக இவர்கள் எதுவும் செய்யக் கூடியவர்கள் என்பதை கண்டுகொண்டார்கள். இலங்கை இராணுவத்துக்கெதிராக போரிட இந்தியாவிடமும் பின் இந்திய இராணுவத்துக்கெதிராக போரிட இலங்கையிடமும் பணம் பெற்றவர்கள். இந்திய ராணுவத்தை வெளியேற்ற முன்னாள் ஜனாதிபதி பிறேமதாஸவுடன் மிக இலகுவாக பேரம்பேசி அலுவலை முடிந்த்தார்கள்.

இதைப் பார்த்திருந்த இன்னோர் சக்தி முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியை முடித்துக்கட்ட இவர்களது பலவீனத்தை பயன்படுத்தியது. இதன் விளைவு ஓரு கல்லில் இரண்டு மாங்காய் என்ற பலனை எதிரிக்குக் கொடுத்தது.

1) ஈழத் தமிழருக்கும் இந்தியாவுக்குமிடையில் நிரந்தரமான இடைவெளியை ஏற்படுத்தியது.
2) புலிகள் உயிருடன் உள்ளவரை இந்தியாவோடு உறவாட முடியாத நிலையை உருவாக்கி தொடர்ந்தும் இந்தியாவினுடைய எதிர் சக்திகளுடனேயே உறவாட வேண்டிய நிற்பந்தத்தை உருவாக்கியது.

இப்படியாக நமது எரிந்த வீட்டுக்குள் எத்தனை பேர்தான் இலாபம் பெற்றார்கள். (தமிழர்களைத் தவிர)

மேற்குறிப்பிட்டது போல் பல வரலாற்று உண்மைகளிருக்க கலைஞர் கருணாநிதியும் அவர் மகள் கனிமொழியும் போராட்டத்தை காட்டிக்கொடுத்து விட்டார்கள் என்று புதுக்கதை விடுகிறார்கள்.

தொடர்ந்தும் தமிழர் தமது கற்கால சிந்தனையிலிருந்து சிந்திப்பார்களேயானால் மீண்டுமொருமுறை தமிழன் வாழ்வு வெள்ளான் முள்ளிவாய்க்காலுக்கு இழுத்துச் செல்லப்படுவதை யாராலும் தடுக்க முடியாத நிலை தோன்றும்.

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சீன இராணுவத் தளபதி SUN TSU (இவர் சரத் பொன்சேகா போன்று போர்க்களத்தில் பல வெற்றிகளைக் கண்டவர்)ன் போரியல் பற்றிய குறிப்பிலிருந்து பெறப்பட்டு 21ம் நூற்றாண்டில் வாழும் ஈழத்தமிழர்கட்கு பொருத்தமானதாக இருப்பதை அவதானித்து அதை இங்கே தருகிறேன்:

“know your enemy, know yourself and you can fight a hundred battles without disaster.”

தமிழர் தமது பலத்தை மிகைப்படுத்திப் பேசி மார்தட்டுவதைவிட தமது உண்மையான பலவீனத்தை கண்டறிவதே அவர்களின் பாதுகாப்பிற்கும் எதிர்கால வளர்ச்சிக்கும் வளம்சேர்க்கும். தமது பலத்தை கண்டறியாதவரை 21ம் நூற்றாண்டிலும் புராணங்களும் புளுகுகளுமே தமிழர் வாழ்வாகவும் வழிகாட்டியாகவும் இருக்கும்.

புராணங்களையும் புளுகுகளையும் நம்பி அரசியல் செய்யும் உலகத் தமிழ்த் தலைவர்கள் ஈழத்தமிழரின் போராட்ட நாயகர்களாக வர்ணிக்கப்பட்டு தொடர்ந்தும் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருவார்கள். அன்று MGR இல் தொடங்கி இன்று சீமானில் வந்து நிற்கிறது. நாளை எந்தப் பூமான் வருவானோ தெரியாது ஈழத்தை வென்று தர.

பின் குறிப்பு:

அரசியல் கோமாளிகள்: இதை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மரபணு சொற்சேற்க்கை என்னும் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கண்டுபிடித்து முன்மொழிந்தார். அதனால் இது மிகவும் வீரியம் கூடிய சொற்றொடராகக் கருதப்படுகிறது. பின் இது புலம்பெயர் புலிச் சமூகத்தால் வழிமொழியப்பட்டு இப்போது இவர்களின் பாவனையில் உள்ளது.

விடுதலைப்புலிகளுடன் இவர் பல ஆண்டுகள் போரிட்டு இறுதியில் கண்டு பிடிக்கப்பட்டதே இச் சொற்றொடராகும். இதன் மூலம் இவர் போரில் மட்டுமல்ல தமிழர் வாழ்விலும் நிரந்தரமான இடத்தைப் பிடித்துக்கொண்டார். இச் சொற்றொடர் புலிச் சமூகத்தின் இன்பத்துக்குரியதும் புலிசார் ஊடகங்களின் ஆத்மதிருப்திக்கு உரியதுமானதாக கணிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றிய மேலதிக விபரங்களுக்கு IBC, GTV, தீபம் போன்ற சர்வதேச தரம்வாய்ந்த ஊடகங்களை கேட்டும் பார்த்தும் தெரிந்து கொள்க.

துரோகி: இது தமிழரசுக் கட்சியினால் அகழ்ந்தெடுக்கப்பட்டு TULF இனால் பட்டைதீட்டப்பட்டு விடுதலைப் புலிகளினால் மகுடமிடப்பட்டது. கடந்த 25 ஆண்டு காலம் அதன் ஏகபோக உரிமையாளர்களாக இருந்து கடுமையான கஸ்ரங்களின் மத்தியிலும் இதைப் பாதுகாத்து வந்தார்கள் என்ற பெருமையைப் விடுதலைப் புலிகள் தமதாக்கிக்கொண்டார்கள்.

இது புலிச் சமூகத்தின் மிகவும் இன்பகரமான சொல்லாகவும் புலிசார் ஊடகங்களின் மிகவும் கவர்ச்சியானதுமாக கணித்திருக்கிறார்கள். இது மிகஆழமான உட்பொருட்களை சுட்டி நிற்பதால் இதை ஓர் சர்வதேச தரம்வாய்ந்த சொல்லாக கருதுகிறார்கள்.

ஈழத்தமிழர் வரலாற்றில் கடந்த அரை நூற்றாண்டு காலப்பகுதியில் அதிகமாக பயன்படுத்திய சொல் என்பதால் கின்னஸ்ஸில் இடம் பிடிக்கும் வாய்ப்பு உள்ளதாக எதிர்வு கூறியிருக்கிறார்கள்.

இதன் மேலதிக விபரங்களுக்கு www. வி. பு. அகராதி. com என்று பார்க்க.

இது Oxford அகராதிக்கு இணையானது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

துப்பாக்கி முனையில் கட்டிய தமிழ்தேசியம் ஈடாடுகிறது. ததேகூ உள்ளுராட்சி உறுப்பினர்கள் சுதந்திரக் கட்சியில் இணைவு. : த ஜெயபாலன்

Trincomalee_Mapதமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சுதந்திரக் கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றத் தலைவரான ஆர் சம்பந்தனின் மாவட்டமான திருகோணமலை மாவட்டத்தின் நகரசபை பிரதேச சபைத் தலைவர்களும் உறுப்பினர்களும் இவ்வாறு ஆளும் சுதந்திரக் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்த போதிலும் ஆர் சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றவர்கள் மற்றவர்களுடன் கலந்தாலோசியாமலேயே முடிவுகளை மேற்கொள்வதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம் சிவாஜிலிங்கம் இலங்கை செல்வதற்கு சில தினங்களுக்கு முன் தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டு இருந்தார். அவர்கள் தம்முடன் தொடர்புகளை மேற்கொள்ளவதைத் தவிர்த்து இருந்ததாகவும் எம் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.

மிகுந்த அரசியல் அனுபவம் மிக்கவராகக் கருதப்படும் ஆர் சம்பந்தன் தன்னுடைய மாவட்டத்தின் நகரத்தின் நகர சபை பிரதேச சபை தலைவர்களையும் உறுப்பினர்களையும் வென்றெடுக்க முடியாதவராக இருந்துள்ளார். இதுவரை காலமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் துப்பாக்கி முனையில் பேணப்பட்டு வந்த தமிழ்த் தேசிய ஒருமைப்பாடு அவர்களுடைய துப்பாக்கிகள் பறிக்கப்பட்டதும் ஈடாடிப் போயுள்ளது. இப்பிளவு தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் மட்டுமல்ல வே பிரபாகரனை தேசியத் தலைவராக ஏற்றுக்கொண்ட அத்தனை புலித் தேசிய அமைப்புகளிலும் ஏற்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் கட்சித் தாவல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெரும் புள்ளிகளின் கட்சித் தாவலுக்கு கட்டியம் கூறுவதாக அமைந்தள்ளது.

பாராளுமன்றத் தலைவர் ஆர் சம்பந்தன் உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மாபெரும் மனித அவலம் இடம்பெறப் போவதை அறிந்திருந்த போதிலும் அவர்கள் அதனைத் தடுப்பதற்கு எவ்விதமான காத்திரமான முயற்சியும் எடுக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் முகவர்களாக இருந்து காலத்திற்குக் காலம் தங்கள் இருப்பைக் காட்டுவதற்கான அறிக்கைகளை விட்டதற்கு அப்பால் அவர்களுக்கு அரசியல் இருக்கவில்லை. தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரித்தானிய தமிழர் பேரவை போன்ற புலி சார்பு அமைப்புகள் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றன. அதற்கான அழுத்தங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

மேலும் ஆளும் சுதந்திர ஐக்கிய முன்னணி அரசு தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள்ளும் பிளவுகளை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. உறுதியான தலைமையும் உறுதியான கொள்கையும் இன்றி தங்கள் பாராளுமன்ற ஆசனங்களைக் காப்பாற்றுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு வே பிரபாகரனுக்குப் பதிலாக இன்னுமொரு எஜமானனுக்கு கீழ் அந்தப் பாராளுமன்ற ஆசனங்களைத் தக்க வைக்க முடியுமென்றால் அதனை நோக்கி நகரவே முயற்சிக்கும்.

நவம்பர் 09ல் இடம்பெற்ற நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்மைப்பு, சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ், மற்றும் ஐக்கிய தேசியக் உறுப்பினர்கள் ஜனாதிபதியைச் சந்தித்து சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டனர். மேலும் சிறிரெலோ உறுப்பினர்கள் பதினொருவரும் இவர்களுடன் இணைந்து சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டனர். நாட்டினை அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்லும் ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்துவதற்கே தாம் சுதந்திரக் கட்சியில் இணைந்ததாக சிறிரெலோவைச் சேர்ந்த சிவம் தேசம்நெற்றுக்கு தெரிவித்தார். இந்நிகழ்வில் மொத்தமாக 26 பேர் சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டனர். ஏற்கனவே மட்டு மாவட்ட மேயர் சிவகீதா பிரபாகரன் உட்பட மட்டக்களப்பு நகரசபை பிரதேச சபை உறுப்பினர்கள் சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டமை தெரிந்ததே.

Trincomalee_Map2006ல் இடம்பெற்ற திருகோணமலை உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழரசுக் கட்சி)ல் போட்டியிட்டு வெற்றி பெற்ற நகரசபை, பிரதேசசபை உறுப்பினர்களே தற்போது சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளனர். திருகோணமலை நகரசபைத் தலைவர் எஸ் கௌரிமுகுந்தன், உப்புவெளி பிரதேச சபைத் தலைவர் ரி காந்தரூபன், உபதலைவர் வி சுரேஸ்குமார், மற்றும் உப்புவெளி பிரதேச சபை உறுப்பினர்கள் ரி பாலசுப்பிரமணியம், கெ வைரவநாதன் மற்றும் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் யு ரவிக்குமார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொண்ட ரெலொ அமைப்பு தங்கள் அடிமட்ட உறுப்பினர்களைக் கைவிட்டுவிட்டதாகக் கூறி பாரிஸில் இருந்து சென்ற சயந்தன், உதயராஜா (உதயன்) ஆகியோர் சிறிரெலோவை உருவாக்கினர். லண்டனைச் சேர்ந்த முன்னாள் ரெலோ உறுப்பினர் மாணிக்கம் நகுலேந்திரன் (கீரன்) அண்மையில் இலங்கை சென்று சிறிரெலோவுடன் இணைந்து செயற்பட்டார். தற்போது சிறிரெலோவின் தலைமையும் தங்கள் அடிமட்ட உறுப்பினர்களை கைவிட்டுவிட்டதாகக் குற்றம்சாட்டி சிவம் தலைமையில் ஒரு பகுதியினர் சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளனர். இன்னும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் அவ்வாறு இணைய உள்ளதாகவும் அவர்கள் தேசம்நெற்றுக்கு தெரிவித்தனர்.

சிறையில் எம்தமிழினம்! : அழகி

IDPs_Cookingஇப்பொழுது புயலுடன் பூகம்பமும் சுனாமியும் சேர்ந்து எமது ஈழத்து மக்களை நிர்க்கதியாக்கி விட்டு சென்று விட்டது. இதிலிருந்து எமது இனத்தை எப்படியும் நாம் காப்பாற்றியாக வேண்டும். முதலில் நல்ல மனிதர்கள், மக்களின் மேல் இரக்கமுடையவர்கள், பண்புடையவர்கள், நன்றியுணர்வுடையவர்கள் முன்வந்து தலைமை ஏற்று இந்த முட்கம்பி வேலிகளுக்குள் அடைபட்டுக்கிடக்கும் எமது சமுதாயத்தை காப்பாற்ற வேண்டும். சிங்கள இராணுவமும் இலங்கையின் இனத்துவேசமிக்க, அரசியல் தலைமைகளாலும் எமது இனம் கொஞ்சம் கொஞ்சமாக கொன்றொழிக்கப்பட்டு கொண்டு திட்மிட்டு உருத்தெரியாமல் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏவ்வகையான துரோகங்களை எமது மக்களுக்கு செய்கிறார்கள் என்பதையிட்டு நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

மக்களை பசி பட்டினி போட்டு சிந்திக்கும் ஆற்றலை மழுங்கடிக்கிறார்கள். ஒரு இடத்தில் நிம்மதியாக இருக்க விடாமல் செய்கிறார்கள். குடிப்பதற்கு தண்ணீர் ஒழுங்காக கொடுக்கிறார்கள் இல்லை. இளம் குழந்தைகளுக்கு போதிய உணவு வழங்குவதில்லை. பலரை கைது செய்து விசாரணை இல்லாமல் கொன்றொழித்து கொண்டிருக்கிறார்கள். இளம் பெண்களை இரகசியமாக நடு ராத்திரியில் வலுக்கட்டாயமாக கைது செய்து வல்லுறவுக்கு உட்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தமக்கு நேரும் கொடுமைகளை பெண்களோ ஏனையவர்களோ வெளிப்படுத்தும் தைரியம் அற்றவர்களாக நாள் தோறும் மனதுள் அடக்கி குமுறிக் கொண்டிருக்கிறார்கள். புலியின் கொடுமைகளுக்குள் முடங்கி வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட மக்கள் அதற்கு ஈடான அரசின் அடக்குமுறைகளை முகம் கொடுத்து எதிர்க்க தைரியமற்றவர்களாக ஆக்கப்பட்டு விட்டனர். இவர்களைக் காக்க நாம் ஏதேனும் முயற்சிகள் செய்தோமா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

பிரபாகரன் என்ற தனிமனிதன் இலங்கை ராணுவத்தின் இரும்பு பிடியில் சிக்கி தனது மரணத்தை எண்ணிக் கொண்டிருந்த வேளையில் குறிப்பாக லண்டனில் உண்ணாவிரதங்கள், ஊர்வலங்கள் என பல மாதங்களாக புலம்பெயர் தமிழர்கள் கொதித்தெழுந்து கொண்டிருந்தார்கள். இதற்கு தமிழ் தொலைக்காட்சிகளும் இருபத்தி நாலு மணிநேரமும் துணை நின்றன. இந்த போராட்டங்களில் புலியை தீவிரமாக எதிர்த்த நபர்களும் பங்கு பற்றினார்கள். சுhதாரண குடும்ப பெண்களும் கலந்து கொண்டார்கள். ஆனால் மூன்று லட்சம் மக்கள் சிங்கள அரசினாலும் அதன் ராணுவத்தாலும் மக்களின் சொந்த நிலத்தில் இருந்து துரத்தி அடிக்கப்பட்டு மிருகங்கள் போல் முட்கம்பி வேலிக்குள் முடக்கப்பட்ட போது இந்த தருணத்தில் எந்தவொரு உண்ணாவிரதமோ ஆர்ப்பாட்டமோ ஐரோப்பாவில் நிகழவில்லை. மக்களுக்காக போராடுகிறோம் மக்களுக்காக கலந்து கொள்கிறோம் என பதிலிறுத்தவர்கள் மௌனமாகினர். ஏன்? தமிழ் மக்களே இப்போதாவது நீங்கள் எல்லாம் புரிந்து கொண்டீர்களா? இந்த ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் ஏன் செய்தார்கள்? லண்டனில் இரண்டு லட்சம் தமிழர்கள் தாங்கள் பெரிய சாணக்கியர்கள்- நாங்கள் தெருவில் இறங்கினால் நாம் நினைப்பது நடக்கும் தானே என மிகவும் தேர்ந்த அரசியல் உணர்வாளர்களாய் எண்ணிக் கொண்டு தெருக்களில் நின்றார்கள். ஏன் என்பதை இப்பொழுதாவது புரிந்து கொள்ளுங்கள்.

எமது மக்கள் மழை, வெயில், பனி என்று பாராது திறந்த வெளி சிறையினில் அடிப்படை வசதிகள் கூட இன்றி அல்லல்படுகிறார்களே. ஆவற்றை மிகவும் இராஜதந்திர நோக்குடன் மிக நுண்ணியமாக செயற்பட்டு தீர்ப்பதற்கு யார் முன்வந்தார்கள்.? ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்.? குரங்கில் இருந்து மனிதன் பரிணாம வளர்ச்சி பெற்று எத்தனையோ யுகங்கள் கடந்து விட்டன. ஏன் இப்போதும் குரங்கின் புத்தியுடன் சுகபோகமாக வாழ்வதற்கு மற்றவர்களின் குருதியை தேடுகிறீர்கள். கூட்டமைப்பு சிறீகாந்தா வன்னியில் யுத்தத்தை நிறுத்த முற்பட்டிருந்தால் அது புலம்பெயந்தவர்களுக்கு அவமானமாகி போயிருக்கும் என பேட்டி கொடுக்கிறார்.

துடிக்கத் துடிக்க மக்கள் கொல்லப்படுவதைக் கண்டு ஒரு கணமேனும் உங்கள் மனங்கள் பதைபதைக்கவில்லை என்றால் யுத்தம் முடிந்து புலியின் பக்கமாகவோ அரசின் பக்கமாகவோ கிடைக்கப் போகிற சொகுசு வாழ்க்கைகாகவா காத்திருந்தீர்கள். கூட்டமைப்பு இதுவரை மக்களின் பெயரால் பெற்ற சம்பளம் எவ்வளவு.? இந்த சம்பளம் அவர்கள் படித்து பட்டம் பெற்று வேலை செய்ததற்காகவா கிடைத்தது? மக்களின் பிரதிநிதிகள் என்ற போர்வையில் தானே சுகபோகம் அனுபவிக்கிறார்கள். இவர்கள் தமது சம்பளத்தின் எத்தனை வீதத்தை இந்த நாதி இழந்த மக்களுக்கு கிள்ளிக் கொடுத்திருக்கிறார்கள். தங்கள் எம்பி பதவியை குறிப்பிட்ட காலங்கள் வரையில் தக்கவைத்து விட்டால் அதன்பிறகு வாழ்நாள் முழுதும் கிடைக்கப் போகின்ற அரச சலுகைகளுக்காகவும் தமது குழந்தை குட்டிகளுக்காகவும் வன்னிமக்களின் குருதியில் நீச்சலடித்த வெட்கங் கெட்ட இந்த கூட்டமைப்பு முதலில் அரசியலை விட்டு இனி வெயியேற வேண்டும். பணம் பதவிக்காக ஏன் தமிழினத்தை விற்கிறீர்கள்.

தமிழ் ஈழ மக்களே! இப்பொழுது மிகவும் நொந்து இருக்கிறீர்கள். உங்களுக்கு அறிவுரை கூற முடியாது. ஆனாலும் எச்சரிக்கையாய் சொல்கிறேன். இன்றைக்கு இருபத்தைந்து வருடங்களின் முன்பு இயக்கங்களின் தலைவர்கள் செய்த படுபாதகமான கொடூரங்களை நாம் பிரசுரமாக 1985 ம் ஆண்டு வெளிக் கொண்டு வந்தோம். அன்று நாம் புலிகளாகிய சுக்கிளா, ரவி போன்ற ஈன இரக்கமில்லா கொலைகாரர்களால் அச்சுறுத்தப்பட்டு நாட்டை விட்டு விரட்டப்பட்டோம். ஊண் உறக்கமின்றி, இரவு பகல், நேரம், காலம் என பார்க்காமல் விடுதலைக்காய்  முழு மூச்சாய் நேர்மையாக உழைத்தவர்கள் அனைவரையும் இந்த கொலை வெறியர்கள் அடியோடு சாய்த்து மண்ணோடு மண்ணாக்கி விட்டார்கள்.  கிழக்கு மாகாணத்தின் விடிவெள்ளியாகி விட்ட கருணா செய்த கொடூரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு கணமேனும் கள்ளம் கபடமின்றி சிரிக்க முடியாத இந்த கருணாவை பிரபாகரனை எப்படி வெறுத்து ஒதுக்குகிறீர்களோ அப்படியே வெறுத்து ஒதுக்குங்கள். கருணா செய்த கொலைகளையும், கொள்ளைகளையும், பாலியல் வல்லுறவுகளையும் வெளியே விடுங்கள்.

எம்மையெல்லாம் முள்வேலிக் கம்பிகளுக்குள்ளும், அன்னிய தேசங்களிலும், ஆழ்கடலுக்குள்ளும் தள்ளியது போதாது என்று மீண்டும் எம்மை அழித்து இன்னொரு முள்ளிவாய்க்காலுக்கு தயார்படுத்த வேலை தொடங்கியுள்ளார்கள். நாடு கடந்த தமிழ் ஈழம் வட்டுக் கோட்டை தீர்மானம் என வரிந்து கட்டிக் கொண்டு புறப்படடுள்ள இந்த பேரவைகாரர்களிடம் ஒரு கேள்வியை முன்வைக்க விரும்புகிறேன்.

யார் இவர்கள்.? ஏப்படி இந்த தமிழர் பேரவையை உருவாக்கினார்கள்.? ஏவ்வளவு மக்கள் இவர்களை தேர்ந்தெடுத்தார்கள்.? என்ன சேவை செய்ததற்காக தேர்ந்தெடுத்தார்கள்.? இவர்களின் பின்னணி என்ன.? இவர்களை மேலும் கேட்கிறேன்.

1)நீங்கள் ஒவ்வொருவரும் யார் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.!

2)உங்களின் சமுதாய பின்னணி கடந்த காலம் முழுவதும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதையும் தெரியப்படுத்துங்கள்!.

3)உங்களது பொருளாதார பலம் என்ன. உங்கள் சொந்த உழைப்பில் எவ்வளவு எம் இனத்திற்காக செலவழித்திருக்கிறீர்கள்.!

4)இளமைக் காலத்தில் உங்களது சமுதாயச் செயற்பாடுகள் என்ன என்பதையும் தெரியப்படுத்துங்கள்.

தமிழ் மக்களே! இப்படியே நாம் தொடர்ந்தும் மௌனமாக இருந்தோமானால் மேலும் பல கொடியவர்கள் எமக்கு தலைவனாக தோன்றி மிச்சம் மீதி இருக்கின்ற எம் இனத்தை கூண்டோடு அழித்து விடுவார்கள். மிகவும் எச்சரிக்கையோடு இருங்கள். மனிதன் எப்போதும் போராடிக் கொண்டுதான் இருக்க வேண்டும். ஆனால் சரியான நல்ல வழிமுறைகளைப் பின்பற்றி எமது சமுதாயத்தை மற்றவர்கள் வெறுக்காதபடி போராட வேண்டும்.

உலக தமிழனமே எமது தேசத்தில் இவ்வளவு கொடூரமான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கையில் 25 கிலோ மீற்றருக்கு அப்பால் இருக்கும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளையும் மக்களையும் வேறுபடுத்தி முதலில் நாம் இனம்காண வேண்டும். கோடிக்கணக்கான பணத்தை வைத்துக் கொண்டு, தள்ளாடும் வயதில் இன்னமும் அரசியலில் வெல்வதற்காக எமது மக்களை அடகுவைத்தவர்ளை முதலில் தூக்கி எறியுங்கள்.

எமது போராட்டம் அதற்கான தீர்வுகள் என்பவற்றை நாம்தான் பெற்றுக் கொள்ள வேண்டும். மற்றவர்களை நம்பி மீண்டும் எனது இன மக்களை இன்னொரு தடவை பீரங்கிக் குண்டுகளுக்கும், செல்லடிகளுக்கும் இரை கொடுக்கும் நிலைக்கு உட்படுத்தாதீர்கள். வன்னி மக்களுக்கு உதவ விரும்பினால் ஒவ்வொருவரும் உங்கள் சொந்தங்கள் குடும்ப உறுப்பினர்கள் ஊடாக முயலுங்கள். அதை விடுத்து இங்கு வரும் உண்டியல்காரரிடமும் அரசியலில் நண்பன் யார்? பகைவன் யார்? என்ற அரிச்சுவடியே தெரியாத ஞான சூனியங்களிடமும் ஏமாறாதீர்கள்!

நாடுகடந்த தமிழ்ஈழம் நாட்டுக்கொரு தமிழ்ஈழம்: குலன்

headlss_chickens_competitionஅத்திவாரம் போட்டு கோட்டைகட்டிய பின்னரே கோபுரம் வைப்பார்கள். அத்திவாரங்கள் சரியாக இல்லாமல் கட்டி எழுப்பப்பட்ட கோட்டையால் எட்டித்தட்டியவுடனேயே அத்திவாரமே ஆடி கொட்டுப்பட்டுப் போனது புலிக்கோட்டை. அத்திவாரமாக நின்று கோட்டையைத் தாங்கிக்கொள்ள வேண்டிய மக்கள் சரிவரகட்டி எழுப்பப்படாது போனதாலும், நிலத்தின் பண்பு புரியாமல் சூழல் அறியாமல் சரியான அரசியல் ஆய்வின்றி, ஆயுதத்தில் மட்டும் மனநோய் கொண்டு அவசர அவசரமாகக் கட்டப்பட்டதால்தான் புலிக்கோட்டை அழிந்தது என்பதை இன்னும் உணராமல், இன்றும் புலம்பெயர் தமிழர்கள் சிலர் வட்டுக்கோட்டையையும், தட்டுப்பட்ட புலிக் கோட்டையையும் கொண்டு நாடுகடந்த நாடுகடக்கா தமிழ்ஈழம் எனத்தடி கொடுத்து ஓடுகிறார்கள். செம்மறியாட்டுக் கூட்டம் போல் முன்னுக்குப் போகும் செம்மறி கத்திக் கொண்டு ஓட பின்னால் கத்திக் கொண்டோடி துப்பாக்கிகளால் மந்தைகளாக்கப்பட்ட எம்மக்கள் புலிக்கோட்டை அழிந்த பின்பாவது சுயமூளையில் சிந்திப்பார்களா?

1976ல் வட்டுக்கோட்டையில் அத்திவாரம் போட்டு மகாநாடாய் சுழிபுரத்தில் கோட்டை அமைத்து கூட்டணி கோபுரமானது. அன்று கலசங்களாக இருந்த கூட்டணித் தலைவர்கள் ஒலித்தார்கள். இன்று எம்மக்களை ஒழித்தார்கள். இக்கூட்டணி தொடர்ந்து தானே கோபுரக் கலசமாக இருக்க வேண்டும் என்பதற்காக சொன்னபடி எதையும் செய்யாமல் இருக்க கோட் டையைப் பிடிக்க இளைஞர்கள் படையெடுத்து, ஒன்றை ஒன்று கொன்று தின்று, வட்டுக் கோட்டை புலிக் கோட்டையானது. ஆனால் அது மக்கள் கோட்டையாக அமையவில்லை. இக் கோட்டைக்குக் கொத்தளமாகவும் அத்திவாரமாகவும் அமிழ்ந்து போய் இருந்தவர்கள் அப்பாவி எம்தமிழ்மக்களே.

கடும் காற்றுக்கு கதைசொல்ல முடியாத பிரபாகரன் எனும் தலைமைக் கலசத்துக்கு மட்டும் புலம்பெயர் மக்களால் ஆராதனைகள், அபிசேகங்கள், தோத்திரங்கள். அன்று மண்மீட்பு, என்று மக்களின் மனமீட்பு இன்றிப் புறப்பட்ட போர்வீரர்களும் அடிமண்ணாய் கிடந்த மக்களை கருத்தில் கொள்ளவில்லை, சிரத்தை எடுக்கவில்லை. அப்படி கரிசனைப்பட்டவர்கள் கூடச் சுடுகோல்களால் சுட்டுக் கருக்கப்பட்டார்கள். கருவே அழிந்தபின்பு எப்படிப் பிள்ளைப்பேறு என்பதுதானே முள்ளிவாய்கால் முடிவு. தலைபோனபின்பு அந்த வெற்றிடத்தை நிரப்ப தலைபோனவர்கள் ஓடித்திரிகிறார்கள். இன்னும் மண்ணாயும், மனிதராயும், கோட்டை, கோபுரங்களைத் தாங்கி நின்ற ஈழமக்கள் கருத்தை கவனத்தில் கொள்ளாது கடல்கடந்த கடக்கா ஈழம் என்று உடைந்து போன வட்டுக்கோட்டை எனும் கோட்டையைக் கட்டித் தட்டி எழுப்புவதை விட காலத்துக்கேற்றால்போல் கட்டக்கூடிய ஒரு சிறுகுடிசை ஒன்றையாவது சரியாகக் கட்ட முன்வருவார்களா? சரியாகத்தான் சிந்திப்பார்களா?

ஐரோப்பாவில் நாட்டுக்கு நாடு வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்வைத்து அவைகள், பேரவைகள் உருவாகின்றன. இப்பேரவைகள் (பேயவைகள்) அந்நாட்டிலுள்ள மக்களை பிரதிநிதித்துவப் படுத்துமாம், ஜனநாயகமுறையில் தேர்தல் வைப்பார்களாம், எல்லோரும் போய் வோட்டுப் போட வேண்டுமாம். எது ஜனநாயகம்? வோட்டுப் போடுவதுதான் ஜனநாயகமா? இப்படி ஒருதேர்தலை நடத்த நீங்கள் யார்? நாட்டில் அவதியுறும் மக்களைக் கருத்தில் கொள்ளாத இவர்கள் எமது மக்களை எப்படிப் பிரதிநிதித்துவப்படுத்த முடியும். எம்மைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்கு நீங்கள் யார்? இவர்களின் கொள்கை வட்டுக்கோட்டைத் தமிழீழம் தானாம். அப்படியென்றால் நாடுகடந்த தமிழீழம்? இது நாடு கடத்தப்பட்டதா? இது நாடுகடக்காத் தமிழ் ஈழமா?

புலிகள் இருந்தபோது அங்கிருந்தபடியே இங்குள்ள தமிழர்களைக் கட்டுப்படுத்தினார்களாம். இப்போ புலிபோனதும் புலம்பெயர் தமிழர்களுக்குக் கிலிபோய்விட்டதாம். இவர்களைக் கட்டுப்படுத்த ஒரு அமைப்புத் தேவையாம். இதனால்தான் அவைகள் பேரவைகள் கட்டுகிறார்களாம். இது உள்நாட்டு தமிழர்களையும், அரசியலையும் பிரதிநிதிப்படுத்துமாம். இது நாசனல் மற்றையது இன்ரநாசனலாம். இது ஒரு ஜனநாயக அமைப்பு என்று கட்டுபவர்கள் இப்படி ஒரு அமைப்பைக் கட்டுவதா? இல்லையா? என்று எந்தவாக்கெடுப்பும் நடத்தவில்லை. ஐரோப்பிய நாடுகளைப் பற்றியோ அரசியல் அமைப்புகள் சட்டங்கள் பற்றி எந்த அறிவும் இல்லாமல் ஊரிலிருந்தபடி புலம்பெயர் தமிழர்களை புலிகள் கட்டுப்படுத்தினார்கள் என்றால் புலம்பெயர்ந்தவர்கள் புலன் பெயர்ந்தவர்கள் தான். இதை உணர்ந்துதான் தமக்குத்தாமே மகுடம் சூடிக்கொண்டு புதிய அவைகள் துவையல்கள் வெளிவருகின்றன. இனிமேல் நாலுபேர் சேர்ந்து தேர்தல் நடத்தி 3வோட்டு விழுந்தால் 75சதவீத வெற்றி. நாமும் ஒரு அவைதிறந்து புதிய தேர்தல் நடத்துவோமா?

இந்த இருபகுதியினருக்கும் சில தில்லு முல்லுகள் உண்டு. யாரின் கீழ் யார் இயங்குவது என்று பிரச்சனையும் உண்டு. பேரவைகள் (பேராசைகள்) கடைசிகாலங்களில் பிரபாகரன் உயிருடன் இருக்கும் போது அவர்பின்னால் இருந்து சேர்ந்து குழிபறித்து புலம்பெயர் தமிழர்களின் பணங்களை தமதாக்கிய பெருவள்ளல்கள் எனலாம். இதை சிவசேகரமவர்கள் மிக அழகாகவும் தெளிவாகவும் கூறியிருக்கிறார். சுருங்கச் சொல்லின் புலம்பெயர் புண்ணாக்குகளின் புத்திகளைக் கழுவி பணருசிகண்ட பூனைகள் எனலாமே. இது உள்நாடுகளில் தமிழீழ அமைப்பாகவும் (லோக்கல்). மற்றையது நாடுகடந்த தமிழ்ஈழம் உலகரீதியான தமிழீழ அமைப்பாகவும் (இன்ரர்நாசனல்) இயங்குமாம். ஒன்று பிரபாகரனுடையது மற்றையது கேபியினுடையது என்று கூறுவது பொருந்துமோ? ஒன்று புலம்பெயர் தமிழர்களிடன் நேரடடியாகப் பணம் பிடுங்கியவர்கள், நாடுகடந்த தமிழீழத்தார் பிடுங்கியவர்களிடம் பிடுங்கியவர்கள்.

இவர்கள் தனித்தனியே கூட்டங்களை ஒழுங்கு செய்திருந்தார்கள். கூடுதலாக நாடுகடந்த தமிழீழத்தார் பிரபாகரன் உயிருடன் இருந்தபோது அமைப்பு மீறிய செயல்களில் ஈடுபட்டதால் பிரபாகரனால் அமைப்பை விட்டு விரட்டப்பட்டவர்கள் அல்லது நாட்டுக்கு அழைக்க ஒடி ஒழித்தவர்கள் என்கிறார்கள் நோர்வே தமிழர்கள். எது எப்படியோ எல்லோரும் தமிழர்களைத் திண்டவர்கள் தான். நோர்வே சென்றபோது இவர்களின் பின்புலங்களை அறிந்தபோது நோர்வே தமிழர்கள் பல சொன்னது நியாமாகவே தோன்றியது.

எதிர்வரும் 15ம்திகதி (நவம்பர் 15) நோர்வேயில் ஒரு குழு ஜனநாயகம் எனச்சொல்லிக் கொண்டு நோர்வே ஈழத்தமிழர் அவை எனப்பெயரிட்டுக் கொண்ட அமைப்பு நோர்வே தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்த குழுஜனநாயகத் தேர்தல் ஒன்றை நடத்துகிறதாம். இதற்கான வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டு விட்டார்களாம். தமிழ்மக்கள் செறிந்து வாழும் நகரங்களில், மாநகரங்களில் தமிழர்களின் தொகைக்கேற்ப வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்களாம். தலைநகர் ஒஸ்லோவில் தேர்தலுக்கு நிற்பவர்கள் உங்கள் வோட்டுக்கள் எனக்கே, நானுன் ஊரவன் உன்வோட்டு எனக்குத்தான் என்று தொடங்கி விட்டார்களாம். இதன் பிரதிபலன்களாக ஊர்வாதம், குழுவாதம், சாதி, குலம் கோத்திரம் என்று ஒன்றாய் இருக்கும் மக்கள் சிதறிச் சின்னா பின்னமாகிப் போகப்போகிறார்கள். வோட்டுப்போடுவதும் பெரும்பான்மையும்தான் ஜனநாயகம் எனக்கருதினால் இலங்கை அரசாங்கம் சிறு ஆயுதம்தாங்கிய குழுக்களும் தாய்நாட்டில் செய்வது எந்தவிதத்திலும் பிழையாகாது. பெரும்பான்மைச் சிங்களவரின் பிரதிநிதியாக இருப்பவன் தன்னை தலைவனாக்கிய சமூகத்துக்கு நன்மை செய்வதும் தன்னை எதிர்த்தவர்களைப் பழிவாங்குவதும் நியாயமாகிறது. எம்சமூகங்களில் பழிவாங்கல் என்பது உதிரத்தில் ஊறிவிட்ட ஒன்றாக அமைந்ததால் தான் சகோதரப்படுகொலைகள் வகை தொகையின்றி நடந்தன.

இன்றும் கூட தமிழ் தலைவர்கள் இராஜபக்சவுக்கு அவர் மொழியிலேயே உணர்த்த வேண்டியது ஒன்று உள்ளது. இன்று அவர்வகிக்கும் பதவி தமிழ் மக்களாலேயே தரப்பட்டது என்பதையும், அந்த மக்கள்தான் இன்று வன்னியில் கம்பிவேலிக்குள் கன்னம் உரசுகிறார்கள் என்பதையும் சரியான முறையில் எடுத்துச் சொல்ல வேண்டிய நிலையும் நிலைப்பாடும் உள்ளது. கோட்டைக்கு ஆசைப்பட்டு குடிசையே இல்லாது போன நிலையைக் கண்ணால் கண்டும் திருந்த மாட்டேன் என்று அடம்பிடிப்பவர்கள் ஈழத்திலுள்ள கடைசித் தமிழனையும் கொன்று விட்டுத்தான் மீதி என்று எண்ணுகிறார்களோ என்னவோ?

ஐனநாயகம் என்பது தன்னை எதிர்த்து வோட்டுப் போட்டவர்களையும், சமூகத்தையும் பிரதிநிதிப்படுத்துபவனே சரியான ஜனநாயகவாதி. இது எம்நாடுகளில் எங்கே நடக்கிறது. இதையே வெளிநாடுகளில் ஜனநாயம் என்று தேர்தல் நடத்த முன்வருகிறார்கள் புலன்பெயர்ந்த தமிழர்கள். என் கணிப்பீட்டில் கீழத்தேய நாடுகளில் ஜனநாயகம் என்பது பெரும்பான்மைச் சர்வாதிகாரமே. திறமையான பொய் பித்தலாட்டங்களின் கூட்டமே.

நோர்வே ஈழத்தமிழர் அவையால் நடத்தப்படும் தேர்தல் பற்றி என் காதைக் கடித்த செய்திகள்
• தொடங்கிட்டாங்கப்பா தொடங்கிட்டாங்க குடுத்த காசுக்கே கணக்கு காட்டேல்லை வெளிக்கிட்டுட்டாங்கடா காசு சேர்க்க.
• குடுத்த காசை உடன் எடுக்கேலாது. பிடித்து விடுவார்கள் எல்லோ. வியாபாரத்தைத் தொடங்கினால் கணக்குக் காட்டலாம் தானே.
• தலைவர் உயிரோடை இருக்கேக்கை இவை எப்படி தேர்தல் நடத்த முடியும். தலைவர் ஆபிரிக்காவில் இருக்கிறார். வரும்போது வருவார். அப்பதெரியும் இவையின்ரை ஆட்டங்கள்.
• யாரிந்த நாடு கடந்த தமிழ் ஈழத்தார்? பதில் – முந்தி புலியிலை இருந்து கலைச்சு விடப்பட்டவையள், காசடித்துக் கொண்டு ஓடி ஒதுங்கியவை, ஊருக்குக் கூப்பிட்ட போது ஓடி ஒழிச்சவையும், உள்ளுக்கிருதே காட்டிக் கொடுத்தவையும் சேர்ந்து தான் நாடுகடந்த தமிழ்ஈழம் தொடங்கியிருக்கினம். உருத்திரகுமார் இவர்களுடன் தொலைக்காட்சியில் நேரடியாகப் பேசினவராம் கேள்விப்பட்டீர்களோ?
• அப்ப நீங்கள் எதுக்கு சப்போட்? அண்டைக்கும் குளப்பினாங்கப்பா, இப்பவும் குளப்புகிறானுகளப்பா? கண்டறியாத தமிழ்ஈழமும் நீங்களும். இங்சை வந்தனீங்கள் வாழ்ந்து போட்டுப் போங்கோவன்.
• ஊரிலை எல்லாம் வெறுமையாப் போச்சு இஞ்சை இருந்தாவது போராடவேணும் தானே.
• முகிலமும் நெடியவனும் பிரச்சனையோடை ஒழிச்சிட்டாங்கள். இருக்கிற சனத்தைக் கொண்டிழுக்க யாராவது வேணும் தானே எண்டுதான் பேரவை துவங்கியிருக்கினம்.
• அங்கை மக்களாலை போராட ஏலாது நாங்கள் தான் இஞ்சை இருந்து ஏதாவது செய்ய வேணும். (ஏன் தமிழீழம் வாங்கி அனுப்பப் போறியளோ?)
• வெளிநாட்டிலை இருக்கிற தமிழர்களுக்குத் தான் அரசாங்கம் பயப்படுது. நாங்கள் ஒன்று சேருவது முக்கியமெல்லே (இரண்டாய் பிரிந்து நிற்கிறீர்கள் எப்படி ஒன்றாகிறதைப் பற்றிக் கதைக்கிறீர்கள்).
• இரண்டு பகுதியும் வட்டுக்கோட்டையைத்தான் கொண்டு திரியினம். அதை வைச்சு எந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறாங்களோ? இதுக்கிள்ளை யார் யாருக்குள்ளை வேலை செய்யுறது எண்டதுதான் பிரச்சனை.
• திரும்பவும் அடிபடப்போறாங்கடா சாமி.
• நாளைக்கு எல்லாத் தமிழர்களும் எங்களுக்குத்தான் வோட்டுப் போட்டவை எண்டு நோர்வே அரசாங்கத்திடம் சுத்தப் போறாங்கடா டோய்.
• புலியின்ர காலத்திலேயே தமிழீழத்தில வீடு வாங்காமல் கொழும்பில வீடு வாங்கினாங்கள். தமிழீழம் கிடைக்காதெண்டு அப்பவே உவங்களுக்குத் தெரியும்தானே? இப்ப புலி செத்தபிறகு நாடுகடந்த தமிழீழம் எண்டுசொல்லி இனி எந்தநாட்டில வீடுவாங்கப் போறாங்களோ தெரியாது.
• தலைவர் போனதாலை எல்லாரும் தாங்கள் தாங்கள் தலைவரா நிக்கிறாங்கள்.
• தலைவர் போனதாலைதான் இந்தத் தலையிடியள் தொடங்கியிருக்கிறாங்கள்.
• அன்னை பூபதி பள்ளிகூடம் என்னமாதிரி அண்ணை? எல்லாரிட்டையும் காசுவாங்கித் தானே கட்டிடம் வாங்கினவங்கள். படிப்பறிவில்லாதவையும் படிப்பிக்கினம். நடிப்பு மட்டும் ஏதோ கிராயுவேட் பண்ணின மாதிரி. கோடிக்க ணக்கிலை வாங்கின வங்கள். உது ஆற்றை பேரிலை கிடக்குது, நடக்குது? வேதாளம் பார்த்த வெங்காயங்கள் யார் கேக்கப் போகிறாங்கள்.
• மற்றவங்களின்ரை காசிலை தின்னப் பழகிட்டாங்கள் விடுவாங்களோ.

இப்படி இன்னும் இன்னும் எத்தனையோ…….!!!!!!!

காஸா போர்க்குற்ற விசாரணை அறிக்கை: 114 நாடுகள் ஆதரவு: 18 நாடுகள் எதிர்ப்பு

ஐ.நா.வால் வெளியிடப்பட்ட காஸா போர்க்குற்ற விசாரணை அறிக்கை கடந்த வியாழக்கிழமை வாக்களிப்புக்கு விடப்பட்டது. 114 நாடுகள் ஆதரவாகவும் 18 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. 44 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தன. ஐ.நா. பொதுச் சபையில் 192 நாடுகள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, இஸ்ரேல், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து உள்ளிட்ட 18 நாடுகள் போர்க்குற்ற விசாரணை அறிக்கைக்கு எதிராக வாக்களித்தன. ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலானவை இஸ்ரேலுடன் இணைந்து விசாரணைக்கெதிராக வாக்களித்தன. பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் நடுநிலைமை வகித்தன. அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளும் முஸ்லிம் நாடுகளும் விசாரணை அறிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தன. காஸாவில் 22 நாட்கள் நடந்த யுத்தத்தில் இஸ்ரேல், ஹமாஸ் இராணுவங்கள் நடந்து கொண்ட விதங்கள் பற்றி அந்நாடுகளை விசாரணை செய்ய வேண்டுமென ஐ.நா. வால் வெளியிடப்பட்ட அறிக்கை கூறுகின்றது. இரண்டு தரப்பும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறும் இந்த அறிக்கை 575 பக்கங்களைக் கொண்டதாகும்.

விசாரணைகள் மூன்று மாதங்கள் இடம்பெறவுள்ளதால் இஸ்ரேல், பலஸ்தீன் தரப்புக்கள் இதற்குப் பூரணமாக ஒத்துழைக்க வேண்டும். பொதுமக்கள் வாழும் பிரதேசங்களில் பேரழிவு ஆயுதங்களைப் பாவித்தமை, மக்களை யுத்தக் கேடயமாக பாவித்தமை போன்ற குற்றங்களுக்காக இவ்விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளன. இஸ்ரேலின் தாக்குதலில் 1300 பலஸ்தீனர்களும் ஹமாஸின் தாக்குதலில் 12 இஸ்ரேலியப் பொதுமக்களும் கொல்லப்பட்டனர். மஸ்ஜித்களின் மீதும் அகதிகள் தஞ்சமடைந்த முகாம்கள் மீதும் வான்தாக்குதல் நடத்தப்பட்டதாலே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டதாக ஐ.நா.வின் அறிக்கை கூறுகின்றது.

தென்னாபிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் நீதியரசர் ஜுரிஸ்ட் ரிச்சார்ட் கோல்ஸ்டோன் தலைமையிலான குழு இந்த அறிக்கையை தயாரித்தது இஸ்ரேலையும், பலஸ்தீனையும் விசாரணை செய்தபின் பெறப்பட்ட அறிக்கைகள் மூன்று மாதத்தின்பின் ஐ. நா.வின் பாதுகாப்புச் சபைக்குச் சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் மீண்டும் ஐ.நா. பொதுச் சபைக்கு தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்காக அனுப்பி வைக்கப்படவேண்டும் என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விசாரணையை பகிஷ்கரிக்கப் போவதாக இஸ்ரேல் கூறியுள்ளது. ஐ.நா. பாதுகாப்புச் சபையில் ஐந்து நாடுகளுக்கு வீட்டோ அதிகாரமுள்ள போதும் ஐ.நா. பொதுச் சபையில் எந்த நாட்டுக்கும் வீட்டோ அதிகாரமில்லை.

சவுதி அரேபிய பெண்ணை கொன்ற இந்தியருக்கு மரண தண்டனை

சவூதி அரேபிய பெண்ணை கொலை செய்த ஒரு இந்தியர் உள்ளிட்ட மூன்று பேருக்கு தலை துண்டிக்கப்பட்டு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சவூதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரக வட்டாரங்கள் கூறியதாவது: கேரளாவைச் சேர்ந்தவர் முகமது நவ்ஷாத் இலங்கையைச் சேர்ந்தவர்கள் பந்தர் மற்றும் ஹலிமா இவர்கள், சவூதியில் பணிபுரிந்து வந்தனர். 2005ல் இவர்கள், மேலும் சிலருடன் சேர்ந்து, சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் கொலை செய்தனர்.

இதையடுத்து, இவர்கள் மூவருக்கும் சவுதி நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. மற்றவர்களுக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனையும், கசையடி தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்நிலையில், முகமது நவ்ஷாத்துடன், இலங்கையைச் சேர்ந்த இருவருக்கும் சேர்த்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மூவரும், தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

சவுதியில் இந்தியர்களுக்கு இது போன்ற மரண தண்டனை நிறைவேற்றப்படுவதைத் தடுக்க தூதரகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. மரண தண்டனையைக் குறைக்க வேண்டும் என, இவர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் அது நிராகரிக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.

அமெரிக்க ராணுவ முகாமில் வீரர் வெறியாட்டம்! – 12 வீரர்கள் பலி; 30 பேர் காயம்

0611us_soldies.jpgஅமெரிக்க ராணுவ முகாமில் வீரர் ஒருவர் வெறியாட்டத்துடன்  நடத்திய  துப்பாக்கிச் சுட்டில்; 12  வீரர்கள் பலியானதுடன் 30 பேர் காயமுற்றனர். இந்த வெறியாட்டத்தில் ஈடுபட்ட வீரர் ஈராக் பாதுகாப்பு பணிக்காக செல்ல தயாராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  இவர் மனநல மருத்துவரும் கூட. அமெரிக்காவில் டெக்சாசில் கில்லின் அருகே போர்ட்ஹ_ட் ராணுவ முகாமில் வீரர்கள் வழக்கம்போல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளையில்; வந்த சக வீரர் ஒருவர் அங்கிருந்த வீரர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே 11 பேர் இறந்தனர். 30 பேர் காயமுற்றனர். ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய வீரர் மேஜர் நைடால் மாலிக் ஹசன் ( 39 )  இரண்டு துப்பாக்கிகளுடன் வந்து சுட்டதாகவும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த துப்பாக்கிச்சுடு சம்பவம் காரணம் குறித்து இன்னும் தெரியவில்லை என்றும் விசாரணைகள் தொடர்வதாகவும் லெப்டினன்ட் ஜெனரல் ரொபர்ட் பாப்கோன் தெரிவித்துள்ளார்.