கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

‘தமிழியல் விருது – 2010’ படைப்பாளிகளிடமிருந்து ஆக்கங்கள் கோரப்படுகின்றன.

எழுத்தாளர் ஊக்கவிப்பு மையம் ஆண்டு தோறும் வழங்கும் தமிழியல் விருதுக்கு படைப்பாளிகள் தங்கள் ஆக்கங்களை அனுப்பிவைக்கும் படி கேட்கப்பட்டுள்ளது. ‘தமிழியல்விருது – 2010’ இற்கே படைப்பாளிகளிடமிருந்து ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன.

இலங்கையிலும், வெளிநாடுகளிலும் வாழும் படைப்பாளிகள் 2009 ஜனவரி தொடக்கம், டிசெம்பர் 31வரை வெளிவந்த தமது ஆக்கங்களை அனுப்பிவைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நாவல், சிறுகதை, கவிதை, குழந்தை இலக்கியம், நாடகம், அறிவியல், ஆய்வியல், வரலாறு, பழந்தமிழ் இலக்கியம், மொழிபெயர்ப்பு, இனமத நல்லறவு இலக்கியம். தொழில்நுட்பம், என பல்துறை சார்ந்த நூல்களையும், சுமார் 30 நிமிடம் வரை ஒளிபரப்பக்கூடிய குறுந்திரைப்படங்களின் இறுவட்டுக்களையும் தேர்வுக்காக அனுப்பி வைக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் 13 நூல்களுக்கும், மூன்று குறுந்திரப்படங்களுக்கும், இலக்கிய மேம்பாட்டிற்கு உரமிட்ட மூத்த படைப்பாளி ஒருவருக்கும் பொற்கிழியுடன் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படும். படைப்பாளிகள் தங்கள் பெயர் முகவரி, தொலைபேசி இலக்கம் உட்பட்ட விபரங்களை குறிப்பிட்டு சுயமாக தயாரிக்கப்பட்ட விபரப்பட்டியலுடன், ஆக்கங்கள் நூல்களாயின் அவற்றின் நான்கு பிரதிகளையும், இறுவட்டாயின்  இரண்டு பிரதிகளையும், இணைத்து 10.08.2010 இற்கு முன்னர் அனுப்ப வேண்டும். ஒரு படைப்பாளி எத்தனை படைப்பாக்கங்களையும் அனுப்பலாம். விருது வழங்கும் விழா இவ்வருடம் ஒக்டோபர் மாதம் நடைபெறும்.

ஆக்கங்கள் அனுப்ப வேண்டிய முகவரி : ஓ.கே.குணநாதன், மேலாளர், எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல.64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, மட்டக்களப்பு இலங்கை. தொலைபேசி- 0776041503.

இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து

neda.jpgஉலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அரை இறுதிப் போட்டிகளில் ஒன்று நேற்று இரவு 12 மணிக்கு நெதர்லாந்து, உருகுவே அணிகளுக்கிடையே நடைபெற்றது. இதில் 3 க்கு 2 என்ற கணக்கில் நெதர்லாந்து, உருகுவே அணியை வென்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

டெஸ்ட் போட்டிகளிலிருந்து முரளிதரன் ஓய்வு

muralitharan.jpgஇலங்கையின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார். ஜுலை 18ம் திகதி காலியில் இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து முத்தையா முரளிதரன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக கூறியுள்ளார்.

முத்தையா முரளிதரனின் இந்த முடிவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விளையாட்டுத் துறை அமைச்சர் சி. பி. ரத்நாயக்க மற்றும் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஆகியவற்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

38 வயது நிரம்பிய சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இதுவரையில் 132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 792 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகின் சிறந்த சுழல் பந்து வீச்சாளர்களில் ஒருவரான முரளிதரன், 337 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 515 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது- 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் வரை ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளை யாட முரளிதரன் விருப்பம் தெரிவித் திருந்தார்.

எனினும் காயம் மற்றும் வயது காரணமாக அண்மைக்கால போட்டிகளில் அவர் பிரகாசிக்கவில்லை. ஐ. பி. எல். போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பாக விளையாடியுள்ள முரளிதரன் ஐ. பி. எல். உடன்பாட்டின்படி அடுத்த வருடமும் சென்னை அணிக்காக விளையாட முடியும்.

எனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் அடுத்த வருடம் வரை அவர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக் கோப்பை கால்பந்து – இன்று முதல் அரையிறுதிப் போட்டிகள்

neda.jpgதென்னாப் பிரிக்காவில் நடைபெற்றுவரும் 19 ஆவது உலகக் கோப்பை கால்பந்து அரையிறுதிப் போட்டிகள் இன்று தொடங்குகின்றன.மொத்தம் 32 அணிகள் பங்கேற்ற இந்த உலகக் கோப்பை கால்பந்து காலிறுதிப் போட்டியில் முக்கிய அணிகளான பிரேசில், அர்ஜெண்டினா அணிகள் தோல்வியடைந்து வெளியேறி விட்டன. அரை இறுதிக்கு ஜெர்மனி, ஸ்பெயின், உருகுவே, நெதர்லாந்து அணிகள் முன்னேறியுள்ளன.

கேப்டவுனில் இன்று நள்ளிரவு நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் உருகுவே அணியும் நெதர்லாந்து அணியும் மோதுகின்றன.

உருகுவே அணி உலகக்கோப்பையில் 10 முறை பங்கேற்று 1930 மற்றும் 1950 ஆம் ஆண்டுகளில் கோப்பையை வென்றுள்ளது. நெதர்லாந்து அணி 1974 மற்றும் 1978 ஆம் ஆண்டுகளில் இறுதிப் போட்டி வரை முன்னேறி தோல்வியடைந்துள்ளது.

கானா அணியுடனான காலிறுதிப் போட்டியின் போது உருகுவே நட்சத்திர வீரர் லூயிஸ் சுவாரெஸ், கோல் நோக்கி வந்த பந்தை கையால் தடுத்ததால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். அதனால் அவர் இந்த அரையிறுதிப் போட்டியில் விளையாடமுடியாமல் போனது உருகுவே அணிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது. நெதர்லாந்து, உருகுவே என இருஅணிகளுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்புடன் இருப்பதால் இன்று நடைபெறும் அரையிறுதிப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.

மட்டக்களப்பில் 20 000 பிள்ளைகள் பாடசாலைக் கல்வியை பாதியில் கைவிட்டுள்ளனர்!

Batticaclalo_Studentsமட்டக்களப்பு மாவட்டத்தில் போரினாலும், சுனாமி இயற்கை அனர்த்தம் மற்றும், எனைய சமூக காரணிகளாலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாடசாலைக் கல்வியை பாதியில் கைவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பில் போரினாலும் சுனாமியினாலும் தங்கள் பெற்றொரை இழந்து நூற்றுக்கணக்கான பிள்ளைகள் அநாதைகளாக்கபட்டுள்ளர்கள். இவர்கள் தங்கள் உறவினர்களால் பராமரிக்கப்பட்டு வருகினறனர்.  இதனால், அவர்கள் பாடசாலைக்குச் செல்லும் வசதிகளற்றவர்களாகவுள்ளனர்.

இதேவேளை, மத்திய கிழக்குப் போன்ற நாடுகளுக்கு வேலை வாய்ப்புகளுக்காக சென்ற பெண்களின் பிள்ளைகளும் பாடசாலைக் கல்வியைத் தொடர முடியாதபடி பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.  இவ்வாறு சுமார் 20 ஆயிரம் பிள்ளைகள் தங்கள் பாடசாலைக் கல்வியை பாதியில் கைவிட்டுள்ளதாக அரச சார்பற்ற நிறுவனங்கள் கூறுகின்றன.

ஆனால் ஐயாயிரம் வரையிலானவர்களே பாடசாலைக்கல்வியை கைவிட்டுள்ளதாக அரச நிறுவனங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இவ்வாறு பாசாலைக் கல்வியை இடைநடுவில் கைவிட்ட பிள்ளைகளை மீண்டும் கல்விகற்க வைப்பது. அல்லது, தொழில் பயிற்சிகளை வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் அங்கு போதிய வளங்களில்லாததாலும், சரியான திட்டங்கள் வகுக்கப்படாத காரணத்தினாலும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பில் மாணவர்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு வகையான பிரச்சினைகளையும் அது எவ்வாறு மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதைப் பாதிக்கின்றது என்பதனையும் பிபிசி தமிழோசைக்காக அம்மாவட்டத்தைச் சேர்ந்த பூபாலரட்ணம் சீவகன் அந்த மண்ணின் வாசனையுடன் தொகுத்துள்ளார். மூன்று பாகங்களாக வெளிவரவுள்ள இந்தத் தொகுப்பின் முதல் பாகத்தை அருகில் உள்ள இணைப்பினூடாகக் கேட்கலாம். http://www.bbc.co.uk/tamil/news/story/2010/07/100704_battischooldropout.shtml

மருத்துசிகிச்சையை உடனடியாகப் பெற முடியாத தாய் மரணமாகிறாள் தாயின் மரணத்திற்குப் பின் தந்தை குழந்தைகளை அநாதரவாக கைவிட்டுச் சென்று மறுவாழ்வை அமைக்கிறார். கைவிடப்பட்ட குழந்தைகள் தாய்வழி உறவுகளால் குறிப்பாக வயதான அம்மம்மா அம்மப்பாவால் பராமரிக்கப்படுகின்றனர். அவர்களது முதுமை வறுமை குழந்தைகளைப் பராமரிக்க முடியாதநிலை. குழந்தைகளின் பள்ளி வரவு ஒழுங்கீனமாகிறது. அல்லது பள்ளிக்கே செல்வதில்லை.

இன்றைய குழந்தைகளே நாளைய சமூதாயம். ஒரு மாவட்டத்தில் மட்டுமே 20 000 மாணவர்கள் பள்ளி செல்லவில்லை என்றால் உருவாகப் போகும் சமூதாயம் எவ்வாறு அமையும் என்கின்ற அச்சம் தவிர்க்க முடியாதது.

இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச மற்றும் அரசசார்பற்ற அமைப்புகள் தங்களால் முடிந்த பணிகளைச் செய்யவே முற்படுகின்றனர். செய்தும் வருகின்றனர். ஆனால் அந்த சமூகம் எதிர்கொண்டுள்ள பிரச்சினையோ மிக ஆழமானது மிக விசாலமானது. அதனை வெளி ஒத்துழைப்பின்றி ஓரளவு தன்னும் பூர்த்தியாக்க முடியாது.

SLVisistலண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம், வோல்தம்ஸ்ரோ கற்பக விநாயகர், ஆலயம் அகிலன் பவுண்டேசன், லூசியம் சிவன் கோயில் போன்றன முன்னுதாரணமாக பல முயற்சிகளை எடுத்துள்ளன. இவ்வமைப்புகள் நூற்றுக்கணக்கான அநாதரவான மாணவர்களை தங்களது இல்லங்களில் வைத்து பராமரிப்பதுடன் அவர்களுக்கான கல்வியையும் உறுதிப்படுத்தி உள்ளன.

London_Sivan_Kovil_illamஆனால் அங்குள்ள மாணவர்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் முன்னரே குறிப்பிட்டது போல ஆழமானது விசாலமானது. இதனை ஒரு சில அமைப்புகளின் தீவிர ஒத்துழைப்பினால் மட்டும் தீர்த்து வைக்க முடியாது. புலம்பெயர் நாடுகளில் உள்ள ஆலயங்கள் பொதுஸ்தாபனங்கள் மற்றும் தனிப்பட்டவர்கள் மாணவர்களின் நிலையை மாற்றியமைக்க பல்வேறு வகைகளிலும் உதவமுடியும். அதற்கு முன்வர வேண்டும்.

‘ஒரு பானை’ என்கின்ற லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் அமைப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில் தனது பங்களிப்பை வழங்க முன்வந்துள்ளது. இவ்வாறு ஏனைய அமைப்புகளும் இந்நிலையை மாற்ற முன்வர வேண்டும். இலங்கை அரசு செய்ய வேண்டும் என்று சொல்லி அதன் பொறுப்பில் மட்டும் இம்மாணவர்களைக் கைவிட்டால் நாம் குறைவிருத்தியான ஒரு தமிழ் சமூகத்தைத்தான் அடுத்த தசாப்தத்தில் காண நேரிடும்.

கலாபூசணம் புன்னியாமீன் இன் ‘சர்வதேச நினைவு தினங்கள்’ : முனைவர் மு. இளங்கோவன்

cover-03-1.jpgஇலங்கை மத்திய மலைநாட்டில் தலைநகர் கண்டி மாநகருக்கு அண்மையில் அமைந்துள்ள சிற்றூரில் பிறந்து வாழ்ந்துவரும் கலாபூசணம் புன்னியாமீன் அவர்கள் என் நெஞ்சங் கவர்ந்த எழுத்தாளர். உலக அளவில் நினைவுகூரப்பட வேண்டிய செய்திகளை இவர் இணையதளங்களில் எழுதியமை கண்டு வியந்துபோனேன். இணையத்தால் இணைந்தவர்கள் நாங்கள்.

தமிழில் இதுவரை 170 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். 1960 ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் நாள் பீர்மொகமது, சைதா உம்மா ஆகியோரின் புதல்வராகப் பிறந்த இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமானிப் பட்டம் பெற்றவர். மேலும்,  ஊடகத் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றவர். கல்லூரி ஆசிரியராகத் தன் பணியைத் தொடங்கி, கல்லூரி முதல்வராகவும், பின்பு மத்திய மாகாண கல்வி அமைச்சின் இணைப்புச் செயலாளராகவும், மத்திய மாகாண கலாசார அமைச்சின் உதவிப் பணிப்பாளராகவும் பணியாற்றி 45 வயதிலேயே ஓய்வுபெற்றவர். இவர், தற்போது முழுநேர ஊடகவியலாளராகவும், எழுத்தாளராகவும், சிந்தனைவட்ட வெளியீட்டகத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் பணியாற்றி வருகின்றார் என்பதறிந்து மகிழ்கிறேன்.

1970களில் சிறுகதை மூலம் இலக்கியத்துறையில் நுழைந்த இவரின் முதலாவது நூல் 1979 ஆம் ஆண்டில் “தேவைகள்” எனும் தலைப்பில் வெளிவந்தது. அன்றிலிருந்து இன்றுவரை சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், பல்கலைக்கழக மாணவர்களுக்கான அரசறிவியல் நூல்கள், தரம் 05 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல்கள், க.பொ.த.சாதாரண தரம்; மற்றும் உயர்தர மாணவர்களுக்கான வழிகாட்டி நூல்கள், ஆய்வு நூல்கள்….. என பலதுறை சார்ந்த 170 இற்கும் அதிகமான நூல்களைத் தமிழில் எழுதி, வெளியிட்டுள்ளார். இவரின் சிறுகதைகள் தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் தாமரை, தீபம், கணையாழி, கலைமகள் போன்ற இலக்கிய ஏடுகளிலும் இடம்பெற்றுள்ளன. இவரின் ஆக்கங்கள் பல்கலைக்கழக மட்டத்தில் பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த பத்தாண்டு காலமாக இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களைத் திரட்டி அவற்றை ஈழத்து முன்ணணித் தேசிய ஏடுகளுள் ஒன்றான ‘ஞாயிறு தினக்குரலில்’ எழுதி வருகின்றார். அவற்றைத் தொகுத்து இதுவரை 15 தொகுதிகளாக நூலுருப்படுத்தியுள்ளார். தேசிய, பன்னாட்டு நிலையில் பலவற்றை ஆவணப்படுத்திவரும் இவரின் இப்பணி ஈழத்து இலக்கியப் பயணத்தின் இமயமாகத் திகழ்கின்றது.

இலங்கையில் தமிழ்மொழி மூல நூல்களை வெளியிடுவதில் வெளியீட்டுப் பணியகங்கள் குறைவு என்பதை உணர்ந்து ‘சிந்தனைவட்டம்’  எனும் பெயரில் பதிப்பகம் ஒன்றை உருவாக்கி இதுவரை 320 இற்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை இவர் வெளியிட்டுள்ளார். இந்த வெளியீட்டுப் பணியகத்தினூடாக நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் பயன்பெற்றுள்ளனர்.

பயிற்றப்பட்ட கணித,  அறிவியல் ஆசிரியையான எம். எச். எஸ். மஸீதாவின் அன்புக் கணவரான இவருக்கு சஜீர் அகமது,  பாத்திமா சம்ஹா ஆகிய இரண்டு மக்கட் செல்வங்கள் உள்ளனர்.

‘சர்வதேச நினைவு தினங்கள்’ எனும் தலைப்பில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைத் தேசிய, சர்வதேச அச்சு ஊடகங்களிலும், இணைய ஊடகங்களிலும் இவர் எழுதியுள்ளார். அவற்றைத் தொகுத்து நான்கு தொகுதிகளாக நூலுருப்படுத்தி வெளியிடும் இம் முயற்சி இவரின் தமிழ் எழுத்துப் பணியின் மற்றுமொரு பரிமாணத்தை எடுத்துக் காட்டுகின்றது. இவரின் முயற்சிகள் வெற்றிபெற மனதார வாழ்த்துகின்றேன்.

http://muelangovan.blogspot.com/

P.M.PUNIYAMEEN
P.Box 01
POLGOLLA
Srilanka.

cover-01.jpg

cover-02.jpg

cover-03.jpg

cover-04.jpg

முல்லைத்தீவு முஸ்லிம்கள் சொந்த இடங்களை பார்வையிட ஏற்பாடு

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களை தமது சொந்த இடங்களில் மீள் குடியேற்றுவதற்கு முன்னதாக அவர்களை தாம் வாழ்ந்த பிரதேசங்களுக்கு நேரில் அழைத்துச் சென்று காண்பிக்க உள்ளதாக மாவட்ட செயலகம் கூறியது.

வடக்கில் இருந்து 1990ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் புத்தளம், அநுராதபுரம், குருநாகல் மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து 67 குடும்பங்களைச் சேர்ந்த 250 பேர் இடம் பெயர்ந்துள்ளமை பதிவு செய்யப்பட்டுள்ளதாக திட்டப் பணிப்பாளர் எஸ். ஸ்ரீரங்கன் கூறினார். இவர்களுள் 23 குடும்பங்களைச் சேர்ந்த 92 பேர் கடந்த வாரம் கரைதுறைப்பற்றில் மீள் குடியேற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கான செயலகத்தினூடாக இதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன.

ஆனால், முல்லைத்தீவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் கடந்த 20 வருடங்களாக தமது சொந்த இடங்களுக்கு சென்றிராததாலும் சிலர் அங்கு செல்ல தயங்குவதாலும் முல்லைத்தீவில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை இந்த மாதத்திற்குள் சொந்த இடங்களுக்கு நேரில் அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்ஸ்ரேலா? ஈழஸ்தீனா? : எஸ் ஆர் எம் நிஸ்தார்

Map_of_Israel_and_PalestineTamil Eelamமேலே உள்ளது ஒரு றீ-மிக்ஸ்(re-mix). அதில் என்ன சூட்சுமம் உள்ளது என்பதைத்தான் இனி பார்க்கப்போகிறோம். பொதுவாக மற்றவன் செய்வதை நாமும் செய்துவிட வேண்டும் என்று நம்மவர்களுக்கு எற்படும் ஆசையை நாம் பார்த்திருக்கிறோம். சாதாரணமாக பரத நாட்டியம் பழகுவது, கடை வைப்பது, கார் வாங்குவது, வெளி நாட்டில் வீடு கட்டுவது என்றால் சரி போகட்டும் இவையெல்லாம் சாதாரண மனித ஆசைகள் தானே எனலாம். ஆனால் அதையும் கடந்து இந்திய துணை கண்டத்தில் “பங்களாதேஷ் “(Bangladesh) என்றால் சம்பந்தம் இல்லாமல் “யாழ் தேஷ்” என்று யாழ்ப்பாணத்தில் கோசம் போடுவது, ஐரோப்பாவில் “கொசொவோ”(Kosovo) என்றால் இலங்கையின் “கொசொவோ”வை எப்போது பெற்றுத்தர போகிறாய் என சர்வதேச சமூகத்தை அதட்டலாக கேட்பதெல்லாம் சாதாரண ஆசையாக இருக்க முடியாது என்பது எமது நிலைப்பாடு.

அப்படியான ஆசையை நாம் கொச்சைபடுத்துவதாக அர்த்தம் கொள்ளத் தேவையில்லை. சரி இந்த ஆசையை “உரிமை” என்று சற்று நாகரீகமாக சொன்னாலும் அந்த உரிமை என்பது ஒரு தனியான விடயம், அந்த உரிமை நியாயமானதாக இருக்க வேண்டியது அதன் முக்கிய தன்மைகளில் ஒன்று, அந்த நியாயமான உரிமையையும் நியாயமான முறையில் அடைய முயற்சிப்பது என்பது வேறோர் விடயமென்பதையும் நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.

ஒடுக்கப்படும் மக்கள் கூட்டம், கலாச்சாரக் குழு, சமயப் பிரிவு, குலம், கோத்திரம், தேசியம், நாடு என்று மனித நாகரீகத்துக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே வரலாற்றின் ஊடாக நாம் பலதையும் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. இந்த அடிப்படையில் ஒன்றாய் இருந்த நாடுகள் பிரிந்தும், பிரிந்தவை சேர்ந்தும், புதிதாக பிறந்தும், பிறந்து வளர்ந்தவை முக்கல் முனங்கள் இன்றி நிரந்தரமாக அழிந்துள்ளதையும் கூட நாம் காணக்கூடியதாக உள்ளது. இந்த பின்னணியிலேயே தமிழர்களின் “தனி நாட்டு”க்கான கோரிக்கை (வெற்று கோசம்) என்பதை பார்ப்பது தவிர்க்க முடியாதுள்ளது.

தனிநாடு காண புறப்பட்டவர்கள், அதே நோக்கத்தை கனவிலும், நினைவிலும் இன்றும் காவித்திரிபவர்கள் தமக்கு “இஸ்ரவேல்” ஒரு பாடமாக அமையவேண்டும் என்று சொல்வதையும், சில நேரங்களில் தமது நிலைமை “பாலஸ்தீனர்கள்” ளின் நிலைமையை ஒத்ததென்று ஒன்றுக்கொன்று பொருந்தாத முறையில் பகிரங்கமாக எழுதுவதும், பேசுவதும் வியப்பை அளிப்பதாக உள்ளது. ஆகவே இந்த கோசம் எழுப்புவோருடன் நியாய சிந்தையுள்ளவர்கள் கோட்பாட்டு ரீதியாக சற்று ஒதுங்கி இடைவெளிவிட்டு நிற்கின்றதை நாம் மறத்தல் ஆகாது.

சுதந்திரம் என்ற(வார்த்தையை)தை தவிர நம் நாட்டு (இனப்) பிரச்சினை வேறு எந்த நாட்டு பிரச்சினைகளுடன் நேரடி ஒப்பீட்டுக்கு ஒத்ததாக தென்படவில்லை. அதைவிட முக்கியமாக இன்னொரு நாட்டின் தலையீட்டினால் இந்த பிரச்சினை ஏற்படவில்லை என்பதனால், இது உள்நாட்டு பிரச்சினை என்று மற்றவர்களை உள் நுளைய விடாமல் தடுப்பதற்கு உதவியாகவும் இது அமைந்து விடுகின்றது.

ஆகவே பங்களாதேஷ், கிழக்கு தீமோர், கொசொவோ, எரித்திரியா, கஸ்மீர், பலஸ்தீனம் என்பதை எல்லாம் நம் பிரச்சினையுடன் போட்டு குழப்பி அந்த குழப்பத்தில் இருந்து நாம் வெளிவர முடியாதவர்களாக இருந்து கொண்டு நம் பிரச்சினைகளுக்கு அடுத்தவர் பாணியில் பரிகாரம் தேட முயல்வது நம்மை எப்போதும் குழப்பத்திலேயே வைத்திருக்கும். ஆகவே இலங்கை பிரச்சினையை இஸ்ரவேலுடன் அல்லது பலஸ்தீனத்துடன் ஒப்பிடுவோர் பின்வரும் விடயங்களை சற்று நோக்க வேண்டும்.

இன்றைய வரலாற்று காலத்துக்கு முற்பட்டகாலத்தில் இஸ்ரவேல் என்ற ஒரு நாட்டை உலகப் படத்தில் காணமுடியாது. பாலஸ்தீனம் என்ற ஒரு பிரதேசத்தின் பெயர் இஸ்ரவேலர் அப்பிரதேசத்தில் குடியேறுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஏற்பட்ட ஒன்று. இது யூதர்களின் ஹிப்ரு (Hebrew)மொழியில் “ப்லெஸ்த்”(Plesht), அதாவது பிலிஸ்தீனர்களின் நிலம்( land of Philistines) என்று அறியப்பட்டது. இந்த பெயரும் ஜோர்தான் பள்ளத்தாகில் (Jordan Valley) கி.மு.5000-4000 (Early Bronze Age) ஆண்டுகளில் வாழ்ந்ததாக சொல்லப்படும் க்ஹசலியர்களி( Ghassulians) ன் இப்பிரதேசத்துக்கான குடியேற்றத்துடன் வந்தாக வரலாறுகள் கூறுகின்றன. பிற்பாடு “பிலஸ்டியா” (Philastia) என்ற பெயருடன் இன்றைய காஸா(Gaza) பிரதேசத்தில் சற்று கூடிய நிலப்பரபுடன் ஒரு பிரதேசம் காணப்பட்டதையும் வரலாறு எமக்கு காண்பிக்கின்றது. பைபிளின் கூற்றுப்படி இந்த பிரதேசத்துக்கு இஸ்ரேலியர் என்ற கோத்திரத்தினர் (tribe) குடியேறியது கி.மு. 2000- 1550 (Middle Bronze Age) காலத்திலாகும். பிற்காலத்திலும் ரோமர்கள் இப்பிரதேசத்தை சிரியா பலஸ்தீனா (Syria Palaiestina) என்றே அழைத்தனர். இந்த பிரதேச மக்கள் தமது சனத்தொகை விரிவிற்கேற்ப வாழ்விட நிலப்பரப்பை அதிகரித்து சென்றனர்.

அதேபோல் ஆப்பிரஹாமின்(Abraham) அடியை ஒட்டிய ஏகத்துவ இறை(monotheistic)கொள்கையை மூலமாக கொண்ட மூன்று சமயங்கள், அதாவது யூதம் (Judaism), கிறிஸ்தவம்(Christianity), இஸ்லாம்(Islam) என்பவற்றுள் மூத்த சமயமான யூதத்தை பின்பற்றியவர்களே யூதர்கள்( இன்று யூத இனதில் கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயத்தை பின்பற்றுவோரும் உள்ளனர்). இந்த இனத்தின் தந்தையாகிய யாக்கோபு (Jacob) முதலில் “இஸ்ரவேல்” என்று அழைக்கப்பட்டார். அடிப்படையில் ஒரு மனிதனுக்கு வழங்கப்பட்ட பெயர் இது. இவரின் சந்ததியினர் “இஸ்ரவேலர்” என்று பின்னர் அழைக்கப்பட்டனர். இவர்களும் அந்த பிரதேசத்திலே மற்றவருடன் கூடி வாழ்ந்தார்கள். ஆகவே இந்த பிரதேசத்திற்கான யூதர்/இஸ்ரவேலர்களின் வரவு பிற்காலத்தில் ஏற்பட்ட ஒன்று. எனவே பாலஸ்தீனத்துக்கு யூதர்/இஸ்ரவேலர்கள் குடியேறியவர்களே அல்லாமல் அதன் அடிப்படை உரித்தாளர்களில்லை.

இந்த இடத்தில் சற்று இலங்கையை நோக்குவோமானால் இயக்கர், நாகர் (நாகர்களே பிற்காலத்தில் “சோனகர்” என்று அறியப்பட்டார்கள் என்ற (உறுதி படுத்தப்படாத) கருத்தும் நிலவுகின்றது) என்ற மக்கள் கூட்டம் வாழ்ந்த இலங்கையில் பிற்காலத்தில் புத்தளத்தின் “தம்பண்ண” என்ற பகுதியில் தோழர்களுடன் வந்திறங்கிய விஜயனின் வழித்தோன்றல் சிங்கள மக்களாகவும், கேரளாவில் இருந்து இடம் பெயர்ந்த, முக்குவர் உட்பட, யாழ் பகுதியில் குடியேறியோர் தமிழ் மக்களாகவும் இலங்கையில் வாழ்வதை நினைவூட்டுவதாக உள்ளது. ஆகவே இலங்கையில் சிங்களவரும், தமிழரும் பிற்காலத்தில் குடியேறியோரே அல்லாமல் இலங்கையின் அடிப்படை உரித்தாளர்கள் இல்லை.

காலத்துக்கு காலம் எகிப்தியர் (Egyptians), அஸரியர்(Assyrians), பபிலோனியர்(Babylonians), பாரசீகர் (Persian), கிரேக்கர்கள்(Greeks- பேரசர் அலக்ஸாந்தர் (Alexander the Great),ரோமர்(Romans), பைசாந்தியர்(Byzantines), உமையாக்கள்(Umayyads), அப்பாசிகள்(Abbasids), பாத்திமர்கள்(Fatimids), சிலுவை யுத்தகாரர்கள்(Crusaders), ஐயூபிகள்(Ayyubida), மம்லுக்கர்(Mamluks) துருக்கியர் (Ottoman Turks)களால் ஏற்பட்ட படை எடுப்புகள் காரணமாக பலஸ்தீனிலும், கானான் பிரதேசத்திலும் இருந்த யூதர்கள் அடிமைகளாக விற்கப்பட்டனர், இன்னும் ஒரு பகுதியினர் ஆக்கிரமிப்பாளர்களின் நாட்டு பிரஜா உரிமையை பெற்றனர், மிகுதியானோர் உலகம் பூராவும் குடியேற்றத்தில் ஈடுபட்டனர்,

அதேபோல் இந்த இடத்தில் இலங்கையை ஒப்பிடும்போது இந்நாடு மீதான இந்திய படையெடுப்புகள், ஐரோப்பியரின் காலனித்துவம் என்பன இலங்கையை நோக்கியதான குடிவரவை ஏற்படுத்தியதே அல்லாமல் குடி அகள்வை ஏற்படுத்தவில்லை. எனினும் 1983ல் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவினால் அரங்கேற்றப்பட்ட தமிழருக்கெதிரான இனக்கலவரத்தை தொடர்ந்து தமிழ் மக்கள் பெருவாரியாக இலங்கையை விட்டு வெளியேறியதை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. இன்று சுமார் 1.5 மில்லியன் தமிழர் (வெளியேறியோரும் அவர்களின் வழித்தோன்றல்களும்) உலகம் பூராகவும் பரந்து காணப்படுகின்றனர்.

இறுதியாக முதலாம் உலக போர் முடிவில் பாலஸ்தீனத்தின் ஆட்சி அதிகாரம் (administrative mandate) உலக சபையினால் (World Organization) பிரித்தனியாவின்(British) கையில் ஒப்படைக்கப்படுகின்றது. இக்காலத்தில் எல்லாம் இப்பிரதேசம் “பலஸ்தீன்” என்றே அறியப்பட்டது, அழைக்கப்பட்டது. பெரும்பான்மை மக்கள் நினைப்பது போல் “இஸ்ரவேல் அல்லது இஸ்ரேல்” என்ற பிரதேசம் பல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதல்ல.

“பலஸ்தீன்” என்ற இப்பிரதேசம் பிற்காலத்தில் “இஸ்ரவேல்”லாக மாறியது பின்வரும் முறையிலேயே. கி.பி1882ம் ஆண்டில் லியோன் பின்ஸ்கர் (Leon Pinsker)என்பவர் யூதர்களுக்கான ஒரு தனிநாட்டை அமைப்பதற்கான ஒரு கொள்கையை, அதாவது யூதர்களுக்கு மாத்திரம் என்று பொருள் கொள்ளக்கூடிய “சியோனிஸம்” (Zionism) என்ற கொள்கையை உருவாக்கினார். இந்த காலப்பகுதியில்தான் ஐரோப்பா எங்கிலும் யூதர்கள் இனப்படுகொலைக்கு(Genoside)முகம் கொடுக்க வேண்டியிருந்தது. இத்தருணத்தில் யூதர்களின் மீட்சி என்பது அவர்களின் விடுதலையிலும், தமக்கான தனி நாடொன்றை அமைப்பதிலுமே தங்கியுள்ளது என பின்ஸ்கர் மிக திடமாக நம்பினார். மேலும் யூதர்களின் ஒட்டு மொத்த சன வெளியேற்றம்(mass exodus) ஆர்ஜண்டீனா(Argentina)வை நோக்கியதாக இருக்கவேண்டும் என்றும் பின்ஸ்கர் அடையாளம் கண்டார். இந்த கருத்தானது ஸியோனிசத்தின் தந்தை என்றழைக்கப்படும் தியோடொர் ஹேர்ஷல் (Theodor Herzel)என்பவரினால் கட்டிக் காக்கப்பட்டது. ஆனாலும் ஹேர்ஷல் யூத குடியேற்றத்துக்கு ஆபிரிக்காவின் உகண்டா(Uganda) வே உகந்தாக கருதினார். இருப்பினும் பிற்காலத்தில் அவரின் பார்வை பலஸ்தீனை நோக்கி காணப்பட்டதால் ஐரோப்பா எங்கும் பரவிக்கிடந்த யூதர் “பலஸ்தீன்” என்ற நிலப்பரப்பையே தமக்கான தீர்வாகக் கருதினர். எனவே இஸ்ரவேல் என்பது வசதிகருதி பலஸ்தீனில் உருவாக்கப்பட்ட ஒரு நிலப்பரப்பு என்பதற்கப்பால் அப்போது அதற்கு ஒரு சட்டரீதியான (உரிமை) (அல்லது) அங்கீகாரம் இருந்ததில்லை. பிற்பாடு 1897ல் சுவிற்சர்லாந்து(Switzerland) பாசலில் (Basle) நடைபெற்ற முதலாவது ஸியோனிச மாநாட்டில்(Zionism conference) பலஸ்தீனில் இஸ்ரவேலை உருவாக்குவதற்கான கருத்து முடிவாகியது. இதன்படி யூதர்களுக்கான நாடாக பலஸ்தீன பிரதேசம் ஏற்றுக்கொள்ளப்பட்டு யூதர்களை அப்பிரதேசம் நோக்கி குடிப்பெயர்வு செய்வதற்கான நிதி சேகரிப்பும் தொடங்கி வைக்கப்பட்டது.

இதை சற்று இலங்கை நிலவரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் 1815ல் கண்டி ராச்சியம் ஆங்கிலேயர் கையில் வீழ்ச்சி அடைய 1833 அளவில் முழு இலங்கையும் ஒற்றை நிர்வாகத்தில் கொண்டுவரப்பட்டது. ஆனால் இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டே தமிழருக்கு அரசியலை ஒட்டியதான பிரச்சினை இருந்த(தாக சொல்லப்பட்ட) போதிலும், 1976 வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மூலமே அப்பிச்சினைக்கான தீர்வு “தமிழ் ஈழம்” என்ற தனிநாடு என்றாகியது. அதிலும் இந்த தமிழ் ஈழம் இலங்கையின் மேற்கு கரையில், அதாவது நீர்கொழும்புக்கு வடக்கேயுள்ள “கொச்சிச் கடை” பாலத்தின் மேலிருந்து வென்னப்பு, நாத்தாண்டி, மாதம்பை, சிலாபம், புத்தளம், வில்பத்து, மன்னார், முழு யாழ்குடா நாடு, முல்லைத் தீவு, திருக்கோணமலை, ஏராவூர், வாழைச்சேனை, மட்டக்களப்பு, கல்முனை, சம்பாந்துறை, அக்கரைபற்று, அம்பாறைக்கும் அப்பால் இலங்கையின் தென்கிழக்கு மூலைவரை சென்றதோடு மத்திய இலங்கையில் ஒரு பெரிய நிலப்பரப்பையும் தன்னகத்தே கொண்ட “தமிழ் ஈழம்” என்ற நிலப்பரப்பு தமிழருடையது என்று அதற்கு நிலஉரிமை கோரப்பட்டது.

ஹேர்ஷல் இஸ்ரவேலின் உருவாக்கத்துக்கான சர்வதேச ஆதரவு என்பது ஏதாவது ஒரு வல்லரசின் ஒத்துழைப்புடனேயே சாத்தியப்படும் என்ற உண்மையை கண்டறிந்தார். இந்த சந்தர்ப்பத்தில் பழம் நழுவி பாலில் விழுந்த மாதிரி இஸ்லாம் என்ற சமயத்தை அடிப்படையாகக் கொண்ட உதுமாணிய மக்களதிபர்(கலிபா) (Ottoman Khilafah) ஆட்சின் வீழ்ச்சியை எதிர்பார்த்திருந்த பிரித்தானியா 1917ல் பல்போர் தீர்மானத்தை(Balfour Declaration) வெளியிட்டு பலஸ்தீனத்தில் யூதர்களுக்கான தாய் நாடு அமைவதற்கான தமது விருப்பத்தை தெரிவித்துக்கொண்டது.

Map_of_Israel_and_Palestineஏற்கனவே ஹிட்லரின் இன சுத்திகரிப்பு( ethnic cleansing), “ஹொலொகோஸ்ட்” (Holocaust) என்று சொல்லப்படும் திட்டமிட்ட பாரிய இன அழிப்புக்கு முகம் கொடுத்த யூத மக்கள் தமது இனம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத்தால் நிலைகுலைந்திருந்தாலும், முதலாம் மகா யுத்தத்தை தொடர்ந்த பிரித்தானியாவின் பொருளாதார நெருக்கடியும், யூதர்களின் குடியேற்றத்துக்கு ஸியோனிஸ்டுகள் வழங்கிய அபரிமிதமான பொருளாதார உதவிகளும், நீண்டகால நில உரித்து கொண்ட(indigenous) பலஸ்தீனியரை அவர்களின் நிலப்பரப்பிலேயே வறுமையில் வீழ்த்தியதால் பொருளாதார மீட்சிக்காக பலஸ்தீனியரின் நிலங்கள் யூதர்களால் வாங்கப்பட்டன. அதேநேரம் யூத தொழிலார்களுக்கே அப்பிரதேசத்தில் முன்னுரிமையும் கொடுக்கப்பட்டது. இந்த நிலைமைகளை தமக்கு சாதகமாக பயன்படுத்திய யூதர்கள் தமது சமூக அபிவிருத்தி, பாதுகப்பு நிலமைகளை கருத்தில் கொண்டு மத்திய, பிராந்திய நிர்வாக அமைப்புக்களை ஏற்படுத்தினர். பாடசாலை, தபால் நிலையங்கள், சுகாதார நிலையங்கள் என்பவற்றுடன் இர்குன்(Irgun), ஹகனா(Haganah) என்ற இரண்டு மூர்க்கமான ஆயுத குழுக்களையும் நிறுவினர். இது பலஸ்தீனியரை இரண்டாம்தர பிரசைகளாக்கியது. இது பற்றிய பலஸ்தீனியரின் அதிருப்தியும், முறைப்பாடுகளும் பிரித்தானியரிடம் எடுபடவில்லை. பலஸ்தீனரிடையே அதிருப்தியாளர் அதிகரிக்கத் தொடங்கவே 1937ல் பிரித்தானியர் பலஸ்தீனிய அரபு மக்களுக்கு எதிரான அடக்கு முறைக்கு இஸ்ரேலிய ஹகனா குழுவின் ஆதரவை நாடினர். இதன் அடிப்படையில் 1938ல் ஹைபா(Haifa) பழச்சந்தை குண்டு தாக்குதலில் 74 மக்கள் பலியாகினர். இஸ்ரேலிய வரலாற்று ஆசிரியர் அயன் பபே(Ian Pappe)யின் கூற்றுப்படி இந்த சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட அசாதாரண நிலையில் ஹகனா குழு அங்கே இன சுத்திகரிப்பு நடவடிக்கையை ஒன்றை மேற்கொண்டது. நிலைமை கட்டுக்கடங்காது போனதினால் பிராந்திய அரபு நாடுகளிடம் இருந்து வரும் எதிர்ப்பை சமாளிக்க பிரித்தானியா தாங்கள் யூதர்களின் தனிநாடு அமைக்கும் திட்டத்துக்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று அரபு உலகத்தை சமாதானப்படுத்தியது. இருந்த போதிலும் நிலத்தையும், அது தொடர்பான அதிகாரத்தையும் கைப்பற்றுவதற்கான ஸியோனிஸ்டுகளின் வேட்கையை இது குறைத்து விடவில்லை.

இந்த சந்தர்ப்பத்திலேயே பின்னை நாள் இஸ்ரேலிய பிரதமரான பென் கூறியன்(Ben Gurion) பிரித்தானியாவுக்கு எதிரான ஆயுத கிளர்ச்சியை இர்குன் குழுவினர் மூலமாக மேடை ஏற்றினார். இந்த ஆயுத கிளர்ச்சியில் ஜெருசலம் புகையிரத நிலையம், பிரித்தானிய ஆட்சி அதிகார சபை, அரசர் டேவிட் விடுதி(King David hotel) என்பன முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டன. எனவே நிலைமை மோசமடைவதை கண்ட பிரித்தானியா உலக சபையினால் (பிற்பாடு ஐ.நா சபையினால்) தனக்கு தரப்பட்டிருந்த பலஸ்தீன் மீதான நிர்வாக அதிகாரத்தை மீளகையளிக்கும் எண்ணத்தை 1947ல் வெளிப்படுத்தியது.

இந்த அசாதாரண நிலையில் ஐ.நா சபையின் “UNSCOP” என்ற காரிய குழு(Working Group) “இரு நாட்டு தீர்மானம்” (two states solution)ஒன்றையும் அதே நேரத்தில் ஜெருசலம் சர்வதேச கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதற்கான திட்டமொன்றையும் முன் மொழிந்தது. அந்த ஏற்பாட்டிற்கான ஆதரவு அமெரிக்க பக்கமிருந்து மிக அழுத்தமாக இருந்ததால் 33க்கு 13 என்ற வாக்கு வித்தியாசத்தில் இத் தீர்மானம் வெற்றி பெற்றது. இருந்தும் இந்த ஏற்பாட்டை பலஸ்தீனியர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் இஸ்ரேலர்களோ மிகவும் ஆர்வத்தோடும், விருப்புடனும் இந்த இரு நாட்டு தீர்வை ஏற்றுக்கொண்டனர். இதை இர்குன் குழுவின் தலைவர் மெனச்சம் பெகின் (Menachem Begin) னின் பின்வரும் கூற்று உறுதிபடுத்துகிறது, அதாவது “அந்த நாட்களில் தனக்கு இருந்த கவலை எல்லாம் எங்கே இந்த அரபுக்கள் இரு நாட்டு யோசனையை ஏற்றுக் கொண்டு ஐ.நா. வினால் வரையப்பட்ட எல்லை கோட்டுக்குள் இஸ்ரேல் என்ற நாட்டை சுருக்கி விடுவார்களோ என்பதுதான்”.

இந்த அசாதாரண நிலையை இலங்கையுடன் ஒப்பிடும் போது நாம் காணக்கூடியதாக இருந்தது பின்வரும் விடயமே, அதாவது தமிழ் ஈழம் என்ற பாரிய நிலப்பரப்பு சம்பந்தமாக எந்த ஒரு ஏற்பாடுமின்றி, வடக்கையும், கிழக்கையும் மாத்திரம் ஒன்றிணைத்த ஒரு பிரதேசம் இந்திய, இலங்கை (ராஜீவ், ஜெயவர்தன) உடண்பாட்டால் தமிழருக்கான ஆட்சி பிரதேசமாக ஏற்றுக்கொள்ளபட்ட போதும் அது மூர்க்கமாக தமிழ் புலிகளினால் நிராகரிக்கப்பட்டது. அன்று அந்த பிரதேசம் புலிகளினால் ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்திருந்தால் இன்று தமிழர் (ஓரளவேனும்) நிம்மதியாக இருந்திருக்கலாம். அதே நேரத்தில் இன்றைய உள்நாட்டு தமிழ் அரசியல்வாதிகள் மலைநாட்டையும், வட மேற்கையும் கைவிட்டுவிட்டு வடக்கையும், கிழக்கையும் இணைத்த ஒருபிதேசத்தை தமிழர்களின் பூர்வீக நிலமாக இலங்கை அரசு ஏற்று கொண்டால் தாம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ விரும்புவதாக கூற, அதாவது இந்திய, இலங்கை ஒப்பந்த அடிப்படையில் ஒரு தீர்வுக்கு வர எத்தனிக்கும் போது, வெளிநாட்டு (புலி) தமிழ் அரசியல்வாதிகளோ, மலை நாடு தவிர்ந்த ஆனால் வடமேற்கு, வடக்கு, கிழக்கு உள்ளிட்ட “தமிழ் ஈழம்” என்ற நிலப்பரப்புக்காக “நாடு கடந்த (உத்தேச) தமிழீழ அரசு” ஒன்றை உருவாக்க முனைகின்றனர். ஆனால் தமிழர்களின் தாயகம் என்ற பிரதேசம் தொடர்பான சரியான வரையறை இன்றி, தேவைக்கு ஏற்ற விதத்தில் எல்லைகளை மாற்றி “தமிழ் ஈழம்” என்று கூறிக்கொள்ளும் இந் நிலைப்பாடானது இஸ்ரேலின் பலஸ்தீன் மீதான வசதிகருதி செய்யப்பட்ட நில உரிமை கோரல் போன்றதாகும்.

அன்று ஏன் இரு நாட்டு தீர்வை பலஸ்தீனியர் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்கு இன்று “ஹமாஸ்”(Hamas) இயக்கத்திடம் (சரியோ, பிழையோ) நிறைய காரண காரியங்கள் உள்ளன. ஆனால் பலஸ்தீனியர் அன்று அந்த தீர்வை ஏற்றுக் கொண்டிருந்தால் இன்று ஒப்பிட்டு ரீதியில் இப் பிரதேசத்தில் அமைதி நிலவ வாய்ப்பு இருந்திருக்கும். இருப்பினும் 13 செப்டம்பர் 1993ன் ஒஸ்லோ தீர்மானம் (Oslo Accord) மூலம் இரு நாட்டு தீர்வை பத்தா(Fatha)அமைப்பின் தலைமையிலான பலஸ்தீன விடுதலை அமைப்பு (PLO) ன் தலைவர் யாசிர் அரபாத் ஏற்றுக்கொண்டதால், மேற்கு கரை(West Bank)யிலும், காஸா(Gaza) பகுதியிலும் ஓரளவு சுயாட்சி அதிகாரம் கொண்ட “பலஸ்தீன அதிகார சபை” உருவாக்கப்பட்டது. ஆனால் ப.வி.இ(P.L.O) க்கும் ஹமாஸகும் இடையே ஏற்பட்ட கொள்கை ரீதியான இணக்கமின்மையால், இருநாட்டு தீர்வு முன்னேறிச் செல்ல முடியாதுள்ளது.

அத்துடன் இஸ்ரேல் ஐ.நா சபையினால் வரையப்பட்டு தங்களால் முன்னர் ஏற்றுக்கொள்ளபட்ட நிலப்பரப்பை விட 50% மேலதிக நிலத்தை 1967 யுத்தத்தின் மூலம் அபகரித்துக்கொண்டது. மேலும் தொடர்ந்த இஸ்ரேலின் அத்துமீறிய மேற்கு கரை யூத குடியேற்றமும், மதில்கட்டி காஸா பிரதேசத்தை தனிமை படுத்தி மேற்கு கரை மாத்திரமே பலஸ்தீனியரின் நிலப்பரப்பாக்க வெளிப்படையாக எடுக்கும் (மறைமுக) நடவடிக்கைகளும், ஹமாஸின் அனைவருக்கும் பொதுவான பலஸ்தீனம் என்ற விடாபிடியும், அதற்கு ஊக்கம் கொடுக்கும் “இஸ்ரவேலை உலக படத்தில் இருந்து நீக்குதல்” என்ற (இன்றைய) ஈரானின் நிலைப்பாடும் இப்பிரதேசத்தை ஒரு “நிரந்தர கொந்தளிப்பு” பிரதேசமாகவே (hot region) வைத்துள்ளது.

இஸ்ரேல் அமைப்பதற்கான மேற்படி நவம்பர் 1947 வாக்கெடுப்புக்கு பின்னால் டிசம்பர் மாதம் 1947ம் ஆண்டு அரபு பொதுமக்கள் நிலைகள் மீது தொடுக்கப்பட பல குண்டு தாக்குதல்கள் பலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேலியருக்கும் இடையில் சிவில் யுத்தம் ஒன்று மூள்வது தவிர்க்கமுடியாத விடயமாகியது. இத்தகைய குட்டி சிவில் யுத்தமானது பொருளாதாரத்தில் அபிவிருத்தியோ, போர் முறையில் அனுபவமோ, திட்டமிடலோ இல்லாத பலஸ்தீனியருக்கு ஆயுத ரீதியாக பயிற்றப்பட்ட இஸ்ரேலியருக்கு முன்னால் அழிவையும், உயிர் நீத்தலையுமே பரிசாக கிடைக்கச் செய்தது.

இத்தகைய நடவடிக்கையின் இறுதி கட்டம்தான் மார்ச் 1948ல் இடம் பெற்றது. இந்த பிரச்சினைக்குரிய பிராந்தியத்தில் அரபு வானொலி மூலம் ஸியோனிஸ்டுகள் அரபுக்களுக்கு பகிரங்க அச்சுறுத்தலை வெளியிட்டனர். அந்த பயமுறுத்தல் வெறும் வாய்ப்பந்தல் இல்லை என்று நிருபிக்கும் முகமாக டெயிர் யசின்(Deir Yassin) என்ற இடத்தில் குழந்தைகள், சிறுவர்கள் உட்பட 250 பலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டார்கள். இச் சம்பவமானது 750,000( ஏழு லட்சத்து ஐம்பதாயிரம்) பலஸ்தீனியர் தமது சொந்த வீடு வாசல்கள், வியாபார நிலையங்கள் என்பவற்றை விட்டு அகதிகளாக வெளியேறச் செய்தது. இத்தகைய நிலைப்பாடானது யூதர்கள் ஐரோப்பாவில் தாம் அனுபவித்த சொல்லொனா துன்பத்தையும், அட்டூழியங்களையும் சற்றும் நினைத்து பார்க்காமல் அப்பாவி பாலஸ்தீனர் மேல் கட்டவிழ்த்த பயங்கரவாதம் வெட்கித் தலைகுனிய வைக்கும் செயலாகும். இந்த பயங்கரவாதத்தை விடுதலை போராட்டம் என்று குறிப்பிடுவது நகைப்புக்கிடமானதே.

இத்தகைய ஒரு முரண்பட்ட நிலமையை இலங்கையிலும் அவதானிக்கலாம். அதாவது 1983 ஜூலை கலவரத்தில் அப்பாவி தமிழர் உயிருடன் தீயிட்டு கொழுத்தப்பட்ட, அடித்து கொல்லபட்ட, பல்லாண்டுகளாக வாழ்ந்த இடத்தை விட்டு அனாகரீகமான முறையில் வெளியேற்றப்பட்ட சம்பவங்களை மிக எளிதில் மறந்துவிட்டு இரத்தம் உறைந்த நிலையில் மன்னார், யாழ் குடா நாடு, முல்லைத்தீவு பகுதிகளில் இருந்து சோனகர்கள் பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட நிகழ்வானது யூதர்களின் பலஸ்தீன் மக்கள் மீதான பயங்கரவாதத்தை நினைவூட்டுகிறது. 1983ன் கலவரத்தை தொடர்ந்த இரண்டொரு மாதங்களில் விரட்டியடிக்கப்பட்ட தமிழர் மீண்டும் தமது இருப்பிடங்களுக்கு திரும்பினர். ஆனால் விரட்டியடிக்கப்பட்ட சோனகர்களோ சுமார் 20 வருடங்கள் காத்திருக்க வேண்டி ஏற்பட்டது. ஆகவே தமிழர்களின் “தமிழ் பேசுவோருக்கான” போராட்டமாக (புலிகளால்) கூறப்பட்ட இந்த போராட்டம் ஒரு வசதி கருதிய(பயங்கரவாத) விடயமே.

இந்த பின்னணியில் 14 மே 1947 பிரித்தானியர் தமது நிர்வாக ஆட்சியாணையை (Administrative Mandate) கலைத்த அடுத்த நிமிடம் டேவிட் பென் கூறியன்(David Ben Gurion) இஸ்ரேல் என்ற தனிநாட்டை பிரகடனம் செய்து இஸ்ரேலின் முதல் பிரதமரானார். அமெரிக்க அதிபர் ட்ரூமன்( President Truman) இதை அங்கீகரித்து தமது அறிக்கையை விட தொடர்ந்து ரஸ்யா இஸ்ரேலுக்கான தமது அங்கிகாரத்தை வழங்கியது.

இந்த வெற்றிக்கான மிகவும் ஆழமான திட்டமிடல் அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்டதற்கு காரணமாக அமைந்தது இஸ்ரேல் ஒரு பலமிக்க நண்பனாக தன்னுடன் பிற்காலத்தில் செயல்படும் என்ற நோக்கிலாகும். அதாவது இந்த பிராந்தியத்தில் அமெரிக்க நலனை பாதுகாக்கும் நாடாக இஸ்ரேல் என்றும் செயல்ப்பட வேண்டும் என்ற அமெரிக்காவின் எதிர்பார்ப்பாகும். இதன் நீண்டகால நோக்கு மேற்குக்கும் இஸ்லாம் (West and Islam) என்ற சமயத்துக்கும் இடையிலான கருத்தியல்(Ideological) பனிப்போரையும்(cold war), கலாச்சார பொருதுதலை(cultural conflict)யும் அதை ஒட்டிய நடவடிக்கைகளையும் நசுக்கும் திட்டமாகும்.

ஆனால் இத்தகைய ஒரு நிலை இலங்கை தமிழரை பொறுத்தவரை இருக்கவில்லை. 1983ம் ஆண்டின் தமிழருக்கு எதிரான மிக மோசமான இனக்கலவரமானது சர்வதேச அளவில் தமிழர்பால் ஒரு அனுதாபத்தை ஏற்படுத்தியதே அல்லாமல் தமிழரின் இறுதி இலக்கை அடைய அது உதவமாட்டாது என்பதை தமிழர் அறிய தவறியதுமல்லாமல் அதை தங்களுக்கான நிபந்தனையற்ற பூரண ஆதரவாக பொருள் படுத்தி விடயங்களை நகர்த்திச் சென்றனர். இதை இனங்கண்டு எச்சரித்த(தமிழர்)வர்(கள்) இளக்காரமாக பார்க்கப்பட்டனர். இதன் வெளிப்பாடே புலிகளின் தனி தேசிய தலைமை என்ற நிலைப்பாடும் அதை தொடர்ந்த அவர்களின் அடாவடித்தனங்களுமாகும். சர்வதேச ஆதரவு தமக்கு உண்டு என்ற இந்த நிலைப்பாட்டின் ஒரு அம்ச(வடிகட்டிய முட்டாள்தன)மே 13மே 2009 இந்திய பொது தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி மத்தியிலும், அவர்களின் சார்பு கட்சியான ஜெயலலிதாவின் அ.தி.மு.க தமிழ் நாட்டிலும் ஆட்சியை கைபற்றும், எனவே அக்கட்சியுடன் கூட்டு வைத்துள்ள ம.தி.மு.கவின் வை.கோவும் ஜெயலலிதாவும் சேர்ந்து தமிழீழம் பெற்றுத்தருவர் அல்லது ஆகக்குறைந்தது புலித்தலைவர் வே. பிரபாகரனை மீட்டுத்தருவர் என்பதாகும். இதை விடவும் மோசமான(நகைச்சுவையான) கற்பனை கடைசி யுத்தகாலத்தில் அமெரிக்காவின் (உறுதி படுத்தப்படாத) உதவியை நாடியமையாகும். இதை விடவும் “வணங்கா மண்” கப்பல் முல்லை கடலுக்கு செல்ல எத்தனித்தது இறுதி கட்டத்தில் (எதுவுமே கை கூடாவிட்டால்) தலைவரையும் அவருக்கு வேண்டிய முக்கியஸ்தர்களையும் ஏற்றிக் கொண்டு ஐரோப்பா (நோர்வே) கொண்டு செல்ல எத்தனித்த (உறுதி படுத்தபடாத) விடயமுமாகும்.

அமெரிக்காவின் இஸ்ரேலுக்கான வலிந்த உதவி அமெரிக்க நலங்கொண்டது. அத்தகைய வலிந்த உதவியை (புலி) தமிழரின் தனி நாட்டுக்கு செய்யவேண்டிய தேவை இப்பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் உள்ள எந்த ஒரு நாட்டுக்கும் இல்லை. மாறாக இலங்கையுடன் நற்பை பேணி தமது நலனையும் அடையவே சர்வதேச நாடுகள் முயலும், முயன்று வெற்றியும் அடைந்துள்ளன.

மேலும் இன்று பலஸ்தீனுக்கு வெளியே உள்ள 3.5 (இன்றைய இஸ்ரேல் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டோர்) மில்லியன் பலஸ்தீன் அகதிகளின் கோரிக்கை தம்மை மீண்டும் தமது பிராந்தியத்தில் குடியேற அனுமதிக்க வேண்டும் என்பதாகும். இன்றும் 80% மேலானோர் தமது நிலத்துக்கான உறுதி(Deed), வீடுகளுக்கான திறப்பு(Keys)களுடன் தமது தாய் நாட்டில் கால்வைக்கும் காலத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலைதான் ஹமாஸின் அரசியல் காய் நகர்த்தலை இலகுவாக்குகின்றது, அதாவது என்றோ ஒரு நாள் இந்த அகதிகள் தமது சொந்த இடங்களுக்கு (இன்றைய இஸ்ரேலுக்குள்) அனுமதிக்கப்படும் போது அது இஸ்ரேலின் சனத்தொகையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அப்படி ஏற்படுத்தும் போது இஸ்ரேல் என்ற நாடு தானாகவே உலக படத்தில் இருந்து நீங்கும் அல்லது நீக்கப்படும் என்பதாகும். எனவே அதுவரை இரு நாட்டு தீர்வு இழுத்தடிக்கப்படும்.

2009 டிசம்பரில் இஸ்ரேலின் மொத்த சனத்தொகை 7,515,400(7.5 மில்லியன்). இதில் 1,213,000(1.2 மில்லியன்) அரபு மக்கள். இது விகிதாசாரத்தில் சுமார் 17% (15% முஸ்லீம்கள், 2% கிறிஸ்தவர்கள்). பலஸ்தீனியர்களின் மொத்த சனத்தொகை சுமார் 12 மில்லியன் இதில் 3,761,000 (சுமார் 3.7மில்லியன்) மாத்திரமே மேற்குகரையிலும், காஸா பகுதியிலும் வாழ்கின்றனர். ஆகவே மொத்த அரபுக்களில் 1/2 வாசி சனத் தொகையிலும் குறைந்தோரே இஸ்ரேலை உள்ளடக்கிய பலஸ்தீனில் வாழ்கின்றனர். ஏனையோர் (அதாவது இன்றைய இஸ்ரேல் பகுதியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டோரும், மேற்குக்கரை, காஸா பகுதியில் இருந்து வெளியேறியோரும்) உலகம் பூராகவும் பரவிக் காணப்படுகின்றனர். இஸ்ரேலில் இருந்து துரத்தப்பட்டோர் மீள குடியேற அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உலக நாடுகளின் வலியுறுத்தலே இன்றைய இஸ்ரேல்- பலஸ்தீன பிரச்சினையின் முக்கிய அம்சமாகும்.

இத்தகைய ஒரு நிலையும் இலங்கையில் இல்லை. குடி அகளந்துள்ள சுமார் 1.5 மில்லியன் இலங்கைய தமிழர் மீண்டும் தம் நாட்டுக்கு குடியேறுதல் என்பது நடக்க முடியாத காரியம். ஏனெனில் வெளிநாட்டு தமிழரின் தனிநாட்டு கோசமானது இலங்கையில் இப்போது வாழும் தமிழர்களின் (விருப்பம் அறியப்படாமல் அவர்கள்) மேல் செய்யும் திணிப்பேயாகும். அதைவிட இன்று சட்டத்தால் வலுவிழந்துள்ள வடக்கு, கிழக்கு இணைப்பானது மீண்டும் நிலைபெற இந்த வெளிநாட்டு (புலி) தமிழர் கோருவது வடகிற்கும், கிழக்கிற்குமான சர்வசன வாக்கெடுப்(referendum) பாகும். இத்தகையதொரு சர்வசன வாக்கெடுப்பு வெற்றி பெறுவதற்கான சாத்தியம் இல்லை என்பதைக் கூட மறுக்கும் அளவுக்கு வெளிநாட்டு (புலி) தமிழர் அரசியல் தெளிவின்றி இருப்பது கவலைக்குரியது. அப்படி வடக்கும், கிழக்கும் இணைவதற்கு அப்பிரதேசத்தில் வாழும் தமிழர் அல்லாத சோனகரும், சிங்களவரும் விருப்பம் தொ¢ரிவித்தாலும் வடமேற்கின் நிலை(நாடு கடந்த தமிழீழ அரசுக்கான விளக்கக் கோவையின் வரை படத்தின்படி)என்ன என்பதற்கு திரு. உருத்திரகுமரனுக்கேனும் பதில் தெரியும் என்பது சந்தேகமே.

மேலும் லண்டனை தளமாக கொண்ட புலி ஆதரவு பத்திரிகையான “ஒரு பேப்பர்”(Oru paper)ரின் ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. ரவி அருணாச்சலம் 2009 ஆரம்பத்தில் வெளிப்படுத்திய அவரின் பேராசையை, அதாவது இன்று உலகத் தமிழருக்கு தேவைப்படுவது இரண்டு நாடுகள், ஒன்று “தமிழ்நாடு” என்ற ஒரு தனி நாடு இந்தியாவிலும், “தமிழ் ஈழம்” என்ற தனிநாடு இலங்கையிலும் அமையப் பெறுவதற்கான சாத்தியமற்ற ஆசை, கைவிட்டு இலங்கையில் இரண்டு பிரதேச/மாகாண ஆட்சி அலகுகளை தம்வசம் வைத்திருக்க வடக்கையும். கிழக்கையும் ஒன்றாக இணைக்காமலும் அத்தகைய ஒரு யோசனைக்கு ஆதரவு அளிக்காமலும் இருப்பது தமிழர்களுக்கு எந்த வகையிலும் தீமையாக அமையாது. அத்துடன் இது கிழக்கில் இனங்களுக்கிடையே ஐக்கியத்தை ஏற்படுத்துவதோடு வடக்குக்கும், கிழக்குக்கும் இடையேயும் விரிசலையும் ஏற்படுத்தாது. மாறாக இரண்டு பிரதேச/மாகான ஆட்சிகளைக் கொண்டிருப்பதால் தமிழருக்கு ஏற்பட்ட அல்லது ஏற்படப்போகும் ஆபத்தையும், வடக்கும், கிழக்கும் இணைவதால் ஏற்படப்போகும் நன்மையையும் தெளிவாக எடுத்துக்காட்ட ஆகக் குறைந்தது திரு. ரவி அருணாசலமாவது முன்வருவாரேயானால் இந்த இணைவின் அவசியத்தின் நியாய தன்மையை எல்லாரும் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். நிற்க.

ஐ.நா பொதுச் சபையினாலும், பாதுகாப்பு சபையினாலும், இஸ்ரேலும் அதன் அண்டை நாடுகள் தொடர்பாகவும், இஸ்ரேலு- பலஸ்தீன் தொடர்பாகவும், மேற்கொள்ளப்பட்ட சுமார் 100 க்கும் அதிகமான தீர்மானங்கள்(resolutions) இஸ்ரேலினால் தூக்கி வீசப்பட்டுள்ள நிலையில் இலங்கை தமிழர் இஸ்ரேலியரை போல் இருக்கவேண்டும் அல்லது செயல்பட வேண்டும் என்பது தர்க்க ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் (logically and ethically) பிழையானது என்பதோடு அது உலக அரசியலில் இருந்து அவர்களை ஓரங்கட்டும். இத்தகைய ஒரு செயலுக்கு தமிழர் என்றும் பிராயச்சித்தம் செய்ய வேண்டியவராவர். அதேநேரம் தமிழர் தங்களை பலஸ்தீனியரின் நிலையில் வைத்து பார்ப்பது உலக அரங்கில் அவர்களை என்றும் நகைப்புக்குரியவர்களாகவே காட்டி நிற்கும். ஏனெனில் ஒப்பிட்டு ரீதியில் அனைத்துலக சமூகத்தால் ஏற்றுக்கொள்ளபட்ட பலஸ்தீன போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக உலக சரித்திரத்தில் எங்குமே முன்னுதாரணம் இல்லாத செயலான, அதாவது நம் வார்த்தயில் சொல்வதானால் வேலியே பயிரை மேயுமாப் போல், கடைசிகட்ட யுத்தத்தில் தம் சொந்த மக்களையே வகைதொகை தெரியாமல் அங்கவீனராக்கியும், சுட்டுக் கொன்றும் இனஅழிப்பு செய்த புலிகளின் பயங்கரவாதத்துடன் (பிரபாகரனியம்/பிரபாகரனிஸம்) ஒப்பிடுவதும், அதை எந்தவித கேள்வியும் இல்லாமல் ஆதரித்த புலம்பெயர் புலி(புத்திஜீவிகளும்) ஆதரவாளர்களும், அவர்களால் வஞ்சகமான முறையில் வழி நடத்தப்பட்ட அப்பாவி தமிழரும் கூட தாங்கள் ஒடுக்கப்பட்டோருக்காக குரல் கொடுப்போராக உரிமை கோர முடியாதவர்களாகிய நிலையை ஏற்படுத்திய செயலாகும்.

எனவே எவ்வகையில் பார்த்தாலும் தமிழர் நிலையானது முற்றும் முழுதாக இஸ்ரேலின் நிலையையோ அல்லது பலஸ்தீனியரின் நிலையையோ பிரதிபலிக்கவில்லை, பிரதிபலிக்க வேண்டியதுமில்லை. ஒரு சில ஒருமைப்பாடுகள் அங்கொன்று இங்கொன்றாக காணப்பட்டாலும், இலங்கை தமிழரின் பிரச்சினை தனித்துவமானது, ஆகவே அதற்கு தனித்துவமான தீர்வே வேண்டும், தமிழரின் வாழ்விட சூழலுக்கு ஒவ்வாத “மாதிரி தீர்வுகள்”(Model solutions) உள்ள பிரச்சினைக்கு தீர்வாக அமைவதை விட புது பிரச்சினைகளை நிச்சயம் தோற்றுவிக்கும் என்பது எமது நிலைப்பாடு. ஆகவே தமிழர் தமிழராக மட்டும் நின்று தமது உரிமையை பெறமுயல்வது நன்று.

சர்வதேச இந்து மத பீடம் அனுதாபம்

niyaz.jpgமெளலவி நியாஸின் மரணம் குறித்து சர்வதேச இந்து மதபீடம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்துமத பீடத்தின் செயலாளரும் ஜனாதிபதியின் இந்து சமய விவகார ஆலோசகருமான இராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

போர்ச் சூழல் காலங்களில் மிகவும் துணிகரமாக சமாதானத்துக்காக குரல் கொடுத்த நியாஸ் மெளலவி, இஸ்லாமிய தர்மத்தின்படி ஒழுங்கி, சகல மக்களுடனும் மிகவும் அந்நியோன்யமாக வாழ்ந்தவர்.

நாடு சமாதானம் பெற்ற சூழலில் அவர் எம்மை விட்டுப் பிரிந்திருப்பது எமக்கு ஆறாத்துயரை ஏற்படுத்தியிருக்கிறது. அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.

நா சுப்பிரமணியனின் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் – ஒரு பார்வை : என்.செல்வராஜா, (நூலகவியலாளர்)

Eelathu_Tamil_Naval_Ilakkiyam_Cover“ஈழத்திலும் ஈழத்தவர் புலம்பெயர்துறையும் நாடுகளிலும் உருவாகும் தமிழிலக்கிய ஆக்கங்களை ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இலக்கிய நெங்சங்களுக்கு” காணிக்கையாக்கி வெளியிடப்பட்டுள்ள “ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்” என்ற நூல் அண்மையில் நான் இலங்கை சென்றிருந்த வேளையில் என் கைகளுக்கெட்டியிருந்தது.

1978ம் ஆண்டு இதே தலைப்பில் கலாநிதி நா.சுப்பிரமணியன் அவர்கள் யாழ்ப்பாணம், முத்தமிழ் வெளியீட்டுக் கழகத்தின் வழியாக ஒரு நூலை வெளியிட்டிருந்தார். 30 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்நூல் குமரன் புத்தக இல்லத்தினால் இரண்டாவது பதிப்பாக வெளியிடப்படுகின்றது. இப்பதிப்பு 1978ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலத்தில் நிகழ்ந்த வரலாற்றுச் செல்நெறிகளை இனம்காட்டும் பின்னிணைப்புகளுடன் வெளியிடப்படுவதாக தலைப்புப் பக்கத்திலேயே விளம்பரப்படுத்தி இருக்கிறார்கள். முதல் 143 பக்கங்கள் மூல நூலாகவும்  144ம் பக்கம் முதல் 309ம் பக்கம் வரை (நூலின் பாதிப்பகுதி) பின்னிணைப்புகளாகவும் நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
மூல நூல் எனக்கொள்ளப்படுவது, நூலாசிரியர் நா.சுப்பிரமணியன் அவர்கள் பேராசிரியர் சு.வித்தியானந்தனின் வழிகாட்டலில் 1970-1972 காலப்பகுதிகளில் தனது முதுகலைமாணிப் பட்டத்திற்காக மேற்கொண்ட ஈழத்துத் தமிழ் நாவல்கள் தொடர்பான ஆய்வின் அடிப்படையில் உருவானதாகும். ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றை ஐந்து முக்கிய கட்டங்களாக வகைப்படுத்தி இவ்வாய்வை இவர் மேற்கொண்டுள்ளார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் ஈழத்திலே தமிழ்நாவல்கள் எழுதப்படுவதற்கான சூழலை விளக்கி அதன் ஆரம்ப முயற்சிகளை மதிப்பிடுவதாக ஈழத்துத் தமிழ் நாவலின் தோற்றம் என்ற முதலாம் இயல் அமைகின்றது. இருபதாம் நூற்றாண்டின் முதல் நாற்பதாண்டுக் காலப்பகுதியில் எழுதப்பட்ட நாவல்கள் பற்றி சமுதாய சீர்திருத்தக்காலம் என்ற இரண்டாம் இயல் ஆராய்கின்றது. அக்காலப்பகுதியை அடுத்து எறத்தாழ 25 ஆண்டுக்காலப்பகுதி எழுத்தார்வக் காலம் என்ற தலைப்பிலும், அடுத்துள்ள 15 ஆண்டுக்காலம் சமுதாய விமர்சனக் காலம் என்ற தலைப்பிலும் வகைப்படுத்தப்பட்டு அவ்வக்காலகட்டத்தில் வெளியான ஈழத்து நாவல்கள் மதிப்பிடப்பட்டுள்ளன. பின்னைய ஐந்தாண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சியானது பிரதேசங்களை நோக்கி என்ற இறுதி இயலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

காணிக்கைப் பதிவு தந்த நம்பிக்கையினாலும், தலைப்புப் பக்கம் தந்த உந்துதலினாலும் ஆர்வத்துடன் பின்னிணைப்பைத் தட்டிப்பார்த்தேன். நூலின் அரைப்பங்கை பின்னிணைப்புகள் ஆக்கிரமித்துள்ளன. அனைத்தும் மிக முக்கியமான வரலாற்றுப் பதிவுகள். முதலாவது பின்னிணைப்பு 1977க்குப் பிற்பட்ட வரலாற்றுச் செல்நெறிகள் என்ற தலைப்பில் அமைந்துள்ளது. 1978 முதல் 1988 வரையிலான காலகட்டத்து ஈழத்துத் தமிழ் நாவலிலக்கியத்தின் வளர்ச்சி முதற்பிரிவில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இது தனிக்கட்டுரையாக ஏழு பகுதிகளில் மல்லிகை இதழில் ஏப்ரல் 1988 முதல் மார்ச் 1989 வரையிலான காலப்பகுதியல் வெளிவந்திருந்தது.

முதலாவது பின்னிணைப்பின் இரண்டாவது பிரிவு 1988க்குப் பின் தாயகத்திலும், புகலிடத்திலும் எழுந்த ஈழத்துத் தமிழ் நாவலிலக்கியம் பற்றிய விரிவான ஆய்வாக அமைகின்றது.
இரண்டாவது பின்னிணைப்பு ஆசிரியரின் தனிக்கவனத்தைப் பெற்ற இருநாவல்கள் பற்றிய ஆய்வுரையாக அமைகின்றது. மங்களநாயகம் தம்பையாவின் நொறுங்குண்ட இருதயம், தேவகாந்தனின் கனவுச் சிறை ஆகிய இரண்டு நாவல்கள் பற்றிய இக்கட்டுரை 2005இல் வெளிவந்த ஆசிரியரின் கட்டுரைத் தொகுப்பான கலாநிதி நா.சுப்பிரமணியனின் ஆய்வுகள், பார்வைகள், பதிவுகள்: தொகுதி 2இல் ஏற்கெனவே பிரசுரமாகியுள்ளது.

மூன்றாவது பின்னிணைப்பில் ஈழத்துத் தமிழ்நாவல்களின் விரிவான பட்டியல் ஒன்று பிரசுரமாகியுள்ளது. ஆசிரியர் பெயர். நாவலின் தலைப்பு, (சில இடங்களில்) வெளியீட்டாளர் விபரம், வெளியிட்ட ஆண்டும் பக்கமும், தகவல் தெரியாதவிடத்து கேள்விக்குறிகள் (?) என்றவாறாக இப்பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது.

முதலாவது பகுதியில் 1977 வரையிலான நாவல்களின் விபரங்களும், இரண்டாவது பகுதியில் 1977க்குப் பின்னைய நாவல்களின் விபரமும் இடம்பெற்றுள்ளன. இது 2007 வரை நீளுகின்றதையும் அவதானிக்க முடிகின்றது.

இவ்விடத்தில் மேலதிகமான தகவல் ஒன்றையும் குறிப்பிடப்படவேண்டும். நூலாசிரியர் நா.சுப்பிரமணியன்  1885-1977 காலப்பகுதியில் வெளியான 407 நாவல்கள் பற்றிய விபரங்களைத் தொகுத்து, சில பதிவுகளுக்கு (நூல்தேட்டத்தில் நான் குறிப்பிடுவதுபோன்று) குறிப்புரையுடன் ஒரு நூலை எழுதியிருந்தார். இது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் யாழ்ப்பாண வளாக நூலக வெளியீட்டு இலக்கம் 2 என்ற தொடரில் தமிழ் நாவல் நூற்றாண்டு நினைவாக, கல்லச்சுப் பிரதியுருவில் (ஊலஉடழளவலடநன) ஈழத்துத் தமிழ் நாவல்கள்: நூல்விபரப்பட்டியல் 1885-1976 என்ற தலைப்பில் பெப்ரவரி 1977இல் வெளிவந்திருந்தது. ஆக்கியோன் பெயர் வரிசை ஒழுங்கில் தொகுக்கப்பெற்றிருந்த இந்நூற்பட்டியலில் முதற்பகுதியில், நூல் வடிவில் வெளியான 212 நூல்களில் இடம்பெற்ற 220 நாவல்களும், இரண்டாவது பகுதியில் ஊடகங்களில் வெளியானதும் நூலுருப்பெற்றமை பற்றிய தகவல் அறியமுடியாததுமான 94 நாவல்களும் இடம்பெற்றிருந்தன. ஈழத்துத் தமிழ் நாவல் பற்றி எழுதப்பட்டு ஊடகங்களில் வெளிவந்த கட்டுரைகள், மற்றும் நூல்களின் விபரங்களும் பின்னிணைப்பில் காணப்பட்டன. (பார்க்க: நூல்தேட்டம் தொகுதி 2, பதிவு இலக்கம் 1006).

நூலின் நான்காவது பின்னிணைப்பும் ஒரு தேர்ந்த பட்டியலாகும். இதில் ஈழத்துத் தமிழ் நாவல் தொடர்பான ஆய்வுகள் பற்றிய விபரங்கள் இடம்பெற்றுள்ளன. இங்கும் 1977 வரை வெளியான விமர்சன நூல்கள், கட்டுரைகள் என்பன ஒரு பிரிவாகவும், 1977க்குப் பின்னர் வெளியான நூல்களும் ஆய்வேடுகளும், திறனாய்வுகள் மற்றும் “பட்டியல் முயற்சிகள்”, அணிந்துரைகள், அறிமுக உரைகள் மற்றும் மதிப்புரைகள் முதலியனவும் இடம்பெற்றுள்ளன. இங்கு திரு. நா.சுபபிரமணியம் அவர்களின் தீவிரமான தேடலில் அகப்படாத இரண்டு விடயங்கள் பற்றியும் நான் இங்கு குறிப்பிடவேண்டும்.
அவர் இன்று புலம்பெயர்ந்து வாழும் கனேடிய மண்ணில் 2005ம் ஆண்டில் தமிழர் தகவல் நிறுவனத்தினரால் வெளியிடப்பட்ட “தமிழர் தகவல்” ஆண்டுமலரில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். தமிழர் தகவல்- எஸ்.திருச்செல்வம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு கனடாவில் வெளிவரும் ஒரு மாத இதழ். (மலேசியத் தமிழ் நூல் வெளியீட்டில் ஈழத் தமிழர்களின் பங்களிப்பு: ஒரு வரலாற்றுப் பதிவு. தமிழர் தகவல் 14ஆவது ஆண்டு மலர்; (P.O.Box 3, Station F.Toronto, Ontario, M4Y 2LA, Canada)பெப்ரவரி 2005, ப.124-129.) அதில் ஈழத்தவர்கள் மலாயா மண்ணில் புலம்பெயர்ந்து வாழ்ந்த காலத்தில் மேற்கொண்ட படைப்பாக்க முயற்சிகள் பற்றி விரிவான தகவல்களை வழங்கியிருந்தேன். இந்த நூலில் அந்தக்கட்டுரை பற்றிய எவ்வித குறிப்பும் இல்லாததால், திரு. நா.சுப்பிரமணியனுக்கு தமிழர் தகவல் ஆண்டு மலர் கிடைக்கவில்லை போலுள்ளது. இதே கட்டுரை பின்னாளில் இலங்கையில் ஞாயிறு தினக்குரலில் 1.5.2005 முதல் 22.5.2005 வரை நான்கு இதழ்களில் தொடராகவும் வெளியிடப்பட்டது. கோலாலம்பூரில் வல்லினம் சஞ்சிகையும், மலேசிய நண்பன் பத்திரிகையும் இக்கட்டுரையை மீள்பதிப்புச் செய்திருந்தன.

புலம்பெயர்ந்த ஈழத்தவரின் நாவல்களில் பல மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல்துறை நூலகத்தில் பேணிப்பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இது பற்றி எனது மலேசிய-சிங்கப்பூர் நூல்தேட்டம் தொகுப்பில் அவற்றை நேரில் பார்வையிட்டுத் தொகுக்கப்பட்ட விரிவான விபரங்கள் உள்ளன. ஆசிரியரின் விரிந்த தேடலில் நிச்சயம் மலேசிய நூல்தேட்டம் தொகுதி கிட்டும் என்று நம்புகின்றேன். மலாயாவுக்குப் புலம்பெயர்ந்த ஈழத்தவருள் ஒருவரான புலோலியூர் க.சுப்பிரமணியம் எழுதிய நீலாக்ஷி அல்லது துன்மார்க்க முடிவு என்ற நூல் பற்றி, சுப்பிரமணியன் தனது பின்னிணைப்புப் பட்டியலில் பக்கம் 267இல் குறிப்பிட்டுள்ளார். ஆயினும் புலோலியூர் க.சுப்பிரமணியம் (எஸ்.கே.சுப்பிரமணியம்) மலேசிய மண்ணில் வாழ்ந்த காலத்தில் எழுதிய பிற நாவல்கள் பற்றிய வேறு பதிவுகள் எதுவும் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியத்தில் குறிப்பிடப்படவில்லை. மலேசியாவில் முசயைn டுiஉநளெiபெ டீழயசன இல் அங்கத்தவராயிருந்த இந்நாவலாசிரியர் யாழ்ப்பாணம் புலோலியைச் சேர்ந்தவர். பின்னாளில் புலம்பெயர்ந்து மலாயாவுக்குச் சென்றவர்.
நீலாக்ஷி அல்லது துன்மார்க்க முடிவு என்ற நாவல் பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் உள்ளது. (நூலகப் பதிவிலக்கம்: 35334) இந்நாவலின் முன்னுரையில் ஆசிரியர் தன்னுடைய முன்னைய நூலான பலசுந்தரம் அல்லது சன்மார்க்கஜெயம் என்ற நூலின் தொடர்ச்சியே இந்நூல் என்று குறிப்பிடுகின்றார். பாலசுந்தரம் அல்லது சன்மார்க்க ஜெயம் இரண்டு பாகங்களில் வெளிவந்திருந்தது. மலேசியாவில் பினாங்கு, சி.அரிகிருஷ்ண நாயுடு பதிப்பகத்தினர் இந்நூலின் இரண்டாவது பாகத்தை 1918 இல் வெளியிட்டிருக்கிறார்கள். (அச்சகம்: எட்வார்ட் பிரஸ், இல. 80, ஊhரடயை ளுவசநநவ, பினாங்கு). முதல் 21 அத்தியாயங்கள் முதலாம் பாகத்திலும், 22ம் அத்தியாயத்திலிருந்து 36ம் அத்தியாயம் வரை இரண்டாம் பாகத்திலும் இடம்பெறுகின்றன.
அந்நாவலில்; நீலாக்ஷி ஒரு பிரதான பாத்திரமாகச் சித்திரிக்கப்படுகின்றார். துர்அதிர்ஷ்டவசமாக பாலசுந்தரம் அல்லது சன்மார்க்க ஜெயம் நாவலின் இரண்டாவது பாகத்தையே மலாயாப் பல்கலைக்கழகத்தில் என்னால் பார்வையிட முடிந்தது. இந்நூலின் முதலாம் பாகத்தை எங்கும் காணமுடியவில்லை. மலேசிய தமிழ் நாவல் இலக்கியம் தொடக்க காலத்திலேயே சமுதாய சீர்திருத்தக் கருத்துக்கள் பொதிந்தனவாக அமைய ஆரம்பித்துவிட்டன என்பதற்கு இந்நாவல் எடுத்துக்காட்டாகவுள்ளது. ஒழுக்கம் நேர்மை ஆகியவற்றால் வரும் உயர்வைப்பற்றி விளக்கும் இந்நாவலில் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிலவிய மலாயா நாடு கதைக்களமாகின்றது. பிரித்தானியர் ஆட்சி, கோலாலம்பூர் நகர உருவாக்கம், கிறிஸ்தவ சமயப் பரம்பல், இலங்கை – இந்தியத் தமிழர்களுக்கு இடையிலான பிணக்குகள் முதலிய பல வரலாற்றுத் தகவல்கள் கதையில் விதைக்கப்பட்டுள்ளன. இந்நாவலின் தொடர்ச்சியே நீலாக்ஷி அல்லது துன்மார்க்க முடிவு என்ற நாவலாக அமைந்துள்ளது.

மலேசிய தமிழ் நாவல் இலக்கிய வரிசையில் இடம்பெறும் இந்நாவல் இலங்கைக்கும் மலேசியாவுக்கும் தமிழ் இலக்கியப் பாலமாக அமைந்துள்ளது. இந்நாவலின் முதற்பாகம் வெளிவந்திருக்கக்கூடிய ஆண்டு விபரம் பற்றிய தகவல்களை அறியமுடியவில்லை. அதனால் இன்றையளவில் மலேசிய நாவல் இலக்கிய வரலாற்றில் வெளிவந்த இரண்டாவது நாவல் என்ற நிலையையே இது எய்தியுள்ளது. இன்றளவில் மலேசியாவின் முதல் நாவல் 1917இல் வெளியான “கருணாசாகரன் அல்லது காதலின் மாட்சி” என்ற நாவலாகும். இது ஒரு இந்தியரால் எழுதப்பட்டது.

ஈழத்துத் தமிழ் நாவல் வரலாறு பற்றி ஆராயப்புகும் நா.சுப்பிரமணியன் செங்கை ஆழியான் போன்றோருக்கு ஈழத்தமிழ் நாவல் வரலாறு இலங்கை என்ற பிரதேச வரம்புக்குள் மட்டும் அடங்கிவிடக்கூடியது அல்ல என்பதை இலக்கிய உலகம் வலியுறுத்தவேண்டியுள்ளது. ஈழத்தவரின் முதலாவது புலப்பெயர்வு 1870களில் மலாயாவை நோக்கி ஏற்பட்ட காலம்முதலாக ஈழத்தமிழர்கள் பலர் புலம்பெயர்ந்த நாடுகளில் வைத்து நாவல்களை எழுதியிருக்கிறார்கள். இன்றைய புகலிடத்தில் வாழும் ஈழத்து எழுத்தாளர்களின் படைப்பக்களை ஈழத்து படைப்புக்களாகவும், அவர்களை இன்னமும் (புலம்பெயர்ந்த) ஈழத்துப் படைப்பாளிகளாகவும் குறிப்பிட்டுவரும் இலக்கிய ஆய்வாளர்கள் முன்னைய தலைமுறையினரான இவர்களின் படைப்புக்களையிட்டும் அக்கறை கொள்ளவேண்டும். இவர்களையும் நாம் ஈழத்துப் படைப்பாளிகளாகவே ஏற்று அவர்களுக்கும் ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு இடத்தை வழங்கவேண்டும்.

மலேசிய இலக்கியத்துக்கு உயிர்கொடுத்த எம்மவர்கள் பற்றிய எனது விரிவான ஆய்வில் பல படைப்பாளிகள் பற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளேன். இவர்களின் பெயர்களை இன்றளவில் வெளிவந்த கனக செந்திநாதன், சில்லையூர் செல்வராசன் போன்றவர்களின் பட்டியல்களில் தேடினால் எமக்கு ஏமாற்றமும் எரிச்சலுமே மிஞ்சும்.

ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியத்தின் ஆசிரியர் கலாநிதி நா.சுப்பிரமணியம் அவர்களுக்கு மற்றுமொரு தகவலையும் வழங்கக் கடமைப்பட்டுள்ளேன். நூல்தேட்டம் என்ற பெயரில் 2002ம் ஆண்டுமுதல் ஒரு பாரிய தொகுப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றேன். தாயகத்திலும் புகலிடத்திலும் வெளியிடப்பட்ட ஈழத்துத் தமிழ்நூல்களுக்கான குறிப்புரையுடன் வெளிவந்துள்ள நூல்விபரப்பட்டியல் இதுவாகும். ஏழாவது தொகுதிக்கான தொகுப்புப்பணிகள் முடிவடைந்துவிட்டன. ஒவ்வொரு தொகுதியிலும் 1000 நூல்கள் என்றவாறாக இதுவரை (உங்கள் நூல்களும் உள்ளிட்ட) 7000 நூல்கள் வரை பதிவாக்கியிருக்கின்றேன். பதிவுகள் பிரதான பதிவு தூவிதசாம்சப் பகுப்புமுறையைத் தழுவிப் பகுப்பாக்கம் செய்யப்பட்டும், பாடவாரியாகப்; பதியப்பட்டுமுள்ளது. நூல் தலைப்பு வழிகாட்டி, ஆசிரியர் வழிகாட்டி என்பவற்றுடன் இலங்கை தொடர்பான பன்னாட்டவரின் படைப்புக்களும், முன்னைய தொகுதியின் பதிவுகளுக்கான மேலதிக தகவல்களும் தரப்பட்டுள்ளமை நூலின் சிறப்பம்சமாகும்.

நூல்தேட்டம் தொகுப்பின் 800ஆவது பிரிவு இலக்கியத்துக்கானதாகும். இதில் மற்றைய பாடத்துறைகள் போன்றே நாவல்களுக்கென்றும் தனியான பிரிவொன்றை ஒதுக்கி, குறிப்புரையுடன் நூல்பற்றிய நூலியல் விபரங்களை முழுமையாகத் தந்திருக்கின்றேன். இவை அனைத்தும் நான் நேரில்சென்று நூலகங்களிலும், தனியார் இருப்புகளிலும் பார்வையிட்ட நூல்கள். (எவ்விதமான கேள்விக்குறிகளும் பதிவகளில் இல்லை) எனது ஆதங்கம் என்னவென்றால், பலநூறு நூல்களைப் பார்வையிட்டு ஆய்வுசெய்துள்ள நீங்கள் – நூல்தேட்டம் பற்றி எதுவுமே அறியாதிருப்பது நம்பமுடியாததாக உள்ளது. இரண்டாம் பதிப்பாக புத்தாக்கங்களையும் உள்ளடக்கி நீங்கள் வெளியிட்டுள்ள “ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்” என்ற நூலில் ஓரிடத்தில்கூட இதுபற்றிப் பிரஸ்தாபிக்கவில்லை என்பது மனதை நெருடுகின்றது. நீங்கள் வெளியிட்டுள்ள நூலை என்னைப் போன்றவர்களுக்காகக் காணிக்கையாக்கியிருக்கும் உங்கள் உணர்வை மதிக்கிறேன். நீங்களும் 1977இல் ஒரு பட்டியலை நாவல்களுக்காகத் தொகுத்தவர். தொகுப்பின் உழைப்பும், வலியும் உங்களுக்குப் புரியாததல்ல. நாவல்களையும், மற்றும் சிறுகதை கவிதை இலக்கியவடிவங்களையும் மாத்திரமல்லாது ஈழத்தின் முழுமையான நூலியல் வரலாற்றைப் பதிவுசெய்யும் நோக்குடன் தனிமனித முயற்சியாகத் தமிழ் நூல்களையும் பரந்த புவியியல் பரப்பை உள்ளடக்கித் தொகுத்துவரும் என்போன்றவர்களுக்கு எமது பணிபற்றிய சிறிய குறிப்பும் பேருவகைதரும் மருந்தாகும். “இருட்டடிப்பு” என்ற சொல்லை அறவே வெறுப்பவன் நான். ஆவணப்படுத்தலில் அதனை கிட்டவும் நெருங்கவிடக்கூடாது. படைப்பாளியினதும் படைப்பினதும் நம்பகத்தன்மையை வரலாறு கேள்விக்குள்ளாக்க அது வழிசமைத்துவிடும். (உங்கள் தகவலுக்காக: நூல்தேட்டம் இலங்கையில் அச்சிடப்படுகின்றது. இலங்கையின் அனைத்து பிரதான நூலகங்களிலும் புத்தகசாலைகளிலும் கிடைக்கும். நீங்கள் வாழும் கனடாவில் ஸ்கார்பரோவில், உலகத்தமிழர் நூலகத்திலும் ஒரு தொகுதி பேணப்படுகின்றது).

நன்றி : தினக்குரல்