கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

மடகாஸ்கர் அதிபராக அண்ட்ரி ரஜோலீன் பதவியேற்பு

andry.jpgமட காஸ்கர் தலைநகரின் முன்னாள் மேயரான அண்ட்ரி ரஜோலீன், நாட்டின் அதிபராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.  நாட்டின் முக்கிய விளையாட்டு மைதானத்தில் நடந்த பதவியேற்பு வைபவத்தில், தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் ரஜோலீன் பதவியேற்றார்.

வெளிநாட்டுப் பிரமுகர்கள் பலர் இந்த வைபவத்தில் கலந்துகொள்வதை புறக்கணித்திருக்கிறார்கள். அதிபர் மார்க் ரவலொமனானிடம் இருந்து நான்கு நாட்களுக்கு முன் ரஜொலீன் ஆட்சியைக் கைப்பற்றியிருந்ததை சர்வதேச நாடுகள் கண்டித்துள்ளன. இது ஒரு சட்டவிரோத ஆட்சிக் கவிழ்ப்பு என்று அவை கூறுகின்றன.

மடகாஸ்கரின் உறுப்புரிமையை ஆப்பிரிக்க ஒன்றியம் இடைநிறுத்தியுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் தவிர்ந்த ஏனைய உதவிப் பொருட்கள் மடகாஸ்கருக்குச் செல்வதை அமெரிக்காவும் நோர்வேயும் நிறுத்தியுள்ளன.

இந்தியாவில் தேர்தல்; இன்று முதல் 30 வரை வேட்பு மனு

india_.jpgஇந்தியா வின் 17 மாநிலங்களிலுள்ள 124 பாராளுமன்றத் தேர்தல் தொகுதிகளுக்கு ஏப்ரல் மாதம் 16ம் திகதி நடைபெறவிருக்கும் முதல் கட்ட தேர்தலுக்கு இன்று திங்கட் கிழமை முதல் எதிர்வரும் 30ம் திகதி வரை வேட்பு மனுத் தாக்கல் நடைபெறவிருக்கின்றது.

வேட்பு மனுக்களைப் பரிசீலனை செய்யும் தினமாக மார்ச் 31ம் திகதியும் வேட்பு மனுக்களை வாபஸ் பெறும் தினமாக ஏப்ரல் 2ம் திகதியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 16ம் திகதி வாக்களிப்பு இடம்பெறும். இதன் நிமித்தம் வேட்பு மனுக்களை தயாரிப்பதிலும், வேட்பாளர்களைத் தெரிவு செய்வதிலும் தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

சில மாநிலங்களில் தொகுதி பங்கீடு தொடர்பாக கட்சிகளிடையே இழுபறி நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலைமைகளுக்கு அடுத்துவரும் சில தினங்களுக்குள் தீர்வு காணப்படலாமென அரசியல் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐந்து கட்டமாகத் தேர்தல் நடாத்தப்படவிருக்கிறது.

முதற்கட்டத் தேர்தல் ஆந்திரமாநிலத்தில் 22 தொகுதிகளிலும், கேரளா மாநிலத்தில் 20 தொகுதிகளிலும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 16 தொகுதிகளிலும் மராட்டிய மாநிலத்தில் 13 தொகுதிகளிலும், பீகார் மாநிலத்தில் 13 தொகுதிகளிலும், சதீஷ்கார் மாநிலத்தில் 11 தொகுதிகளிலும் ஒரிஸ்ஸா மாநிலத்தில் 10 தொகுதிகளிலும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 06 தொகுதிகளிலும், அஸாம் மாநிலத்தில் 3 தொகுதிகளிலும், அருணாசலம் பிரதேச மாநிலத்தில் 2 தொகுதிகளிலும், மேகாஸா மாநிலத்தில் 2 தொகுதிகளிலும், அந்தமான் நிக்கோபார் தீவுகள் மாநிலத்தில் ஒரு தொகுதியிலும், லட்சத்தீவு மாநிலத்தில் ஒரு தொகுதியிலும், மிசோரம் மாநிலத்தில் ஒரு தொகுதியிலும், நாகலாந்து மாநிலத்தில் ஒரு தொகுதியிலும், மணிப்பூர் மாநிலத்தில் ஒரு தொகுதியிலும், காஷ்மீர் மாநிலத்தில் ஒரு தொகுதியிலும் நடைபெற விருக்கிறது.

இதேவேளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்க ளிலுள்ள 40 தொகுதிகளுக்கும் எதிர்வரும் மே மாதம் 13ம் திகதி நடைபெறவிருக்கிறது.  இந்தத் தொகுதிகளுக்கான வேட்பு மனுக்கள் ஏப்ரல் மாதம் 17ம் திகதி முதல் 24ம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்பட விருக்கிறது.

ஈழத்தமிழருக்காக தேமுதிக பிரமுகர் தீக்குளித்து மரணம்

kothamangalam-balasundharam.jpgஈழத் தமிழர்களை காக்கக்கோரி மேலும் ஒரு தேமுதிக பிரமுகர் தீக்குளித்து மரணம் அடைந்தார். புதுக்கோட்டை மாவட்டம் கொத்த மங்களம பகவான் தெருவைச் சேர்ந்தவர் பால சுந்தரம். 35 வயதான இவர் தேமுதிகவின் கிளைச்செயலாளராக உள்ளார். சமையல் தொழிலாளியான இவர் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என்று எந்தக் கட்சி சார்பில் நடந்தாலும், கட்சி பாகுபாடின்றி கலந்து கொள்வார்.

கீரமங்கலம், கொத்தமங்களம், வடகாடு ஆகிய ஊர்களில் ஈழத்தமிழர்ளின் அவல நிலையை விளக்கும் தட்டிகள் வைக்கப்பட்டிருந்தது. ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அனுமதி பெற்று வைக்கப்பட்டிருந்த இந்த தட்டிகளை காவல்துறையினர் அகற்றினர். இதை தாக்க முடியாத பால சுந்தரம், தனது கட்சிகாரர்களிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளார்.  இன்று (22.03.09) மதியம் 12 மணி அளவில், தனது வீட்டிற்கு வெளியே ஓடிவந்து மண்ணெண்ணெய்யை தனது மேல் ஊற்றி தீயிட்டுக்கொண்டார்.

இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் பாலசுந்தரத்தை காப்பற்ற முயன்றனர். ஆனால் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மும்பை பாணியில் தாக்குதல் நடத்தப்படும் என்று கோவை ஓட்டலுக்கு மிரட்டல்

மும்பை தாஜ் ஓட்டல் பாணியில் தாக்குதல் நடத்தப்படும் என்று கோவை ஓட்டல் ஒன்றிற்கு இ மெயில் மிரட்டல் வந்ததையடுத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை ரயில் நிலையம் அருகேயுள்ள ஓட்டல் ஒன்றிற்கு இமெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. அல் குவைதா இயக்கத்தின் பெயரில் வந்த இந்த மிரட்டல் இமெயிலில், மும்பை தாஜ் ஓட்டல் பாணியில் தாக்குதல் நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மிரட்டல் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

நவநீதம்பிள்ளை இன்று இந்தியாவுக்கு விஜயம்

navanethem.jpgஐ.நா.  மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இரு நாள் விஜயத்தை மேற்கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தியா செல்கிறார். இந்த விஜயத்தின் போது தேசிய, பிராந்திய, சர்வதேச மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாக அரசாங்க அதிகாரிகளுடனும் இந்திய மனித உரிமை ஆணைக்குழு பிரதிநிதிகளுடனும் விரிவான பேச்சுவார்த்தைகளை அவர் நடத்தவுள்ளதாக ஜெனீவாவிலுள்ள அவரின் அலுவலக உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசியாவுக்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தின் முதற்கட்டமாக கடந்த 17 ஆம் திகதி நவநீதம்பிள்ளை நேபாளத்திற்கு சென்றிருந்தார். அங்கு ஜனாதிபதி, பிரதமர் பிரசண்டா, ஐ.நா. அலுவலர்கள், மனித உரிமைப்பிரதிநிதிகளைச் சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

இலங்கையில் மோதல் பகுதிகளிலுள்ள மக்களின் மனித உரிமைகள் தொடர்பாக அண்மையில் கடுமையாக விமர்சித்திருந்த நவநீதம்பிள்ளையின் இந்திய விஜயம், அரசியல் அவதானிகளாலும் மனித உரிமை ஆர்வலர்களாலும் கூர்ந்து அவதானிக்கப்படுவதுடன் எதிர்பார்ப்புகளையும் தோற்றுவித்துள்ளது.

இலங்கையின் அயல்நாடும் பிராந்தியத்தில் வல்லரசுமான இந்தியாவுடன் இலங்கையின் மோதல்பகுதியில் சிக்கியுள்ள மக்களின் மனித உரிமைகள் , மனிதாபிமான நெருக்கடி என்பன தொடர்பாக இந்திய அதிகாரிகளுடன் நவநீதம்பிள்ளை ஆராய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப்படுகிறது.

நேபாளம் தொடர்பாக தனது பிந்திய அறிக்கையில் கருத்துத் தெரிவித்துள்ள ஐ. நா. மனித உரிமை ஆணையாளர், “நேபாளத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. முடியாட்சிக்குப் பதிலாக அங்கு குடியாட்சி மலர்ந்துள்ளது. ஆயினும் சமாதான நடவடிக்கைகளை வலுப்படுத்தும் விடயத்தில் சவால்கள் உள்ளன. மனித உரிமைகள் விவகாரத்தின் தனது ஈடுபாடுகளை அமுல்படுத்துவதற்குரிய வரலாற்று ரீதியான வாய்ப்பு நேபாளத்திற்கு கிட்டியுள்ளது’ என்று நவநீதம்பிள்ளை கூறியுள்ளார். 

இன்று சர்வதேச நீர்வள தினம் (world water day) – புன்னியாமீன்

22-031.jpgஇன்று மார்ச் 22  றியோ டி ஜெனீரோவில் 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற சுற்றாடல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஐக்கிய நாடுகள் மகாநாட்டில் செய்யப்பட்ட சிபாரிசையடுத்து மார்ச் 22 ஆம் திகதியை உலக நீர் தினமாக ஐ.நா.பொதுச் சபை பிரகடனம் செய்தது. அதைத் தொடர்ந்து கடந்த 16 வருடங்களாக இத்தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

அருந்தலாகக் கிடைக்கின்ற நீர்வளத்தை மனிதன் தன் தேவைக்குத் திட்டமிட்டுப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துவதற்காகவே இத்தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. சர்வதேச நீர்வள தினத்தின் கருப்பொருள் நீர்வளத்தை மதிப்பிட்டு மிகப் பயனுள்ள வகையில் அதனை முகாமைத்துவம் செய்தலாகும்.

உயிருள்ள அனைத்து ஜீவன்களினதும் இயக்கத்துக்கு ஆதாரம் நீர். உயிரற்ற ஜடங்களின் தூய்மை பேணவும் உதவுவது நீர். நீரின்றி உலகமே இல்லை. எல்லா வளங்களுக்கும் மூலவளம் நீரே. உலக மக்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த உன்னத பொக்கிசமே நீர். நீர் வளமானது சகல உயிரினங்களிதும் வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவையாகும். அதனை பயன்படுத்துவோர்களிடையே மேலும் மேலும் தேவைகள் அதிகரிப்பதனால் இன்று நீர் போட்டிப் பொருளாகவும்,  சந்தைப் பொருளாகவும் கூட மாறிவிட்டது.

பூமியெனும் உயிரின வாழ்விடத்தைத் தவிர வேறு எந்தக் கோளிலும் நீரில்லை என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக அங்கெல்லாம் உயிரினம் இல்லை என கூறப்படுகின்றது. வேற்றுக் கிரகங்களில் மரம் செடி கொடி,  ஆறு, குளம்,  ஓடைகளும் இல்லை. இதன் காரணமhகவே அந்தக் கிரகங்களில் உயிரினங்கள் இல்லையென இதுவரை கண்டுபிடிப்புக்கள் நிரூபித்துள்ளன.

நீர் உயிரின் ஆதாரம். உயிர்களனைத்துக்கும் அதுவே ஜீவாதாரம். நீர் இல்லை என்றால் இந்த உலகிலும் உயிருள்ள ஜீவன்கள் இருக்கமாட்டாது. உணவு இல்லை என்றால் அதனை உற்பத்தி செய்து கொள்ளலாம். உடை தான் இல்லை என்றாலும் அதனையும் உற்பத்தி செய்து கொள்ளலாம். ஆனால் நீர் இல்லாது போய் விட்டால் அதனை எந்த ஒரு சக்தியாலும் உற்பத்தி செய்யவே முடியாது.

மனித சமுதாயத்துக்கு நீரின் பயன் அளப்பரியது. பிறப்பிலும் வாழ்விலும் இறப்பிலும் கூட இணை பிரியாத இன்றியமையாத சாதனமாக விளங்குவது தண்ணீர். நீரின்றி நிலமில்லை,  நிலமின்றி நீரில்லை எனும் தத்துவத்தைப் போதிக்கும் மகத்துவம் நிறைந்த தண்ணீரின் பெருமைகளை மதங்களும் மகிமைப்படுத்துகின்றன.

ஒவ்வொரு வருடமும் உலக நீர் தினத்துக்கென ஒரு தொனிப்பொருள் பிரகடனம் செய்யப்படுகிறது. இன்றைய தினத்துக்கான தொனிப் பொருள் “எல்லைகளுக்கு அப்பாலான நீர்வளம்; நீரைப்பகிர்தல்,  வாய்ப்புக்களைப் பகிர்தல், (Transboundary waters; Sharing water, Sharing opportunities)  என்பதாகும். எல்லைகளுக்கு அப்பாலான நீர்வளங்களை கூட்டாக முகாமைத்துவம் செய்வதில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புக்களை உருவாக்குவதும் நாடுகள் மத்தியில் பரஸ்பர நம்பிக்கையைக் கட்டியெழுப்பி அமைதி,  சமாதானம்,  பாதுகாப்பு மற்றும் நிலைபேறான பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்துவதுமே இத் தொனிப்பொருளின் நோக்கமாகும்.

நீர்வளத்தின் முக்கியத்துவம் எல்லாக் காலங்களிலும் உணரப்பட்டு வந்துள்ளது. உலக வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்கும்போது புகழ்பெற்ற உலக நாகரிகங்கள் எல்லாம் நீர் நிலைகளை அடிப்படையாகக் கொண்டே தோன்றியுள்ளன. நைல் நதி,  சிந்து நதி, யூப்பிரடிஸ்,  தைகிறீஸ் போன்றன உலக நாகரிகங்களின் பிறப்பிடங்கள் எனப்படுகின்றது. எனவே இத்தகைய நாகரிக எழுச்சியின் மூலமே நீர் என்பது புலனாகின்றது.

பூமியின் நிலப்பரப்பில் 75 சதவீதம் இருப்பது நீர் எனினும் உலக சனத்தொகையின் ஒவ்வொரு நான்கு பேரிலும் மூவர் அருந்துவதற்கு தூய நீரின்றி அவதிப்படுகின்றனர். எமது நாட்டின் 25 மாவட்டங்களுள் 14 மாவட்டங்களில் வாழும் மொத்த சனத்தொகையின் 33 சதவீதமானவர்களுக்கு தூய குடிநீர் கிடைப்பதில்லை.   உலக நீர்ப்பரப்பில் 97.5 சதவீதம் உப்புநீராகவும், 2.5 சதவீதம் நன்னீராகவும் உள்ளது. நன்னீர்ப் பரப்பிலும் 69சதவீதம் பனிக்கட்டியால் மூடப்பட்ட பிரதேசமாகும். 30சதவீதம் நிலக்கீழ் நீர். 3சதவீதம் நன்னீர் ஏரிகளும்,  நதிகளும் எஞ்சிய பகுதி ஈரழிப்பு தரைப் பிரதேசங்களுமாகும்.

உலகளாவிய ரீதியில் பார்க்கும்போது நீரை அதிகமாகப் பயன்படுத்தும் துறை விவசாயமாகும். 85 சதவீதம் விவசாயத்துக்காக நீர் பயன்படுத்தப்படுகின்றது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கைத்தொழில்த்துறை 10 சதவீதத்தைப் பயன்படுத்துகின்றது. எஞ்சிய 5 சதவீதமே வீட்டுப் பாவனைக்குரியது. எனவே, அருமையாக உள்ள வளத்தை மக்கள் தற்போது எவ்வாறு பாவிக்கின்றார்கள் என்பதைப் பொறுத்தே எதிர்கால மக்களின் வாழ்வு அமையுமென குறிப்பிடப்படுகின்றது.

நகரமயமாக்கல் பல்வேறு நீர்ப்பிரச்சினைக்குக் காரணமாகின்றது. குடிநீர் போதாமை,  சுகாதாரம் பேணப்படாமை மற்றும் நீர் மூலம் உண்டாகும் வியாதிகள் என்பவற்றுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது. உலகில் வறிய நாடுகள் நிலக்கீழ் நீரையும் பெற்றுக் கொள்ளும் அளவில் தகாமுள்ளவையாக இருக்கின்றன. காரணம் காடழிப்பு, வனாந்திரமாதல் ஆகியவற்றால் மழைவீழ்ச்சி குறைவடைந்து வருகின்றமையாகும். 

வருடாந்தம் சனத்தொகை 90 மில்லியனால் அதிகரித்துச் செல்கின்றது. அந்தளவு நீரைப் பயன்படுத்தும் மக்களும் அதிகரிக்கின்றனர். நீர் தீர்ந்துபோன ஒரு வளம் என்பது பற்றிய உலகளாவிய விழிப்புணர்வு,  றியோடி ஜெனிரோவில் நடந்த புவி உச்சி மகாநாட்டிலும் 1992ல் நீரும் சுற்றாடலும் பற்றிய டப்ளின் மகாநாட்டிலும் பிரதிபலித்தது. றியோ – டப்ளின் மகாநாட்டுக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒருங்கிணைக்கப்பட்ட நீர்வள முகாமைத்துவம் சம்பந்தமாக சர்வதேச நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்பட்டன. வீட்டுப் பாவணையாளர் சங்கங்களும், கமக்காரர் அமைப்புக்களும் முறையே வீட்டுத்தேவை,  விவசாயத்தேவை என்பனவற்றுக்காக நீரை முகாமைத்துவம் செய்வதற்கு ஊக்குவிக்கப்பட்டார்கள்.

உலகில் பாதுகாப்பான நீரின்றி 8 செக்கன்களுக்கு ஒரு குழந்தை என்ற விகிதத்தில் மரணம் நிகழ்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு வருடமும் உலகில் ஒரு கோடியே 50 இலட்சம் குழந்தைகள் சாவதற்கு பாதுகாப்பற்ற குடிநீர் முதல் காரணமாக அமைகிறது. நீர் தொடர்பான நோய்களினால் இறப்பவர்களின் எண்ணிக்கை வருடாந்தம் அதிகரித்துக் கொண்டே போகிறது. உலகில் மூவரில் ஒருவருக்குப் பாதுகாப்பான குடிநீர் உறுதி செய்யப்படவில்லை. நீர்ப் பற்றாக்குறையும் புவி வெப்பமயமாதலும் மனித குலம் இன்று எதிர்கொள்ள ஆரம்பித்திருக்கும் பேராபத்துக்களாகும்.

இவ்விரு பேராபத்துக்களையும் சமாளிப்பதற்கு உலக நாடுகள் தங்களை எந்தளவுக்கு உருப்படியான முறையில் தயார்படுத்தியிருக்கின்றன என்பதை நோக்கும் போது வேதனையே மிச்சமாகிறது. ஒரு குடம் நீர் வேண்டி மைல்கணக்கில் நடக்கும் மக்கள் உலகில் வாழ்கிறார்கள் என்பதை மறந்து நாம் பொறுப்புணர்வின்றி வாழக் கூடாது. நீரின்றி அமையாது உலகு என்று வள்ளுவர் சொன்னதை மனதிலிருத்திச் செயற்படுவோம்!

நீர்ப்பிரச்சினைகளின் பாரதூரமான விளைவுகள் குறித்து நீண்டகாலமாக ஆராயப்பட்டு வந்துள்ளது. விதப்புரைகள் 1977ல் ஆஜண்டீனாவில் நடந்த ஐ.நா.வின் நீர்வள மகாநாட்டில் உருவாக்கப்பட்டன. அதன்பின் 1992ல் நடந்த றியோ மகாநாடு, 1994ல் றியோவில் நடந்த சுற்றாடலும் அபிவிருத்தியும் மகாநாடு என்பன உலகில் நன்னீர் வளங்களை மதிப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்தின. 1997ல் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபை இதனை நடைமுறைப்படுத்துவதற்கு அங்கீகாரம் வழங்கியது.

உலக வானிலை அவதான அமைப்பும் ; (WMO) யுனெஸ்கோவும் 1997ல் உலக நீர்வள தினத்தைக் கொண்டாடுவதற்கான தலைமை முகவராகப் பணியாற்றின. சென்னை நீரியல்துறை அறிஞர் பேராசிரியர் ஏ. மோகனக் கிருஸ்ணன் கூற்றுப்படி உலகிலுள்ள 240 பெரும் ஆறுகள் உள்ளுர்ப் பாவணைக்கு போதுமானவையாகவே உள்ளன. பெருகிவரும் சனத்தொகையால் நீர்வளம் அருகி வருகின்றது. 21ம் நூற்றாண்டில் இந்நிலை மேலும் உக்கிரமடையும் உலக யுத்தம் ஒன்று மீண்டும் ஆரம்பிக்குமானால் அது நீருக்காகவே ஏற்படும்.

இலங்கையில் வழமையாக உலக நீர் தினத்தில் நீர் முகாமைத்துவத்துடன் தொடர்புடைய அமைச்சரின் செய்தியும் பத்திரிகைகளில் விசேட அனுபந்தங்கள் மற்றும் கட்டுரைகளும் வெளியாகுவதைத் தவிர,  மக்கள் மத்தியில் பெரியளவில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய உருப்படியான செயற்றிட்டங்கள் எதுவுமே முன்னெடுக்கப்படுவதில்லை. நீர்ச்சிக்கனம்,  நீர்த் தூய்மை,  நீர்ச் சேமிப்பு குறித்து விழிப்புணர்வும் அக்கறையும் எம்மத்தியில் எந்தளவுக்கு இருக்கிறது என்பது மனச்சாட்சியைத் தொட்டுப்பார்க்கும் போது ஒவ்வொருவருக்கும் பிரகாசமாக விளங்கும். வீதியோரக் குழாயில் நீர் வீணே வடிந்து கொண்டிருக்கும் போது ஒரு நிமிடம் தாமதித்து நின்று அக்குழாயைப் பூட்டுவதற்கு எம்மில் எத்தனைபேர் உண்மையில் மானசீகமாக அக்கறைகாட்டுகிறோம். நீர் விவகாரத்தில் இது எமது மனச்சாட்சிக்கு ஒரு அமிலப் பரீட்சையாகவே அமைந்துவிடுகிறது.

இலங்கையின் நீர்வள முகாமையின் வரலாறு பெரும்பாலும் வழங்கல் வரலாறாகவே இருந்தது. பண்டைய நீர்ப்பாசனக் குளங்கள் தேவையான நீரை விநியோகித்தன. இலங்கையின் தற்போதைய நீர் நிலைமை பற்றி விவசாயத்துறை நிபுணர் கலாநிதி சி.ஆர். பானப்பொக்கே நமது நீர்ப்பாவனை பற்றி நாம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீர்ப்பாவனை குறித்து நமது பழக்கவழக்கங்களும். பண்பாடும் மாறவேண்டும். இன்றேல். அடுத்த நூற்றாண்டில் நாம் பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்கவேண்டி ஏற்படும் என்று கூறியுள்ளமை சிந்திக்கத்தது.

தற்போது இலங்கையில் நீர் முகாமைத்துவ நடவடிக்கைகள் ஆசிய அபிவிருத்தி வங்கி, USAID தாபனம் ஆகியவ்றின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படுகின்றன. தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை குடிநீரை விநியோகிக்கின்றது.

நீர் பற்றி செவ்விந்தியத் தலைவர் Siyattle கூறியுள்ள கூற்று நீரின் அருமையைக் குறித்து எமது சிந்தனையைத் தூண்டுவதாகும். இந்த நாடு நமக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்கு அருவிகளிலும், ஆறுகளிலும்,  ஓடும் ஒளிர்விடும் நீர் வெறுமனே நீர் அன்று. இது எம் முன்னோரின் இரத்தம்,  அவை புனிதமானது என்பதை நினைவு கூர வேண்டும். மேலும் எமது பிள்ளைகளுக்கும் அவற்றின் புனிதத் தன்மையையிட்டு அறிவுறுத்த வேண்டும்.  

உலக நீர் தினம் நினைவு கூறப்பட்டால் மட்டும் போதாது. அதன் தாற்பரியம் பேணப்படல் வேண்டும். மனித வாழ்வோடும் சடங்கு சம்பிரதாயங்களோடும் பின்னிப் பிணைந்தது தண்ணீரின் வரலாறு. உலக முன்னேற்றத்துக்கேற்ப,  சனத்தொகைப் பெருக்கத்துக்கேற்ப, தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப நீரின் தேவை நாளும் பொழுதும் அதிகரித்து வருகிறது. அதே வேளை தூய நீரின் எல்லை அருகிவருகிறது. நாம் நாமே நினைக்காத வரையில் நீர்ப்பற்றாக்குறை நீங்குவது சாத்தியமல்ல. நீரை வீணே விரயம் செய்வதும்,  எல்லை இன்றி பயன்படுத்துவதும், நீர்ப்பற்றாக்குறை நிதமும் நிலவவே வழி செய்யும்.

எனவே,  நீர் எங்கள் உயிருக்கு நேர் என்று நாம் கருதி செயல்பட வேண்டும். ஒவ்வொரு துளி நீரும் ஒவ்வொரு பவுண் தங்கம் என எண்ணி நாம் நடந்து கொள்ள வேண்டும். நீர் இன்றேல் பார் இல்லை என்று நாம் கருத வேண்டும். அனைத்து வளங்களுக்கும் தாய்வளம் தண்ணீர். ஊர் வளம் பெறஇ பார் வளம் பெற நீர் வளம் காப்போம் என இன்றைய தினத்தில் திட சங்கற்பம் பூணுவோம்.

44 வகையான விசேட மருந்துப் பொருட்களுடன் கிறீன்ஓஷியன் கப்பல் புதுக்குடியிருப்பு விரைவு

sb_diwarathnass.jpgபுதுக் குடியிருப்பு, புது மாத்தளன் பகுதியிலுள்ள மக்களுக்கென 44 வகையான விசேட மருந்துப் பொருட்களுடன் கிறீன்ஓஷியன் கப்பல் நேற்று மாலை புறப்பட்டுச் சென்றதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண தெரிவித்தார்.

எம்பிசிலின் போன்ற என்டி பயோடிக் (நோய் முறிப்பு) மருந்துப் பொருட்கள் அடங்கிய பொதிகளுடன் நேற்று புறப்பட்டுச் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மருந்துப் பொருட்களை புதுமாத்தளன் பகுதியில் இறக்கிய பின்னர் திரும்பிவரும் கிறீன்ஓஷியன் கப்பல் மீண்டும் அடுத்தவாரம் சுமார் 2000 லக்டோஜன் குழந்தைகள் பால்மா, 2000 என்கர் பிளஸ் வன் குழந்தைகள் பால்மா என்பவற்றுடன் மீண்டும் புதுமாத்தளன் பகுதிக்கு கப்பல் புறப்பட்டுச் செல்லும் என்றும் அத்தியாவ சிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பி. திவாரட்ண கூறினார்.

அத்துடன் ஏ-9வீதியூடாக 20 லொறிகளில் பொருட்கள் அனுப்பப்படவுள்ளதாகவும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் தெரிவித்தார்.

எதிர்வரும் வியாழக்கிழமையன்று கொழும்பு வெலி சரை களஞ்சியசாலையிலிருந்து 20 லொறிகளும் புறப்படவுள்ளன. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அல்லாத கோழித்தீன், மாட்டுத்தீவனம், அடங்கலான சுமார் 300 மெற்றிக் தொன் பொருட்கள் 20 லொறிகளில் கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்தமுறை போன்றே யாழ். குடாநாட்டிலிருந்து இறால், கருவாடு, வெங்காயம் போன்ற பொருட்கள் கொழும்புக்கு கொண்டு வரப்படவுள்ளன. இவை யாழ். நாவற்குழி களஞ்சிய சாலையிலிருந்து கொண்டு வரப்படும்.

ஏ-9 வீதியூடாக யாழ். குடாநாட்டுக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லல் மற்றும் யாழ். உற்பத்திப் பொருட்களை கொண்டுவருதல் போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளமையையிட்டு யாழ். வர்த்தகர் சங்கம் வெகுவாக பாராட்டியுள்ளதுடன் தொடர்ந்தும் தமது சங்கம் அரசுக்கு ஒத்துழைப்புகளை வழங்கும் என தெரிவித்துள்ளதாகவும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண மேலும் தெரிவித்தார்.

ஈரானுக்கு ஏவுகணை விநியோகம்; ஒப்புக்கொண்டது ரஷ்யா

iran.jpgஈரானுக்கு அதிநவீன ஏவுகணைகளை விநியோகம் செய்ய இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒப்பந்தம் மேற்கொண்டதை ரஷ்யா தற்போது அங்கீகரித்தது. அமெரிக்க ஜனாதிபதியாக புஷ் இருந்த போது ஈரான் நாட்டை “ரவுடி நாடு” என குறிப்பிட்டிருந்தார்.

“ஈரான் அரசால் அன்டை நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் ஆபத்து ஏற்படும் என எச்சரித்திருந்தார். இந்நிலையில், ஈரான் நாட்டுக்கு அதிநவீன எஸ். 300 ரக ஏவுகணையை விநியோகம் செய்ய இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரஷ்யா ஒப்பந்தம் மேற்கொண்டது.

இந்த விஷயம் சமீபத்தில் அம்பலமானது. இதையடுத்து ரஷ்யா இந்த உண்மையை ஒப்புக்கொண்டது இது குறித்து ரஷ்ய இராணுவ அதிகாரி ஒருவர் குறிப் பிடுகையில், “எஸ். 300 ஏவுகணையை ஈரானுக்கு விநியோகம் செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டாலும், சர்வதேச சூழ்நிலையை கருத்தில் கொண்டு நாங்கள் ஏவுகணையை விநியோகிக்கவில்லை இன்னும் அந்த ஒப்பந்தம் காலாவதியாகவில்லை.

படிப்படியாக இந்த ஒப்பந்தத்தை அமுல் செய்ய யோசித்து வருகிறோம் என்றார். ஈரானுக்கு இந்த ஏவுகணையை விநியோகம் செய்தால் ரஷ்யா மேற்கத்திய நாடுகளின் பகையை சம்பாதித்துக்கொள்ள வேண்டியிருக்கும் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இயக்குனர் சீமானுக்கு விளக்கமறியல் நீடிப்பு

seeman.jpgஇலங் கைத் தமிழர் பிரச்சினைக்காக புதுச்சேரி அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் கடந்த பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர். இப்போராட்டத்தில் கலந்து கொண்ட இயக்குனர் சீமான், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக புதுச்சேரி காவல்துறையினர் அவர் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக இயக்குனர் சீமான் நெல்லை பொலிஸ் ஆணையர் மஞ்சுநாதா முன்னிலையில் சரண் அடைந்தார். இதைத் தொடர்ந்து இயக்குனர் சீமானை கைது செய்த பொலிஸார், புதுச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு நேற்று புதுச்சேரி மாவட்ட உதவி அமர்வு நீதிமன்ற நீதிபதி பொங்கியப்பன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி இயக்குனர் சீமானிடம், நீங்கள் விடுதலை பிணை கேட்டு உள்ளீர்களா என்று கேட்டார். அதற்கு இயக்குனர் சீமான், இது சம்பந்தமான விவாதம் வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து, சீமானை எதிர்வரும் 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்

விடுதலைப்புலிகள் பெயரில் குண்டு மிரட்டல்

kerala-airport.jpgகேரளாவில் உள்ள விமான நிலையங்களை குண்டு வைத்து தகர்க்கப்போவதாக விடுதலைப்புலிகள் இயக்கம் சார்பில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள இந்தியன் ஏர்லைன்ஸ் அலுவலகத்துக்கு நேற்றிரவு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், நான் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவன். இன்னும் 3 மணி நேரத்தில் கேரளாவில் உள்ள ஒரு விமான நிலையத்தை குண்டு வைத்து தகர்க்கப் போகிறோம்என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டான்.

இது குறித்து கேரள போலீசாருக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் உடனடியாக தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்த விமான நிலையங்களில் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு பிரிவு போலீசாரும் மத்திய தொழிற் பாதுகாப்பு படை போலீசாரும் தீவிர சோதனை நடத்தினர். விமான நிலையத்துக்கு வருபவர்கள், பயணிகள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். பயணிகளின் உடமைகளும் சோதனையிடப்பட்டன. புலிகள் பெயரில் குண்டு மிரட்டல் வந்ததால் கேரளாவில் பரபரப்பாக இருக்கிறது.