அப்பாவித் தமிழ் மக்களுக்காக அரசாங்கம் வழங்கி வரும் நிவாரண உதவிகளிலேயே புலிகளின் தலைவர் பிரபாகரன் தங்கி வாழ்கிறார். தேவையேற்படின் எல்.ரீ.ரீ.ஈ. களை 4 நாட்களுக்குள் முற்றாக ஒழிப்பதற்கான ஆற்றல் அரசுக்கும் படையினருக்கும் உண்டு என போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பு, மகாவலி நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை பாதுகாப்புப் படையினர் உலக யுத்த வரலாற்றில் புதியதோர் அத்தியாயத்தை பதித்துள்ளனர். எமது உண்மையான எதிரிகளான புலிகள் ஒழிந்துள்ள இடத்தை படையினர் கண்டுபிடித்துள்ளபோதும் பொதுமக்களைப் பாதுகாப்பாக மீட்பதற்காக புலிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதில்லை.
புலிகளுக்கு அரசாங்கத்தினால் அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களை முடக்கி விட்டால் அவர்கள் இயற்கை மரணத்தை எய்துவார்கள். எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதியின்படி உணவை ஒருபோதும் ஆயுதமாகப் பயன்படுத்தாது.
பயங்கரவாதத்துக்கெதிராக அரசாங்கமும் பாதுகாப்புப் படையினரும் ஈட்டிய கௌரவமான வெற்றியை சர்வதேச சமூகம் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.