கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

சோமாலியக் கடலில் தொடரும் கப்பல் கடத்தல்கள்

somaliya-robbery.jpgசோமா லியாவை அண்டிய ஏடன் வளைகுடா பகுதியில், சர்வதேச கடல் சார் படையினர் பாதுகாப்பை அதிகப்படுத்தி வருகின்ற அதேவேளையில், மேலும் இரண்டு சரக்குக் கப்பல்களைக் கைப்பற்றியுள்ள சோமாலிய கடற்கொள்ளையர்கள், மூன்றாவது ஒரு கப்பலின் மீது சுட்டும் உள்ளார்கள்.

இரண்டு நாட்களில் கடத்தப்பட்ட நான்காவது கப்பலாக டோகோ கொடியுடன் பயணித்த ஒரு 5000 தொன் கப்பல் அமைகின்றது. 24 மாலுமிகளுடன் கிரேக்க கப்பல் ஒன்று கடத்தப்பட்டதை அடுத்து இந்த கப்பலும் கடத்தப்பட்டுள்ளது.

மேலும் இருபது மாலுமிகளுடன் இரு எகிப்திய படகுகளும் கடத்தப்பட்டுள்ளன. லைபீரிய கொடியுடன் பயணித்த ஒரு கப்பலின் மீது சிறிய படகுகளில் வந்த கடற்கொள்ளையர்கள் சுட்டிருக்கிறார்கள்.

மேலும் 514 பேர் கிறீன் ஓசன் கப்பல் மூலமாக புல்மோட்டை பகுதிக்கு

taking-to-green-ocean.jpgஇலங் கையின் வடக்கே புதுமாத்தளன் மருத்துவமனையில் இருந்து நேற்று மேலும் ஒரு தொகுதி நோயாளர்களும், அவர்களது உறவினர்களுமாக 514 பேர் கிறீன் ஓசன் கப்பல் மூலமாக திருகோணமலை மாவட்டத்தில் உள்ள புல்மோட்டை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள 48 மணிநேர மோதல் தவிர்ப்பு நடவடிக்கை நடைமுறையில் இருக்கும் வேளையில் திங்கள் கிழமையன்றும் இவ்வாறான ஒரு தொகுதி நோயாளர்கள் புல்மோட்டை பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

லாலு மீது நடவடிக்கை இல்லை.

laluprasat.jpgவருண் காந்தியை ரோடு ரோலரை ஏற்றி கொன்றிருப்பேன் என்று பேசிய ரயில்வே அமைச்சர் லாலுவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இதற்கு “சட்டம் என்கிற ரோலரை’ என்ற பயன்படுத்து சட்டப்படி நசுக்கியிருப்பேன் என்பதைத் தான் அப்படிக் கூறினேன் என்று லாலு விளக்கமளித்தார். இந்நிலையில், துணை தேர்தல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், வருண் காந்தி ஒரு சமூகத்துக்கு எதிராகப் பேசியதால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. லாலு தனிப்பட்ட நபருக்கு எதிராகப் பேசியதால் கடும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மூத்த தலைவர் என்ற முறையில் லாலு அத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது. எனவே, அவர்களது பேச்சுகள் குறித்து தேர்தல் ஆணையம் கடும் அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்கிறது என்றார்.

இரண்டு நாள் அமைதிக்குப் பின்னர் மோதல்கள் மோசமாக வெடிக்கலாம் ?

pokkanai.jpgஅரசாங் கத்தின் மோதல் தவிர்ப்பு நடைமுறையில் இருக்கின்ற போதிலும், திங்கள் கிழமை இரவு பத்து மணி முதல் அதிகாலை வரையில் பாதுகாப்பு வலயத்தில் உள்ள வலைஞர்மடம் பகுதியின் எல்லைப்புறத்தில் இரு தரப்புக்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சமர் தொடர்ச்சியாக இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர் நிறுதத்ம் இருந்த காலத்தில் 93 பொதுமக்கள் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் புதுமாத்தளன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவி்த்திருக்கின்றன. 6 பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு தினங்களிலும் பொதுவாக ஷெல் தாக்குதல்கள் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்ற போதிலும், துப்பாக்கிச் சண்டைகள் நடைபெறுகின்ற பகுதிகளில் ஒன்றிரண்டு மோட்டார் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று நள்ளிரவுடன் அரசாங்கத்தின் மோதல் தவிர்ப்பு முடிவுக்கு வருவதையடுத்து, அடுத்து என்ன நடக்கப்போகின்றதோ என்ற ஓர் அச்ச உணர்வு பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் இருக்கும் மக்கள் மத்தியில் மேலோங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு நாள் அமைதிக்குப் பின்னர் மோதல்கள் மோசமாக வெடிக்கலாம் என்று அந்த மக்கள் மத்தி்யில் எதிர்பார்ப்பு நிலவுவதாகவும் கூறப்படுகின்றது.

தற்காலிக போர்நிறுத்தத்தின் முதல் நாளன்று இராணுவம் சிவிலியன்கள் மீது தொடர்ச்சியாக ஷெல் தாக்குதல்கள் நடத்தியதாக விடுதலைப்புலிகள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ள இராணுவம், அரச படைகளின் மீது கடுமையான இய்திரத்துப்பாக்கித் தாக்குதல்களை விடுதலைப்புலிகளே மேற்கொண்டதாகக் கூறியிருக்கின்றது.

வை.கோ விடயத்தில் சட்டம் அதனுடைய வேலையைச் செய்யும் – ராகுல் காந்தி

rahul.jpgஇலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டாரானல் இந்தியாவில் இரத்த ஆறு ஓடும் என தமிழ் நாட்டு அரசியல்வாதிகளில் ஒருவரான வை.கோபாலசாமி தெரிவித்திருந்தார். இன்று கொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் பதிலளித்த இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் புலிகளால் படுகொலைசெய்யப்பட்ட இந்திய முன்னாள் பிரதமரின் புத்திரருமான ராகுல் காந்தி அவர்களிடம் வை:கோ வின் கருத்து தொடர்பாக கேட்ட போது, அவருடைய கருத்தை இந்தியச் சட்டம் கையாளும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரிக்கப்போவதில்லை எனவும் ஆனால் இலங்கையில் தமிழ் மக்கள் துன்புறுத்தப்படுவதை அனுமதிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

வெறிப் பேச்சு பேச மாட்டேன். ஜாமீ்ன் கோரும் வருண்

india-varun.jpgஇனிமேல் மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேச மாட்டேன் என்று உச்ச நீதிமன்றத்தில் பாஜக வேட்பாளர் வருண் காந்தி உறுதியளித்து மனு தாக்கல் செய்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபிட் தொகுதியில் போட்டியிடும் வருண் காந்தி, தனது பிரசாரத்தின்போது முஸ்லிம்களின் கையை வெட்டுவேன், தலையை வெட்டுவேன் என்றார்.

இதையடுத்து அவர் மீது தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி பல நீதிமன்றங்களை அணுகினார் வருண். ஆனால், ஜாமீன் மறுக்கப்பட்டதையடுத்து ஊர்வலமாக வந்து சரணடைந்தார். அந்த ஊர்வலத்தின்போதும் பெரும் கலவரம் நடந்தது. இதையடுத்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தார் உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி.

இதை எதி்ர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் வருண். மேலும் தன்னை இடைக்கால ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பிலிபிட் தொகுதியில் வருண் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்யவும், பிரசாரம் தொடங்கவும் வசதியாக இந்த மனுவை அவசர மனுவாகக் கருதி விசாரிக்க வேண்டும் என்று வருண் காந்தி தரப்பு கோரியது.

அடுத்த மதத்தினரை ஆத்திரமூட்டும் வகையில் பேச மாட்டேன் என்று வருண் காந்தி உறுதியளித்தால் அவரை ஜாமீனில் விடுவிக்க ஆட்சேபம் இல்லை என்று உத்தரப் பிரதேச அரசு வழக்கறிஞரும் தெரிவித்தார்.

இதையடுத்து தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், ஜாமீனில் விடுவித்தால் ஆத்திரமூட்டும் வகையிலோ அல்லது மத உணர்வுகளைத் தூண்டு வகையிலோ பேச மாட்டேன் என வருண் காந்தி உறுதிமொழிப் பத்திரம் வழங்க வேண்டும். அப்போதுதான் அவரை ஜாமீனில் விடுவிக்க முடியும் என்று நிபந்தனை விதித்தார். இந்த நிபந்தனையை ஏற்றுக் கொள்வதாக வருண் காந்தி சார்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை வரும் 16ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி, அன்றைய தினம் வருண் காந்தியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வழங்கப்படும் என்றார்.

ஜெ. சொத்து குவிப்பு வழக்கு: உயிரூட்ட திமுக புது உத்தி!

jayalalitha.jpgமுன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மீது திமுக ஆட்சியில் தொடரப்பட்ட லண்டன் ஹோட்டல் வழக்கை வாபஸ் பெற விரும்புவதாக தமிழக அரசு திடீரென தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் அது மனு செய்துள்ளது. கடந்த கால திமுக ஆட்சியில், ஜெயலலிதா மீது பல வழக்குகள் தொடரப்பட்டன. அதில் முக்கியமானவை முதல்வர் பதவியைப் பயன்படுத்தி லண்டனில் ஹோட்டல் வாங்கியது தொடர்பான வழக்கு மற்றும் வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து குவித்த வழக்கு.

இந்த இரண்டு வழக்குகளும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி பெங்களூர் தனி கோர்ட்டுக்கு கடந்த 2003ம் ஆண்டு மாற்றப்பட்டன. அன்று முதல் இவை நிலுவையில் உள்ளன. இந்த இரண்டு வழக்குகளும் முதலில் தனித் தனியான வழக்குகளாகத்தான் இருந்தன. ஆனால் பின்னர் பெங்களூர் தனி கோர்ட் இவை இரண்டையும் ஒன்றாக்கியது.

இதை எதிர்த்து திமுக சார்பில் அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதையடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் கடந்த 2005ம் ஆண்டு இடைக்காலத் தடை விதித்தது. இந் நிலையில், லண்டன் ஹோட்டல் வழக்குக்குப் போதிய ஆதாரங்கள் இல்லாததால் அந்த வழக்கை திரும்பப் பெற விரும்புவதாகவும், அதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், லண்டன் ஹோட்டல் வழக்கில் பெங்களூர் கோர்ட்டில் ஆஜராகியுள்ள அரசின் சிறப்பு நீதிபதி பி.வி. ஆச்சார்யா தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், லண்டன் ஹோட்டல் வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை. எனவே இந்த வழக்கை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.

இதுகுறித்து ஆச்சார்யா மேலும் கூறுகையில், லண்டன் ஹோட்டல் வழக்கு கேஸ் டைரியை ஆய்வு செய்தபோது 2001ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி புதிய விசாரணை அதிகாரி சுப்புராமன், சிறப்பு நீதிபதியின் அனுமதியைப் பெற்று மேல் விசாரணை நடத்தியுள்ளார். அப்போது அவர் விசாரணை நடத்திய அமலாக்கப் பிரிவு துணை இயக்குநர் சுப்ரமணியன் என்பவர், லண்டன் ஹோட்டல் வழக்கில், ஜெயலலிதாவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளதாக பதிவு செய்துள்ளார் சுப்புராமன்.

லண்டன் ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் சுப்ரமணியன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், லண்டனில் ஒரு வேளை ஜெயலலிதா சொத்து வாங்கியிருந்தாலும் (ஹோட்டல்) கூட அதை நிரூபிப்பது மிகவும் கடினமானதாகும்.

எனவே இந்த வழக்கை தொடர்ந்து நடத்துவது என்பது மிகவம் சிரமமானதாகும். போதிய ஆதாரங்கள் இல்லாததால் இதை வெற்றிகரமாக நடத்த முடியும் என நான் நினைக்கவில்லை என்று ஆச்சார்யா கூறியுள்ளார். எனவே இந்த வழக்கை விலக்கிக் கொள்வது குறித்து முடிவெடுக்க சிறப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இருப்பினும் தற்போது இந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனவே இந்த வழக்கை விலக்கிக் கொள்ள பெங்களூர் சிறப்பு அரசு வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும். இதுதொடர்பாக பெங்களூர் தனி நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உரிய அறிவுறுத்தல்களைப் பிறப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணையை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி சதாசிவம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் ஒத்திவைத்துள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தவிர அவரது தோழி சசிகலா, வி.என்.சுதாகரன், டிடிவி தினகரன், இளவரசி ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசின் இந்த திடீர் நடவடிக்கை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. நீண்ட காலமாக பெங்களூர் தனி கோர்ட்டில் கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்குக்கு உயிர் கொடுத்து அதை விசாரணைக்குக் கொண்டு வர வேண்டும் என தமிழக அரசு குறிப்பாக திமுக விரும்புவதாக தெரிகிறது.

அதற்கு இடைக்கால தடை முட்டுக்கட்டையாக உள்ளது. திமுக அரசைப் பொறுத்தவரை லண்டன் ஹோட்டல் வழக்கை விட சொத்துக் குவிப்பு வழக்குதான் முக்கியமானது. எனவே லண்டன் ஹோட்டல் வழக்கை தூக்கிப் போட்டு விட்டு சொத்துக் குவிப்பு வழக்குக்கு உயிர் கொடுக்கும் வகையிலேயே இந்த திடீர் முடிவை திமுக அரசு எடுத்ததாக தெரிகிறது. லண்டன் வழக்கை வாபஸ் பெற்று விட்டால், தானாகவே சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

போர் நிறுத்தம் பற்றி இரு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டு

dr-palitha.jpgதமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு இலங்கை ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட இரண்டு நாள் மோதல் நிறுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் மக்களைக் கட்டாயப்படுத்தி வேலைவாங்கி, பாதுகாப்பு மண் அரண்களை உருவாக்கிக் கொண்டுள்ளதாக இலங்கை வெளியுறவுத் துறைச் செயலர் டாக்டர் பாலித கொஹன்னா குற்றம் சாட்டினார்.

போர் நிறுத்ததை நீடிப்பது பற்றி பேசுவதை விட, மோதல் நிறுத்த காலத்தில் புலிகள் தமது கட்டுப்பாட்டில் இருந்தவர்கள் வெளியேற அனுமதிக்க மறுத்தது ஏன் என்ற கேள்வி முதலில் எழுப்பப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

அதே நேரத்தில் அரசின் இந்த மோதல் நிறுத்த அறிவிப்பை, கண்துடைப்பு என்றும் ஒரு அரசியல் நாடகம் என்றும் விடுதலைப் புலிகள் விமர்சித்துள்ளனர்.

48 மணி நேர போர் நிறுத்த அறிவிப்புக் காலத்தில் 40 பொதுமக்கள் மட்டுமே அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வருகை

puthukkudi.gifவன்னியில் உள்ள மக்களை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் அறிவிக்கப்பட்ட 48 மணி நேர  போர் நிறுத்த காலத்தில் இன்று 40  பொதுமக்கள் மாத்திரமே படையினரின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இவர்களில்  வடமராட்சி கிழக்கிலிருந்து படகு மூலம் வடமராட்சி, பருத்தித்துறை முனைப் பகுதிக்கு கடல் மார்க்கமாக 26 பேரும், வவுனியாவுக்கு தரை மார்க்கமாக 14 பேரும் வந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தநிலையில் பருத்தித்துறைக்குச் சென்ற 26 பொதுமக்களும்  தென்மராட்சியிலுள்ள நலன்புரி  முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக யாழ். செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இறையாண்மைக்கு எதிராக வைகோ பேசவில்லை: ஜெயலலிதா.

jaya.jpgஅதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பிரதமர் பதவி மேல் தனக்கு ஆசை இல்லை என தெரிவித்துள்ளார்.

அவர் மேலும்,  ‘’அ.தி.மு.க., தமிழகத்தில் இடதுசாரிகள், பா.ம.க., மற்றும் ம.தி.மு.க., வுடன் கூட்டணி வைத்துக் கொண்டிருப்பதாக கூறியவர் மத்தியில் பா.ஜ., காங்., இல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்பதே தனது கூட்டணியின் லட்சியம் எனவும் கூறினார்.

தேர்தலுக்கு பின் வேறு எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு, ஒரு நல்ல அரசியல்வாதி எந்த ஒரு வாய்ப்பையும் நழுவ விடமாட்டார், அ‌தனால் அம்மாதிரியான கூட்டணி தோழமை கட்சிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகு அமைக்கப்படலாம். ஆனால் இப்போது அது குறித்து பேசுவது பொறுத்தமாக இருக்காது என்றார்.

வைகோ இலங்கை பிரச்னை குறித்து விடுத்து வரும் அறிக்கைகள் குறித்த கேள்விக்கு,  ‘’இலங்கை பிரச்சனையில் இந்திய ஒற்றுமைக்கு எதிராக வைகோ பேசவில்லை’’ என்று தெரிவித்தார்.