ஜெயபாலன் த

ஜெயபாலன் த

8வது வாரமாகத் தொடரும் படகு அகதிகளின் அவலமும் பதட்டமும்.

இந்தோனேசியாவின் ஜவாத் தீவின் மேர் துறைமுகக் கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகு அகதிகளின் அவலம் 8வது வாரமாகத் தொடர்கிறது. இந்தப் படகு அகதிகளை நேரடியாகச் சென்று பார்வையிட்ட சோசலிஸ்ட் கட்சியின் தேசிய ஒழுங்கமைப்பாளர் அன்ரொனி மைன் 40 முதல் 50 பேர் வரை மட்டுமே பயணிக்கக் கூடிய 30 மீற்றர் நிளமான மரப்படகில் 260 பேர் வரை அடைபட்டு இருப்பதாகத் தெரிவித்துள்ளார். கப்பலில் உள்ள ஒவ்வவொருவரும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்த அன்ரொனி மைன் வயிற்றோட்டம், மலேரியா, போன்றவற்றால் அங்குள்ளவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார். மேலும் டயபிரிக்ஸ் போன்ற நீண்ட கால நோயுடைய நோயாளிகளும் அங்கு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். Eyewitness report from refugee boat in Merak -Anthony Main

இதற்கிடையே ஓசானிக் வைக்கிங் கப்பலில் இருந்து தஞ்சம் கோரிய தமிழர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு அவுஸ்திரேலிய அரச அதிகாரிகளின் உறுதி மொழிக்கு இணங்கித் தரையை அடைந்தனர். தஞ்ச விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் நான்கு முதல் 12 வாரங்களில் அவர்கள் அவுஸ்திரேலியாவில் மீள்குடியேற்றப்படுவார்கள் என்று அதிகாரிகள் உறுதி அளித்திருந்தனர். நவம்பர் 12ல் 22 பேரைக் கொண்ட ஒரு பகுதியினரும் ஏனைய 56 பேரும் நவம்பர் 18லும் தரையிறங்கினர்.

மேர்க் கடற்பரப்பில் ஒரு சிறிய கப்பலில் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ளவர்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டு உள்ளது. கப்பலில் இருந்து வெளியேற விரும்புபவர்களுக்கும் கப்பலில் தங்கள் போராட்டத்தைத் தொடர விரும்புகிறவர்களுக்கும் இடையே பதட்டம் ஏற்பட்டு அது சிறு மோதலையும் ஏற்படுத்தியதாக இவ்வகதிகளுக்கு உதவியளிக்கும் மேற்கத்தைய உதவி நிறுவனத்தின் சிரேஸ்ட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதில் ஒரு இளைஞர் காயப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து 15 பேர் படகில் இருந்து தரையிறங்கியதாகவும் தெரியவருகின்றது. படகில் உள்ள அத்தனை அகதிகளும் தரையிறங்கிய பின்னரேயே அவர்களது தஞ்ச விண்ணப்பங்களைப் பரிசீலிக்க் ஐநா அதிகாரிகள் அனுமதிக்கப்படுவார்கள் என இந்தோனேசிய அரசு தெரிவித்துள்ளது. இம்முடிவு அங்கு இரு தரப்பினருக்கும் இடையேயான பதட்டத்தை மேலும் தூண்டியுள்ளது.

மேலும் கிறிஸ்மஸ் தீவில் நெருக்கமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அப்கான் – தமிழ் அகதிகளிடேயே நவம்பர் 23ல் மோதல் வெடித்துள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த 10 பேர் அப்பகுதி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர் 37 பேருக்கு அங்கேயே மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாண்டு ஒக்ரொபர் வரை 12 544 அப்கானியர்களுக்கு வீசா வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் இலைகையருக்கு 21 பேருக்கு மட்டுமே விசா வழங்கப்பட்டு இருந்தது. இதுவே மோதலுக்கான காரணமாகக் கருதப்படுகின்றது. அத்துடன் தடுப்பு முகாமில் உள்ள குறைந்தபட்ச வசதிகளைப் பயன்படுத்துவதில் உள்ள நெருக்கடியும் இம்மோதலுக்கு வழிவகுத்தள்ளது.

விலங்குகளை வளர்ப்பதற்கே அவற்றிற்கான வாழ்விடத்தின் தரத்தை உறுதிப்படுத்தும் அவுஸ்திரேலியா போன்ற மேற்கு நாடுகள் அகதிகள் என்று வரும்போது எவ்வித அக்கறையும் கொள்வதில்லை. அவர்களுடைய மனித உரிமைகள் கோசமும் தங்களுடைய தேவையைப் பொறுத்தே அமைகின்றது.

50 பேர் கொண்ட மற்றுமோர் படகு நவம்பர் 20ல் வழிமறிக்கப்பட்டு கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. அதே தினம் அங்குள்ள தஞ்ச விண்ணப்பங்களைப் பரிசீலித்து 69 பேருக்கு நிரந்தர வீசா வழங்கி அவுஸ்திரேலியாவின் பிரதான நிலப்பரப்பிற்குக் அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 46 பேர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்தி தொடர்பான முன்னைய பதிவுகளுக்கு:

ஒசானியா வைக்கிங்கில் இருந்து ஒரு பகுதி அகதிகள் வெளியேறுகின்றனர்

மனித உரிமைகள் விடயத்தில் அவுஸ்திரேலிய பிரித்தானிய அரசுகள் இரட்டைவேடம்!

படகு அகதிகளின் தொடரும் அவலங்களும் மரணங்களும் – அவுஸ்திரேலியாவின் இந்தோனேசியத் தீர்வு – மேற்குலகு சொல்லும் மனித உரிமைகள் : த ஜெயபாலன்

தமிழ் பேசும் கட்சிகளின் திசைமாறிய மாநாடு : த ஜெயபாலன்

Varathakumar_and_EPDP(படம்: இறுதிநிமிட உடன்பாட்டு முயற்சியில் வி வரதகுமாரும் அமைச்சர் தேவானந்தா தனது கட்சி உறுப்பினர்களுடன் ஆலோசணையில் இருந்த போது.)

நவம்பர் 19 முதல் 22 வரை நடைபெற்ற தமிழ் – முஸ்லீம் கட்சிகளின் மாநாடு பெயரளவு இணக்கப்பாட்டுடன் முடிவடைந்தது. குறிப்பாக இலங்கைத் தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலம் பற்றிய பொது உடன்பாட்டை எட்ட இந்த மாநாடு தவறியுள்ளது. தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளுக்கான இலக்கு என்ன? அதனை அடைவதற்கான நடைமுறைச்சாத்தியமான வழிவகைகள் என்ன? என்ற விடயத்தில் பொது உடன்பாடு எட்டப்படவில்லை. அனைத்துக் கட்சிகளும் பொது உடன்பாட்டுக்கு வருகின்ற பட்சத்தில் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பம் இட்டு வெளியிடுவதாக இருந்த புரிந்துணர்வு உடன்பாடு அவர்கள் ஒரு உடன்பாட்டுக்கு வரத்தவறியதால் ஒரு வேலைத்திட்டத்திற்கான ஆவணமாக்கப்பட்டது. பின்னர் அந்த வேலைத்திட்டத்திற்கான ஆவணத்திலும் இலக்குகளை அடைவதற்கான நடைமுறைச்சாத்தியமான வழிவகைகளில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இம்மாநாட்டில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு என்ற இலக்கும் அதனை அடைவதற்கான நடைமுறைச்சாத்தியமான விடயங்கள் என்ற விடயத்திலுமே பிரதான முரண்பாடு ஏற்பட்டது. இரண்டு தேசங்களைக் கொண்ட அரசு, இந்தியன் மொடல், சமஸ்டி என்ற விவாதங்கள் நடைபெற்றது.

EPDP_Discussion(படம்: மாநாட்டில் நடைபெற்ற விடயங்கள் தொடர்பாக எஸ் தவராஜா ஈபிடிபி கட்சி உறுப்பினர்களுக்கு விளக்குகின்றார்.)

அதன் தொடர்ச்சியாக தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கிகரிப்பது என்ற இலக்கை ஏற்றுக்கொள்வது பற்றிய மிகநீண்ட விவாதம் இடம்பெற்றது. அதில் ‘சிங்கள மக்களுக்குள்ள அதே உரிமை சம உரிமை தமிழ் மக்களுக்கும் உண்டு என அமைச்சர் தேவானந்தா கூறியதாக இம்மாநாட்டில் கலந்துகொண்ட ஈபிடிபியின் கனடியப் பிரதிநிதி மித்திரன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். ஈபிடிபியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ‘தென்பகுதி மக்களை அச்சப்படுகின்ற பதங்களை பாவிப்பது உசிதமானதல்ல’ என்றும் ‘இலங்கை அரசுடன் இணக்கப்பாடான அரசியலை மேற்கொள்வதன் மூலமே தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினைக்கான தீர்வை எட்ட முடியும்’ எனவும் தெரிவித்தாக மித்திரன் சுட்டிக்காட்டினார். ‘ஐநா சாசனம் சொல்கின்ற சுயநிர்ணய உரிமை தமிழ் மக்களுக்கும் உரித்துடையது. அதே வரைவிலக்கணத்தை உடன்பாட்டுக்குரிய ஆவணத்தில் பதிவு செய்துகொளலாம் ஆனால் சுயநிர்ணய உரிமை என்ற பதத்திற்குப் பதிலான ஒரு பதத்தை பயன்படுத்த வேண்டும்’ என்றும் அமைச்சர் தேவானந்தா தெரிவித்ததாக மித்திரன் மேலும் தெரிவித்தார்.

இச்சொல்லாடல் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் சுயநிர்ணய உரிமை என்ற பதத்தை உபயோகிக்க வேண்டும் எனவும் ஏனைய தமிழ்க் கட்சிகள் அச்சொல்லாடலை தவிர்க்க முடியும் என்ற நிலையிலும் நீண்ட முடிவற்ற விவாதத்தை நடத்தின. குறிப்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபி கட்சி இவ்விவாதத்தில் மிக இறுக்கமான நிலைப்பாட்டில் இருந்தது.

இது பற்றி தேசம் நெற்றுக்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் தேவானந்த ‘தமிழ் மக்களுடைய உரிமைகளைப் பெற்று அவர்களை வாழ வைப்பதே எனது நோக்கம்’ என்றும் ‘இன்னுமொரு முள்ளிவாய்க்காலினுள் அந்த மக்களை தள்ளிவிடுகின்ற வார்த்தை ஜாலங்களுக்கு தன்னால் ஒரு போதும் உடன்பட முடியாது’ எனவும் தெரிவித்தார். இந்தப் பதத்தில் மட்டும் இவர்கள் தொங்கிக் தமிழ் தேசியத்தை உசுப்பிவிட்டு தங்கள் வாக்கு வங்கியைத் தக்க வைப்பதற்கே அல்லாமல் மக்களுடைய நலனுக்காக அல்ல என்றே எண்ணத் தோண்றுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வை நோக்கிய பயணத்திற்கு 13வது திருத்தச்சட்டம் பிளஸ் பிளஸ் தான் ஆரம்பமாக அமையும் எனவும் தெரிவித்தார். தன்னையொரு யதார்த்தவாதி என்று தெரிவித்த அமைச்சர் தேவானந்தா சிங்கள மக்களையும் இணைத்துக்கொண்டே தமிழ் மக்களுடைய உரிமைகளை வென்றெடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

Suresh_Premachandranஇதுவிடயமாக தேசம்நெற்க்குத் கருத்துத் தெரிவித்த ஈபிஆர்எல்எப் (சுரேஸ் அணி) சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழ் மக்கள் அனாதரவான நிலையில் உள்ளனர் என்ற தோல்வியுணர்வுடன் அரசியல் தீர்வு விடயங்களை அணுகுபவர்கள் அரசிடம் பணிந்து செல்ல வேண்டும் என்றும் 13வது திருத்தச் சட்டம் போன்ற 20 வருடங்கள் பழமையான காலாவதியான விடயங்களுக்குச் செல்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.

இடம்பெயர்ந்தவர்களின் மறுவாழ்வு, மீள்குடியேற்றம், காணாமல் போனவர்கள் பற்றிய விடயங்கள், உயர் பாதுகாப்பு வலயம், மக்களின் சுதந்திர நடமாட்டம் போன்ற விவாதிக்கப்பட அவசியமற்ற விடயங்களில் பெரும்பாலும் உடன்பாடு காணப்பட்டது. ஆனால் தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலத்தின் இலக்கு, அதனை அடைவதற்கான நடைமுறைச்சாத்தியமான வழிவகைகள் பற்றிய விடயமே மாநாட்டின் பெருமளவு நேரத்தை எடுத்திருந்தது. மாநாட்டின் இறுதி நாளின் இறுதி நிமிடங்கள் வரை இது தொடர்பாக உடன்பாடு எட்டப்படவில்லை. அதனால் மாநாட்டு ஏற்பாட்டாளர்களதும் மாநாட்டில் கலந்துகொண்டவர்களதும் முகத்தைப் பாதுகாப்பதற்கு ஏற்ற வகையில் அறிக்கையைத் தயாரிக்கும் நிர்ப்பந்தம் ஏற்பாட்டாளர்களுக்கு ஏற்பட்டு உள்ளது.

தேசம்நெற் இல் ஏற்கனவே குறிப்பிட்டது போல் இம்மாநாடு மூடுமந்திரமாகவே ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இது தொடர்பாக தேசம்நெற்றில் வெளியான தமிழ் பேசும் கட்சிகளின் மாநாட்டின் திரைக்குப் பின்னால்: த ஜெயபாலன், கட்டுரை மாநாட்டின் முதல்நாள் அமர்விலேயே சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இம்மாநாடு இலங்கையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ரெஜீம் சேன்ஜ் க்கான தேர்தலையொட்டிய மாநாடு என அக்கட்டுரை குற்றம்சாட்டி இருந்தது. கட்டுரையின் பிரதிகள் மாநாட்டில் கலந்துகொண்ட கட்சித் தலைவர்களுக்கு வழங்கப்பட்டு மாநாடு பற்றிய முழுமையான விபரங்கள் கோரப்பட்டது. கோரிக்கை வலுவடையவே சுவிஸ் வெளிநாட்டு அமைச்சகமும் Initative on Conflict Prevention through Quiet Diplomacy – IPCQD அமைப்பும் இம்மாநாட்டின் செலவீனங்களை பொறுப்பேற்றதாகவும் இலங்கையில் மீள்கட்டுமானம், மீளுறவு, மீளுருவாக்கமும் தமிழ் அரசியல் தலைவர்களின் பாத்திரம் பற்றியும் கருத்துரை வழங்குவார்கள் எனவும் தமிழர் தகவல் நடுவத்தின் தலைவர் வி வரதகுமார் தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து அவர்களால் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலும் அங்கு வழங்கப்பட்டது. அந்நிகழ்ச்சி நிரலில் Initative on Conflict Prevention through Quiet Diplomacy – IPCQD இன் சிரேஸ்ட்ட ஆலோசகரும் எசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகள் மையத்தின் இயக்குநர் பேராசிரியர் ஜோன் பெக்கர் நிகழ்வுக்கு தலைமை தாங்குவதாகவும் வேறு வேறு தலைப்புகளில் ஆய்வுரை வழங்குவதாகவும் இருந்தது. பேராசிரியர் ஜோன் பக்கருடன் Initative on Conflict Prevention through Quiet Diplomacy – IPCQD இன் இணைப்பாளர் கிராக் கொலின், Initative on Conflict Prevention through Quiet Diplomacy – IPCQD இன் அரசியல் மற்றும் சட்ட ஆலோசகர் ஸ்டென்கா மச்நிகோவா ஆகியோரும் வேறுவேறு விடயங்களில் விளக்க உரை வழங்குவதாக இருந்தது.

நீண்டகால பிரச்சினைகள் தொடர்பாக பொதுப் புரிந்தணர்வையும் விதிகளையும் நோக்கிச் செல்வது என்று ஆரம்பிக்கும் 2ம்நாள் நவம்பர் 22ம் திகதி நிகழ்வில் வருகின்ற தேர்தல் பற்றிய அடிப்படை உடன்பாடு பற்றி விவாதிக்கவும் நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. வேறுவேறு தலைப்புகள் எடுக்கப்பட்டு இருந்த போதும் தேர்தல் விடயமாகப் பேசுவதற்கே கூடுதலான நேரம் – மூன்று மணிநேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

Dujglas_Devananda_and_John_Packer(படம்: மாநாட்டில் முரண்பட்டு ஜோன் பக்கரது தலைமையை நிராகரித்த அமைச்சர் மாநாட்டுக்கு வெளியே தன்னுடைய நிலைப்பாட்டை விளக்குகின்றார்.)

ஆனால் தேசம்நெற் கட்டுரை எழுப்பிய சந்தேகங்கள் தொடர்பான நீண்ட விவாதத்தை ஆரம்பித்த ஈபிடிபி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மாநாட்டின் திசையை மாற்றியமைத்தார். ஏற்பாட்டாளர்களால் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் கைவிடப்பட்டது. ‘சர்வதேச பொது ஸ்தாபனங்கள் தங்கள் காலனியாதிக்கத்தை புதிய வடிவத்தில் தொடர முயற்சிக்கின்றது’ என்று குற்றம்சாட்டிய அமைச்சர் தேவானந்தா மேற்படி ‘நிகழ்ச்சி நிரல் கைவிடப்பட வேண்டும்’ என்றும் ‘வந்திருக்கின்ற கட்சிகளின் பிரதிநிதிகளே இம்மாநாட்டின் நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்க வேண்டும்’ என்றும் கோரியதுடன் இம்மாநாட்டுக்கு தங்களை வரவழைத்த ‘தமிழர் தகவல் நடுவத்தின் தலைவர் வி வரதகுமார் அல்லது சட்டத்தரணி மனோகரனே தலைமை தாங்க வேண்டும்’ என்றும் வெள்ளைநிற மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கோரியதாக இம்மாநாட்டில் கலந்துகொண்ட ஈபிடிபியின் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் மனோ தேசம்நெற் க்குத் தெரிவித்தார்.

இம்மாநாடு தொடர்பான மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள தேசம்நெற் சார்பில் இம்மாநாட்டுக்குச் சென்றிருந்த போதும் கட்சித் தலைவர்கள் தவிர்ந்த ஏனையோரை அனுமதிப்பதில்லை என்ற மாநாட்டு ஏற்பாட்டாளர்களது பொதுவிதியின்படி தேசம்நெற் க்கு அனுமதி மறுக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி ஆனந்தசங்கரி தேசம்நெற்றை பார்வையாளராக அனுமதிக்கும்படி கேட்டிருந்த போதும் வேறு சில கட்சித் தலைவர்(கள்) மறுப்புத் தெரிவிப்பதாகக் கூறிய சட்டத்தரணி மனோகரன் தேசம்நெற்றுக்கான அனுமதியை மறுத்தார். இருந்த போதும் மாநாட்டுக்கு வெளியே கட்சித் தலைவர்களுடன் உரையாடி அவர்களது கருத்துக்களை பெற்றுக் கொள்ள முடிந்தது.

Sambanthan_Rதேசம்நெற்க்கு கருத்துத் தெரிவித்த ஈபிஆர்எல்எப் – சிறிதரன், மலையக மக்கள் முன்னணி – பொ சந்திரசேகரன், மேலக மக்கள் முன்னணி – மனோ கணேசன், புளொட் – சித்தார்த்தன், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் – ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா முஸ்லீம் கவுன்சில் – என் எம் அமீன், ரெலோ – ஹென்ரி மகேந்திரன், தமிழரசுக்கட்சி – ஆர் சம்பந்தன், தமிழர் விடுதலைக் கூட்டணி – வி ஆனந்தசங்கரி, ஈபிஆர்எல்எப் (சுரேஸ் அணி) – சுரேஸ் பிரேமச்சந்திரன், கிழக்கு மாகாணசபை – எம்எல்ஏஎம் ஹிஸ்புல்லா ஆகியோர் இம்மாநாட்டில் பல்வேறு அம்சங்கள் கலந்தரையாடப்பட்டு இணக்கம் காணப்பட்டதாகவும் சில விடயங்களில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை என்றும் தெரிவித்தனர். விவாதங்கள் சில சமயங்களில் கடுமையாக இருந்தபோதும் ஆரோக்கியமாக அமைந்ததாக அவர்கள் தெரிவித்தனர். அரசியல் தீர்வுக்கான இலக்கு, அதனை அடைவதற்கான நடைமுறைச்சாத்தியமான வழிவகைகள் பற்றிய கருத்தொற்றுமை ஏன் எற்படவில்லை? எனக் கேட்டபோதும் எல்லா விடயங்களிலும் ஓரிரு நாட்களிலேயே கருத்தொற்றுமை ஏற்பட்டு விடும் என எதிர்பார்க்க முடியாது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

தமிழ் பேசுகின்ற தமிழ் – முஸ்லீம் கட்சிகள் சந்தித்த இந்நிகழ்வு குறிப்பிடத்தக்க நிகழ்வு என்பதைச் சுட்டிக்காட்டிய கட்சிகளின் தலைவர்கள் இம்மாநாட்டை பயனுள்ள ஒன்றாகவே தாங்கள் பார்ப்பதாகத் தெரிவித்தனர். பல்வேறு முரண்பாடுகளைக் கொண்டவர்கள் முதற் தடவையாக சந்தித்து ஒருவருக்கொருவர் ‘ஹலோ’ சொல்கின்ற நிலை ஏற்பட்டு உள்ளது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். ஒருவருக்கொருவர் ‘ஹலோ’ சொல்கின்ற நிலையை ஏற்படுத்த எத்தனை ஆயிரம் உயிர்களும் எத்தனை ஆயிரம் டொலர்களும் தேவைப்பட்டிருக்கின்றது என்ற முணுமுணுப்பு மாநாட்டுக்கு வெளியே ஏற்படத் தவறவில்லை.

இம்மாநாட்டுக்கு தமிழ் – முஸ்லீம் கட்சிகளின் தலைவர்களே அழைக்கப்பட்டு இருந்தனர். இச்சந்திப்பில் சிறிரொலோ கலந்துகொள்ளவில்லை அல்லது அழைக்கப்படவில்லை. பேரியல் அஸ்ரப் அழைக்கப்பட்டு இருந்த போதும் அவர் இம்மாநாட்டில் கலந்தகொள்ளவில்லை. சுதந்திரக் கட்சியின் உப தலைவர் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன், ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் ஆகியோர் தமிழ் – முஸ்லீம் கட்சி உறுப்பினர்கள் அல்லாததால் அவர்கள் இம்மாநாட்டுக்கு அழைக்கப்படவில்லை.

இம்மாநாட்டில் கலந்துகொண்ட தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் முதலமைச்சர் சந்திரகாந்தன் கிழக்கு மாகாண வரவுசெலவுத்திட்ட விவாதம் நடைபெற இருந்ததால் நவம்பர் 21 இரவு நாடு திரும்பினார். இச்சந்திப்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமானும் கலந்துகொண்டிருந்தார்.

சுவிஸ்லாந்தில் உள்ள 26 கன்ரோண்களில் ஒன்றான துர்கா கன்ரோனில் இம்மாநாடு நடைபெற்றது. சூரிச் நகரிலிருந்து 50 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள இப்பகுதி தமிழ் மக்கள் பெரும்பாலும் இல்லாதவொரு கன்ரொன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பொதுவாக குறைந்தது 3 மாதகால விசா வழங்கப்படுவதற்கான நடைமுறையைக் கொண்டுள்ள இந்நாட்டில் இம்மாநாட்டு க்கு அழைக்கப்பட்டவர்களுக்கு மாநாட்டுக் காலப்பகுதியில் தங்குவதற்கு மட்டுமே விசா வழங்கப்பட்டு இருந்தது. அவர்கள் அனைவரும் மாநாடு முடிந்த மறுதினம் நாட்டுக்குச் செல்ல வலிறுயுத்தப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

குடும்ப வன்முறையும் சமூகத் தனிமைப்படுத்தலும் தாயையே குழந்தைகளைக் கொல்வதை நோக்கித் தள்ளியது நீதிபதி பிரைன் பாக்கர் :

Sanjayan NavaneethanSarani Navaneethanகுடும்ப வன்முறை சமூகத் தனிமைப்படுத்தல்’ போன்ற காரணங்களே சசிகலா நவநீதன் தனது குழந்தைகளைக் கொலை செய்வதை நோக்கித் தள்ளியதாக வழக்கின் நீதிபதி பிரைன் பார்க்கர் தெரிவித்துள்ளார். ‘இது மிகவும் மனவருத்தமான கொடுமையான நிகழ்வு’ என்று தெரிவித்த நீதிபதி, ‘நீர் அந்த நேரத்தில் நீரும் உமது குழந்தைகளும் இறப்பதே மேல் என்று நம்பி உள்ளீர்கள். நீர் குடும்ப வருமானம், ஒழுக்கமற்ற உறுவு, குடும்ப வன்முறை சமூகத் தனிமைப்படுத்தல் ஆகியவற்றை கவனத்தில் எடுத்தள்ளீர். உம்முடைய மனக் குழப்பமும், நீர் எடுத்த நடவடிக்கையும் வெளியில் உள்ள ஒருவருக்கு விளங்கிக் கொள்ள முடியாது’ எனத் தெரிவித்தார். தாய்மைக்கால மன உளைச்சலால் தனது குழந்தைகளைக் கொலை செய்த சசிகலா நவநீதனின் வழக்கில் தீர்ப்பளிக்கையில் நீதிபதி அவ்வாறு தெரிவித்தார். காலவரையறையற்று சசிகலா நவநீதன் மனநோயாளர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு உடன்பட்டு உள்ளார்.

‘என்னைச் சுட்டுக் கொல்லுங்கள்’ தாய்மைக்கால மனஉளைச்சல் காரணமாக தன்னிரு குழந்தைகளினதும் தொண்டையில் வெட்டியும் கத்தியால் குத்தியும் கொலை செய்த தாய் சசிகலா நவநீதன் கதறினார். தான் தன் குழந்தைகளைக் கொலை செய்துவிட்டதாக நீதிமன்றத்தில் கூறிய அவர் தன்னைச் சுட்டுக் கொல்லுமாறு பொலிசாரை மன்றாடினார். சசிகலா நவநீதன் தனது குழந்தைகளான சன்ஞயன் (5), சாராணி (4), ரிசானா (6 மாதம்) ஆகிய தன் மூன்று குழந்தைகளையும் கொலை செய்ய முற்பட்டு இருந்தார். அதில் சன்ஞயன், சாரணி இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தனர். இச்சம்பவம் லண்டன் புறநகர்ப் பகுதியான கார்ஸ்கால்ரன் என்ற இடத்தில் இருந்த அவர்களின் வீட்டில் சென்றவருடம் மே 30ல் இடம்பெற்றது.

மருத்துவர்களின் போராட்டத்தின் பின் ரிசானா உயிர் தப்பினார். ரிசானாவும் ஜனவரியில் நவநீதன் சசிகலாவின் நான்காவது குழந்தையும் அவர்களுடைய தந்தை நவராஜா நவநீதனுடன் வாழ அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

20 யூலையில் ஓல்ட் பெயிலி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த சசிகலா நவநீதன், சொந்தமாகக் கடை வைத்திருந்து அதில் பணியாற்றிய கணவர் நவராஜா நவநீதன் திருமணத்திற்குப் புறம்பான உறவை வைத்திருந்தார் என்றும் தன்னை அடிப்பதாகவும் தனது தலையில் ஒலித்த யாருடையதோ குரல்கள் அதனை தான் நம்பும்படி உணத்தியதாகவும் தெரிவித்தார்.

சன்ஞயன் சாரணி ஆகியோரின் கொலைகளை புரிந்ததாகவும் ஆனால் தன்னுணர்விற்கு அப்பாற்பட்டு (diminished responsibility) நடந்ததாகவும் ரிசானா மீதான கொலை முயற்சியையும் ஏற்றுக்கொண்டார்.

சம்பவம் இடம்பெற்றதற்கு ஒரு மாதத்திற்கு முன்னிருந்து குழந்தைகளைக் கொலை செய்யும்படியாக அந்தக் குரல்கள் தனது தலையில் ஒலித்து வந்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்த சசிகலா சம்பவதினமும் அந்தக் குரல்கள் மீண்டும் ஒலித்தாகவும் அன்று தான் அந்தக் குரல்கள் கூறியபடி நடந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

Funeral_of_the_Childrenசசிகலா சார்பில் ஆஜரான கியூசி டேவிட் எதரிங்ரன், ‘சசிகலா தனது காலாச்சார காரணங்களுக்காக தனக்கு ஏற்பட்ட உடற்காயங்களை மருத்துவருக்கு காட்டினார். ஆனால் தனது மனநிலையை வெளிப்படுத்தவில்லை’ எனத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ‘தனது வாழ்க்கையில் இனிமேல் எவ்வித அர்த்தமும் இல்லை என்ற முடிவுக்கு வந்த சசிகலா தனது குழந்தைகளை தனது கணவனுடன் விட்டுச் செல்லவும் விரும்பவில்லை’ என்று தெரிவித்தார். ‘தற்போது அவர் தான் மிகப் பயங்கரமான விடயத்தைச் செய்திருப்பதை அறிய வந்துள்ளது. அவர் அப்போதும் மிக நோயாளியாக இருந்தார். இப்போதும் அவர் மிகவும் நோயாளியாகவே உள்ளார்’ என கியூசி டேவிட் எடிங்ரன் நீதிமன்றில் தெரிவித்தார்.

சம்பவம் பற்றி நவநீதன் பொலிஸாருக்கு அவசர அழைப்பை விடுத்தார். தனது மனைவி குழந்தைகளைக் கொலை செய்துவிட்டதாகவும் தெரிவித்தார். பொலிஸார் வந்ததும் நவநீதன் மனைவி கொலைக்குப் பயன்படுத்திய கத்திகளை கட்டில் மெத்தைக்குக் கீழ் வைத்திருப்பதாகவும் கூறியிருந்தார். வீட்டைச் சோதணையிட்ட பொலிஸார் கட்டில் மெத்தைக்குக் கீழிருந்த 3 கத்திகளையும் ஒரு கடிதத்தையும் நவநீதன் சசிகலாவிற்கு தங்கள் திருமணத்தின் ஞாபகார்த்தமாக வழங்கிய நெக்லஸையும் கண்டெடுத்தனர்.

அக்கடிதத்தில் நவநீதனுக்கு ‘திருமணத்திற்குப் புறம்பாக இரு உறவுகள்’ இருப்பதாகக் குறிப்பிட்டு இருந்ததுடன் ‘நான் கண்ணீர் வர அழுது புலம்புகின்றேன்’, ‘உதவிக்கு யாரும் இல்லை’, ‘நாங்கள் எல்லோரும் இறப்பதே நல்லது’ போன்ற வரிகள் இருந்தது.

பொலிஸார் கைது செய்வதற்கு முன்னர் தனக்கு வாழ விருப்பமில்லை தன்னை கொலை செய்யுமாறு சசிகலா பொலிஸாரைக் கேட்டுக் கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தற்கொலை செய்யும் முயற்சியில் எலிகளைக் கொல்வதற்கு வைக்கின்ற மாத்திரைகளை தான் உட்கொண்டாதகவும் சசிகலா பொலிஸாருக்கு தெரிவித்து இருந்தார்.

1999ல் இங்கிலாந்து வந்த சசிகலாவை இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்தமும் பாதித்து இருந்தது நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு யுத்தம் தொடர்பான கெட்ட கனவுகள் வந்து போயிருந்ததாகவும் பழைய சம்பவங்கள் மீண்டும் வந்து சென்றதாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டு இருந்தது.

சசிகலாவை பரிசோதணை செய்த மூன்று மருத்துவர்களும் அவர் மிகவும் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததை உறுதிப்படுத்தி இருந்தனர்.

Rita Ariyaratnam with her childrenஇச்சம்பவத்திற்குப் பின்னர் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற சம்பவத்திலும் தனது குழந்தைளுடன் தற்கொலை செய்ய முற்பட்ட தாய் தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றப்பட்டார். குழந்தைகள் உயிரிழந்தனர்.

இச்சம்பவத்திற்கு முன்னர் கனடாவைச் சேர்ந்த இளம்தாயொருவர் தனது கணவனது இறப்பைத் தாங்க முடியாமல் தனது பிள்ளைகளுடன் தற்கொலை செய்ய முயன்றார். இச்சம்பவத்தில் பிள்ளைகள் உயிரிழந்தனர். தாய் காப்பாற்றப்பட்டார்.

தமிழ் பேசும் கட்சிகளின் மாநாட்டின் திரைக்குப் பின்னால்: த ஜெயபாலன்

hri_Logoதமிழ் பேசும் கட்சிகள் – தமிழ் மற்றும் இஸ்லாமியக் கட்சிகளின் மாநாடு நவம்பர் 19, 20, 21ம் திகதிகளில் சூரிச்சில் இடம்பெறுகிறது. இம்மாநாடு தமிழ் பேசும் கட்சிகளிடையே புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கு என்று சொல்லப்பட்ட போதும் அவர்கள் எட்ட நினைக்கும் புரிந்துணர்வு தமிழ் பேசும் கட்சிகளிடையேயானதல்ல என்ற சந்தேகங்கள் எழ ஆரம்பித்து உள்ளது. இம்மாநாடு நவம்பர் 12ல் லண்டனில் நடாத்த திட்டமிட்டு இருந்த போதிலும் பின்னர் சூரிச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இம்மாநாட்டில் ஓரிரு கட்சிகளின் தலைவர்கள் தவிர ஏனைய 20 தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளதாகத் தெரியவருகிறது.

இம்மாநாட்டுக்கு இன்னமும் ஒரு சில தினங்களேயே உள்ள நிலையில் இம்மாநாடு யாரால் நடத்தப்படுகின்றது என்பது பற்றியோ அதன் நோக்கம் பற்றியோ எவ்விதமான உத்தியோகபூர்வமான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. அழைக்கப்பட்ட கட்சிகளின் முக்கிய உறுப்பினர்களுக்குமே தெரியாமல் இம்மாநாடு பற்றிய விபரம் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

இம்மாநாட்டுக்கு முன்னணியில் நின்று அழைப்புவிட்டவர்களின் விபரம் தற்போது ஓரளவு தெரியவந்துள்ளது. இம்மாநாட்டை சட்டத்தரணி மனோகரன் என்பவரே ஏற்பாடு செய்வதாக சொல்லப்பட்டு வந்தது. ஈஎன்டிஎல்எப் அமைப்பைச் சேர்ந்த இவர் பின்னர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ரிஎம்விபி அமைப்புடன் இணைந்து செய்ற்பட்டவர் எனத் தெரியவருகின்றது. பெரும்பாலும் அழைப்புகள் சட்டத்தரணி மனோகரனூடாகவே விடுக்கப்பட்டும் இருந்தது. சட்டத்தரணி மனோகரனுக்குப் பின்னணியில் மற்றுமொரு ரிஎம்விபி முக்கியஸ்தரான கிருஸ்ணன் பின்னணியிலுள்ளர். ஆனால் இந்த மாநாட்டில் மனோகரனுக்கு வழங்கப்பட்ட பொறுப்பையே மனோகரன் மேற்கொண்டதாகவும் ஏனைய விடயங்களில் அவர் ஈடுபட்டு இருக்கவில்லை என்றும் தெரியவருகின்றது. இம்மாநாட்டின் பின்னணயில் தமிழர் தகவல் நடுவம் இருப்பதாக இந்நிகழ்வுகளில் பங்குபற்றவுள்ள முஸ்லிம் கட்சி ஒன்றின் பிரதிநிதி தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இம்மாநாட்டு ஏற்பாட்டில் தமிழர் தகவல் நடுவம் முக்கிய பங்கு வகிப்பதாக லண்டனில் உள்ள தமிழ் அரசியல் கட்சிவட்டாரங்களில் பேச்சு அடிபடுகின்றது. மேலும் மனோகரன் தமிழர் தகவல் நடுவம் இந்தியாவில் செயற்பட்ட வேளையில் அதனுடன் அங்கு தொடர்புபட்டு இருந்துள்ளார். மனோகரனுடைய கடந்தகால அரசியல் செயற்பாடுகள் பற்றி பல்வேறு விமர்சனங்களும் உள்ளது.

இம்மாநாட்டில் கட்சியின் தலைவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற கடுமையான கட்டுப்பாடும் விதிக்கப்பட்டு உள்ளதாக இதில் கலந்துகொள்ள உள்ளவொரு கட்சிப் பிரதிநிதி தேசம்நெற்க்கு தெரிவித்தார். இலங்கையில் இருந்து வரவுள்ள கட்சிகளின் தலைவர்களின் பயணச் செலவு ஒரு வாரகாலம் தங்குவதற்கான செலவு என்பனவற்றை மாநாட்டு ஏற்பாட்டாளர்களே ஏற்றுக்கொண்டுள்ளனர். அண்ணளவாக இம்மாநாட்டை ஏற்பாடு செய்வதற்கு 100 000 பவுண்கள் வரை ஆகும் என மதிப்பிடப்படுகின்றது.

இவ்வாறான ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்வதற்கான பொருளாதார பலமும் அரசியல் பலமும் இலங்கை இந்திய அரசுகளுக்கும் புலம்பெயர் நாடுகளில் உள்ள பிரிஎப் போன்ற புலி ஆதரவு அமைப்புகளுக்குமே உள்ளது. ஆனால் இம்மாநாட்டு ஏற்பாடுகளில் தமிழர் தகவல் நடுவத்தின் ஈடுபாடும் இலங்கையின் ஆளும் கட்சி வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்களும் இலங்கை அரசு இம்மாநாட்டின் பின்னணியில் இல்லை என்பதை தெளிவாக்குகின்றது.

இங்கு வரவுள்ள கட்சிகளின் லண்டன் அமைப்பாளர்கள் சிலருடன் உரையாடியதில் இந்திய அரசும் இம்மாநாட்டின் பின்னணியில் இல்லையென உறுதியாகத் தெரிவிக்கின்றனர். இந்த மாநாட்டை ஒழுங்கு செய்யக் கூடியவர்கள் பொருளாதார பலமுடைய பிரிஎப் ம் அரசியல் ஆளுமையைக் கொண்ட தமிழர் தகவல் நடுவமும், மட்டுமே. ஆனால் தங்களுக்கென்று ஒரு தலைமைத்துவ ஆளுமையைக் கொண்டிராமல் தலைமறைவாக இருந்து அவர்களின் பினாமிகளால் வழிநடாத்தப்படும் அமைப்பு 100 000 பவுண் செலவில் இம்மாநாட்டை ஏற்படுத்துமா என்பது சந்தேகமே. மேலும் பிரிஎப் பின்னணியில் ஏற்பாடு செய்யும் ஒரு கூட்டத்திற்கு இத்தமிழ் பேசும் தலைமைகள் அழைப்பையேற்று வர முற்படாது.

ஆக இந்த மாநாட்டின் பின்னணியில் தமிழர் தகவல் நடுவம் மட்டுமே எஞ்சி நிற்கின்றது. ஆனால் இவ்வாறான ஒரு பாரிய செலவில் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்கின்ற வல்லமை தமிழர் தகவல் நடுவத்திற்கு இல்லை என்பதும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்பாகக் கருதப்படும் தமிழர் தகவல் நடுவத்தின், அதன் தலைவர் ஆர் வரதகுமாரின் அழைப்பையேற்று இந்த தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள் வரமாட்டார்கள் என்பதும் உறுதியானது. ஆகையால் தமிழர் தகவல் நடுவத்திற்குப் பின்னணியில் உள்ளவர்களே இம்மாநாட்டை ஏற்பாடு செய்கின்றனர் என்ற முடிவுக்கு வருவது தவிர்க்க முடியாததாகின்றது.

அந்த வகையிலும் மேலதிகமாக தேசம்நெற்க்கு கிடைக்கும் தகவல்களும் மேற்கு நாடுகள் குறிப்பாக பிரித்தானிய அரசு இம்மாநாட்டின் பின்னணியில் இருப்பதாக தெரிவிக்கின்றன. அதனாலேயே ஆரம்பத்தில் லண்டனில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் பின்னர் பிரித்தானிய அரசின் ஈடுபாடு வெளிப்படாமல் தவிர்க்கப்படுவதற்காக சூரிச்ற்கு இம்மாநாடு இடமாற்றப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

மாநாட்டின் திரைக்குப் பின்னால் உள்ளவர்கள் யார்?

International Working Group on Sri Lanka என்ற அமைப்பே இம்மாநாட்டை ஒழுங்கு செய்வதாகவும் Initative on Conflict Prevention through Quiet Diplomacy, தமிழர் தகவல் நடுவம் ஆகியனவே இம்மாநாட்டின் ஏற்பாடுகளைச் செய்வதாக அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டு உள்ளதாக தெரியவருகின்றது.

International Working Group on Sri Lanka என்ற அமைப்பு கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து வருகின்ற அமைப்பு. அதன் தலைவராக Richard Reoch என்பவர் இருந்துள்ளார். அதன் பொதுச் செயலாளராக Peter Bowling என்பவர் இருந்துள்ளார். இவ்வமைப்பு இலங்கை மனித உரிமைகள் விடயம் தொடர்பாக மேற்கு நாட்டு அரசுகளுக்கு தகவல்களை பரிமாறியுள்ளனர். ஒரு சில அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளன. ஆனால் இலங்கை அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் மிகமோசமான மனித உரிமைகளை மீறிய இறுதி யுத்தம் தொடர்பாக இவ்வமைப்பு மௌனமாகவே இருந்துள்ளது. இவ்வமைப்புப் பற்றி டிசம்பர் 11 1998ல் அமெரிக்க கொங்கிரஸ்ற்கு அதன் தலைவர் Richard Reoch பின்வருமாறு கூறுகிறார் ‘The International Working Group on Sri Lanka is an independent, non-partisan network of organisations and individuals concerned with the promotion of human rights, development and peace in Sri Lanka. It has a management board in London and an international network that currently comprises humanitarian and advocacy groups in Asia, Australasia, Canada, Europe and the USA as well as Sri Lankan organisations working in the fields of development, peace and human rights.” இவ்வமைப்பின் சார்பில் Richard Reoch யை பிரித்தானிய அரசின் சர்வதேச அபிவிருத்திக்கான திணைக்களம் (Department for International Development of the UK Government) இரு வார வேலைத் திட்டத்தில் இலங்கைக்கு அனுப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் தகவல் நடுவத்துடன் இம்மாநாட்டின் ஏற்பாடுகளைக் கவனிக்கும் Initative on Conflict Prevention through Quiet Diplomacy அமைப்பு கனடாவைத் தளமாகக் கொண்டு செயற்படுகின்ற Human Rights Internet அமைப்பின் ஒரு பிரிவாகும். 2007ல் இவ்வமைப்பு ஒரு மில்லியன் டொலர் நிதித் திட்டத்தைக் கொண்டிருந்தது.  இவ்வமைப்பிற்கு கனடிய சர்வதேச அபிவிருத்தி முகவரகம் நோர்வே வெளிநாட்டு அமைச்சு உட்பட பல நிறுவனங்கள் நிதி வழங்குகின்றன. இவ்வமைப்புகள் நிதியுதவிக்காக அழைப்பிதழில் சேர்க்கப்பட்டது என்று தங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டதாக அழைக்கப்பட்ட கட்சி ஒன்றின் பிரமுகர் தேசம்நெற்க்கு தெரிவித்தார். Human Rights Internet அமைப்பு பற்றிய மேலதிக தகவல்களுக்கு http://www.hri.ca/pdfs/HRI%20Annual%20Report%202006-2007.pdf

Human Rights Internet அமைப்பின் வேலைத்திட்டங்களில் ஒன்றான Initative on Conflict Prevention through Quiet Diplomacyஅமைப்பு செயற்படுகின்றது. இதன் ஆலோசணைக் குழுவில் பல்வேறு நர்டுகளின் முக்கிய அரசியல் தலைவர்கள் உள்ளனர். பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் டொக்டர் பெர்னாட் கோச்னர், இந்தியாவில் இந்திர் குமார் குஸ்ரால், முன்னால் இலங்கை ஜனாதிபதி சத்திரிகா குமாரதுங்க ஆகியோர் அவர்களில் சிலர். இவ்வமைப்பின் வேலைத்திட்டங்களில் தமிழ் முஸ்லீம் தேசியக் கட்சிகளை இயக்கங்களை வன்முறையற்ற வழிகளில் பலப்படுத்துவதும் ஒன்றாக உள்ளது. மேலும் சர்வதேசத் தொடர்புகளை ஏற்படுத்தி பேச்சுவார்த்தைகளில் சர்வதேச தொடர்பை பேணுவதும் அதன் வேலைத்திட்டங்களில் ஒன்றாக உள்ளது.

ஆனால் இப்பின்னணிகள் பற்றியெல்லாம் முழுமையான இருட்டடிப்பைச் செய்து இம்மாநாடு ஒழுங்கு செய்யப்படுவதன் நோக்கம் மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது. இம்மாநாட்டில் பங்குகொள்ளும் கட்சிகளுக்கே இவை பற்றிய முழுமையான விபரங்கள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் உள்ள தமிழ், முஸ்லீம் கட்சிகள் ஒன்றுடன் ஒன்று புரிந்துணர்வை ஏற்படுத்தி பொதுக்கூட்டமைப்பை உருவாக்கவே என்று மட்டும் சொல்லப்பட்டே அனைத்து தமிழ், முஸ்லீம் கட்சிகளும் அழைக்கப்பட்டு உள்ளன.

கட்சித் தலைவர்களுக்குள் மட்டும் ஏற்படுத்தப்படும் புரிந்தணர்வு இலங்கையில் நீண்டகாலம் புரையோடிப் போயுள்ள இன முரண்பாட்டைத் தீர்க்க எவ்வாறு உதவும். தமிழ் தேசியக் கட்சிகளுக்கும் முஸ்லீம் தேசியக் கட்சிகளுக்கும் சிங்கள தேசியக் கட்சிகளுக்கும் ஏற்கனவே காலத்திற்குக் காலம் புரிந்துணர்வும் பொது உடன்பாடும் ஏற்பட்டு வந்திருக்கின்றது. அடுத்து வருகின்ற தேர்தலிலும் அந்தப் புரிந்தணர்வும் பொது உடன்பாடும் ஏற்படும். ஆனால் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு மட்டும் எப்போதும் தீர்வு எட்டப்படுவதில்லை. அதற்கு சுவிஸ் சொக்லேட் கொடுத்து திரைமறைவில் இன்னுமொரு மாநாடு எதற்கு என்ற கேள்வியை எழுப்பியே ஆக வேண்டியுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசு மேற்குலகுக்கு எதிரான அணியில் அணிவகுத்து நிற்பதாலும் மேற்குலகின் ராஜதந்திரங்களுக்கு ஏற்பட்ட தோல்வியினாலும் மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றதா என்ற கேள்வி எழுப்பப்படுவது தவிர்க்க முடியாததாகின்றது. அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த ஓய்வுபெறப் போகின்ற இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவை அமெரிக்க உள்ளக பாதுகாப்பு அதிகாரிகள் அவரை ஒரு சந்திப்பிற்கு அழைத்து இருந்தனர். ஆனால் இச்சந்திப்பு போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணைக்கானது என்ற அடிப்படையில் செய்திகள் வெளியாகின. ஆனால் இச்சந்திப்பு சரத் பொன்சேகாவை மகிந்த சகோதரர்களுக்கு எதிராக கொம்பு சீவிவிடும் ஒரு யுக்தியாக இருக்கலாம் என்றும் கருத இடமுண்டு.

எப்போதும் திறந்த பொருளாதாரக் கொள்கைகொண்ட மேற்குலகுக்கு உவப்பான ஒரு கட்சி ஐக்கிய தேசியக் கட்சி. ஆளுமையான தலைவரில்லாமல் உள்ள அக்கட்சிக்கு இன்று ஜனாதிபதி மகிந்தவை எதிர்க்கின்ற ஆளுமையை உடையவராக வரக்கூடியவர் சரத்பொன்சேகாவே என்ற வகையில் அமெரிக்க உள்ளக பாதுகாப்பு அதிகாரிகளின் சந்திப்பு குறிப்பிடத்தக்கது. இவற்றின் பின்னணியிலேயே தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்களின் மாநாடும் நோக்கப்பட வேண்டும். இன்று மேற்குலகு இலங்கையில் ஒரு ரெஜிம் சேன்ஜ்யை எதிர்பார்க்கின்றது. புலித் தேசியமும் ரெஜிம் சேன்ஜ் ஒன்றை செய்வதன் மூலம் தனது மனதை ஆற்றிக் கொள்ளத் துடிக்கின்றது.

புரஜக்ற் பீக்கன் திட்டத்தை சர்வதேச நாடுகள் மகிந்த ராஜபக்ச அரசோடும் இந்தியாவுடனும் இணைந்து வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளன. Initative on Conflict Prevention through Quiet Diplomacy யின் மொழியில் சொல்வதானால் தமிழ் தேசியவாதத்தை வன்முறையற்ற வழிக்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளன. அடுத்து மகிந்த ராஜபக்சவின் ரெஜிமைச் சேஞ் பண்ணுவதை நோக்கி நகர்கின்றன.

எய்தவன் இருக்க அம்பை நோவானேன் என்ற கணக்கில் தமிழ் தலைமைகள் சரத்பொன்சேகாவின் கீழ் அணிதிரள காரணங்களைக் கண்டுபிடிக்க ஆரம்பித்துள்ளனர். முஸ்லீம் காங்கிரஸ் ஏற்கனவே யுஎன்பி அணியில் அணிவகுத்து ஏனைய தமிழ் கட்சிகளையும் சிறுபான்மைக் கட்சிகள் என்ற ஸ்லோகத்தில் அணிவகுப்பதற்கான அடுக்குகளில் தீவிரமாக இறங்கி உள்ளது. புலித் தேசியம் பேசிய கட்சிகளுக்கும் நபர்களுக்கும் சர்தபொன்சேக்காவை ஏற்றுக் கொள்வதில் சற்றுத் தயக்கம் இருக்கும். ஆனாலும் மேலக மலையக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் ஏற்கனவே சரத் பொன்சேக்காவை ஆதரிப்பதற்கான காரணங்களைக் கண்டுபிடித்துள்ளார். மனோ கணேசனுடன் தோளுக்குத் தோள் கொடுத்த சிறிதுங்க ஜெயசூரிய ஜனாதிபதித் தேர்தலில் நின்றாலும் மனோ கணேசன் சரத் பொன்சேகாவின் அணியிலேயே நிற்கப் போகின்றார். ஏனையவர்கள் பலரும் தங்களுக்கான காரணங்களைத் தேடத் தொடங்கி உள்ளனர். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கிகரிக்கும்படி கேட்கும் தமிழ் கட்சிகள் அந்த சுயநிர்ணய உரிமையை வழங்க முன்வருபவர்களுக்கு வாக்களிக்கும்படி எப்போதும் கோரியதில்லை. இப்போதும் அவ்வாறு கோரப் போவதில்லை என்ற நிலையே தென்படுகின்றது.

இலங்கையில் இனமுரண்பாடுகளை கூர்மைப்படுத்தி தமிழ் மக்கள் மீது ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டதில் முக்கிய பங்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் உண்டு. குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஜே ஆர் ஜெயவர்த்தனவுக்கு உண்டு. ஆனாலும் தமிழ் தேசியவாதிகள் பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பின்னேயே அணிதிரண்டனர். தற்போதும் சரத் பொன்சேகா, கோதபாய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக மனித உரிமை மீறல், யுத்தக் குற்றங்கள், இனப்படுகொலைக் குற்றச்சாட்டுக்களை வைத்த தமிழ் தேசியம், சரத்பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியில் நின்றவுடன் அவருக்கு பாவ மன்னிப்பு வழங்கி அவரின் கீழ் அணி திரளத் தயாராகின்றனர்.

சாதாரணமாகவே பேரினவாதக் கட்சிகளில் தொங்கிக் கொள்ளும் இலங்கை சிறுபான்மையினக் கட்சிகளுக்கு, தமிழ் பேசும் இனங்களின் கட்சிகளுக்கு இப்போது சூவிஸ் சொக்லேட்டு தருவதாக மேற்குலகம் சமிஞ்சை செய்கின்றது.

இலங்கை இனப்பிரச்சினையை அரசியல் ரீதியாகத் தீர்த்து வைப்பதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கான நம்பிக்கையையும் ஏற்படுத்தவில்லை. காலம்காலமாக இருந்துவருகின்ற பேரினவாத நடவடிக்கைகள் இன்னமும் தொடரவே செய்கின்றது. இவை தமிழ் மக்களின் உள்ளங்களையும் இதயங்களையும் வென்றெடுப்பதற்கு மாறாக அவர்களை இலங்கை அரசியலில் நம்பிக்கை அற்றவர்களாக்கி உள்ளது. இந்த நம்பகமற்ற சூழலைத் தங்களுக்குச் சாதகமாக்கி தமிழ் மக்களின் வாக்கு வங்கியை வைத்து பேரம் பேசுவதற்கு தமிழ்த் தேசிய சக்திகள் தயாராக உள்ளன.

சரத்பொன்சேகா என்ன கோத்தபாய ராஜபக்சவே வந்து ஐக்கிய தேசியக் கட்சியில் நின்றாலும் அவர்கள் தங்கள் நலன்கள் பாதுகாக்கப்படும் என்றால் யாருக்கும் வாக்களிக்கும்படி கோருவார்கள். தமிழ் மக்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர்கள் என்றைக்காவது எண்ணி இருந்தால் எப்படி ஐக்கிய தேசியக் கட்சிக்கு அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு வாக்களிக்கும்படி கோரியிருக்க முடியும்.

இம்மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள கட்சிகளும் அதன் தலைவர்களும் :

இம்மாநாட்டில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (ஈபிடிபி) கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (ரிஎம்விபி), தமிழரசுக் கட்சித் தலைவர் சம்பந்தன், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், மலையக மக்கள் முன்னணித் தலைவர் பொ சந்திரசேகரன், மேல்மாகாண மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் உட்பட 22 தமிழ் முஸ்லீம் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

பேரியல் அஸ்ரப் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை எனத் தெரியவருகின்றது. ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இம்மாநாட்டில் கலந்துகொள்ள விரும்பவில்லை என்றும் அக்கட்சியின் மற்றுமொரு உறுப்பினரே கலந்துகொள்வதாகவும் மேலும் தெரியவருகின்றது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், ஜேவிபி பா உ சந்திரசேகரன் ஆகியோர் எந்தவொரு கட்சியின் தலைவராகவும் இல்லாததால் அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் தெரியவருகின்றது.

தமிழ் அமைப்புகளை கைப்பற்றும் பிரிஎப் இன் முயற்சி தோல்வி!!! : த ஜெயபாலன்

BTF_Bannerபிரிஎப் இன் பெட்டிசத்தால் கிங்ஸ்ரன் கவுன்சிலுக்கு 10000 பவுண்கள் செலவு!
பிரிஎப் அடித்த பெட்டிசத்திற்கு ஆதரவளிக்க பிரிஎப் உறுப்பினர்களே முன்வரவில்லை!!

(குறிப்பு: அண்மையில் பிரிஎப் பற்றி வெளியான செய்திகள் தொடர்பாக பிரிஎப் இன் கருத்தை அறித்து கொள்வதற்காக அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் : Letter_to_BTF )

ரொல்வேர்த் பெண்கள் பள்ளியில் இயங்கிவரும் கிங்ஸ்ரன் தமிழ் பள்ளிக்கு எதிராக பிரிஎப் – பிரித்தானிய தமிழ் போறம் அடித்த பெட்டிசம் தள்ளுபடியானது. பிரிஎப் அடித்த பெட்டிசத்திற்கு ஆதரவளித்து சாட்சியமளிக்க பிரிஎப் உறுப்பினர்களே முன்வராததால் பெட்டிசம் தள்ளுபடியானது. கிங்ஸ்ரன் தமிழ் பாடசாலைக்கு இரண்டாம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட 12989 பவுண்களை வழங்க கவுன்சில் செயற்குழு முடிவெடுத்துள்ளது.

பிரித்தானிய பிரிஎப் தலைவர் நாதன் குமார் (நல்லைநாதன் சுகந்தகுமார்) கிங்ஸ்ரன் தமிழ் பள்ளியைப் பற்றிய குற்றச்சாட்டுக்களையும் தகவல்களையும் கிங்ஸ்ரன் எதிர்க்கட்சி ரொறி கவுன்சிலர் ஹவார்ட் ஜோன்ஸிடம் பெப்ரவரியில் இடம்பெற்ற நிதியுதவி அளிப்பது தொடர்பான கூட்டத்திற்கு முன்னதாக வழங்கி இருந்தார். ஆனால் ஒக்ரோபர் 20ல் ஸ்குறுட்னி பனலுக்கு முன்வந்து நின்ற பிரிஎப் தலைவர் நாதன் குமார் தான் வழங்கிய குற்றச்சாட்டுக்களும் தகவல்களும் இரண்டாம் நபரூடாகக் கிடைத்ததாகவும் அக்குற்றச்சாட்டுக்களை ஆதரிக்க யாரும் முன்வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Kinsston_Tamil_Schoolசுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 9500 பவுண்களை (வரிச்சலுகையையும் உள்ளடக்கி 11 000 பவுண்) கிங்ஸ்ரன் பள்ளி அனுப்பி வைத்தது. கவுன்சில் வழங்கும் நிதியை சுனாமி நிவாரணத்திற்கு அனுப்பியதாக பிரிஎப் குற்றம்சாட்டி இருந்தது. சுனாமி நிவாரணத்திற்கு கவுன்சில் வழங்கும் நிதியை வழங்கியதால் தமிழ் பள்ளிக்கு நிதி அதிகம் வழங்கப்படுகின்றது என்பது குற்றச்சாட்டாக இருந்தது. ஆனால் சுனாமிக்கு அனுப்பப்பட்ட நிதி கிங்ஸ்ரன் கவுன்சில் வழங்கிய நிதியல்ல. அது கிங்ஸ்ரன் தமிழ் பள்ளியின் பெற்றோர்கள் ஆசிரியர்கள் நண்பர்கள் வழங்கிய நிதி. 30 000 பவுண்கள் சேமிப்பில் உள்ளது என்றும் அதனை தங்களுக்கு ஒரு கட்டடம் வாங்குவதற்காக சேமிப்பில் வைத்திருந்ததாக கிங்ஸ்ரன் தமிழ் பள்ளியின் முன்னாள் கவனரும் தற்போதைய உறுப்பினருமான டொக்கடர் பகீரதன் லண்டன் குரலுக்குத் தெரிவித்தார். விசாரணைகளில் கிங்ஸ்ரன் தமிழ் பள்ளியின் மீதான குற்றச்சாட்டு நிராகரிக்கப்பட்டது.

இந்த விசாரணைகளுக்கு முன்னதாக கிங்ஸரன் கவுன்சில் மேற்கொண்ட விசாரணையிலும் குற்றாசாட்டுகள் அடிப்படையற்றவை என நிரூபிக்கப்பட்டதாக டொக்டர் பகீரதன் லண்டன் குரலுக்குத் தெரிவித்தார். ஆயினும் பிரிஎப் தொடர்ச்சியாக கவுன்சிலின் எதிர்க்கட்சியினூடாக அழுத்தம் கொடுத்து ஸ்குறுட்னி பனலினூடாக இந்த விசாரணையைத் தூண்டியது குறிப்பிடத்தக்கது.

இவ்விசாரணைகள் பற்றி கருத்து வெளியிட்ட கவுன்சிலர் ஹவாட் ஜோன்ஸ் பிரிஎப் தலைவர் நாதன் குமாரை தான் முதலில் சந்தித்த போது கேள்விப்பட்டவற்றின் அடிப்படையிலேயே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் ஆனால் தற்போது நாதன் குமார் சொல்வதன்படி அவரால் அவற்றை நிரூபிக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார். தற்போது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஆவணங்களைத் தந்தவர்கள் இது தங்களுடைய ஆவணம் அதற்கு தாங்கள் ஆதரவளிக்கின்றோம் என்று எவரும் முன்வரவில்லை எனவும் கவுன்சிலர் ஹவாட் ஜோன் தெரிவித்தார்.

பிரிஎப் வழங்கிய மேற்படி மொட்டைப் பெட்டிசத்தை விசாரிப்பதற்கு 173 மணித்தியாலங்கள் 10300 பவுண் பொதுப் பணம் செலவிடப்பட்டதாகவும் கிங்ஸ்ரன் கவுன்சில் கணக்கை கண்காணிக்கும் ஓடிட் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஓடிட் அலுவலகத்தின் உள்ளக இயக்குனர் ஜெரிமி கைற் கிங்ஸ்ரன் தமிழ் பள்ளிக்கு நிதி உதவி தேவை என்பதை ஏற்றுக்கொள்வதாகவும் ஆனால் கேட்கப்பட்ட தொகையிலும் குறைவான நிதியுதவி போதுமானது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் ஓடிட்டர் அலுவலகம் சில பரிந்துரைகளையும் கிங்ஸ்ரன் தமிழ் பள்ளிக்கு வழங்கி உள்ளது. தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை ஏற்றுக் கொள்வதாக கிங்ஸ்ரன் தமிழ் பள்ளியின் சார்பில் இளங்கோவன் தெரிவித்துள்ளார். கிங்ஸ்ரன் தமிழ் பள்ளியும் கிங்ஸ்ரன் கவுன்சிலும் நீண்ட காலமாக இணைந்து செயற்படுகின்றது என்று தெரிவித்த கிங்ஸ்ரன் கவுன்சிலர் பொப் ஸ்ரீட் கவுன்சில் வழங்கும் நிதியுதவி குறைக்கப்பட்டால் தமிழ் பள்ளி நிதிக் கஸ்டத்தை எதிர்கொள்ளும் என்று தெரிவித்தார்.

பிரிஎப் பெட்டிசத்தின் பின்னணி : 

தொண்ணூறுக்களின் ஆரம்ப காலத்தில் தங்களை தமிழ் மக்களின் ஏகதலைமையாக அறிவித்துச் செயற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் புலம்பெயர்ந்த நாடுகளில் உருவாக்கப்பட்ட தன்னார்வ அமைப்புகள் தமிழ் பள்ளிகள் ஆலயங்கள் என்பனவற்றின் நிர்வாகத்தில் இருந்த ஓட்டை உடைசலுகளுக்குள் புகுந்து தன்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. மேற்குலகில் தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட போது தமிழீழ விடுதலைப் புலிகளின் பினாமி நிறுவனங்களாக இயங்கிய அமைப்புகள் அந்தக் கட்டுப்பாட்டை தங்களுக்குள் வைத்திருந்தன. பிரித்தானியாவிலும் பிரித்தாகிய தமிழ் போறம் என்று பெயரளவில் இயங்கினாலும் பிரித்தானிய ரைகர் போறம் என்றளவிலேயே அதன் செயற்பாடுகள் அமைந்தது.

Surrey_Tamil_Schoolஅந்த வகையில் 1986ல் உருவாக்கப்பட்ட கிங்ஸ்ரன் தமிழ் பள்ளியின் நிர்வாகத்தில் இலங்கையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அ அமிர்தலிங்கத்தின் குடும்பத்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால் அரசியல் சாராத பலரும் அப்பள்ளியின் நிர்வாகத்தில் உள்ளனர். அவர்கள் இலங்கை அரசியலை பிள்ளைகளின் கல்வியுடன் கலக்கத் தேவையில்லை என்கின்றனர். ஆனால் பள்ளியின் நிர்வாகத்தில் இருந்த பிரிஎப் உறுப்பினர்கள் சிலர் ஏனைய அமைப்புகள் போல் கிங்ஸ்ரன் பள்ளியையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி எடுத்தனர். ஆனால் அந்த முயற்சி பலனளிக்காத நிலையில் கடந்த ஆண்டு யூன் 7ல் போட்டியாக மற்றுமொரு பள்ளியை ஆரம்பித்தனர். சறே தமிழ் பள்ளி என்ற பெயரில் இயங்கும் இப்பள்ளி கோம்பே ஆண்கள் பள்ளியில் செயற்படுகின்றது. விஜயகுமார், விமலதாசன், சிவானந்தராசா, டொக்டர் மகிதரன், டொக்டர் புவி ஆகியோரே இதன் பின்னணியில் செயற்பட்டுள்ளனர். ‘படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் – கிங்ஸ்ரன் பிள்ளைகளின் பெயரில் மோதல்’ என்ற தலைப்பில் லண்டன் குரலின் 24 இதழில் இதுபற்றிய விரிவான செய்தி வெளியானது.

தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்ட வர முடியாது போனதால் கிங்ஸ்ரன் பள்ளிக்கு பல வகையிலும் பிரிஎப் இல் உறுப்பினராக இருந்தவர்கள் நெருக்கடி வழங்கினர். மொட்டைத் துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. தங்கள் புதிய பாடசாலைக்கு மாணவர்களையும் பெற்றோரையும் கவர்ந்திழுக்கும் போட்டி ஒன்றும் அங்கு பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்றது. இந்தப் பழிவாங்கலின் தொடர்ச்சியாக கிங்ஸ்ரன் தமிழ் பள்ளி மீது பெட்டிசங்களும் அடிக்கப்பட்டது. இதன் பின்னணியில் பிரிஎப் உறுப்பினர்கள் இருந்தனர் என்பதையும் அன்று லண்டன் குரலில் சுட்டிக்காட்டி இருந்தோம்.

Suren_Surendiranஇது தொடர்பாக பிரிஎப் இன் அப்போதைய தலைவர் சுரேன் சுரேந்திரனிடம் லண்டன் குரல் இதழ் 25க்காக ஒரு நேர்காணலைச் செய்திருந்தோம். அப்போது ‘பிரித்தானிய தமிழர் பேரவை, கோயில்கள், பாடசாலைகள் ஆகியவற்றின் நிர்வாகங்களைக் கைப்பற்ற முயற்சிப்பதாக  அண்மைக்காலமாக சில குற்றச்சாட்டுகள் உள்ளது. இவ்வாறான சம்பவங்கள் 1991ல் லண்டணில் இடம்பெற்றது. இவ்வாறான விசயங்களை பிரித்தானிய தமிழர் பேரவை மேற்கொள்கிறதா?’ எனக் கேட்ட போது ‘எனக்கு அந்த குற்றச்சாட்டுப் பற்றி தெரியாது. எங்கள் அமைப்பு நான் சொன்னமாதிரி, சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிராக நடக்கிற வன்முறைகள், அட்டூழியங்களை சர்வதேச ரீதியில வெளிக்கொண்டு வந்து சர்வதேச அழுத்தத்தை சிறிலங்கா அரசுக்கு எற்படுத்தவது தான் எங்களுடைய நோக்கம். குறிக்கோள். அவ்வளவு தான். வெல் டிபைன் கொன்ஸ்ரிரியூசன். தமிழ் ஸ்கூல் கோயில் எங்களுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை.’ என்று பதிலளித்தார்.

அத்துடன் விட்டுவிடாமல் ‘கிங்ஸ்ரன் தமிழ் பாடசாலை, பிரித்தானிய தமிழர் பேரவை பாடசாலை நிர்வாகத்தில் தலையீடு செய்ததாக நேரடியாக குற்றம்சாட்டி உள்ளது.’ எனக் கேட்டபோது ‘நான் அப்படி ஒன்றும் கேள்விப்படவில்லை. ஆனால் நான் போய் நாளைக்கு ஒரு களவு செய்தால் அதை தமிழ் போறம் செய்தது என்று சொல்லேலாது என்ன. பிளவுகள் அதுகள் இதுகளுக்கு சும்மா தமிழ் போறம் காரணம் என்று சொல்றது எல்லாம் சில்லறைக் கதையல்.’ எனப் பதிலளித்தார்.

ஆனால் ஒக்ரோபர் 20ல் பிரிஎப் இன் இப்போதைய தலைவர் விசாரணைக் குழுவின் முன் தோன்றி மண்கவ்வியுள்ளார். பிரிஎப் நேரடியாக தன்னார்வ நிறுவனங்கள் தமிழ் பள்ளிகள் ஆலயங்களில் தலையீடு செய்வதும் தமது கட்டுப்பாட்டுக்குள் வராத அமைப்புகள் மீது தங்கள் உறுப்பினர்களை கொண்டு பெட்டிசம் அடிப்பதும் மொட்டைக்கடிதம் அடிப்பதும் தற்போது அம்பலமாகி உள்ளது.

Seevaratnam_Nஇதே போன்றதொரு முயற்சி டொக்கடர் நித்தினானந்தனின் வெஸற் லண்டன் தமிழ் பாடசாலையில் சிவயோகம் சீவரத்தினம் அவர்களால் மேற்கொள்ளப்பட்டுத் தோல்வியில் முடிவடைந்தது. சிவயோகம் சீவரத்தினம் ஆர் ஜெயதேவனின் ஈழபதீஸ்வரர் ஆலயத்தைக் கைப்பற்ற எடுத்த முயற்சியிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். ஆர் ஜெயதேவன் தடுத்து வைக்கபட்ட காலத்தில் சிவயோகத்தின் பலகையை மாட்டி சிலநாட்கள் ஆலயத்தை உரிமை கொண்டாடினார். அது தோல்வியில் முடியவே அக்ரன் கார் ரென்ரலின் இடத்தை பல மடங்கு விலை அதிகம் கொடுத்து (900 000 பவுண்) வாங்கி ஈழபதீஸ்வரருக்குப் போட்டியாக ஆலயம் கட்டத்திட்டமிட்டார். ஆனால் அப்பகுதி கவுன்சில் கோயில் கட்ட அனுமதி மறுத்துவிட்டதால் மீண்டும் மண் கவ்வினார்.

அண்மையில் டெய்லி மிரர் மற்றும் சண் பத்திரிகைகளில் வெளியான உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் உண்ணாவிரத காலத்தில் மக்டோனால்ட் சாப்பிட்டது பற்றிய செய்தியை ரிவைஓ உறுப்பினர்களுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக பிரிஎப் உறுப்பினர்களே கசியவிட்டதாகவும் உண்ணாவிரதத்தில் முன்னின்ற தமிழ் இளையோர் சிலர் குற்றம்சாட்டுகின்றனர்.

இவை தொடர்பான பிரிஎப் இன் நிலைப்பாட்டை அறிய பிரிஎப் உடன் தொடர்பு கொண்ட போது அதன் தவைவர் நாதன் குமார் அங்கிருக்கவில்லை. எமது தொலைபேசி இலக்கத்தை அவருக்கு வழங்குவதாக அலுவலக உதவியாளர் ஜனா தெரிவித்தார். நாதன் குமார் தொடர்பு மேற்கொள்ளாமையால் அவருக்கும் பிரிஎப் முக்கியஸ்தர் சிலருக்கும் எமது கேள்விகளை மின் அஞ்சலினூடாக அனுப்பி வைத்திருந்தோம் அவை எதற்கும் எமக்கு பதிலில்லை. அதனால் அக்கேள்விகளை தேசம்நெற் இணையத்தில் பிரசுரிக்கின்றோம். Letter_to_BTF அவர்கள் பதிலளிக்கும் பட்சத்தில் அவற்றினை லண்டன் குரலிலும் பிரசுரிப்போம்.

வட்டுக்கோட்டைத் தீர்மானக் குழுவிற்கு பிரிஎப் எச்சரிக்கை

Paramakumarடிசம்பர் 12ல் நடைபெறவிருக்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான கருத்துக் கணிப்பு முடிவடைந்ததும் அக்கருத்துக் கணிப்பை மேற்கொள்ளும் தமிழ் தேசிய சபை கலைக்கப்பட வேண்டும் என பிரிஎப் ஒழுங்கு செய்த கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. லண்டனில் நவம்பர் 1ல் இடம்பெற்ற இச்சந்திப்பிலேயே இவ்வெச்சரிக்கை விடுக்கப்பட்டது. பிரித்தானியா தமிழர்களுக்கு தாங்களே ஏகபிரதிநிதிகள் என்ற தோரணையில் தன்னார்வ அமைப்புகள் பலவற்றுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. வட்டுக்கோட்டைத் தீர்மானம், நாடுகடந்த தமிழீழம், தமிழ் கூட்டமைப்பு எனப் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் தெரிவு செய்யப்பட்டு அழைக்கப்பட்டனர்.

இவ்வெச்சரிக்கை தொடர்பாக வட்டுக்கோட்டைத் தீர்மானம் தொடர்பான கருத்துக் கணிப்பை முன்னெடுக்கும் தமிழ் தேசிய சபையின் முன்னணி உறுப்பினரான பரமகுமரனைத் தொடர்புகொண்ட போது எமது அமைப்பை ‘கலைக்கிறதோ நிப்பாட்டுறதோ அவர்களின் கையில் இல்லைத் தானே’ எனத் தெரிவித்தார். நவம்பர் 1ல் இடம்பெற்ற கூட்டத்தில் ‘எல்லா விதமான எல்லாமும் கதைக்கப்பட்டது தான். ஜனநாயகம் பேச்சுச் சுதந்திரம் எதையும் நம்பாதவர்கள்’ என்று தெரிவித்த பரமகுமரன் ‘காலகட்டத்தில் அவர்களை மாற்றி எடுக்கிற பொறுப்பு எங்களுக்கும் இருக்கு. மாறுகிற தேவை அவர்களுக்கும் இருக்கிறது’ எனத் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் தங்களது கட்டுப்பாடுகளை மீறி அமைப்புகள் செயற்படுவதாகவும் இவ்வமைப்புகளைச் சார்ந்தவர்கள் சிலர் தங்கள் பற்றிய விமர்சனங்களை ஊடகங்களில் வெளியிட்டு வருவதாகவும் அவை நிறுத்தப்பட வேண்டும் என அழைக்கப்பட்டவர்கள் மறைமுகமாக எச்சரிக்கப்பட்டனர். அண்மைக் காலமாக பிரிஎப் ற்கு சார்பானவர்கள் அல்லது சார்பான அமைப்புகளைச் (வட்டுக்கோட்டைத் தீர்மானம், நாடுகடந்த தமிழீழம், தமிழ் கூட்டமைப்பு) சேர்ந்தவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இந்நிலை தொடர்பான விமர்சனங்களை வெளிப்படையாக வெளியிட ஆரம்பித்துள்ளனர். அவர்களை எச்சரிக்கும் வகையிலேயே நவம்பர் 1ல் நடைபெற்ற பிரிஎப் கூட்டத்தில் கருத்துக்கள் வெளியிடப்பட்டு உள்ளது.

பிரிஎப் நிர்வாகம் நாதன் குமார் தலைமையில் இருந்த போதும் ‘தனம்’, ‘ரூட் ரவி’ ஆகியோரே பிரிஎப் யை கட்டுப்படுத்துகின்றனர். நவம்பர் 1ல் இடம்பெற்ற பிரிஎப் கூட்டத்தில் எச்சரிக்கைகள் ‘தனம்’ என்பவரிடம் இருதே வந்துள்ளது. பிரித்தானியாவில் வெவ்வேறு வகைகளில் சேகரிக்கபட்ட மொத்த நிதிகளுக்கும் இவரே பொறுப்பாக இருந்துள்ளார். இந்த நிதி பற்றிய கட்டுப்பாடு தனம், ரூட் ரவி, ரெஜி ஆகியோரின் பொறுப்பிலேயே இருந்துள்ளது.

ரூட் ரவி தாயகத்தில் தமிழீழ விடுதலைப் பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்திற்குப் பொறுப்பாக செயற்பட்டவர். பின்னர் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டவர். எண்பதுக்களின் நடுப்பகுதியில் இவர் யாழில் இருந்த போது கிருஸ்ணானந்தன்; என்பவரால் இயக்கப்பட்டு வந்த ஊற்று ஆய்வு நிறுவனத்தை பலாத்பாரமாக அவரிடம் இருந்து பறித்துக் கொண்டனர். கிருஸ்ணானந்தன் அவரது வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டு அவரது வீடும் அங்கு இயங்கி வந்த ஆய்வு நிறுவனமும் புலிகளின் அலுவலகம் ஆக்கப்பட்டது. 1987ல் இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பின் போது அவ்வீடும் ஊற்று நிறுவனமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அலுவலகமாகக் கருதப்பட்டு இந்திய இராணுவத்தின் தாக்குதலுக்கு இலக்காகி அழிக்கப்பட்டது. அதன் பின்னர் இலங்கையில் தமிழ் பகுதிகளில் அவ்வாறான ஒரு ஆய்வு நிறுவனமும் ஊற்று போன்ற அறிவியல் சஞ்சிகையும் இதுவரை தோன்றவில்லை.

இது பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலும் தொடர்ந்தது. கனடாவில் தேடகம் போன்ற அமைப்புகள் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்ந்தவர்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளானது. மஞ்சரி சஞ்சிகை எரிக்கப்பட்டது. ரிரிஎன் தொலைக்காட்சியைச் சேர்ந்தவர்கள் லண்டன் குரல் பத்திரிகைகளின் பிரதிகளை தூக்கி எறிந்த சம்பவங்களும் நடந்துள்ளது.

இச்சிந்தனை முறை இவ்வளவு அழிவுகளின் பின்னரும் மாற்றமடையவில்லை என இந்நிகழ்வில் கலந்துகொண்ட நண்பர் ஒருவர் குறைப்பட்டுக் கொண்டார். இந்த நிகழ்வு தனக்கிருந்த நம்பிக்கையை தகர்த்து விட்டதாகவும் தெரிவித்தார்.

ஈஸ்ற்ஹாம் மோதல்! நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பு!! தமிழ் இளைஞர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டு விடுவிப்பு!!!

Police_Vansலண்டணில் தமிழ் மக்கள் மிக நெருக்கமாக வாழ்கின்ற ஈஸ்ற்ஹாமில் ஒக்ரோபர் 25 அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தை அடக்க நூற்றுக்கும் மேற்பட்ட பொலிசார் குவிக்கப்பட்டு 13 பேர் கைது செய்யப்பட்டனர். பேர்ச்சஸ் றோட்டில் இருந்து பிரிகின்ற சவுத்என்ட் றோட்டில் உள்ள தமிழ் மண்டபத்தில் ஒக்ரோபர் 24 இரவு நடந்த பார்ட்டியிலேயே இந்த மோதல் வெடித்துள்ளது. இந்தப் பார்ட்டியில் லண்டனின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர் குழுக்களும் பங்கு பற்றியதாகவும் அப்போதே இந்த மோதல் வெடித்ததாகவும் தெரியவருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிப்பதற்கு ஒக்ரோபர் 28ல் லண்டன் தமிழ்ச் சங்கத்தில் பொலிஸார் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர். பொலிஸ் தரப்பில் இருந்து பத்துக்கும் மேற்பட்டவர்கள் இச்சந்திப்பிற்கு வந்திருந்தனர். தமிழ் சமூகத்தில் இருந்து குறிப்பாக ஒரு சிலரே சமூகமளித்து இருந்தனர்.

ஒக்ரோபர் 25 அதிகாலை இடம்பெற்ற மோதலில் கத்தி பொல்லுகள் உட்பட கூரிய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் வன்முறையின் தன்மை மோசமானதாக இருந்ததாகவும் புலனாய்வு அதிகாரி சைமன் டொபின்சன் தெரிவித்தார். பார்ட்டி நடந்த மண்டபத்திற்கு அருகில் இருந்த கட்டிட பொருட்கள் விற்பனை நிலையத்தில் இருந்த கற்கள் மரக்குற்றிகள் போன்றவற்றை இளைஞர்கள் எடுத்துக்கொண்டு மோதலில் ஈடுபட்டதான புலனாய்வு அதிகாரி சைமன் டொபின்சன் தெரிவித்தார். பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்த போது பெரும்தொகையானோர் மோதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாகவும் சவுன்என்ட் றோட்டின் தொடக்கத்தில் இருந்து ஈஸ்ஹாம் அன்டகிறவுண்ட் ஸ்ரேசன் வரை மோதல் இடம்பெற்றதாகவும் அவ்வதிகாரி லண்டன் குரலுக்குத் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் பலருக்கு காயம் ஏற்படிருந்து என்றும் இவர்களில் மூவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகவும் பொலிஸ் அதிகாரி லண்டன் குரலுக்குத் தெரிவித்தார். மோசமாகக் காயமடைந்தவர்களில் ஒருவர் தொடர்ந்தும் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றார். மோசமாகக் காயமடைந்தவர் ஸ்னெக் (பாம்பு) என்றும் அவர் தன்னுடைய நெருங்கிய நண்பர் என்றும் ஒக்ரோபர் 28; பொலிஸ் சந்திப்பில் ஒருவர் தெரிவித்தார். தன்னுடைய நண்பனுக்கு தலையில் பாரிய அடி வீழ்ந்து கோமா நிலைக்கு சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒக்ரோபர் 24 இரவு இடம்பெற்ற சம்பவத்தினால் அம்மண்டபப் பகுதி குற்றப் பரிசோதணைக்காக பொலாஸாரினால் எல்லையிடப்பட்டது. அதனால் அதே மண்டபத்தில் மறுநாள் நடக்க இருந்த பிறந்த தின வைபவம் நிறுத்தப்பட வேண்டி ஏற்பட்டது.

இக்குறிப்பிட்ட பார்ட்டி யாருடைய பிறந்த தினம் அல்லது திருமண நிகழ்வுக்காக ஏற்பாடு செய்யப்பட வில்லை என்றும் இது தமிழ் போன்கார்ட் நிறுவனமொன்றினால் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் லண்டன் குரலுக்குத் தெரியவருகின்றது. மேற்படி நிறுவனத்தின் முக்கியஸ்தர்கள் இப்பார்ட்டிக்கு வேண்டிய மதுபானம் மற்றும் உணவு வகைகளை ஈஸ்ற்ஹாமில் ஓடர் செய்ததையும் உறுதிப்படுத்தக் கூடியதாக உள்ளது. தங்கள் நிறுவனத்தின் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் இளைஞர்களை குசிப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட இந்தப் பார்ட்டியே மோதலில் முடிவடைந்துள்ளது.

மேற்படி சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 13 இளைஞர்களும் விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இவர்களுடைய விசாரணைகள் தங்களுக்கு கிடைக்கப் பெற்ற ஆதாரங்கள் என்பன சிபிஎஸ் க்கு வழங்க்பட்டு அவர்களுடைய முடிவுகளின் படி குற்றங்கள் சம்பந்தப் பட்டவர்கள் மீது பதிவு செய்வது பற்றி முடிவெடுக்கப்படும் என புலனாய்வு அதிகாரி சைமன் டொபின்சன் தெரிவித்தார். கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் பிரித்தானியா விலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிப்பது தொடர்பாக புலனாய்வு அதிகாரியிடம் கேட்டபோது அவ்வாறான குற்றப் புலனாய்வுடன் தொடர்பான தகவல்களை தன்னால் பகிர்ந்தகொள்ள முடியாது என அவ்வதிகாரி தெரிவித்தார்.

முப்பது வரையான தமிழ் இளைஞர்களைப் பலிகொண்ட இந்த இளைஞர் குழுக்களின் வன்முறை ஒப்பிரேசன் என்வர் போன்ற நடவடிக்கைகளால் மட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால் இவ்வன்முறைகள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.

திருடர்கள் தாக்கியதில் தமிழக வாலிபர் லண்டனில் மரணம்

Mudhu_Kumar_Funeralலண்டன் குரொய்டனில் வாழ்ந்து வந்த சரவணகுமார் செல்லப்பன் (25) என்ற இளைஞர் ஒக்ரோபர் 19ல் அவருக்கு ஏற்படுத்தப்பட்ட உடற்காயம் காரணமாக மரணமடைந்தார். இவர் தமிழ்நாடு நாமக்கல்லைச் சேர்ந்த இளைஞர் தனது கல்வியைத் தொடர்வதற்காக லண்டன் வந்திருந்தார். தீபாவளி தினமான ஒக்ரோபர் 17ல் மாலை ஏழு மணியளவில் தனது வீட்டுக்கு அருகில் இருந்த வீதியில் நின்று தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த சரவணகுமார் செல்லப்பன் இனம்தெரியாத சில இளைஞர்களால் தாக்கப்பட்டதாக அதே ஊரைச் சேர்ந்த சரவணகுமாரின் நண்பர் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார்.

தாக்கப்பட்டு வீதியில் வீழ்ந்த சரவணகுமார் செல்லப்பனிடம் இருந்த தொலைபேசி மற்றும் கிறடிட்காட் போன்ற உடமைகள் பறிக்கப்பட்டது என்றும் திருடிச் சென்றவர்கள் வீதியில் நீண்ட நேரமாகக் கதைத்துக் கொண்டிருந்த சரவணகுமார் செல்லப்பனின் பிடரியில் இரும்புக் குற்றியினால் தாக்கிவிட்டு அவரது உடைமைகளைப் பறித்துச் சென்றதாகவும் சரவணகுமாரின் நண்பர் கூறினார்.

வீதியில் வீழ்ந்த சரவணகுமார் செல்லப்பன் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு எழுந்து தனது வீட்டுக்குச் சென்று அங்கு நடந்ததை தான் தங்கியிருந்த வீட்டுக்காரர் ராஜனுக்கு தெரிவித்ததாக ராஜனின் நண்பர் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். தான் தன்னுடைய நண்பர்களுடன் மேடே மருத்துவமனைக்கு செல்ல உள்ளதாகக் கூறிவிட்டு அவருடைய நண்பர்களிடம் சென்றுள்ளார்.

நண்பர்களிடம் நடந்ததைக் கூறி விட்டு தனக்கு பிடரியில் வலி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவர்கள் மேடே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சரவணகுமார் செல்லப்பனைக் காண்பித்துள்ளனர். சரவணகுமார் செல்லப்பனைப் பார்வையிட்ட மருத்துவர் தாக்குதலினால் ஏற்பட்ட வலியே அது என்று கூறி வலிநிவாரணியை வழங்கியாதாகத் தெரியவருகிறது.

அன்றைய தினம் இரவு சரவணகுமார் தான் தங்கியிருந்த வீட்டில் தங்கவில்லை. தன்னுடைய நண்பர்கள் வீட்டிலேயே தங்கியதாகவும் சரவணகுமார் தங்கியிருந்த வீட்டுக்காரரர் ராஜனின் நண்பர் கூறுகிறார். இரவு படுக்கைக்குச் சென்ற போதும் சரவணகுமார் செல்லப்பனின் வலி குறைந்திருக்கவில்லை என்றும் நண்பர்கள் அடிபட்ட இடத்தில் சுடுநீர் ஒத்தடம் கொடுத்தனர் என்றும் சரவணகுமாரின் நண்பர் தெரிவிக்கின்றார்.

வலியுடன் படுக்கைகுச் சென்ற சரவணகுமார் செல்லப்பன் மறுநாள் 18 ஒக்ரோபர் காலையில் எழுந்திருக்கவில்லை. காலை எழுந்து வேலைக்கு புறம்பட்ட நண்பன் வலியுடன் படுக்கைக்குச் சென்றவன் எப்படி உள்ளான் என்று பார்க்கச் சென்ற போதும் மூக்கிலும் வாயிலும் இரத்தம் வடிந்தபடி சரவணகுமார் செல்லப்பன் படுத்திருந்தார். உடனடியாக அவசர உதவிக்கு அழைப்பு விடுத்து ரூற்றிங் சென் ஜோர்ஜ் மருத்துவமனைக்கு சரவணகுமார் செல்லப்பன் எடுத்துச் செல்லப்பட்டார். அங்கு மறுநாள் மதியம் ஒரு மணியளவில் சரவணகுமார் மரணமடைந்ததாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

சரவணகுமார் செல்லப்பன் தனது இளம் வயதில் தன்னுயிரை இழந்ததையிட்டு உலகத் தமிழர் இயக்கம் (யுகே) தனது ஆழந்த மனவருத்தத்தை தெரிவித்துள்ளதுடன் இறந்த இளைஞரின் குடும்பத்தினருக்கும் அவரது மரணச் செய்தியை அறிவித்துள்ளனர். தமிழ்பேசும் நாங்கள் சரவணகுமாரது உடலை பொறுப்பேற்காவிட்டால் கவுன்சில் அனாதையாக கருதி உடலை அடக்கம் செய்வவே வழமை. ஆதலால் சரவணகுமாரின் உடலைப் பொறுப்பேற்று அவரது உறுவினர்களுக்கு அனுப்பி வைப்பதற்கான முயற்சியை தாம் மேற்கொண்டுள்ளதாகவும் உலகத் தமிழர் இயக்கம் சார்பில் ஜேக்கப் ரவிபாலன் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார்.

ஏற்கனவே விபத்தில் மரணமடைந்த மருத்துவத்தாதி செல்வி மஞ்சுளாவின் உடலையும் உலகத் தமிழர் இயக்கம் அவருடைய பெற்றோருக்கு அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜனவரி 6ல் விபத்தில் மரணமான தமிழகத்தைச் சேர்ந்த முத்துக்குமார் என்ற இளைஞரின் உடல் இங்கு உறவினர்கள் இல்லாத நிலையில் ரவர்ஹம்லற் கவுன்சிலால் அனாதையாக் கருதப்பட்டு அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. செப்ரம்பர் 9ல் முத்துக்குமாரின் உடலை கவுன்சிலர் போல் சத்தியநேசன் பொறுப்பேற்று லண்டன் சைவமுன்னேற்றச் சங்க ஐயரின் உதவியுடன் இறுதிக்கிரியைகளை மேற்கொண்டு அஸ்தியை முத்துக்குமாரின் பெற்றோருக்கு அனுப்பி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

‘அமைச்சர்களதும் பாராளுமன்ற உறுப்பினர்களதும் பதில்கள் சாதகமாக அமைந்தது’ புலம்பெயர் புலி ஆதரவுக் குழுவின் இலங்கை விஜயம்

நவம்பர் முற்பகுதி வரை நான்கு வாரங்களாக இலங்கைப் பயணத்தை மேற்கொண்டிருந்த புலம்பெயர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் குழு தற்போது நாடு திரும்பியுள்ளது. ‘அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சாதகமாகப் பதிலளித்தனர்’ என இலங்கைக்கு விஜயம் செய்த குழுவின் சார்பில் சட்டத்தரணி கெ பத்மநாதன் தெரிவித்தார். சட்டத்தரணி கெ பத்மநாதன் (லண்டன்), ஆர் சோமஸ்கந்தன் (ஜேர்மனி), ரி தர்மகுலசிங்கம் (டென்மார்க்), ஆர் இலங்கைத் தேசியமன்னன் (லண்டன்) ஆகியோரே இலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பி உள்ளனர். இவர்கள் தங்கள் விஜயத்தின் போது அமைச்சர்கள் பசில் ராஜபக்ச, டக்ளஸ் தேவானந்த, விநாயகமூர்த்தி முரளீதரன் உட்பட பல அமைச்சர்களையும் எதிர்கட்சி மற்றும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து உரையாடி உள்ளனர்.

இக்குழுவில் பயணித்த சட்டத்தரணி கெ பத்மநாதன் ‘Stop Genocide’ பிரச்சாரத்திற்காக அமெரிக்க சட்டத்தரணி புருஸ் பெயினை வரவழைத்து பல்வேறு கூட்டங்களை லண்டனில் ஏற்பாடு செய்தவர். நெடுமாறன் தலைமையிலான உலகத் தமிழர் இயக்கத்தின் பிரித்தானிய இணைப்பாளராகவும் இவர் இருந்துள்ளார். ஆர் இலங்கைத் தேசியமன்னன் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்ட இளைஞர் பேரவையின் தலைவராக இருந்தவர். தற்போது வெண்புறா அமைப்பின் அறங்காவலராக உள்ளார். ரி தர்மகுலசிங்கம் டென்மார்க்கில் கவுன்சிலராக உள்ளார். வட்டுக்கோட்டைப் பிரகடனத்தை முன்னெடுக்கும் கி பி அரவிந்தனின் ‘அப்பால்தமிழ்’ ஊடாக இலக்கிய நூல்களை வெளியிட்டு உள்ளார்.

இவர்களை விடவும் தமிழீழத் தேசியத் தலைவருடன் படம் எடுத்துக் கொண்ட கிழக்கு லண்டன் வர்த்தகப் பிரமுகர் திலகராஜாவும் (திலக் – Tilko property) அண்மையில் இலங்கை சென்று திரும்பியுள்ளார். முன்னர் புலிகளுடன் செய்து கொண்ட வர்த்தக உடன்பாட்டை தற்போது அமைச்சர் டக்ளஸ் ஊடாக அவர் செய்துகொள்ள முயற்சிப்பதாகத் தெரிகின்றது. இலங்கை அரசுடன் இணங்கிப் போக வேண்டும் என்று  தற்போது கருத்து வெளியிட்டு வருகின்றார்.

1987 இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஒரு அங்கமாக உருவாக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டமே தற்போதுள்ள அரசியல் சூழலில் சாத்தியமான தீர்வு என இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்ட குழு கருதுகின்றது. Center for Peace and Social Development என்ற டென்மார்க்கில் இயங்கும் அமைப்பே இவ்விஜயத்தை ஏற்பாடு செய்துள்ளது. தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்டது, அவசரகாலச்சட்டம் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகின்றது, பாதுகாப்பு வலயங்கள் என்பன பற்றிப் பேசியதாகத் தெரிவித்துள்ளனர். இனவாத பேச்சுக்கள் அறிக்கைகள் குற்றமாக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனக் கேட்டதாகவும் அதற்கு அமைச்சர்கள் உடன்பட்டதாகவும் இவர்கள் கூறுகின்றனர்.

தமிழ் மொழி முழுமையாக அமுல்படுத்துவதற்கு அமைச்சர்கள் சம்மதித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள இக்குழுவினர் வடக்கு கிழக்கு பொலிஸ் பிரிவில் 90 வீதமான பொலிஸார் தமிழர்களாக இருப்பார்கள் என்பதை அமைச்சர்கள் உறுதிப்படுத்தி உள்ளதாகத் தெரிவித்தனர்.

இக்குழுவினர் மன்னார், மாந்தை, வவுனியா, செட்டிகுளம் – மனிக் பாம், மாங்குளம், துணுக்காய், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டு உள்ளனர். சில அபிவிருத்தித் திட்டங்களைப் பார்வையிட்டதாகத் தெரிவித்துள்ள இக்குழுவினர் மாந்தையில் மீள்குடியமர்த்தப்பட்டவர்களுக்கு போக்குவரத்து, பாடசாலை போன்ற அடிப்படை விடயங்கள் வழங்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டி உள்ளனர். மக்கள் முகாம்களை விட்டு வீடுகளுக்கு செல்லவே விரும்புவதாகத் தங்களிடம் கூறியதாக குறிப்பிட்டுள்ள இக்குழு வரும் ஜனவரி மாத்த்திற்குள் முகாம்கள் மூடப்பட்டு விடும் என்ற உறுதியை ஓய்வு பெற்ற ஐஜிபி – அரச ஆலோசகர் சந்திர பெர்னான்டொ தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். இறுதியான யுத்தம் நடந்த பகுதியைத் தவிர ஏனைய பிரதேசங்களில் மீள்குடியேற்றம் இடம்பெறும் என அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டதாக இக்குழு தெரிவிக்கின்றது.

பூந்தோட்டம் முகாமில் 12000 போராளிகளும் 2000 சிறுவர் போராளிகளும் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தென்பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் காயப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் இக்குழுவினர் தெரிவிக்கின்றனர். தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணையகம் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் சிறுவர்களைப் பாராமரிக்க முன்வரும்பட்சத்தில் அவர்களிடம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். துணுக்காயில் 15 ஏக்கர் நிலத்தை அரசு வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள இக்குழு புலம்பெயர்ந்த தமிழர்கள் அதற்கான பணிகளில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

கிழக்கில் 46 000 விதவைகள் இருப்பதாகவும் அதேயளவு எண்ணிக்கையில் வடக்கிலும் இருப்பதாகவும் தெரிவித்துள்ள இக்குழு இவர்களுக்கும் இவர்களது குழந்தைகளுக்கும் மிகுந்த உதவிகள் வழங்கப்பட வேண்டி உள்ளதாகவும் அதற்கு அரசாங்கத்திடம் எவ்வித திட்டங்களும் இல்லையென்று குற்றம்சாட்டி உள்ளது.

இக்குழுவினர் இம்மாத முடிவில் மற்றுமொரு விஜயத்தையும் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

ஒசானியா வைக்கிங்கில் இருந்து ஒரு பகுதி அகதிகள் வெளியேறுகின்றனர்

Oceanic_Viking_Refugeesஅவுஸ் திரேலியாவின் சுங்கத் திணைக்கள ஓசானியா வைக்கிங்கில் இருந்து 22 இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தோனேசியாவில் தரையிறங்கச் சம்மதித்து உள்ளனர். ஓசானிய வைக்கிங்கில் உள்ள 78 அகதிகளையும் இந்தோனேசியாவில் தரையிறங்குமாறும் அவர்களது அரசியல் தஞ்ச விண்ணப்பத்தை உடனடியாகப் பரிசீலிப்பதாகவும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் எழுத்து மூலம் கேட்டுக்கொண்டதற்கு கப்பலில் இருந்தவர்களில் ஒரு பிரிவினர் சாதகமாக முடிவெடுத்துள்ளனர். அவர்களது தஞ்ச விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் நான்கு வாரங்களில் அவர்கள் அவுஸ்திரேலியாவில் மீள்குடியேற்றப்படவார்கள் என்றும் அவ்வதிகாரிகள் உறுதி அளித்திருந்தனர். இக்கப்பலில் உள்ள ஏனையவர்களும் இதே முடிவையே எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அவுஸ்திரேலிய அரசு வழங்கி உள்ள உறுதிமொழியின் அடிப்படையில் சிலரது தஞ்ச விண்ணப்பங்களை ஏற்று அவர்கள் அவுஸ்திரேலியாவில் குடியமர்த்தப்படுவார்கள் என்றும் ஏனையவர்கள் திருப்பி அனுப்பப்படலாம் என்றும் அஞ்சப்படுகிறது. சிலரைத் திருப்பி அனுப்புவதன் மூலம் அவுஸ்திரேலிய அரசு தாங்கள் அகதிகள் விடயத்தில் கடும்போக்கு உடையவர்கள் என்பதை நிரூபிக்க முயற்சிக்கும் என்றே அவதானிகள் கருதுகின்றனர்.

 ஓசானியா வைக்கிங்கில் உள்ள அகதிகளை அவுஸ்திரேலிய அதிகாரிகள் உடன்பாட்டுக்கு வருமாறு நெருக்குகின்றனர்:

அவுஸ்திரேலிய சுங்கத் திணைக்களக் கப்பலா ஓசானிய வைக்கிங்கில் உள்ள 78 அகதிகளையும் இந்தோனேசியாவில் தரையிறங்குமாறும் அவர்களது அரசியல் தஞ்ச விண்ணப்பத்தை உடனடியாகப் பரிசீலிப்பதாகவும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் ஓசானியா வைக்கிங்கில் உள்ள அகதிகளை எழுத்து மூலம் கேட்டுக் கொண்டுள்ளனர். அவர்களது தஞ்ச விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் நான்கு வாரங்களில் அவர்கள் அவுஸ்திரேலியாவில் மீள்குடியேற்றப்படவார்கள் என்றும் அவ்வதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

ஒக்ரோபர் 18ல் இந்தோனேசிய அவுஸ்திரேலிய சர்வதேசக் கடலில் தவித்துக் கொண்டிருந்தவர்கள் அவுஸ்திரேலியாவின் ஓசானிக் வைக்கிங் கப்பலால் காப்பாற்றப்பட்டு இந்தோனேசியாவின் யாவா தீவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்பகுதி மாகாண ஆளுநர் இந்தோனேசியா தஞ்சம் கோருவோரைக் கொட்டும் இடமல்ல என அவர்களைத் தரையிறக்க மறுத்துவிட்டார். பின்னர் காப்பாற்றப்பட்டவர்கள் பின்ரன் தீவுக்கு கொண்டுவரப்பட்டனர். தற்போது அவர்கள் இந்தோனேசியாவில் தரையிறங்க மறுத்து வருகின்றனர். அவர்கள் தங்களை அவுஸ்திரெலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டு செல்லும்படி கோருகின்றனர். ஆனால் தஞ்சம் கோருபவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியாது என அவுஸ்திரேலியாவின் வெளிநாட்டமைச்சர் கருத்து வெளியிட்டு இருந்தார்.

தற்போது இந்த அகதிகளின் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் அவுஸ்திரேலிய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

நான்காவது வாரமாகத் தொடரும் படகு அகதிகளின் விவகாரம் பிரதமர் கெவின் ருட் மீதான அவுஸ்திரேலிய மக்களின் கருத்துக்களை மிகவும் பாதித்து இருப்பது அண்மையில் வெளியாகி உள்ள கருத்துக் கணிப்புகளில் வெளிப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்தே படகு அகதிகளின் இவ்விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர அவுஸ்திரேலிய அரசு மிகுந்த கவனம் எடுக்கின்றது.

பிரதமர் கெவின் ருட் தனது முகத்தைக் காப்பாற்றவே இவ்வாறான ஒரு உடன்பாட்டுக்குச் செல்வதாக எதிர்க்கட்சித் தலைவர் மல்கம் ரேன்புல் குற்றம்சாட்டி உள்ளார். இந்த உடன்பாடு அவுஸ்திரேலியாவை நோக்கி அகதிகளை வரத் தூண்டும் என்றும் கெவின் ருட் அவர்களை எப்படியோ காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும் எதிர்க் கட்சித்தலைவர் குறறம்சாட்டி உள்ளார்.

ஐநா வுக்கான இலங்கைப் பிரதிநிதி பலித கோகன்ன படகு அகதிகளை பொருளாதார அகதிகள் என்று நவம்பர் 11ல் அவுஸ்திரேலிய ஏபிசி ஊடகத்தில் குற்றம்சாட்டி உள்ளார். அவர்கள் அருகில் உள்ள இந்தியாவிற்குச் செல்லாமல் அவுஸ்திரேலியாவுக்கு வந்தது பொருளாதார நோக்கங்களுக்காகவே என்றும் அவர்களைத் திருப்பி அனுப்புவதன் மூலமே மேற்கொண்டு அகதிகள் வருவதைத் தடுக்க முடியும் என்றும் பலித கோகன்ன தெரிவித்துள்ளார்.

அண்மையில் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ள பிரித்தானிய பிரதமரின் விசேட பிரதிநிதியான டெஸ் பிரவுணியும் இவ்வகதிகளை திருப்பி அனுப்புமாறு ஆலோசணை வழங்கி இருந்தார்.

இலங்கை அரசு மனித உரிமைகளை மீறுவதாகவும் யுத்தக் குற்றங்களில் ஈடுபடவதாகவும் குற்றம்சாட்டும் சர்வதேச நாடுகள் அதன் காரணமாக வெளியேறும் அகதிகளுக்கு தஞ்சம் அளிப்பதற்கு மறுப்பதுடன் இலங்கையில் தமிழ் மக்கள் திரும்பிச் சென்று பாதுகாப்பாக வாழ முடியும் என்று தாங்கள் கருதுவதாகவும் தெரிவிக்கின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.