ஜெயபாலன் த

ஜெயபாலன் த

புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையின் இறுதிக் கிரியைகள் வல்வெட்டித்துறையில் நடைபெற ஏற்பாடு

prabakaeans-father.jpgஜனவரி 6ல் காலமான காலஞ்சென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் இறுதிக் கிரியைகள் அவரின் பூர்வீக நிலமான வல்வெட்டித்துறையில் இடம்பெறவுள்ளது. ஜனவரி 10 ஞாயிற்றுக் கிழமை இவரது இறுதிக் கிரியைகள் வல்வெட்டித்துறையில் இடம்பெற்று வல்வெட்டித்துறை மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

கொழும்பில் இராணுவ காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் நேற்று இரவு காலமானதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாயணக்கார தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக  பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தமது 86 வது வயதில் காலமானதாக பிரிகேடியர் குறிப்பிட்டுள்ளார். இவர் இயற்கையாக உயிரிழந்துள்ளதாக இராணுவப் பேச்சாளார் உறுதி செய்துள்ளார்.

அன்னாரின் பூதவுடல் ஜனவரி 9ல் வல்வெட்டித்துறையில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் என திரு வேலுப்பிள்ளை குடும்பத்தினரின் உறவினரும் ஜனாதிபதி வேட்பாளருமான எம் கெ சிவாஜிலிங்கம் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். திருமதி வேலுப்பிள்ளையினதும் அவர்களுடைய கனடாவில் உள்ள மகளினதும் விருப்பத்திற்கு இணங்க இறுதிக்கிரியைகளை தான் மேற்கொள்ள உள்ளதாக எம் கெ சிவாஜிலிங்கம் தேசம்நெற் க்குத் தெரிவித்தார்.

இவற்றுக்கு முன்பாக மரணம் இயற்கையாக நிகழ்ந்தது என்பதை உறுதிப்படுத்துவதற்கான விசாரணையை மேற்கொள்ளும்படி தான் கேட்டுள்ளதாகவும் இறுதிக் கிரியையை குடும்பத்தினர் விருப்பத்தின்படி மேற்கொள்ள அரசு சம்மதித்து உள்ளதாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

கடந்த மே மாதம் நடைபெற்ற இறுதிக் கட்ட மோதல்களின் போது மோதல் வலயத்திலிருந்து இரானுவத்தினரிடம் சரணடைந்த வேளை வேலுப்பிள்ளை மற்றும் அவரது மனைவி ஆகியோர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கபபட்டிருந்தனர்.

வேலுப்பிள்ளையின் மரணத்தை அடுத்து அவரது மனைவியை விடுதலை செய்ய அரசு சம்மதித்து உள்ளதாகவும் தெரியவருகின்றது. இறுதிக்கிரியைகளில் பங்குபற்றும் திருமதி வேலுப்பிள்ளை அதன் பின்னர் தனது மகளிடம் கனடா செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.

திரு வேலுப்பிள்ளை அவர்களின் மறைவு தொடர்பாக யாழ் மாவட்ட பா உ எஸ் கஜேந்திரன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் ”இலங்கை அரசாங்கத்தின் தடுப்புக்காவலில் இருந்த வேளையில் எம்மை விட்டுப் பிரிந்த மதிப்பிற்குரிய திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துவதோடு அவரது பிரிவால் துயிருற்று இருக்கும் அவரது பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசியல் தலைவர்களும் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர். ”தமிழ் ஈழ தேசிய இனத்தின் தன்னிகர் அற்ற தலைவராம் மேதகு பிரபாகரன் அவர்களின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் உயிர் நீத்தார் என்ற செய்தி, துன்பப் பேரிடியாக, மனதை வாட்டி வதைக்கிறது.” என வைகோ தனது இரங்கலில் தெரிவித்து உள்ளார்.

._._._._._.

(இது புலிகளின் எப்பிரிவு என்பது குறிப்பிடப்படவில்லை.)

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
07/01/2010

இரங்கற் செய்தி

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மறைவுச் செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழீழத் தேசத்தின் விடுதலைப் பயணத்தைத் தலைமைதாங்க ஒரு தவப்புதல்வனைப் பெற்றெடுத்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் தனது இறுதிக்காலத்தில் தாயகத்தில் வாழும் ஆசையோடு இந்தியாவிலிருந்து திரும்பியிருந்தார். தாயகத்தில் நிகழ்த்தப்பட்ட பேரழிவின்போது தனது தள்ளாத வயதிலும் மக்களோடு மக்களாக இறுதிவரை வாழ்ந்துவந்தார்.

இறுதியில் சிறிலங்கா இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு, சர்வதேச நெறிமுறைகளுக்கு மாறாக உறவினர்களைச் சந்திக்கும் வாய்ப்புக்கூட மறுக்கப்பட்டு சிறைப்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் உரிய மருத்துவ வசதிகளின்றி சிறிலங்காப் படையினரின் தடுப்புக்காவலில் சாவடைந்த செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இவரது பிரிவால் துயருறும் இவரின் துணைவியாருக்கும் பிள்ளைகளுக்கும் உறவினர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.
 

உலகமே நத்தார் புதுவருடத்தை கொண்டாட இந்தோனேசியக் கடலில் தமிழ் அகதிகள் தத்தளிக்கின்றனர்.

Boat Refugees_03இந்தோ னேசியக் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் அகதிகளின் அவலம் முடிவின்றித் தொடர்கின்றது. உலகமே நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களில் திளைத்திருக்கின்ற வேளையில் கடலில தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்த அகதிகள் மறக்கப்பட்டு உள்ளனர். கொழும்பைச் சேர்ந்த சாமூவேல் ஜேக்கப் (29) என்ற இளைஞர் கிறிஸ்மஸ் தினத்திற்கு முதல் நாள் உயிரிழந்தார். இவ்வாறான மிக மோசமான படகு விபத்து ஒன்றில் 200 வரையானவர்கள் மரணமடைந்த சம்பவம் கிறிஸ்மஸ் தினத்திற்கு மறுதினம் பொக்ஸிங் டே அன்று இத்தாலியில் இடம்பெற்றது. தொண்ணுறுக்களின் நடுப்பகுதியில் இடம்பெற்ற இப்படகு விபத்தில் மரணமாணவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இலங்கையர்கள். இதுவே தமிழ் அகதிகளுக்கு இடம்பெற்ற மோசமான விபத்தாக உள்ளது.

தற்போது எரிமலை மையமாகவும் சுனாமியின் மையமாகவுமுள்ள இந்தோனேசியக் கடலில் 250 அகதிகள் சாதாரண படகில் தவிக்க விடப்பட்டு உள்ளனர். குறைந்தபட்சம் உலகமே கொண்டாடுகின்ற நத்தார் புதுவருடத்தையொட்டி இவர்களை மனிதாபிமான முறையில் அணுக அவுஸ்திரேலியா தொடர்ந்தும் மறுத்து வருகின்றது.

Boat Refugees_03ஒக்ரோபர் 10 மலேசியாவில் இருந்து புறப்பட்ட கப்பல் இந்தோனேசிய கடற்படையால் வழிமறிக்கப்பட்டது. அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரூட், இந்தோனேசிய ஜனாதிபதி சுசிலோ பாம்பாங்க்கு விடுத்த அவசர வேண்டுகோளை அடுத்து ஜகார்ற்றா அருகில் உள்ள மேர்க் துறைமுகத்தில் 250 இலங்கைத் தமிழ் படகு அகதிகள் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். அவுஸ்திரேலியா நோக்கி வரும் படகு அகதிகளை அவுஸ்திரேலிய கடற்பரப்பினுள் நுழைவதற்கு முன்னரே தடுத்து அவர்களை இந்தோனேசியாவிலேயே தஞ்சம்பெற வைக்கின்ற ‘இந்தோனேசியத் தீர்வு’ என்ற திட்டத்தை அவுஸ்திரேலியா கடைப் பிடிக்கின்றது. இதன் மூலம் தனக்கு வரும் அகதிகள் பிரச்சினையை கைகழுவி விட்டு வருகின்றது.

இந்த அகதிகளை பலவந்தமாக வெளியேற்றி இந்தோனேசியாவில் தரையிறக்குவதை ஒரு தீர்வாக இந்தோனெசிய அதிகாரிகள் கொண்டுள்ளனர். ஓசானிக் வைக்கிங் கப்பலில் இருந்த அகதிகளுக்கு வழங்கப்பட்டது போன்ற ஒரு ஒறுதி மொழியை இந்த அகதிகளுக்கு வழங்க அவுஸ்திரேலிய அரசு மறுத்து வருகின்றது. இதே காலப்பகுதியில் ஓசானிக் வைக்கிங் என்ற அவுஸ்திரேலிய சுங்கக் கப்பலால் காப்பாற்றப்பட்ட 78 தமிழ் அகதிகள் தரையிறங்க மறுத்தனர். அவர்களது தஞ்ச விண்ணப்பங்கள் சில வாரங்களுக்குள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என அவுஸ்திரேலிய அரசு வழங்கிய உறுதி மொழியை அடுத்து அவர்கள் இந்தோனேசியாவில் தரையிறங்கச் சம்மதித்தனர். தற்போது அவர்கள் உண்மையான அகதிகள் என ஏற்றுக்கொள்ளப்பட்டு அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

ஆனால் மேர்க் இந்தோனேசியத் துறைமுகப் பகுதியில் தத்தளிக்கும் அகதிகள் வரும் ஜனவரி 10 மூன்றாவது மாதத்தை கடலில் கழித்து உள்ளனர். அவர்களது எதிர்காலம் இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது.

 இச்செய்தி தொடர்பான முன்னைய பதிவுகள்:

உலகமே நத்தார் புதுவருடத்தை கொண்டாட இந்தோனேசியக் கடலில் தமிழ் அகதிகள் தத்தளிக்கின்றனர்.

இந்தோனேசியக் கடலில் தொடரும் தமிழ் படகு அகதிகளின் போராட்டம் : த ஜெயபாலன்

8வது வாரமாகத் தொடரும் படகு அகதிகளின் அவலமும் பதட்டமும்.

ஒசானியா வைக்கிங்கில் இருந்து ஒரு பகுதி அகதிகள் வெளியேறுகின்றனர்!

மனித உரிமைகள் விடயத்தில் அவுஸ்திரேலிய பிரித்தானிய அரசுகள் இரட்டைவேடம்!

படகு அகதிகளின் தொடரும் அவலங்களும் மரணங்களும் – அவுஸ்திரேலியாவின் இந்தோனேசியத் தீர்வு – மேற்குலகு சொல்லும் மனித உரிமைகள் : த ஜெயபாலன்

இரா சம்பந்தரின் அரசியல் ஆளுமைக்கு மற்றுமொரு நெருக்கடி. தமிழ் கொங்கிரஸ் தேர்தலை பகிஸ்கரிக்க முடிவு!!!

gajendrakumar_ponnampalamதமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டுக்கட்சியான தமிழ் கொங்கிரஸ் ஜனாதிபதித் தேர்தலைப் பகிஸ்கரிப்பதாக முடிவெடுத்தள்ளது. இந்த அறிவிப்பை அக்கட்சியின் பொதுக் குழு யாழ்ப்பாணத்தில் டிசம்பர் 27ல் வெளியிட்டு இருந்தது. அக்கட்சியின் தலைவர் அப்பாப்பிள்ளை விநாயகமூர்த்தி அதனைத் தெரிவித்தார். கட்சியின் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொண்டு வந்த பிரேரணையை ஏற்று அக்கட்சி இம்முடிவுக்கு வந்துள்ளது.

டிசம்பர் முற்பகுதியில் நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தில் விக்கிரமபாகு கருணாரட்னாவை ஆதரிப்பதற்கு ஆதரவு தெரிவித்திருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்தால் தேர்தலைப் பகிஸ்கரிக்கும் முடிவை எடுப்பதாகவும் அங்கு தெரிவித்து இருந்தார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினதும் கட்சியினதும் முடிவு ஜனாதிபதி வேட்பாளர் எம் கெ சிவாஜிலிங்கத்திற்கு சாதகமாகவே அமைந்து உள்ளது. எம்கெ சிவாஜிலிங்கம் வாக்குகளைப் போடுபவர்கள் தமக்கு வாக்களின்னாவிட்டாலும் பிரதான வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பிரச்சாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இரா சம்பந்தன் மாவை சேனாதிராஜா சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட்டு சரத் பொன்சேகா பக்கம் சாய்கையில் தமிழ் கொங்கிரஸின் முடிவு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டுள்ள மற்றுமொரு பிளவு இரா சம்பந்தனின் அரசியல் சாணக்கியத்தை கேள்விக்கு உட்படுத்தி உள்ளது. அத்துடன் ஏற்கனவே திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இரா சம்பந்தனின் திருகோணமலை மாவட்ட நகரசபை உறுப்பினர்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

புலிகளின் துப்பாக்கி முனையில் இணைக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலின் சந்தர்ப்பவாதத்தினாலும் இரா சம்பந்தனின் அரசியல் ஆளுமையின் பலவீனத்தாலும் பிளவுபடுகின்றது.

புலி ஆதரவாளர்கள் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக கனடாவில் பொதுக் கூட்டம் : த ஜெயபாலன்

Nadarajah_Muralitharan‘நடைபெற இருக்கும் சிறிலங்காவின் ஜனாதிபதிக்கான தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் மகிந்த ராஜபக்சவை நிராகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்படுகின்றது’ என்று ஏற்பாட்டாளர்களில் ஒருவரான நடராஜா முரளீதரன் தேசம்நெற்க்கு தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் நாட்டின் பொறுப்பாளராக அறியப்பட்ட நடராஜா முரளீதரன் நீண்டகாலமாக கனடாவில் வாழந்து வருகின்றார். கலை இலக்கியச் சந்திப்புக்களை ஏற்பாடு செய்து வரும் இவர் தற்போது வெளிப்படையான அரசியல் நடவடிக்கையிலும் தன்னை வெளிப்படுத்தி வருகின்றார்.மகிந்த ராஜபக்சவை நிராகரிக்க வேண்டும் என்று கோருவதன் மூலம் மறைமுகமாக எதிர்க் கட்சி கூட்டின் வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரிக்கின்றோம் எனத் தெரிவித்தா நடராஜா முரளீதரன் இதுவொரு தந்திரோபாய அரசியல் நகர்வே அல்லாமல் சரத்பொன்சோகாவின் கொள்கைகளுடன் உடன்படுவதல்ல எனத் தெரிவித்தார்.

ஜனவரி மூன்றில் இப்பொதுக்கூட்டம் ரொறன்ரோவில் நடாத்த ஏற்பாடாகி உள்ளது.

பின்வரும் நான்கு காரணங்களுக்காக மகிந்த ராஜபக்சவை நிராகரிக்கின்ற முடிவைத் தாங்கள் எடுத்துள்ளதாக நடராஜா முரளீதரன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.
1. மகிந்த ராஜபக்சவின் இனவாதத் தலைமையைப் பலவீனப்படுத்துவது. பொன் சேகாவிற்று வாக்களிப்பதன் மூலம் சிங்கள இனவாதத் தலைமைகளைப் பிரித்தாள முடியும்.
2. சர்வதேச அமைப்புகளால் மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களிப்பது அக்குற்றச்சாட்டுக்களை பலவீனப்படுத்தும்.
3. நடந்து முடிந்த யுத்தத்தை நடாத்தியது மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசியல் தலைமையே. இராணுவம் ஒரு கருவி மட்டுமே. அதனால் சரத் பொன்சேகா முதல் குற்றவாளியல்ல.
4. தமிழ் பிழைப்புவாதக் குழுக்கள் மகிந்த ராஜபக்சவை ஆதரிக்கும் போது அதே அரசியல் தலைமையை ஆதரிக்க முடியாது.

போன்ற காரணங்களுக்காக இந்த அரசியல் சதுரங்கத்தில் தந்திரோபாய அடிப்படையில் தாங்கள் சரத் பொன்சேகாவுக்கு மறைமுகமான ஆதரவை வழங்குவதாக நடராஜா முரளீதரன் தெரிவித்தார்.

மேற்குறிப்பிட்ட நான்கு காரணங்களுடன் கடந்த காலத்தில் தங்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியலோடு இணங்கிச் செயற்பட்ட, அவர்களின் போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்ட, தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமையைக் கோரிநிற்கின்ற வேட்பாளர்கள் எம் கெ சிவாஜிலிங்கம், விக்கிரமபாகு கருணாரட்ண போன்றவர்களை ஏன் ஆதரிக்கவில்லை எனக் கேட்ட போது, அவர்களைத் தங்களது ‘நட்பு சக்திகள்’ எனக் குறிப்பிட்ட நடராஜா முரளீதரன் இத்தேர்தலில் மகிந்த ராஜபக்ச அல்லது சரத்பொன்சேகாவே ஜனதிபதியாக வரப் போகின்றார் என்றும் இதில் மகிந்த ராஜபக்ச மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியாக வந்துவிட அனுமதிக்க இயலாது என்றும் தெரிவித்தார்.

2005 தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகள் எடுத்த முடிவை தான் அப்போதே விமர்சித்து எழுதியதாகக் குறிப்பிட்ட நடராஜா முரளீதரன் அந்தத் தவறை மீண்டும் செய்யக் கூடாது எனத் தெரிவித்தார்.

நடராஜா முரளீதரன் இக்கருத்தை வெளியிடுவதற்கு 24 மணிநேரத்திற்கு முன்னதாக பிபிசி தமிழோசைக்கு பேட்டியளித்த தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா சம்பந்தன் ‘இலங்கையில் 2005 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்களின் சார்பில் விடுதலைப் புலிகளால் எடுக்கப்பட்ட முடிவுதான் இன்று தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற மோசமான நிலைமைகளுக்கும் இன்றைய அழிவுகளுக்கும் காரணம்” எனக் குற்றம்சாட்டி இருந்தார்.

தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று காலத்திற்குக் காலம் தமிழ் மக்களுக்கு அரசியல் தலைமைகளை வழங்கியவர்கள் அரசியல் ராஜதந்திரம் தந்திரோபாயம் என்ற பதங்களுக்குள் ஒழிந்து கொண்டு ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பின் அணிவகுத்து நின்றதே வரலாறு. தமிழ் மக்களின் உரிமைக்காகக் குரல் எழுப்பியவர்களைப் பலப்படுத்தவோ அணிசேரவோ தமிழ் அரசியல் தலைமைகள் அன்றும் முன்வரவில்லை. இன்றும் முன்வரவில்லை. எறிந்தவரை நோக்கியே திரும்பி வருகின்ற பூமராங் போலவே தமிழ் அரசியல் தலைமைகளின் அரசியல் முடிவுகள் கடந்த 60 வருடங்களாக உள்ளது. இப்பொழுது இந்த பூமராங் விளையாட்டில் இரா சம்பந்தனும் நடராஜா முரளீதரனும் களம் இறங்கி உள்ளனர்.

பிரான்ஸில் வியூகம் வெளியிடப்பட்டது!

Viyoogam_Launch_Parisரொறன்ரோ லண்டன் வியூகம் வெளியீடுகளைத் தொடர்ந்து வீயூகம் வெளியீடு டிசம்பர் 27 அன்று பிரான்ஸில் நடைபெற்றது. அரசியல் ஆர்வலரும் செயற்பாட்டாளருமான அசோக் யோகன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வியூகம் ஆசிரியர் குழுவின் சார்பில் ரகுமான் ஜான் கலந்துகொண்டார். சஞ்சிகை பற்றிய அறிமுகத்தையும் விமர்சனத்தையும் வி.ரி இளங்கோவும், லியோதர் பெர்ணான்டோவும் முன் வைத்து உரையாற்றினார்கள்.

Viyoogam_Launch_Parisஇவ் விமர்சன உரையாடல் நிகழ்வில் “ஓசை” மனோ, உதயகுமார், நேசன் சுதாகரன், மகேஸ் உட்பட பலரும் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர். சஞ்சிகை ஒன்றின் வெளியீடு வெவ்வேறு நாடுகளில் குறித்த காலத்தில் வெளியிடப்படுவது இதுவே முதற்தடவையாகும். மே 18 இயக்கத்தின் இதழாக வெளிவரும் வியூகம் இதழுடன் நூல் வெளியீடுகளையும் அவ்வமைப்பினர் மேற்கொள்ள உள்ளனர்.

வியூகம் தொடர்பான மேலதிக வாசிப்பிற்கு:

‘ஜனநாயகப் பண்போடு நடந்துகொண்டால் மட்டுமே சரியான வழியில் நிற்பவருடன் மற்றவர் இணைந்துகொள்ள முடியும்’ ரகுமான் ஜான் – வியூகம் வெளியீடு தொகுப்பு : த ஜெயபாலன்

‘விவாதக் களத்திற்கான தளத்தின் ஆரம்பமே வியூகம்’ ரொறன்ரோ வியூகம் வெளியீட்டு நிகழ்வில் ரகுமான் யான்

மே 18 இயக்கமும் வியூகம் வெளியீடும் : த ஜெயபாலன்

தமிழர் அரசியல்ரீதியாக தம்மை ஒழுங்கமைத்துக் கொள்வதை நோக்கி… : ரகுமான் ஜான்

இதுவும் கடந்து போம்: புலியெதிர்ப்பின் அரசியல்: தேசபக்தன்
 
நடந்து முடிந்ததும்! நடக்க வேண்டியதும்!!! : தேசபக்தன்

‘ஜனநாயகப் பண்போடு நடந்துகொண்டால் மட்டுமே சரியான வழியில் நிற்பவருடன் மற்றவர் இணைந்துகொள்ள முடியும்’ ரகுமான் ஜான் – வியூகம் வெளியீடு தொகுப்பு : த ஜெயபாலன்

Viyoogam_CoverRahuman_Jan‘மாற்றுக் கருத்து ஜனநாயகப் பண்போடு நாம் நடந்து கொண்டால் மட்டுமே சரியான வழியில் நிற்பவருடன் மற்றவர் இணைந்துகொள்ள முடியும்’ என பிரித்தானியாவில் நடைபெற்ற மே 18 இயக்கத்தின் கோட்பாட்டு இதழான வியூகம் வெளியிட்டு நிகழ்வில் அச்சஞ்சிகையின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ரகுமான் ஜான் தெரிவித்தார். டிசம்பர் 21ல் லண்டனுக்கு வெளியே நோர்பிற்றன் என்ற இடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. மாறுபட்ட அரசியல் கருத்துக்களை உடையவர்களின் சந்திப்பாக இது அமைந்தது. கௌரி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யமுனா ராஜேந்திரன், என் சபேசன் ஆகியோர் சஞ்சிகையின் மதிப்பீட்டை மேற்கொண்டனர். சஞ்சிகை மதிப்பீடு அதன் ஏற்புரை ஆகியவற்றைத் தொடர்ந்து கலந்தரையாடல் இடம்பெற்றது. வழமை போன்ற நூலாசிரியரை நோக்கிய கேள்விகளாக அல்லாமல் கலந்துகொண்டவர்களிடையே கருத்துப் பரிமாற்றங்களும் விவாதங்களும் இடம்பெற்றது.

டிசம்பர் 13ல் இச்சஞ்சிகையின் வெளியீடு ரொறன்ரோவில் இடம்பெற்றது. இவ்வார நடுப்பகுதியில் இதன் வெளியீடு பாரிஸில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Yamuna_Rajendiranவியூகம் விரிவான ஆழமான விடயங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதால் அவற்றை இத்தளத்தில் விரிவாக ஆய்வு செய்ய முடியாது எனத் தெரிவித்த யமுனா ராஜேந்திரன் பொதுவான தனது மதிப்பீட்டை அங்கு வைத்தார். மே 18 இயக்கத்தின் கோட்பாட்டு இதழாக வெளிவந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ள இச்சஞ்சிகையில் வெளியாகியுள்ள கட்டுரைகள் அவ்வாறு அமையவில்லை என்றும் இச்சஞ்சிகை கோட்பாடு மற்றும் நடைமுறைசார்ந்த விடயங்களின் கலப்பாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார். சஞ்சிகையின் வடிவமைப்பு மற்றும் தோற்றம் அதனை ஒரு சஞ்சிகை என்பதிலும் பார்க்க நூலின் தோற்றத்தினையே வழங்குவதாகவும் யமுனா ராஜேந்திரன் குறிப்பிட்டார். வியூகத்தின் ஆசிரியர் தலையங்கம் அதன் கடந்த காலம் பற்றியும் தீப்பொறி மற்றும் உயிர்ப்பு சஞ்சிகை பற்றியும் பேசுவதைச் சுட்டிக்காட்டிய யமுனா ராஜேந்திரன் சுயவிமர்சனம் செய்வதற்கான தளம் ஈழத் தமிழர்கள் மத்தியில் உருவாக்கப்பட்டு உள்ளதா என்று கேள்வி எழுப்பினார். ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் பெரும்பாலும் வெவ்வேறு வகைகளில் கடந்த காலப் போராட்டங்களுடன் நேரடியாகச் சம்பந்தப்பட்டு உள்ளனர் எனத் தெரிவித்த யமுனா ராஜேந்திரன் அவர்கள் இழப்புகளையும் துயரங்களையும் நேரடியாக அனுபவித்தவர்கள் அவர்கள் உணர்ச்சிபூர்வமாகவே அரசியலைப் பார்க்கின்றனர் எனத் தெரிவித்தார். ஆனால் அரசியல் என்பது உணர்ச்சிபூர்வமானது அல்ல என்றும் அது அறிவுபூர்வமாக கையாளப்பட வேண்டும் என்பதையும் அவர் தனது மதிப்பீட்டில் சுட்டிக்காட்டினார்.

ஒரு கோட்பாட்டு இதழானது அவ்வியக்கத்தின் கோட்பாட்டு அரசியலை வெளிப்படையாக வைக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய யமுனா ராஜேந்திரன் வியூகத்தில் வெளிவந்துள்ள அத்தனை கட்டுரைகளுமே புனைப்பெயர்களில் வெளிவந்துள்ளதாகவும் வியூகம் சஞ்சிகையிலும் தொடர்புகளுக்கான எவ்வித கவனமும் செலுத்தப்படவில்லை எனவும் யமுனா ராஜேந்திரன் சுட்டிக்காட்டினார்.

20 வருடங்களுக்குப் பின்னர் தோழர் என்றழைக்கக் கூடிய நிலை உருவாகியுள்ளதாகக் கூறி தன் மதிப்பீட்டை ஆரம்பித்த என் சபேசன் இதனை ஆரோக்கியமான சூழல் ஒன்று உருவாகி உள்ளதாகக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார். இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் என்பது தேசிய அரசியல் என்பதைக் கடந்து செல்ல முடியாது எனத் தெரிவித்த என் சபேசன் தமிழ் தேசியம் அக முரண்பாடுகள் பலவற்றைக் கொண்டிருந்ததையும் சுட்டிக்காட்டினார். ஆனால் அவற்றுக்காக தமிழ் தேசியத்தை குறைத்து மதிப்பீடு செய்ய முடியாது எனவும் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் இனசமத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கத் தவறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Sabesan_Nசமூகத்தில் உள்ள காழ்ப்புகள் முன்னோக்கி நகரவிடாமல் தடுப்பதாகக் கூறிய என் சபேசன் யமுனா ராஜேந்திரனின் மதிப்பீட்டில் பெரும்பாலும் உடன்படுவதாகத் தெரிவித்தார். குறிப்பாக கட்டுரைகளில் ஊகங்கள் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். புனைபெயர்களில் எழுதுவதில் யமுனா ராஜேந்திரனுடன் முரண்பட்ட என் சபேசன் புனைபெயரில் எழுதுவதற்கான பாதுகாப்பு போன்ற காரணங்களும் தேவையும் இன்னமும் இருப்பதாகத் தெரிவித்தார். வியூகம் அடுத்த கட்டத்திற்கு தன்னை நகர்த்தும் என்ற நம்பிக்கையை வெளியிட்டு தனது மதிப்பீட்டை முடித்துக் கொண்டார்.

மே 18 இயக்கம் சார்பாகவும் வியூகம் ஆசிரியர் குழு சார்பாகவும் கருத்து வெளியிட்ட ரகுமான் ஜான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வி என்பது எதிர்பார்க்கப்பட்டாலும் அது நடந்து முடிந்த விதமும் முற்றாக அழிக்கப்பட்டதும் எதிர்பார்க்காத ஒன்று எனத் தனது கருத்துரையை ஆரம்பித்தார். இந்தப் புள்ளியில் இருந்து மாறுபட்ட கருத்துக்கள் எழுவதைச் சுட்டிக்காட்டிய ரகுமான் ஜான் தேசிய இனப் பிரச்சினை என்ற ஒன்றில்லை என்றால் அதனை வலிந்து போராட வேண்டிய அவசியமில்லை என்றும் ஆனால் அவ்வாறான ஒரு பிரச்சினை இருக்கும் போது ஒடுக்குகின்ற தேசம் வெற்றி கொண்ட படையாகக் கொக்கரிக்கின்ற போது அதற்க எதிராகப் பேசுவது ஒவ்வொரு அரசியல் உணர்வுள்ளவரினதும் தார்மீகக் கடமையென்றே தான் நினைப்பதாகத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் இவ்வாறான விவாதங்கள் பல்வேறு தளங்களிலும் இடம்பெறுவதாகக் கூறிய அவர் அவ்வாறான விவாதங்களிற்கான தொடக்கப் புள்ளியாகவும் அவ்வாறான விவாதங்களை ஒருங்கிணைக்கும் நோக்கிலுமே மே 18 இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார். இது ‘முடிவல்ல புதிய தொடகம்’ என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வி என்பது தமிழ் மக்களின் போராட்டத்தின் தோல்வியாக தற்காலிகமாக அமைந்தாலும் அவர்களைக் காப்பாற்றி இருக்க முடியாது எனக் குறிப்பிட்ட ரகுமான் ஜான் தமிழீழ விடுதலைப் புலிகள் பிழையான தலைமையைக் கொண்டிருந்தது மட்டுமல்ல சரியான தலைமைகள் உருவாக முடியாமல் அவற்றை முளையிலேயே கிள்ளி எறிந்தனர் எனவும் குற்றம்சாட்டினார். போலியான ஒரு தலைமையைக் காப்பாற்றி இருக்க முடியாது எனத் தெரிவித்த ரகுமான் ஜான் தமிழீழ விடுதலைப் புலிகளால் விடுவிக்கபட்டிருந்த பிரதேசங்களில் மக்கள் எவ்வளவு சுதந்திரமாக இருந்தார்கள் என்பதும் அவர்கள் தாங்கள் விடுதலை அடைந்ததாக உணர்ந்தார்களா என்பதுமே முக்கியமான கேள்வி என்றும் சுட்டிக்காட்டினார்.  

சரி பிழையென்பது இருவழிகள் இவற்றில் எது சரி என்பதை வரலாறே தீர்மானிக்கும் எனச் சுட்டிக்காட்டிய ரகுமான் ஜான் இதில் நான் சரியாக இருக்கலாம் சிலவேளை நீங்கள் சரியாக இருக்கலாம் அதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளது எனத் தெரிவித்தார். மாற்றுக் கருத்து ஜனநாயகப் பண்போடு நாம் நடந்துகொண்டால் மட்டுமே சரியான வழியில் நிற்பவருடன் மற்றவர் இணைந்துகொள்ள முடியும் என்பதையும் அவர் விளக்கினார். ஆனால் அப்படியல்லாமல் வெறும் காழ்ப்புணர்வுடன் வெறிகொண்ட மிருகங்கள் போல் குத்திக் குதறுகின்றோம் என்றும் கொம்பியூட்டர்களில் இருந்து இரத்த ஆறு ஓடாதது தான் ஒரு குறையாக இருப்பதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்தார். எல்லாவற்றையும் அரசியல் என்கிறார்கள் எனச் சுட்டிக்காட்டிய ரகுமான் ஜான் மார்க்சியம் புரட்சி ஏகாதிபத்தியம் திரிபுவாதம் இவற்றை நீக்கிப் போட்டப் பார்த்தால் வெறும் சேறும் சகதியுமே எஞ்சியிருக்கும் எனத் தெரிவித்தார். நபர்கள் சம்பவங்கள் என்பதைத் தாண்டி சமூக உறவுகளாக அரசியல் போக்குகளாகப் புரிந்தகொள்ள முடியவில்லை என்றால் இது என்ன அரசியல் என்றும் கேள்வி எழுப்பினார். அதனைத் தொடர்ந்து சஞ்சிகையின் மதிப்பீடு தொடர்பான தனது கருத்துக்களை வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெற்றுது. இதில் பெரும்பாலும் தேசியவாதம் தொடர்பான விவாதமே கூடுதலாக நடைபெற்றது.

தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கான தீர்வு என்பது தமிழ் தேசிய விடுதலையூடாகவே அமையும் என்று மார்க்சிய அடிப்படையில் கூறிக்கொண்டாலும் அது இனரீதியான தோற்றப்பாட்டையே காட்டுவதாக ராகவன் சுட்டிக்காட்டினார். அதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பாண்டியன் தமிழ் மக்களுடைய பிரச்சினையை மார்க்சிய ரீதியில் அணுகுவதாகக் கூறிக்கொள்பவர்கள் வர்க்கப் போராட்டத்தின் மூலம் தீர்வுகாணலாம் என்று தமிழ் மக்களின் மீதான ஒடுக்குமுறையை மறைக்க முயல்வதாகக் குற்றம்சாட்டினார்.

கலந்தரையாடலில் கருத்து வெளியிட்ட என் சபேசன் முஸ்லிம்கள் தனியான தேசம் என்பதைத் தான் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் இலங்கையில் சிங்களம் தமிழ் என்ற இருதேசங்களே உள்ளதாகவும் கருத்து வெளியிட்டார். அப்போது குறுக்கிட்ட ராகவன் அவ்வாறே சிங்களத் தலைமைகள் தமிழர்கள் ஒரு தனியான இனம் இல்லை எனக் கருதுவதாகத் தெரிவித்தார். என் சபேசனின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட மாசில் பாலன் தேசிய இனங்களை வரையறுப்பது என்பது ஸ்ராலினின் வரையறைகளைக் கடந்து வரவேண்டும் என்றும் ஒரு குறிப்பிட்ட சமூகம் தன்னைத் தனித்துவமான இனமாக உணருமானல் அவர்கள் தனித்துவமான இனமாகக் கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்தியாவில் உள்ள பழங்குடிகள் இன்று அவ்வாறே உணருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சபா நாவலனும் இதே கருத்தை வெளிப்படுத்தினார்.

தமிழ் தேசியம் என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் தளமாக இருந்துள்ளது எனத் தெரிவித்த த ஜெயபாலன் அது புலித் தேசியமாக ஆக்கப்பட்டு அதிலேயே புலிகள் ஊன்றி நின்றனர் என்றும் புலிகளின் தோல்வி என்பது அவர்களுடைய தோல்வி மட்டுமல்ல அவர்கள் ஊன்றி நின்ற தமிழ் தேசியத்தினதும் தோல்வியாகவே அமையும் என்றார். அவர் தொடர்ந்தும் கூறுகையில் அதன் அடிப்படையில் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கான தீர்வில் தமிழ் தேசியம் கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்றார்.

காலத்திற்குக் காலம் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கியவர்கள் தமிழ் மக்களின் விருப்பத்திற்கு மாறாகச் செயற்பட்டதை உதாரணங்களுடன் காட்டிய என் கெங்காதரன் மே 18 இயக்கமும் தமிழ் மக்களின் விருப்பத்திற்கு மாறாக முடிவுகளை எடுக்குமோ என்ற ஐயத்தை வெளிப்படுத்தினார்.

மாற்றுக் கருத்தக்கான விவாதத்திற்கான களத்தை உருவாக்குவதே தமது நோக்கு என்றும் இவ்வாறான நிகழ்வுகள் அதற்கு உதவும் என்றும் தெரிவித்த ரகுமான் ஜான் நடைமுறையில் உள்ள சாதனங்களின் இன்றைய பொருத்தப்பாடு பற்றி கேள்வி எழுப்பியதுடன் உண்மைகளை நோக்கிச் செல்ல வேண்டும் என்றும் அதனை ஆராய்வதற்கான புதிய கோட்பாட்டு சாதனங்களை உருவாக்கி அறிமுகப்படுத்தி அதனை விவாதிப்போம்! அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வோம்! என்றும் கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

(குறிப்பு: இது கூட்டத்தில் இடம்பெற்ற உரைகளின் விவாதங்களின் தொகுப்பு. பெரும்பாலும் கருத்து வெளிப்படுத்தியவர்களது கருத்து மாற்றம் இல்லாமல் பதிவு செய்துள்ளேன். தவறுதலாக கருத்துக்கள் தவறாகப் பதிவு செய்யப்பட்டு இருந்தால் சுட்டிக்காட்டவும்.)

Related Articles:

‘விவாதக் களத்திற்கான தளத்தின் ஆரம்பமே வியூகம்’ ரொறன்ரோ வியூகம் வெளியீட்டு நிகழ்வில் ரகுமான் யான்

மே 18 இயக்கமும் வியூகம் வெளியீடும் : த ஜெயபாலன்

தமிழர் அரசியல்ரீதியாக தம்மை ஒழுங்கமைத்துக் கொள்வதை நோக்கி… : ரகுமான் ஜான்

இதுவும் கடந்து போம்: புலியெதிர்ப்பின் அரசியல்: தேசபக்தன்
 
நடந்து முடிந்ததும்! நடக்க வேண்டியதும்!!! : தேசபக்தன்

ஜனாதிபதி வேட்பாளர் எம் கெ சிவாஜிலிங்கம் இலண்டன் வந்தடைந்தார்! இன்று கிழக்கு லண்டனில் பொதுக்கூட்டம்!! – கேள்விநேரம்

Sivajilingam M K_TNA MPஜனாதிபதி வேட்பாளர் எம் கெ சிவாஜிலிங்கம் நேற்று (டிசம்பர் 20) லண்டன் வந்தார். ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதை உறுதிப்படுத்திய பின் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். மேலும் ஜனாதிபதி வேட்பாளரான பின்னர் முதற் தடவையாக இன்று (டிசம்பர் 21) புலம்பெயர்ந்த தமிழர்களை நேரடியாகச் சந்திக்கின்றார். கிழக்கு லண்டனில் உள்ள குவாக்கர்ஸ் ஹவுசில் இன்று மாலை எம் கெ சிவாஜிலிங்கத்துடன் கேள்வி நேரம். இச்சந்திப்பில் அரசியல் ஆர்வமுடையவர்கள் கலந்தகொண்டு தங்கள் கேள்விகளை சந்தேகங்களை நேரடியாக எம் கெ சிவாஜிலிங்கத்திடம் முன் வைக்கமுடியும். இக்கேள்விநேரத்தை தேசம்நெற் ஏற்பாடு செய்துள்ளது.

கேள்வி நேரம் : ஜனாதிபதி வேட்பாளர் எம் கெ சிவாஜிலிங்கத்துடன் சந்திப்பு
காலம் : மாலை 5:30 டிசம்பர் 21 2009 திங்கட்கிழமை
இடம்: Quakers Meeting House, Bush Road, Wanstead, London, E11 3AU.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளராக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் லண்டனிலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் நடாத்தப்பட்ட போராட்டங்களில் தோளோடு தோள் கொடுத்து வந்தவர் எம் கெ சிவாஜிலிங்கம். தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் எம் கெ சிவாஜிலிங்கத்திற்கு எதிராகத் திரும்பி உள்ளனர். ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை வெல்ல வைப்பதற்காகவே இவர் தனித்துப் போட்டியிடுவதாக புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் சிவாஜிலிங்கத்தின் மீது குற்றம்சாட்டுகின்றனர்.

2005 ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழர்களை வாக்களிக்க விடாமல் தடுத்ததன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் இன்றைய ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற அன்று வழிவகை செய்து கொடுத்தனர். அதற்கு பெரும்தொகைப் பணத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகள் பெற்றுக் கொண்டனர். கடைசியாக நடந்த யுத்தம் பொல்லுக் கொடுத்து அடிவாங்கிய கதையாக நிறைவு பெற்றது. சென்றமுறைக்கு மாறாக இம்முறை தமிழீழ விடுதலைப் புலிகள் எதிரணிக் கூட்டில் நிற்கும் முன்னால் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு பொல்லுக் கொடுக்க களம் இறங்கி உள்ளனர்.

தனது அரசியல் நடவடிக்கை ஒரு சில சக்திகளால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்த சிவாஜிலிங்கம் தனது அரசியல் நகர்வு பற்றிய விளக்கமளிக்க லண்டனுக்கும் தமிழகத்திற்கும் அவசர விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

கேள்வி நேரம் : ஜனாதிபதி வேட்பாளர் எம் கெ சிவாஜிலிங்கத்துடன் சந்திப்பு
காலம் : மாலை 5:30 டிசம்பர் 21 2009 திங்கட்கிழமை
இடம்: Quakers Meeting House, Bush Road, Wanstead, London, E11 3AU.

தொடர்பு:
த ஜெயபாலன்: 07800 596 786 அல்லது 0208 279 0354
ரி சோதிலிங்கம்: 07846 322 369
ரிகொன்ஸ்ரன்ரைன்: 0208 905 0452

‘என்னைத் துரோகி என்று இன்று அழைப்பவர்கள், அரசியல் யதார்த்தம் தெரியாதவர்கள்!’ எம் கெ சிவாஜிலிங்கம் – நேர்காணல் : த ஜெயபாலன்

Sivajilingam M K_TNA MP._._._._._.
கேள்வி நேரம் : ஜனாதிபதி வேட்பாளர் எம் கெ சிவாஜிலிங்கத்துடன் சந்திப்பு
காலம் : மாலை 5:30 டிசம்பர் 21 2009 திங்கட்கிழமை
இடம்: Quakers Meeting House, Bush Road, Wanstead, London, E11 3AU.
தொடர்பு : த ஜெயபாலன்: 07800 596 786 அல்லது 0208 279 0354, ரி சோதிலிங்கம் 07846 322 369, ரி கொன்ஸ்ரன்ரைன்: 0208 905 0452
._._._._._.

‘என்னைத் துரோகி என்று இன்று அழைப்பவர்கள் அரசியல் யதார்த்தம் தெரியாதவர்கள்!’ என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம் கெ சிவாஜிலிங்கம் இன்று (மே 18 2009) தேசம்நெற்க்குத் தெரிவித்தார். தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு 60வது ஆண்டை நினைவுகூருமுகமாக அதன் ஸ்தாபகர் தந்தை செல்வநாயகத்திற்கு மாலை அணிவித்துவிட்டு யாழில் தங்கியிருந்த எம் கெ சிவாஜிலிங்கம் தேசம்நெற்க்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில் மேற்கண்டவாறு தெரிவித்தார். ரெலோ அமைப்பில் இருந்து எம் கெ சிவாஜிலிங்கம், என் சிறிகாந்தா ஆகியோர் விலகியதாக வெளிவந்த செய்திகளிலும் உண்மையில்லை எனவும்  தான் சுயேட்சை வேட்பாளராக நிற்பது தொடர்பாக கட்சிக்குள் எவ்வித முரண்பாடும் இல்லை எனவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார். அவருடைய நேர்காணல்…..

தேசம்நெற்: அண்மைக்காலம் வரை புலியாதரவு ஊடகங்களின் கௌரவிப்புக்களைப் பெற்ற நீங்கள் தற்போது அதே ஊடகங்களினால் துரோகியாக காட்டப்படுகின்றீர்கள் அது பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்?’

எம் கெ சிவாஜிலிங்கம்: என்னைத் துரோகி என்று இன்று அழைப்பவர்கள் அரசியல் யதார்த்தம் தெரியாதவர்கள்! பெப்ரவரி மாதத்தில் தேசம்நெற்க்கு வழங்கிய பேட்டியில் ( ”ஆயுதங்களை சர்வதேச கண்காணிப்பில் வைத்துவிட்டு புலிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதை வரவேற்கிறோம்” சிவாஜிலிங்கம் – நேர்காணல் : ரி சோதிலிங்கம் & த ஜெயபாலன் ) தமிழீழ விடுதலைப் புலிகள் மூன்றாம் தரப்பிடம் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பில் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைய வேண்டும் என்று கேட்டிருந்தேன். அன்று அதைச் செய்திருந்தால் இன்று இவ்வளவு மோசமான அழிவு ஏற்பட்டு இருக்க மாட்டாது. அப்போது பேசாமல் இருந்துவிட்டு இப்போது வந்து என்னைத் துரோகி என்கிறார்கள். இவர்கள் அரசியலைக் கொஞ்சம் படிக்க வேண்டும்.

தேசம்நெற்: ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் வெளிக் கொணர்வதற்கான சந்தர்ப்பம் என்று தெரிவித்துள்ளீரகள். ஆனால் நீங்கள் சுயேட்சையாகப் போட்டியிடுவதன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்தி உள்ளீர்கள்.

எம் கெ சிவாஜிலிங்கம்: தமிழ் தேசியக் கூட்டமைப்புக் கூட்டிய போது அனைவரும் ஒரே முடிவை எடுக்கவே முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தலை பகிஸ்கரிகலாம் என்ற அபிப்பிராயமும் சிலரால் முன்வைக்கப்பட்டது. சிவசக்தி ஆனந்தன் மட்டும் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சரத் பொன்சேகாவை ஆதரிக்கலாம் எனத் தெரிவித்தார். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இன்னும் சிலர் பொறுத்திருந்து முடிவெடுக்கலாம் என்ற கருத்தைக் கொண்டிருந்தனர்.

மாறி மாறி ஆட்சிக்கு வருபவர்களை ஆதரித்த பழக்கத்தை விடும்படி கேட்டேன். குறைந்தபட்சம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மகிந்த ராஜபக்சவையோ சரத்பொன்சேகாவையோ ஆதரிக்க மாட்டாது என்று அறிக்கைவிடும்படியும் கேட்டேன் அவர்கள் உடன்படவில்லை. இவ்வாறு எவ்வித முடிவில்லாமல் கூட்டம் முடிவடைந்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடைசி வரை தமிழ் மக்களை காக்க வைக்க முடியாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையைப் பொறுத்தவரை அவர்கள் யாருடையதோ சமிஞசைக்காக காத்திருப்பதாகவே நான் நினைக்கின்றேன். இந்தத் தலைவர்களுடன் சர்வதேச அமைப்புகளும் இந்தியாவும் பேசிக்கொண்டுள்ளன. ஆனால் இதுவரை எவ்வித சமிஞ்சையும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்றே நினைக்கிறேன். தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் என்ஜிஓ ஒன்றின் அழைப்பில் ஜெனிவா சென்றுள்ளார். அது பற்றிய விபரம் எனக்குத் தெரியாது.

ஆனால் அக்கூட்டத்தில் கலந்துகொண்ட பன்னிருவரில் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவதற்கு ஆதரவு தெரிவித்தனர். நால்வர் ரெலோ இயக்கத்தைச் சார்ந்தவர்கள் இவர்களுடன் தங்கேஸ்வரி சந்திரநேரு மற்றும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்.

தேசம்நெற்: நீங்கள் சுயேட்சையாகப் போட்டியிடுவதால் உங்களுடைய ரெலோ அமைப்பிற்குள் பிளவை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளதே?

எம் கெ சிவாஜிலிங்கம்: இது ஊடகங்களினால் திரிபுபடுத்தப்பட்ட செய்தி. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த முன்வராததால் நான் சுயேட்சையாகப் போட்டியிட முடிவு செய்தேன். ஆனால் இந்த முடிவு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு அங்கமாக உள்ள ரெலோவினைப் பாதிக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். அதனால் தான் நான் ரெலோ சார்பாக இல்லாமல் சுயேட்சையாகப் போட்டியிடுவது என்று கூடித் திர்மானித்தோம். அது மட்டுமல்ல அதற்காக எனது பதவியையும் உறுப்புரிமையையும் விட்டுச் செல்லவும் தயாராக இருந்தேன். இந்த விடயங்களே ஊடகங்கள் ரெலோவிற்குள் பிளவு ஏற்பட்டு விட்டது என்று தவறாக அர்த்தப்படுத்திக் கொண்டன. நான் இப்போதும் ரெலோ உறுப்பினன். எங்களுக்குள் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது.

தேசம்நெற்: நீங்கள் தமிழ் மக்களுக்கு என்ன உரிமைகளைக் கோருகின்றீர்களோ அவ்வுரிமைகளுக்காக நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வருபவர்கள் சிறிதுங்க ஜெயசூரியவும் விக்கிரமபாகு கருணரட்ணாவும். அப்படி இருக்கையில் நீங்களும் சரி தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சரி அவ்வாறான முற்போக்கு சக்திகளை ஆதரிக்க முன்வரவில்லை. ஏன்?

எம் கெ சிவாஜிலிங்கம்: நான் அன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்திற்குச் செல்வதற்கு முன்பாகவும் விக்கிரமபாகு கருணரட்ணவுடன் பேசிவிட்டுத்தான் சென்றேன். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்துமாறும் இல்லையேல் விக்கிரமபாகு கருணாரத்னவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்க வேண்டும் என்று நான் கருத்தை முன் வைத்தேன். விக்கிரமபாகு கருணாரட்னாவை ஆதரிப்பதற்கு கஜேந்திரகுமார் மட்டுமே விருப்பம் தெரிவித்தார். ஏனையவர்கள் கொள்கையளவில் அதனை ஏற்றுக்கொண்டாலும் நடைமுறையில் விக்கிரமபாகு கருணாரட்ன வெல்வதற்கான வாய்ப்பில்லை என்பதன் அடிப்படையில் அவரை ஆதரிக்க முன்வரவில்லை.

நான் விக்கிரமபாகு கருணாரட்னவுடன் தொடர்ந்தும் பேசி வருகின்றேன். ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் இருவரும் இணைந்தே தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட உள்ளோம். தமிழ் வாக்காளர்கள் மத்தியில் சிவாஜிலிங்கத்திற்கு வாக்களிக்கும்படி இருவரும் மக்களைக் கோருவோம். அதே போல் சிங்கள வாக்காளர் மத்தியில் விக்கிரமபாகு கருணரட்னாவை ஆதரிக்கும்படி இருவரும் கோருவோம்.

தேசம்நெற்: இணைந்து தேர்தல் பிரச்சாரம் செய்யும் நீங்கள் ஏன் இரு வேட்பாளராக தேர்தலில் நிற்கிறீர்கள்?

எம் கெ சிவாஜிலிங்கம்: கடந்த தேர்தல்களில் விக்கிரமபாகு கருணாரட்ன பெற்ற வாக்குகள் குறைவானது. இதுவொரு தந்திரோபாய நடவடிக்கையே. எமது நோக்கம் இரு பிரதான வேட்பாளர்களுக்கும் விழும் வாக்குகளைச் சிதறடிப்பதே. இதன் மூலம் இவர்களுக்கு 50 வீதமான வாக்குகளைக் கிடைக்காமல் செய்வதில் தான் எமது வெற்றி தங்கியுள்ளது. 50 வீதமான வாக்குகள் கிடைக்காத நிலையில் 2வது தெரிவை கணிக்க வேண்டிய நிலையேற்படும். இன்று என்னைத் துரோகி என்பவர்கள் நான் இந்நிலையை ஏற்படுத்தினால் என்ன சொல்வார்கள்.

தேசம்நெற்: நீங்கள் சுயேட்சையாக நிற்பதற்கு பின்னாலுள்ள அரசியல் பற்றிய சந்தேகங்கள் உள்ளது. நீங்கள் மகிந்த ராஜபக்சவின் உந்துதலால் அல்லது இந்தியாவின் உந்துதலால் தமிழ் வாக்குகளை பொன்சேகாவுக்குச் செல்ல விடாமல் தடுப்பதற்காகவே தேர்தலில் களம் இறங்கி இருப்பதாக குற்றம் சாட்டப்படுகின்றது. இது பற்றி என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

எம் கெ சிவாஜிலிங்கம்: இப்படி பல ஊகங்கள் வெளிவரும். இவர்கள் ஒரு விசயத்தை மறக்கிறார்கள் இன்று யாழ்ப்பாணத்தில், வவுனியாவில் புளொட், கிழக்கில் ரிஎம்விபி கருணா, ஈபிஆர்எல்எப் என இவர்கள் மகிந்த ராஜபக்சவுக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். இவர்கள் மகிந்த ராஜபக்சவுக்கு கணிசமான வாக்குகளைப் பெற்றுக் கொடுப்பார்கள். இதற்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்யாவிட்டால் பெருமளவு தமிழ் வாக்குகள் மகிந்த ராஜபக்சவுக்கு செல்லும் வாய்ப்புகளும் உள்ளது. அதனையும் தடுப்பதற்காகவே நான் தேர்தலில் நிற்கின்றேன்.

இன்று இலங்கையில் உள்ள எந்தப் பாராளுமன்ற உறுப்பினர் யுத்தக் குற்றங்கள் தமிழ் மக்களின் படுகொலைகள் பற்றிக் கதைக்கிறார்கள். அப்படிக் கதைக்கும் ஒரு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம் பியைக் கூறுங்கள். நான் இன்றைக்கும் இலங்கையில் இருந்து கொண்டு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக் குரல் கொடுக்கின்றேன். சுயாட்சி ஒன்றே தமிழ் மக்களுக்கு தீர்வு என்கின்றேன்.

மஞ்சள் கண்ணாடியைப் போட்டுப் பார்த்துக் கொண்டு மஞ்சளாக இருக்கிறது என்றால் என்ன செய்ய. தமிழீழ விடுதலைப் புலிகளை வெளிப்படையாக ஆதரித்தவன். இன்று ஆயுதப் போராட்;டம் முடிவுக்கு வந்துவிட்டது. புலிகள் அழிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் அழிக்கப்படவில்லை. என்னைப் பொறுத்தவரை கொலை செய்தவனுக்கு அல்லது கொலை செய்யச் சொன்னவனுக்கு வாக்குப் போடு என்று தமிழ் மக்களிடம் போய்க் கேட்க முடியாது.

ஒருசிலர் திட்டமிட்ட பிரச்சாரங்களை என்மீது நடத்துகின்றனர். நான் இலங்கை அரசியலமைப்புக்கு கட்டுப்பட்டுவிட்டேன் என்றும் குற்றம்சாட்டுகின்றனர். அர்த்தமற்ற குற்றச்சாட்டுகள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே இலங்கை அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டு தான் பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். நான் ஜனாதிபதித் தேர்தலில் நிற்பதால் மட்டும் இலங்கை அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதாகி விடாது.

தேசம்நெற்: நீங்கள் டிசம்பர் 20ல் மீண்டும் ஐரோப்பா வரவுள்ளீர்கள். இதன் நோக்கம் என்ன? ஐரோப்பாவில் உங்களுக்கு புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவைத் தேடும் நோக்கம் உண்டா?

எம் கெ சிவாஜிலிங்கம்: என்மீதும் நான் சுயேட்சையாகப் போட்டியிடுவது தொடர்பாகவும் சிலர் விசமத்தனமான பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர். தமிழகத்தில் உள்ள ஊடகங்களையும் அதற்குத் தூண்டிவிட்டுள்ளனர். இதுவொரு சிறு குழுவினரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற பிரச்சாரம். அதனால் லண்டனுக்கும் தமிழகத்திற்கும் சென்று என்னுடைய அரசியல் நடவடிக்கைகளைத் தெளிவுபடுத்துவதற்காகவே இந்த அவசர பயணம். லண்டனில் மூன்று நாட்களும் தமிழகத்தில் நான்கு தினங்களும் தங்கி இதனைச் செய்ய உள்ளேன்.

நிச்சயமாக புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் ஆதரவைத் திரட்டிக்கொள்வதும் எனது பயணத்தின் நோகம்.

அரைமணி நேரம் நீடித்த நேர்காணலின் முடிவில் லண்டன் தமிழர்களின் தேசம்நெற் வாசகர்களின் கேள்விகளுக்கு பொது மேடையில் பதிலளிப்பதற்கு நீங்கள் தயார எனக் கேட்டேன். சற்றும் தயக்கமின்றி ‘பொதுக்கூட்டத்தை கூட்டுங்கள் எல்லாவிதமான கேள்விகளுக்கும் பதிலளிக்கத் தயார்’ என ஜனாதிபதி வேட்பாளர் எம் கெ சிவாஜிலிங்கம் உறுதிபடத் தெரிவித்தார். அவரது உறுதிமொழிக்கமைய எம் கெ சிவாஜிலிங்கத்துடனான கேள்வி நேரம் ஒன்றுக்கு தேசம்நெற் ஏற்பாடு செய்துள்ளது. டிசம்பர் 21 2009 மாலை 5:30 முதல் 9:00 மணிவரை இக்கேள்வி நேரம் இடம்பெறும்.

நிகழ்வு விபரம்:
கேள்வி நேரம் : ஜனாதிபதி வேட்பாளர் எம் கெ சிவாஜிலிங்கத்துடன் சந்திப்பு
காலம் : மாலை 5:30 டிசம்பர் 21 2009 திங்கட்கிழமை
இடம்: Quakers Meeting House, Bush Road, Wanstead, London, E11 3AU.
தொடர்பு :
த ஜெயபாலன்: 07800 596 786 அல்லது 0208 279 0354
ரி சோதிலிங்கம் 07846 322 369
ரி கொன்ஸ்ரன்ரைன்: 0208 905 0452

முன்னாள் ஐரோப்பிய ‘புலி’ ஆதரவாளர் மகிந்த ராஜபக்சவுக்காக பிரச்சாரம் செய்ய இலங்கை செல்கிறார். : த ஜெயபாலன்

Nadarajah_Sethurubanவருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் நடராஜா சேதுரூபன் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரும் தமிழ் மக்களின் விவகாரங்கள் தொடர்பாக ஜனாதிபதிக்கு ஆலோசணை வழங்குபவருமான கலாநிதி லெவின் வி சி ராஜரட்ணம் தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸ் காலப்பகுதியில் இலங்கை வரவுள்ள சேதுரூபன் இலங்கையில் உள்ள குறிப்பாக தமிழ் ஊடகங்களுக்கு ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து நேர்காணல்கள வழங்க இருப்பதாகவும் கலாநிதி லெவின் வி சி ராஜரட்ணம் தெரிவித்துள்ளார். இத்தகவல் உண்மையானது என்பதை தேசம்நெற்க்கு உறுதிப்படுத்திய சேதுரூபன் இன்னும் இரு வாரங்களுக்குள் தான் இலங்கை செல்லவுள்ளதாகவும் தெரிவித்தார்.  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குழு ஒன்று இலங்கையில் இருந்து நோர்வேக்கு வரவுள்ளதாகக் கூறிய அவர் இக்குழு சர்வதேச ஆதரவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு திரட்டும் நோக்கில் வருவதாகவும் தெரிவித்தார். விரைவில் இலங்கை செல்லவுள்ள சேதுரூபன் மீண்டும் அக்குழுவுடன் நோர்வே வரலாம் எனவும் கூறினார்.

நடராஜா சேதுரூபன் இலங்கைத் தமிழ் மக்களின் வாக்கு வங்கிமீது பிடிமானத்தை கொண்ட ஒருவரல்ல. ஆனால் இலங்கையில் ஊடகவியலாளராகக் கடமையாற்றிய சேதுரூபன் காலஞ்சென்ற தவிபு இன் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் அன்புக்குரியவருடன் பணியாற்றியவர். அதன் மூலம் அன்ரன் பாலசிங்கத்துக்கு அறிமுகமானவர். 2002 நோர்வேயில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் ரிபிசி ஊடகவியலாளராகக் கலந்துகொண்ட சேதுரூபன் அன்ரன் பாலசிங்கத்துடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டவர்.

அதன் பின்னர் ரிபிசி வானொலியில் ரிபிசி 10வது ஆண்டு : கடந்து வந்த பாதை : த ஜெயபாலன் ஏற்பட்ட முரண்பாட்டுடன் அவ்வானொலியைவிட்டு வெளியேறி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான செயற்பாடுகளில் ஈடுபட்டவர். குறிப்பாக ரிபிசி யில் இருந்த காலத்தில் நட்பான ஹரோ கவுன்சிலர் தயா இடைக்காடர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான உண்ணாவிரதம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்ட போது அதன் பின்புலத்தில் நின்றவர்களில் சேதுரூபன் குறிப்பிடத்தக்கவர். இக்காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து விலகிய ஆர் ஜெயதேவனுக்கு எதிரான மிகக் கடுமையான பிரச்சாரங்கள் சேதுரூபனால் முன்னெடுக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பானவர்களின் அரசியல் நிலைப்பாடுகளில் திடீர் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த ஆர் ஜெயதேவன், ரிபிசி வானொலி என்பன தற்போது அரசுக்கு எதிரான போக்கை வெளிப்படுத்துகின்றன. அன்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த சேதுரூபன் தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கின்றார்.

தற்போது சேதுரூபனுடன் தொடர்புடைய எதிரும் புதிருமான சட்ட நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நோர்வேயில் வாழும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளரான நெடியவனின் மனைவியின் குடும்பத்தினர் தான் இலங்கை அரசுக்கு உளவு பார்த்து வழங்குவதாக ஒஸ்லோவிற்கு வெளியே உள்ள மோல்டே பொலிஸ் நிலையத்தில் குற்றப்பதிவு செய்துள்ளதாக சேதுரூபன் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மற்றுமொரு பொறுப்பாளரான முரளி என்பவரும் அதே குற்றச்சாட்டை ஸ்ரோனர் பொலிஸ் நிலையத்திலும் தன்மீது பதிவு செய்திரப்பதாகவும் தெரிவித்தார். நோர்வேயில் மற்றுமொரு அரசுக்கு சார்பாக உளவு பார்ப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

தற்போது நோர்வே நியூஸ் என்ற இணையத்தளத்தின் ஆசிரியராகச் செயற்படும் சேதுரூபன் ஏசியன் ரிபியூன் ஆசிரியர் கெ ரி ராஜசிங்கத்திற்கு எதிராக மானநஸ்ட வழக்கைத் தொடுத்துள்ளார். சுவீடனில் வாழும் கே ரி ராஜசிங்கம் பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் எனத் தன்னைக் குறிப்பிட்டு தன் பற்றிய அபாண்டமான செய்திகளை வெளியிட்டதாக சேதுரூபன் குற்றம்சாட்டியுள்ளார். Submissions_to_the_court_2009-09-16_and_2009-09-30.pdf , Letter_from_the_court_dated_2009-12-03_and_submission_from_the_defendants_dated_2009-11-16.pdf

இதே சமயம் லண்டன் ரிபிசி வானொலி உடைப்பிலும் சேதுரூபன் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்று குற்றம்சாட்டப்பட்டு இருந்தார்.

இவற்றுக்கிடையே ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிக் கூட்டின் ஆதரவுடன் போட்டியிடும் முன்னாள் ஜெனரல் சரத் பொன்சேகாவின் சட்டக் குழு தன்னுடன் தொடர்பு கொண்டதாகவும் சேதுரூபன் தெரிவிக்கின்றார். ஏசியன் ரிபியூன் ஆசிரியர் கே ரி ராஜசிங்கம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர். தற்போது ஏசியன் ரிபியூன் இணையத்திற்கான நிதியை இலங்கை அரசே வழங்கி வருகின்றது என்ற செய்தி கடந்த ஆண்டு இலங்கைத் தேசிய நாளிதள்களில் வெளிவந்திருந்தது. அண்மையில் சரத் பொன்சேகா பற்றிய ஆதாரமற்ற செய்திகள் ஏசியன் ரிபியூனில் வெளிவந்தது தொடர்பாக சரத் பொன்சேகாவின் சட்ட குழு ஏசியன் ரிபியூன் மீதும் கே ரி ராஜசிங்கம் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க முற்பட்டு உள்ளனர். ஏசியன் ரிபியூன் மீது ஏற்கனவே சேதுரூபனின் வழக்கும் இருப்பதால் அது பற்றிய விபரம் அறியவே சரத் பொன்சேகாவின் சட்டக் குழு சேதுரூபனைத் தொடர்பு கொண்டதாக தெரியவருகின்றது.

மகிந்த ராஜபக்சவிற்கு சேதுரூபனின் ஆதரவு என்பது இவ்வாறான சட்டச் சிக்கல்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கான ஒரு நகர்வா எனக் கேட்ட போது எவ்வித கேள்விகளுக்கும் அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்கான வாய்ப்பும் உள்ளதா எனக் கேட்ட போது ‘சரத் பொன்சேகா ஆட்சிக்கு வரும்பட்சத்தில் ஆயுதக் குழுக்கள் அனைத்தும் இல்லாமல் போய்விடும் அதுவொரு நல்லஅம்சம்’ எனத் தெரிவித்தார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராவதற்கோ அல்லது பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் உண்டா எனக் கேட்டதற்கு இப்போதைக்கு அவை பற்றி எதுவும் குறிப்பிட முடியாது எனத் தெரிவித்தார்.

._._._._._.

த ஜெயபாலனின் குறிப்பு:

//இலங்கையில் ஊடகவியலாளராகக் கடமையாற்றிய சேதுரூபன் காலஞ்சென்ற தவிபு இன் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் முதல் மனைவியுடன் பணியாற்றியவர்.// என்று ஆரம்பத்தில் எழுதப்பட்டு இருந்தது.

மேற்படி குறிப்பில் //’முதல் மனைவியுடன்’ என்பது ‘அன்புக்குரியவருடன்’// என்று வந்திருக்க வேண்டும். தகவல் மூலம் அன்புக்குரியவர் என்று அவரது பெயரைக் குறிப்பிட்டு இருந்தது. அதனைக் கேட்டுப் பதிவு செய்யும் போது நான் தவறாக அது அவருடைய மனைவி என்று அர்த்தப்படுத்திக் கொண்டேன். மேற்படி அந்த அன்புக்குரியவருடன் சேது வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றி இருந்தார்.

தவறுக்கு வருந்துகிறேன். தற்போது திருத்தி அமைக்கப்பட்டு உள்ளது.

த ஜெயபாலன்

மறக்கப்படும் வன்னி மக்களும், மறந்து போகும் புலம்பெயர் மக்களும். – லிற்றில் எய்ட்கள் தொடர வேண்டும்!!! : த ஜெயபாலன்

முன்னாள் குழந்தைப் போராளிகள்தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களைப் பற்றிக் கட்டிய விம்பமும் இறுதிப் போர்! இறுதிப் போர்!! என்று முழங்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச ஊடகங்கள் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு தவறான தகவல்களை அள்ளிவீசி அவர்களை ஒரு மாயை உலகிற்குள் தள்ளிவிட்டிருந்தனர். இன்று இந்த ஊடகங்களில் போர் முழக்கம் இல்லை. ஆனால் வெற்று முழக்கங்களுக்கு குறையுமில்லை. ஆனால் இந்த ஊடகங்களினால் யுத்த வலைக்குள் நிர்ப்பந்திக்கப்பட்ட வன்னி மக்களது வாழ்வு இன்னமும் கேள்விக்குறியுடன் தொடர்கின்றது. மே 18 வரை வன்னி மக்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் பணயக் கைதிகளாக்கி அவர்கள் வகைதொகையின்றி கொல்லப்படுவதற்கும் வகைதொகையின்றி அங்கவீனர்கள் ஆவதற்கும் தங்கள் பூரண ஆதரவை வழங்கி வந்த புலிசார்பு ஊடகங்களும் தெரிந்தும் தெரியாமலும் புலிசார்பு ஊடகங்களால் வழிநடாத்தப்பட்ட இந்த மக்களது அவலத்திற்குப் பொறுப்பான புலம்பெயர்ந்த மக்களும் மே 18க்குப் பின் அந்த மக்களை பெரும்பாலும் கைவிட்டுள்ளனர். பாலியல் வல்லுறவு கொண்டவனையே கணவனாக்கும் தமிழ் தேசிய மரபின் அறத்தினையே புலித் தேசியம் பேசுபவர்கள் வன்னி மக்கள் விடயத்தில் எடுத்துள்ளனர். வன்னி மக்களுக்கு மிகப்பெரும் அவலத்தை ஏற்படுத்திய அம்மக்களை மானபங்கம் செய்த இலங்கை அரசுதான் அந்த மக்களுக்கு வாழ்க்கை கொடுக்க வேண்டும் என்று இவர்கள் அம்மக்களைத் கைகழுவி விட்டுள்ளனர்.

மே 18க்குப் பின் தற்போது 6 மாதங்கள் ஓடிவிட்டது. இந்த மக்களுக்கு குறைந்தபட்ச உதவிகளையாவது செய்வது பற்றி தமிழ் மக்களுக்காக குரல்கொடுக்கின்றோம் மக்களுடன் நிற்கின்றோம் என்ற எந்த புலம்பெயர் அரசியல் அமைப்புகளும் முன்வரவில்லை. அந்த மக்களைச் சென்று பார்க்க தங்களை அனுமதிக்கவில்லை என்று ஒப்பாரி வைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு சென்று பார்த்த பின் அந்த மக்களுக்கு என்ன செய்தார்கள் என்றும் தெரியவில்லை. வன்னி மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதிகள் போல் அல்லாது புலிகளின் புலம்பெயர்ந்த புலி ஆதரவு அமைப்புகளின் பிரதிநிதிகளாகச் செயற்பட்ட இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்கள் வன்னி மக்கள் தொடர்பில் எதனையும் செய்ய முன்வரவில்லை. இலங்கையில் இருந்து ஐரோப்பா வந்து யுத்த முழக்கம் இட்டவர்கள் ஏன் மீண்டும் ஒருமுறை லண்டன் வந்து அந்த மக்களின் புனர்வாழ்விற்கு முழக்கம் இடக்கூடாது? அதற்கு யார் தடைவிதித்தனர்?

2004 டிசம்பர் 26 சுனாமி நடைபெற்று 5வது ஆண்டு நிறைவடைகின்றது. இந்த சுனாமி நிதி, கண்ணீர் வெள்ளம் என்றெல்லாம் மக்களிடம் சேர்த்த நிதி பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடையவில்லை. வெண்புறா என்றும் வணங்கா மண் என்றும் தமிழ் சுகாதார அமைப்பு என்றும் பல பெயர்களில் தமிழ் மக்களுக்காகச் சேர்க்கப்பட்ட நிதிக்கு இதுவரை சரியான கணக்குகள் பொதுத் தளத்தில் வைக்கப்படவில்லை. வெண்புறா பொதுத்தளத்தில் வைத்த கணக்கு விபரம் சுண்டைக்காய் கால்ப் பணம் சுமைகூலி முக்கால் பணம் என்றளவிலேயே செலவிழிக்கப்பட்டு உள்ளது. தாயக மக்களின் அவலத்தின் பெயரில் புலிசார்பு அமைப்புகளால் சேகரிக்கப்ட்ட நிதி பெரும்பாலும் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள அவ்வமைப்பு சார்ந்தவர்களின் புனர்வாழ்விற்கே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

அன்று சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேசம் நிவாரணப் பணிகளைச் செய்ய முற்பட்ட போது நிதர்சனம் போன்ற இணையங்கள் அரசின் கைக்கூலிகள் என்ற சேறடித்தன. இன்று வன்னி மக்களுக்கான நிவாரணங்களை தேசம், லிற்றில் எய்ட் மேற்கொண்டபோது அதற்கு சேறடிப்பதற்கு நிதர்சனம் இயங்கவில்லை. அதன் வேலையை வேறு சிலர் (புலி மார்க்ஸிஸட்டுக்கள்) பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இன்று இந்தப் புலம்பெயர் புலிசார்பு அமைப்புகளால் கைவிடப்பட்டவர்கள் அப்பாவிப் பொது மக்கள் மட்டுமல்ல ஆயிரக்கணக்கான போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும் ஆவர். குறிப்பாக சரணடைந்த சிறுவர் படையணியைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான போராளிகளில் ஒரு சிறு பிரிவினர் அம்பேபுச புனர்வாழ்வு மையத்தில் வைத்துப் பராமரிக்கப்பட்டனர். நவம்பர் 15 உடன் அம்பேபுச புனர்வாழ்வு மையம் மூடப்பட்டு அவர்கள் இரத்மலானை இந்துக் கல்லூரிக்கு மாற்றப்பட்டனர். தற்போது இரத்மலானை இந்துக் கல்லூரியில் 277 குழந்தைப் போராளிகள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். http://littleaid.org.uk/sites/littleaid.org.uk/files/Ambepusse_Project_Little_Aid.pdf

இவர்களது புனர்வாழ்வுக்கான உதவிகளை மேற்கொள்ள இவர்களை யுத்தத்திற்கு அனுப்பிய புலம்பெயர்ந்த புலி ஆதரவு அமைப்புகள் தவறிவிட்டன. இவர்கள் குழந்தைப் பருவத்திலேயே போராட்டத்தில் இணைக்கப்பட்டதால் சாதாரண குழந்தைகளுக்குரிய மனநிலையில் இல்லை. இவர்களுக்கு விசேட உளவியல் பரமாரிப்பு அவசியமாகின்றது. ஆனால் இவர்களைப் பராமரிக்கின்ற பொறுப்பை புலம்பெயர் அமைப்புகள் ஏற்க மறுக்கின்றனர். அதற்கு அவர்கள் பிரச்சினைக்குரியவர்கள், உளவியல் பிரச்சினையுடையவர்கள் என்பதே முக்கிய காரணமாக உள்ளது.

little_aidஇந்த குழந்தைப் போராளிகளை நேரில் சென்று பார்த்து அவர்கள் விரும்பியபடி அவர்களுக்கு லிற்றில் எயட் 1785பவுண்கள் செலவில் இசைக்கருவிகளை வழங்கி அவர்களுக்கு சிறு ஆறுதலை அளிக்க முற்பட்டது. மேலும் லிற்றில் எய்ட் தேசம்நெற் மேற்கொண்ட வன்னிமுகாம் மாணவர்களுக்கான கல்வித் திட்டத்திலும் பங்களிப்புச் செய்தது. வன்னி முகாம் குழந்தைகளுக்கான பால்மா, முகாமில் இருந்தவர்களுக்கான துணி வகைகள், மரக்கறிகள் தற்போது மருந்து வகைகள் என லிற்றில் எய்ட் பெயருக்கு ஏற்ற அளவில் முடிந்த அளவில் சிறு உதவிகளை வழங்கியது. இந்த மக்களுக்கு உதவுவதை லிற்றில் எய்ட் தனது கடமையாக சமூகப்பொறுப்பாகக் கருதுகின்றது. தனது கணக்கு விபரம் முழுவதையும் இணையத்தில் பிரசுரித்துள்ள லிற்றில் எய்ட் இதுவரை 5521 பவுண்களை நன்கொடையாகப் பெற்றுள்ளது. ஆனால் 10183 பவுண்களை வன்னி முகாம்களின் உதவிக்கு செலவழித்துள்ளது. 5000 பவுண்கள் வரை லிற்றில் எய்ட் ரஸ்டிகளே பொறுப்பெற்றுள்ளனர். http://littleaid.org.uk/project_reports

இந்த மக்களுக்கு முடிந்த எல்லா வகையிலும் உதவிகள் சென்றடைவதை உறுதிப்படுத்துவதே ஒவ்வொருவருடைய விருப்பமாக இருக்கும். ஆனால் துரதிஸ்டவசமாக இந்த மக்கள் விடயத்திலும் தங்கள் சொந்த அரசியல் விருப்பு வெறுப்புகளுக்காக அந்த உதவிகளுக்கு உபத்திரவம் விளைவிக்கின்ற ஒருசிலர் புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் இருக்கவே செய்கின்றனர். வன்னி முகாம்களுக்கு தேசம்நெற் லிற்றில் எய்ட் மேற்கொள்ளும் உதவிகள் தொடர்பாக சேறடிப்பதில் புலம்பெயர் கீபோட் மார்க்ஸிஸ்டுக்களே முன்னணியில் நின்றனர். தங்கள் மீது மார்க்ஸிட்டுக்கள் என்று விம்பத்தைக் கட்டமைக்கும் இவர்கள் இவ்வாறான உதவிகள் மார்க்ஸிய விரோதமானவை என்றும் மக்கள் விரோதமானவை என்றும் கட்டுரைகளை வரைந்து தள்ளினர். இவர்கள் வன்னி முகாம் மக்களுக்கு உதவுவதன் மூலம் இலங்கை அரசுக்கு கைக் கூலிகளாகச் செயற்பட்டார்கள் என்று உதவிகள் வழங்குபவர்கள் மீது சேறடித்தனர். வன்னி மாணவர்கள் கல்வியைத் தொடர நூல்களை வழங்கினால் முகாம்களை தொடர்ச்சியாக வைத்திருந்து பிழைப்பு நடத்துவதாக கண்டு பிடிப்புகளைச் செய்தனர்.

இவர்களுக்கிருந்த நோக்கமும் புலிகளுடைய நோக்கமும் பாரிய அளவில் வேறுபடுவதில்லை. புலிகள் மக்களை வருத்தி தங்கள் அரசியலை முன்னெடுத்தனர். இவர்களும் அதே மக்களை வருத்தி துன்பக் கேணியில் தவிக்க விட்டு தாங்கள் அவர்களுக்காக புரட்சிகர நடவடிக்கைகளில் (கீபோட்டில் கட்டுரை வடிப்பது) ஈடுபடுவதாக றீல் விடுகின்றனர்.

இவர்களது மனவிகாரங்களுக்கும் பொறாமைகளுக்கும் போக்கிடமாக தங்கள் இணையங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். லிற்றில் எய்ட் தலைவர் கொன்ஸ்ரன்ரைன் பற்றி இவர்கள் எழுதியவை அரசியல் அல்ல வக்கிரம். இந்த வக்கிரச் சொல்லாடல்களை கீபோட் மார்க்ஸிஸ்டுக்கள் மத்தியில் பொதுவாகக் காணலாம். ஏனெனில் இந்த கீபோட் மட்டைகள் ஊறியது ஒரே குட்டையில். தங்களுக்கு மார்க்ஸிய மகுடம் சூட்டுவதையே இவர்கள் தொழிலாகக் கொண்டுள்ளனர். இவர்களுக்கும் மக்களுக்கும் உள்ள இடைவெளியோ பல்லாயிரம் மைல்கள். அதற்குள் தங்களில் யார் மக்களின் பக்கத்தில் என்று இவர்களுக்குள் தற்போது குத்துவெட்டு. அந்தக் குத்து வெட்டுக்கு அணிசேர்க்க ஆளாய்ப் பறக்கின்றனர்.

மே 18க்குப் பின் 6 மாதங்கள் கடந்துவிட்டது. தற்போது குழந்தைப் போராளிகள் மட்டுமல்ல தமிழீழ விடுதலைப் புலிகளின் செஞ்சோலைக் குழந்தைகளும் தங்களுக்கான ஒரு உதவும் அமைப்பைத் தேடுகின்றனர். இச்சிறார்களும் உளவியல் ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதால் ஏனைய சிறுவர் இல்லங்களில் வைத்துப் பராமரிக்க முடியாத நிலையுள்ளது. அதற்கு உதவுதற்கு லண்டன் அமைப்பு ஒன்று தன் விருப்பத்தை வெளியிட்டுள்ளது. 65 சிறுவர்களைக் கொண்ட செஞ்சோலை இல்லத்தை லண்டனில் உள்ள இவ்வமைப்பு ஜனவரியில் பொறுப்பேற்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதற்கு முன்னர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. குழந்தைப் போராளிகளைப் பராமரிப்பதில் காட்டிய அதே தயக்கம் இக்குழந்தைகள் விடயத்திலும் காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த 277 குழந்தைப் போராளிகள் 65 செஞ்சோலைச் சிறார்கள் மட்டுமல்ல பல்லாயிரக்கணக்கான போராளிகள் மற்றும் மக்களுக்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் உதவி மிக மிக அவசியமாகத் தேவைப்படுகின்றது. இவ்வுதவிகளை தனிநபர்களாக மட்டும் அல்லது ஒரு சில அமைப்புகளால் மட்டும் மேற்கொள்ள முடியாது. இலங்கை அரசிடம் இருந்து இந்த மக்களுக்கு அதிககட்ச உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். அதே சமயம் இம்மக்களைப் போராளிகளை இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பில் மட்டும் விட்டுவிட்டு அரசாங்கம் அனைத்தையும் பார்த்துக் கொள்ளும் என்று நாம் எமது பொறுப்புக்களைத் தட்டிக்கழிக்க முடியாது. இலங்கை அரசாங்கத்தின் இனவாதப் போக்கும் இனவாதத்தை கக்குகின்ற அரச இயந்திரமும் அப்படியே தான் இருக்கின்றது. ஆகவே பாதிக்கப்பட்ட மக்களின் விடயத்தில் புலம்பெயர்ந்த மக்களின் கவனம் எப்போதும் இருந்து கொண்டிருக்க வேண்டும்.

வன்னி மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை தனிப்பட்ட முறையிலும் அரசியலுக்கு அப்பாலும் பலரும் செய்து வருகின்றனர். இருந்தாலும் பெரிய அளவான முயற்சிகளில் ஸ்தாபனங்கள் ஈடுபடுவது அவசியம். இந்த அமைப்புகள் மீது சமூகம் விழிப்பாக இருந்து அவர்களைக் கண்காணிக்க வேண்டுவது அவசியம். இவ்வமைப்புகள் மீதான கண்காணிப்பும் விமர்சனமும் மக்களுக்கு உதவிகள் சீராகச் சென்றடைவதை உறுதிப்படுத்துவதாக அமைய வேண்டும். அதைவிடுத்து அம்மக்களை துன்பத்திற்குள் அலையவிட்டு போராட்டத்திற்கு ஆள்பிடிக்க முயற்சிப்பதாக இருக்கத் தேவையில்லை. போராட்டத்திற்கான நேரம் வரும்போது அவர்கள் அதனைச் செய்வார்கள். புலத்து புலி மார்க்ஸிஸ்ட்டுக்கள் புரட்சியை ஏற்றுமதி செய்யத் தேவையில்லை.

லிற்றில் எய்ட் http://littleaid.org.uk/இன் முதலாவது உதவித் திட்டம் மே 18 2009ல் வன்னி முகாம்களைச் சென்றடைந்தது. ஒக்ரோபர் 12 2009 வரையான காலத்தில் 10 உதவித்திட்டங்களை http://littleaid.org.uk/projects லிற்றில் எய்ட் 9474 பவுண்கள் செலவில் மேற்கொண்டது. இத்திட்டத்தின் ஊடாக டென்மார்க்கில் உள்ள எல்லைகளற்ற மருத்துவ அமைப்பு லிற்றில் எய்ட் ஊடாக 1140 கிகி எடையுள்ள மருந்துப் பொருட்களை வவுனியாவிற்கு அனுப்பி வைத்தது. இதன் சந்தைப் பெறுமதி 16000 பவுண்கள். இவற்றை டென்மார்க் எல்லைகளற்ற மருத்துவ அமைப்பு முற்றிலும் இலவசமாக வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னைய திட்டம் எல்லைகளற்ற மருத்துவ அமைப்பின் விதிமுறைகளுக்கு அமைய வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதால் தற்போது அவ்வமைப்பு 5500 கிகி எடையுள்ள மருந்துகளை முற்றிலும் இலவசமாக லிற்றில் எய்ட்க்கு தர முன்வந்துள்ளது. இத்தொகுதி மருந்துப் பொருட்களின் சந்தைப் பெறுமதி 40 000 பவுண்களுக்கும் அதிகமாகும். இத்தொகுதி மருந்துப் பொருட்கள் தற்போது கொழும்பைச் சென்றடைந்துள்ளது. முன்னைய திட்டத்தைப் போன்று வன்னிக்கு இம்மருந்துப் பொருட்களை கொண்டு செல்வதற்கான செலவை லிற்றில் எய்ட் ஏற்றுள்ளது. அதற்கு ஒரு சில ஒத்துழைப்புகள் ஏற்கனவே கிடைக்கப்பெற்றும் உள்ளது. இம்முறை இம்மருந்துப் பொருட்களின் விநியோகத்தை மேற்பார்வையிட டென்மார்க் எல்லைகளற்ற மருத்துவ அமைப்பின் தலைவரும் லிற்றில் எய்ட் சார்பில் கொன்ஸ்ரன்ரைனும் இலங்கை செல்கின்றனர்.

மேலும் டிசம்பர் 20 லிற்றில் எய்ட் அமைப்பின் நிதி சேரிப்பு நடவடிக்கையின் ஓரு முயற்சியாக ஒன்றுகூடல் ஒன்றுக்கும் இராப்போசன நிகழ்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்நிகழ்வு நிதி சேகரிப்புடன் எதிர்காலத்தில் பாதிக்கப்பட்வர்களுக்கான நீண்ட காலத் திட்டங்களில் தங்களை ஈடுபடுத்த ஆர்வமுடையவர்களை அடையாளம் கண்டு அவர்களை பொது வேலைத்திட்டத்துடன் இணைக்கின்ற ஒரு முயற்சியாகவும் அது அமையும்.

நிகழ்வு விபரம்:
Doors Open – 8 :00pm – till late
32 Raliway Approach, Harrow Middlesex HA3 5AA
Contact: 07886530996

வன்னி மக்களின் நல்வாழ்வில் அக்கறையுடன் பல்வேறு அமைப்புகளும் தனிநபர்களும் தங்களை ஈடுபடுத்தி உள்ளனர். இங்கு லிற்றில் எய்ட் பற்றி எழுதியதன் மூலம் அவர்களது உதவிகளை குறைத்து மதிப்பிட முடியாது. லிற்றில் எய்ட் மூலம் அம்மக்களின் தேவைகளை தனித்து நின்று செய்துவிட முடியாது. புலம்பெயர்ந்த ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த நம்பகமான அமைப்புகளுடாகவோ அல்லது தனித்தோ தங்களால் ஆன உதவிகளை மேற்கொண்டு அம்மக்களுக்கு எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அம்மக்களை அரசியல் சதுரங்கத்தின் காய்களாக பயன்படுத்துவதற்கு எவரையும் அனுமதிக்க முடியாது.

டிசம்பர் 26 2009ல் சுனாமியால் தன்னுயிரை இழந்த அனாமிகா பாலகுமாரின் நினைவு நிகழ்வு கிழக்கு லண்டனில் இடம்பெறவுள்ளது. பல்லாயிரக் கணக்கான மக்களின் இழப்புகளில் அனாமிகா போன்ற ஒரு சில இழப்புகளே அவரது பெற்றோர் லண்டனில் உள்ளதால் நினைவுகூரப்படுகின்றது. ஏனைய இழப்புகள் மறக்கப்பட்டு விட்டன. ஆனால் அந்த சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் இழப்புகளைத் தாங்கி தங்கள் வாழ்க்கையைத் தொடருகின்றனர். இந்நிலையே வன்னி அவலத்தில் இருந்து மீண்ட மக்களுக்கும். தம் அன்புக்குரியவர்களை தம் அங்கங்களை இழந்தவர்கள் என்று இவர்களது எதிர்காலம் கடினமானதாக அமையப் போகின்றது. இன்னும் சில மாதங்களில் திரையில் வன்னி மக்களின் முகங்கள் வராது, வானலைகளில் அவர்களின் குரல்கள் ஒலிக்காது, பத்திரிகை இணையங்களிலும் அவர்களது பதிவுகள் வராது. இம்மக்களுக்கான நலத்திட்டங்களை இப்போது ஆரம்பிக்காதுவிட்டால் இன்னும் சில மாதங்களில் இவர்கள் மறக்கப்பட்டு விடுவார்கள்.