செய்திகள்

செய்திகள்

செய்திகள்

பிறப்பு வீதம் வீழ்ச்சி: குழந்தைகளிடத்தில் நீரிழிவு நோய் அதிகரிப்பு – வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தகவல்

பிறப்பு வீதம் வீழ்ச்சி: குழந்தைகளிடத்தில் நீரிழிவு நோய் அதிகரிப்பு – வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தகவல்

 

நாட்டின் பிறப்புவீதம் கடந்த 10 வருட காலத்தில் படிப்படியாக வீழ்ச்சியடைந்துள்ளதுடன் குழந்தைகள் நீரிழிவு போன்ற நோய்நிலைமைக்குள்ளாகும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

 

பிறப்பு வீத வீழ்ச்சி கல்வி, சுகாதாரம் மற்றும் ஆளணி போன்ற காரணிகளிலும் பாதிப்பு செலுத்தும் என்பதோடு குறிப்பிடத்தக்க மக்கள்தொகை மாற்றங்களுக்கு வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரித்த அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

 

2013ஆம் ஆண்டு 350,000ஆக இருந்த பிறப்பு எண்ணிக்கை 2023ஆம் ஆண்டாகும்போது 250,000ஆக குறைவடைந்ததுடன் 2024ஆம் ஆண்டு பிறப்பு எண்ணிக்கை 228,000ஆக பதிவாகியுள்ளது.

அவ்வாறு பிறக்கும் குழந்தைகளிலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குழந்தைகள் நோய் நிலைமைகளுக்கு ஆளான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர்.

 

20 ஆண்டுகளுக்கு முன்னர் காணக்கிடைக்காத குழந்தை பருவ நீரிழிவு நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதும் அதிகரித்துள்ளது. அவ்வாறு நீரிழிவு நோயால் பாதிப்புக்குள்ளான சுமார் 100 குழந்தைகள் சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறுவர் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பைக் காண முடிகிறது. அதிகரித்த உடல் பருமன், மந்தபோசனை போன்ற உடலியல் நோய்களாலும் மன நோய் காரணமாகவும் சிறுவர்கள் பாதிப்புக்குள்ளாவதும் அதிகரித்துள்ளது.

 

சிறுவர்களின் குறும்புத்தனமும் அதற்கு எதிர்மாறான ஆடிசம் நிலையும் மன உளைச்சலுக்கு ஆளாகுவதும் மேலோங்கியுள்ளது. குழந்தைகள் இவ்வாறான நோய் நிலைமைகளுக்கு ஆளாகுவதால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படலாம். ஆகையால், பெற்றோர் மற்றும் சமூகம் என்ற ரீதியில் இவை தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும். இல்லையேல், எதிர்காலத்தில் ஆபத்தான நிலைக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம் என்றார்.

ஸரியா சட்டத்தை கடைப்பிடிக்கும் மியன்மார் ரோஹிங்கியா அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்றுங்கள் – சரத் வீரசேகர கூச்சல் !

ஸரியா சட்டத்தை கடைப்பிடிக்கும் மியன்மார் ரோஹிங்கியா அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்றுங்கள் – சரத் வீரசேகர கூச்சல் !

மியன்மார் ரோஹிங்கியா அகதிகளை நாட்டை விட்டு உடனடியாக வெளியேற்ற வேண்டும். இவர்களை இங்கு தங்க வைத்தால் தேவையில்லாத பிரசச்சினைகள் ஏற்படும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அட்மிரல் சரத் வீரசேகர, பணம் செலுத்தி படகில் வருபவர்கள் அகதிகளல்ல, இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் இலங்கையின் கலாச்சாரத்துடன் ஒன்றிணைந்து அனைத்து இனத்தவர்களுடன் இணக்கமாகவும், சகோதரத்துவத்துடனும் வாழ்கிறார்கள். பிற நாட்டு முஸ்லிம்கள் ஸரியா சட்டத்தை கடைப்பிடிக்கிறார்கள். ஆகவே அவர்கள் இலங்கையில் இணக்கமாக செயற்படமாட்டார்கள். மியன்மார் ரோஹிங்கியா அகதிகளை நாட்டை விட்டு உடனடியாக வெளியேற்ற வேண்டும். அகதிகள் என்று குறிப்பிட்டுக் கொண்டு இலங்கைக்கு வருகைத் தருபவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் போர்த்துக்கேயர்களும் அகதிகள் என்று குறிப்பிட்டுக் கொண்டு தான் இலங்கைக்கு வந்து இலங்கையை ஆக்கிரமித்தார்கள். மியன்மார் ரோஹிங்கியா அகதிகளை நாட்டை விட்டு உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்றார்.

இனவாத கருத்துக்களை கொண்ட தென்னிலங்கை தலைவர்கள் அகதிகளாக வந்த மக்களை வெளியேற்றுவது தொடர்பில் அதிகம் பேசி வருகின்றனர் – தென்னிந்தியாவுக்கு சென்ற இலங்கை தமிழ் அகதிகளை பற்றியே பேசாத தமிழ்தேசிய தலைமைகளிடம் ரோஹிங்கியா அகதிகளை பற்றி பேசுவார்கள் என எதிர்பார்ப்பது அபத்தமானது. இருந்தாலும் கூட மனித உரிமை அமைப்புக்களும் – சமூக செயற்பாட்டாளர்களும் – இலங்கை மக்களும் ரோஹிங்கியா அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்றகூடாது என்பதை வலியுறுத்தி போராட்டங்களை பல பகுதிகளிலும் மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மியன்மாரிலிருந்து நாட்டுக்கு வருகைதந்திருக்கும் ரோஹிங்கிய அகதிகளைத் திருப்பியனுப்பவேண்டாம் எனக்கோரி கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை பொதுமக்களும் – சமூக செயற்பாட்டாளர்களும் மேற்கொண்டிருந்தமை கவனிக்கத்தக்கது.

கிளி ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனை தாக்கிய காடையர்கள் பிணையில் விடுதலை – அமெரிக்க பத்திரிகையாளர்கள் அமைப்பு விசனம் !

கிளி ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனை தாக்கிய காடையர்கள் பிணையில் விடுதலை – அமெரிக்க பத்திரிகையாளர்கள் அமைப்பு விசனம் !

இலங்கை தமிழ் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் தாக்கப்பட்டு கடத்த முற்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் பாரபட்சமற்ற விரைவான விசாரணையை நடாத்த வேண்டும் என அமெரிக்காவின் நியூயோர்க்கை தளமாக கொண்டு இயங்குகின்ற பத்திரிகையாளர்களை பாதுகாக்கின்ற குழுவின் (CPJ) திட்ட இயக்குநர் கார்லோஸ் மார்டினெஸ் டி லா செர்னா அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

CPJ வெளியிட்டுள்ள அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஊடகவியலாளர் மு.தமிழ்ச்செல்வன் டிசம்பர் 26 ஆம் திகதி கிளிநொச்சி நகரில் வைத்து தாக்கப்பட்டு கடத்த முயற்சிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் இவர் அதிலிருந்து தப்பியிருக்கின்றார். பின்னர் அவர் நெஞ்சு, கழுத்து,முதுகில் தாக்குதல் காரணமாக ஏற்பட்ட வலி காரணமாக சிகிச்சை பெற்றுள்ளார். அவர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தின் படி டிசம்பர் 27 ஆம் திகதி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு 30 ஆம் திகதி நீதிமன்றில் சந்தேக நபர்கள் தமிழ்ச்செல்வனால் அடையாளம் காட்டப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றம் அவர்களை பிணையில் விடுவித்துள்ளது. இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சரத் சமரவிக்ரசிங்கவை தொடர்பு கொண்டு வினவிய போது அவர் உடனடியாக பதில் கூற முடியாது என தெரிவித்துவிட்டார்.

உள்ளூர் நாளிதழ்களில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மணல் அகழ்வுகள் தொடர்பில் தொடர்ச்சியாக எழுதிவருவதன் காரணமாக தான் தாக்கப்பட்டிருக்கலாம் என எம்மிடம் தமிழ்ச்செல்வன் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழ்பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு தண்டனைகள் கிடைக்காமை தொடர்பில் CPJ ஆவணப்படுத்தியிருக்கிறது.1983 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதிகளில் உள்நாட்டு போர் காரணமாக கொல்லப்பட்ட அதிகளவான பத்திரிகையாளர் தமிழ் பத்திரிகையாளர்கள்.

எனவே புதிதாக பொறுப்பேற்ற அரசு தமிழ் பத்திரிகையாளர்கள் மீதான் தாக்குதல், துன்புறுத்தல்கள் மற்றும தணடனை விலக்களிப்பு என்பவற்றை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் பத்திரிகையாளர்களை பாதுகாக்கின்ற குழுவின் (CPJ) திட்ட இயக்குநர் கோரியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களின் வருமானங்கள் அப்பகுதி மக்களின் வளர்ச்சிக்காக பயன்படுவதை உறுதி செய்யுமாறு ஆளுநர் வேண்டுகோள் !

உள்ளூராட்சி மன்றங்களின் வருமானங்கள் அப்பகுதி மக்களின் வளர்ச்சிக்காக பயன்படுவதை உறுதி செய்யுமாறு ஆளுநர் வேண்டுகோள் !

உள்ளூராட்சி மன்றங்கள் பெற்றுக்கொள்ளும் வருமானங்களை தமது பிரதேச மக்களின் வாழ்வாதார உள்ளிட்ட ஏனைய மேம்பாடுகளுக்கு செலவு செய்யவேண்டும். அதைவிடுத்து அதனை நிரந்தர வைப்பிலிட்டு சேர்த்து வைத்துக்கொண்டிருக்கக்கூடாது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பருத்தித்துறை மரக்கறி பொதுச் சந்தை திறப்பு விழாவில் தெரிவித்தார்.

பருத்தித்துறை நகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பருத்தித்துறை மரக்கறி பொதுச் சந்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன், உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டத்தின் கீழ் 45 மில்லியன் ரூபா செலவில் இந்தச் சந்தை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் தனது உரையில், பௌதீக வளங்களின் முன்னேற்றம் என்பது அபிவிருத்திக்கு இன்றியமையாதது. அதேபோன்று தனித்து பௌதீக வளங்களின் முன்னேற்றம் மாத்திரமும் அபிவிருத்தியாகிவிடாது. எங்களின் சேவையை மேம்படுத்தும்போதுதான் அபிவிருத்தி முழுயடையும். எனவே மக்களுக்கு தரமான, அன்பான, விரைவான சேவையை வழங்க முன்வரவேண்டும் என குறிப்பிட்டார்.

அங்கு மேலும் பேசிய ஆளுநர், கௌரவ ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவில் முன்னெடுக்கப்படும் ‘கிளீன் சிறிலங்கா’ வேலைத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு முக்கிய பங்கிருக்கின்றது. அதைச் சிறப்பாக செயற்படுத்தவேண்டும். மக்கள் நம்பிக்கை வைக்கும் அரச சேவையை உருவாக்கவேண்டும். எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

என்.பி.பி இளங்குமரன் ஏற்படுத்திய வெளிச்சத்தில் குளிர்காயும் பொன்.ஐங்கரநேசன் உள்ளிட்ட தமிழ்தேசிய குழுவினர் !

என்.பி.பி இளங்குமரன் ஏற்படுத்திய வெளிச்சத்தில் குளிர்காயும் பொன்.ஐங்கரநேசன் உள்ளிட்ட தமிழ்தேசிய குழுவினர் !

 

யாழ்ப்பாணத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சுண்ணாம்பு கல் அகழ்வு இடம்பெறுவதை யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின் என்.பி.பி பா.உ இளங்குமரன் அம்பலப்படுத்தியிருந்தார். இதனை தொடர்ந்து சட்டவிரோதமான சுண்ணாம்பு கல் அகழ்வு நடைபெறுவது தொடர்பில் இதுவரை கண்டுகொள்ளாத யாழ்ப்பாணத்து ஊடகங்களும், சமூக செயற்பாட்டாளர்களும் தற்போது பொறுப்புள்ளவர்களாக பேச ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் வடமாகாண ஆளுநரிடம் சட்டவிரோத சுண்ணக்கல் அகழ்வை முடிவுறுத்தக்கோரி மனு ஒன்றை கையளித்துள்ளார். குறித்த மனுவில் யாழ்ப்பாணக் குடாநாடு கடலாலும், கடல் நீரேரிகளாலும் சூழப்பட்ட ஒரு தீபகற்பம். பூமி வெப்பமடைவதன் விளைவாக ஏற்பட்டுவரும் கடல்மட்ட உயர்வு குடாநாட்டைப் பெருமளவு பாதிக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், கட்டுப்பாடற்ற சட்டவிரோத சுண்ணாம்பு அகழ்வு காலநிலை மாற்றத்தால் ஏற்படவுள்ள பாதகங்களை மேலும் விரைவுபடுத்தும், அதிகப்படுத்தும். இவற்றைக் கருத்திற்கொண்டு விவசாய நடவடிக்கையைப் பாதிக்காத வகையில் சுண்ணாம்புக்கல் அகழ்வை நெறிப்படுத்துவதோடு, இதில் நிலவக்கூடிய சட்டவிரோதச் செயற்பாடுகள் அனைத்தும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் பொ. ஐங்கரநேசன்.

வட மாகாண சபையின் வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சராக பணியாற்றியிருந்த பொன். ஐங்கரநேசனுக்கு சுண்ணாம்புக்கல் அகழப்படும் பிரச்சினைகள் தொடர்பில் தெரியாமலில்லை. கடந்த கால ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் கூட சுண்ணாம்புக்கல் அகழ்வு தொடர்பாக சமூக செயற்பாட்டாளர்கள் அழுத்தம் கொடுத்து சட்டவிரோதமான அகழ்வுகள் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில் இவை தொடர்பில் வடக்கு மாகாண சபை இயங்குநிலையில் இருந்த போது இது தொடர்பாக எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை அப்போதைய அமைச்சர் பொன். ஐங்கரநேசன். மாறாக இரணைமடு குளத்தின் அபிவிருத்தி திட்டங்கள் உட்பட பல திட்டங்களில் தங்களால் முடியுமானவரை எல்லாம் ஊழல் நடந்தது வடக்குமாகாண சபை இயங்கு நிலையில் இருந்த காலகட்டங்களில். இதனாலேயே வடக்கு மாகாணசபையின் அமைச்சரவையில் இருந்த அனைவரையும் தமிழ்மக்கள் அடுத்தடுத்து அனைத்து தேர்தல்களிலும் நிராகரித்தனர் – நிராகரித்தும் வருகின்றனர்.

 

இவ்வாறான நிலையில் புதிதாக பாராளுமன்றம் தெரிவான என்.பி.பி இளங்குமரன் மீது ஊடக வெளிச்சம் விழ ஆரம்பித்துள்ளது. இந் நிலையில் அந்த வெளிச்சத்தில் தாங்களும் குளிர்காய எண்ணி வழக்கொழிந்து போன பொன்.ஐங்கரநேசன் உள்ளிட்ட தமிழ்தேசிய வாதிகளும் தம் மௌனம் களைத்து சுண்ணாம்புக்கல் அகழ்வு பிரச்சினை பற்றி பேச ஆரம்பித்துள்ளனர். எவ்வாறான போதும் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால் ஆரோக்கியமானது தான் என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

 

பிரபலத்துக்காக மக்களை அச்சமூட்டாதீர்கள் – இலங்கையில் யாருக்கும் HMPV வைரஸ் இல்லை!

பிரபலத்துக்காக மக்களை அச்சமூட்டாதீர்கள் – இலங்கையில் யாருக்கும் HMPV வைரஸ் இல்லை!

தற்போது சீனா முழுவதும் பரவி வரும் எச்.எம்.பீ.வீ வைரஸ் இலங்கையிலும் அடையாளங்காணப்பட்டுள்ளதாக பல பிரபல ஊடகங்கள் அடுத்தடுத்து செய்தி வெளியிட்டு மக்களை பீதியடைய வைத்துள்ள நிலையில்இ பிரபல்யத்துக்காக மக்களை அச்சமூட்டும் வகையில் செய்திகளை வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இலங்கையில் எச்.எம்.பீ.வீ வைரஸ் நோய் தொற்றாளர் எவரும் கண்டறியப்படவில்லை. இந்த வைரஸ் தொற்று தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

ரோஹிங்கியா அகதிகள் நாடுகடத்தப்படுவதை எதிர்த்து முல்லையில் போராட்டம் !

ரோஹிங்கியா அகதிகள் நாடுகடத்தப்படுவதை எதிர்த்து முல்லையில் போராட்டம் !

முல்லைத்தீவு கடலில் தஞ்சம் அடைந்த ரோஹிங்கியா அகதிகளை நாடுகடத்த வேண்டாம் என்பதை வலியுறுத்தியும் இலங்கை சர்வதேச மனித உரிமை சட்டங்களை பாதுகாக்க கோரியும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

 

போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர், முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு விமானப்படைத்தளத்தில் இரண்டு வாரங்களுக்கு மேலாக அந்த மாவட்டத்தின் சிவில் நிர்வாக கண்காணிப்பு இன்றி தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இராணுவ மயமாக்கல் சூழலுக்குள் அகதிகளை தங்கவைப்பது சர்வதேச மனிதாபிமான நியமங்களுக்கும் அடிப்படை மனிதாபிமான விழுமியங்களுக்கும் மாறானதாகும்.

 

எனவே இந்த அகதிகளை மீரியானவில் உள்ள அகதிகள் மையத்திற்கு அல்லது வேறொரு பொருத்தமான இடத்திற்கு மாற்றுவதுடன் அப்பிரதேச சிவில் நிர்வாக கண்காணிப்புக்குள் அவர்களை கொண்டுவரவேண்டும். இலங்கை என்பது ஒரு அபிவிருத்தி அடைந்து வரும் நாடு எனும் வகையில் இலங்கை சர்வதேச அகதிகளின் புகலிட மையமாக மாறுவதை நாம் விரும்பவில்லை. தற்போதுள்ள அகதிகளை சர்வதேச அகதிகள் சட்டத்திற்கு அமைய நடத்தவேண்டும் என்பதையே அரசாங்கத்திடம் வேண்டுகின்றோம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

நெல் உற்பத்திக் குறைவுக்கு தொல்லியல் திணக்களமும் காரணம் – பா உ சண்முகம் குகதாசன் !

நெல் உற்பத்திக் குறைவுக்கு தொல்லியல் திணக்களமும் காரணம் – பா உ சண்முகம் குகதாசன் !

 

தொல்லியல் திணைக்களம் உட்பட அரச திணைக்களங்களினால் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளமையும் நாட்டின் நெல் உற்பத்திக் குறைவுக்கு காரணமாக அமைகிறது என திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.

நாட்டிலே அரிசி விலை உயர்வு குறித்து பேசப்பட்டது. இவ் அரிசி விலை உயர்வுக்கு வெள்ளம்இ வரட்சி போன்ற இயற்கை பேரிடர்கள் மட்டுமின்றி அரசினது அங்கங்களான பல்வேறு திணைக்களங்களும் காரணமாக உள்ளன. இதில் முதன்மை வகிப்பது தொல்பொருள் துறையாகும். தொல்பொருள் துறையானது தமிழ் மக்கள் சில நூற்றாண்டு காலமாக விவசாயம் செய்து வருகின்ற, விவசாய நிலங்களை தமது தொல்பொருள் இடங்களாக அறிவித்து கையகப்படுத்தி வருகின்றது.

தொடர்ந்தும் அத்துமீறும் இந்திய ரோலர்கள்: 7 இலட்சம் பெறுமதியான வலைகள் நாசம் – 10 இந்திய மீனவர்கள் கைது !

தொடர்ந்தும் அத்துமீறும் இந்திய ரோலர்கள்: 7 இலட்சம் பெறுமதியான வலைகள் நாசம் – 10 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 10 பேர் ஜனவரி 8, இரவு கைது செய்யப்பட்டுள்ளதுடன்இ மீன்பிடி படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டவர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் நேற்றிரவு யாழ்ப்பாணம் – காரைநகர், கோவளம் கலங்கரை விளக்கத்தில் நடத்திய விசேட நடவடிக்கையின்போது இவர்களை கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய மீன்படியால் யாழ்ப்பாணம் – சுழிபுரம், காட்டுப்புலம் பகுதி மீனவர் ஒருவரின் 7 இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் அறுக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் இரவு இந்த மீனவர் திருவடி நிலை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைப் படகுகள் அவரது வலைகளை அறுத்துள்ளன. அவரிடமிருந்த 32 வலைகளில் 26 வலைகள் அறுக்கப்பட்ட நிலையில் 6 வலைகளே மீதமாகின. எஞ்சிய வலைகளும் சேதமடைந்த நிலையிலேயே காணப்படுகின்றன.

பாதிக்கப்பட்ட மீனவர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்இ ஏழு இலட்சம் ரூபா வங்கியில் கடன் பெற்று முதலிட்டே கடலில் தொழில் செய்தேன். வலைகளை இந்திய இழுவைப் படகு அறுத்துச் சென்றதால் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வேன்? வங்கிக் கடனை செலுத்த என்ன செய்வேன் என்று தெரியாமல் தவிக்கிறேன்.

புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி இந்திய மீனவர்கள் பிரச்சினையையும் தீர்த்து வைக்கவேண்டும். புதிதாக வந்த அமைச்சர் இதற்கு ஒரு தீர்க்கமான முடிவெடுத்து இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்த வேண்டும். அரசாங்கம் எனக்கு இழப்பீட்டை வழங்கிஇ நான் மீண்டும் தொழில் செய்ய வழிவகுக்க வேண்டும் என்றார்.

இஸ்லாமிய மத அவமதிப்பு : சர்ச்சைக்குரிய ஞானசார தேரருக்கு 9 மாத சிறை !

இஸ்லாமிய மத அவமதிப்பு : சர்ச்சைக்குரிய ஞானசார தே ரருக்கு 9 மாத சிறை !

இஸ்லாமிய மதத்தை அவதூறுசெய்த குற்றத்திற்காக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 9 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன 9 மாத சிறைத்தண்டனையும் 1இ500 ரூபாய் அபராதமும் விதித்துள்ளார்.

குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைக்கு நீதிமன்றில் ஆஜராகத் தவறியமையால் முன்னர் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை அடுத்தே அவருக்கு மேற்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஞானசார தேரரால் ஜூலை 16இ 2016 அன்று கிருலப்பனையில் நடாத்தப்பட்ட ஊடக சந்திப்பில். “இஸ்லாம் ஒரு புற்று நோய்… அதை ஒழிக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார். இதையடுத்து இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.