ரோஹிங்கியா அகதிகள் நாடுகடத்தப்படுவதை எதிர்த்து முல்லையில் போராட்டம் !
முல்லைத்தீவு கடலில் தஞ்சம் அடைந்த ரோஹிங்கியா அகதிகளை நாடுகடத்த வேண்டாம் என்பதை வலியுறுத்தியும் இலங்கை சர்வதேச மனித உரிமை சட்டங்களை பாதுகாக்க கோரியும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர், முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு விமானப்படைத்தளத்தில் இரண்டு வாரங்களுக்கு மேலாக அந்த மாவட்டத்தின் சிவில் நிர்வாக கண்காணிப்பு இன்றி தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இராணுவ மயமாக்கல் சூழலுக்குள் அகதிகளை தங்கவைப்பது சர்வதேச மனிதாபிமான நியமங்களுக்கும் அடிப்படை மனிதாபிமான விழுமியங்களுக்கும் மாறானதாகும்.
எனவே இந்த அகதிகளை மீரியானவில் உள்ள அகதிகள் மையத்திற்கு அல்லது வேறொரு பொருத்தமான இடத்திற்கு மாற்றுவதுடன் அப்பிரதேச சிவில் நிர்வாக கண்காணிப்புக்குள் அவர்களை கொண்டுவரவேண்டும். இலங்கை என்பது ஒரு அபிவிருத்தி அடைந்து வரும் நாடு எனும் வகையில் இலங்கை சர்வதேச அகதிகளின் புகலிட மையமாக மாறுவதை நாம் விரும்பவில்லை. தற்போதுள்ள அகதிகளை சர்வதேச அகதிகள் சட்டத்திற்கு அமைய நடத்தவேண்டும் என்பதையே அரசாங்கத்திடம் வேண்டுகின்றோம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.