உள்ளூராட்சி மன்றங்களின் வருமானங்கள் அப்பகுதி மக்களின் வளர்ச்சிக்காக பயன்படுவதை உறுதி செய்யுமாறு ஆளுநர் வேண்டுகோள் !
உள்ளூராட்சி மன்றங்கள் பெற்றுக்கொள்ளும் வருமானங்களை தமது பிரதேச மக்களின் வாழ்வாதார உள்ளிட்ட ஏனைய மேம்பாடுகளுக்கு செலவு செய்யவேண்டும். அதைவிடுத்து அதனை நிரந்தர வைப்பிலிட்டு சேர்த்து வைத்துக்கொண்டிருக்கக்கூடாது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பருத்தித்துறை மரக்கறி பொதுச் சந்தை திறப்பு விழாவில் தெரிவித்தார்.
பருத்தித்துறை நகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பருத்தித்துறை மரக்கறி பொதுச் சந்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன், உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டத்தின் கீழ் 45 மில்லியன் ரூபா செலவில் இந்தச் சந்தை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் தனது உரையில், பௌதீக வளங்களின் முன்னேற்றம் என்பது அபிவிருத்திக்கு இன்றியமையாதது. அதேபோன்று தனித்து பௌதீக வளங்களின் முன்னேற்றம் மாத்திரமும் அபிவிருத்தியாகிவிடாது. எங்களின் சேவையை மேம்படுத்தும்போதுதான் அபிவிருத்தி முழுயடையும். எனவே மக்களுக்கு தரமான, அன்பான, விரைவான சேவையை வழங்க முன்வரவேண்டும் என குறிப்பிட்டார்.
அங்கு மேலும் பேசிய ஆளுநர், கௌரவ ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவில் முன்னெடுக்கப்படும் ‘கிளீன் சிறிலங்கா’ வேலைத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு முக்கிய பங்கிருக்கின்றது. அதைச் சிறப்பாக செயற்படுத்தவேண்டும். மக்கள் நம்பிக்கை வைக்கும் அரச சேவையை உருவாக்கவேண்டும். எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.