செய்திகள்

செய்திகள்

செய்திகள்

இன்று பகுதி சந்திர கிரகணம்

05-lunar.jpgஇந்த ஆண்டின் மூன்றாவது கிரகணமாக இன்று பகுதி சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை இரண்டு கிரகணங்கள் ஏற்பட்டுள்ளன. முதலில் சந்திர கிரகணம் ஏற்பட்டது. இதையடுத்து சமீபத்தில் முழு சூரிய கிரகணம் ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று பகுதி சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. இருப்பினும் இன்றைய சந்திர கிரகணத்தில் பெரிய அளவில் விசேஷம் எதுவும் இருக்காது என வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய கிரகணத்தின்போது,  பூமியின் நிழலின் ஒரு பாதி, நிலவின் மீது விழும். கடந்த ஜூலை 7ம் தேதி நடந்த கிரகணத்தைப் போன்றதுதான் இது. இந்த கிரகணத்தின்போது நிலவின் தோற்றத்தி்ல் எந்த மாற்றமும் இருக்காது.

சென்னையில் இன்றைய சந்திர கிரகணம் அதிகாலையில் ஏற்படும். இது வெறும் கண்களுக்குத் தெரியாது. இன்று அதிகாலை 4.34 மணிக்குத் தொடங்கி 7.44 மணிக்கு இந்த சந்திர கிரகணம் முடிவடையும். அடுத்த சந்திர கிரகணம் டிசம்பர் 31ம் தேதி நடைபெறும். அதுவும் பாதி சந்திர கிரகணமாகவே இருக்கும்.

யாழ்ப்பாணத்தில் இருந்து மடுவுக்கு விசேட பஸ் சேவை

bussss.jpgமடுமாதா ஆலய திருவிழாவில் யாழ். மாவட்டத்தில் இருந்தும் பக்தர்கள் சென்றுவருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
யாழ்.மறை மாவட்ட ஆயர் அதி.வண, தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இது தொடர்பாக கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து, குடாநாட்டில் இருந்து எதிர்வரும் 11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் விசேட பஸ்சேவை நடைபெறவுள்ளன.

இவர்கள் மடுத்திருவிழா முடிவுற்றதும் அதே பஸ்களில் யாழ்ப்பாணத்துக்கு திரும்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது

இறக்குமதி செய்யப்பட்ட அதிக போஷாக்குடைய உணவுப் பொருட்களை மீளப் பெற யுனிசெஃப் முடிவு

அனுமதியின்றி அதிக போஷாக்குடைய உணவு வகைகளை இந்தியாவுக்குள் இறக்குமதி செய்ததாக இந்திய அரசு ஆட்சேபம் தெரிவித்ததை அடுத்து, ஐ. நா. மன்றத்தின் குழந்தைகள் மேம்பாட்டு நிதியமான யுனிசெஃப் அமைப்பு, அந்தப் பொருட்களை திரும்பப் பெற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளது.

அதிகபோஷாக்குடைய சத்துணவுப் பொருட்கள், உலகம் முழுவதும் உள்ள சத்துக்குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு யுனிசெஃப் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தால் அனுமதிக்கப்பட்ட அந்தப் பொருட்கள், அப்படிப்பட்ட பலவீனமான குழந்தைகளின் சிகிச்சைக்கு மிகவும் அவசியம்.

போஷாக்கு குறைவாக உள்ள பலவீனமான குழந்தைகள், உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம். அவர்களில் 50 சதத்துக்கும் மேற்பட்டோர், பிகார் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டும் உள்ளனர்.

இறக்குமதி செய்யப்பட்ட போஷாக்குடைய குறிப்பிட்ட சத்துணவுப் பொருள் மிகவும் அதிக விலை உடையது என்று கூறும் இந்திய அதிகாரிகள், அதன் வீரியத்தன்மை குறித்தும் சந்தேகம் எழுப்பியுள்ளனர். மாறாக, உள்ளூரிலேயே கிடைக்கும் போஷாக்குடைய சத்துமிக்க பால் வகைகளைப் பயன்படுத்துமாறு யுனிசெஃப் நிறுவனத்துக்கு இந்திய அதிகாரிகள் ஆலோசனை கூறியுள்ளனர்.

ஆனால், அந்த இரு பொருட்களுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இருப்பதாக யுனிசெஃப் கூறுகிறது.

த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்ணத்தை தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி

kanagaratnam.jpgதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு யுத்த காலத்தில் ஒத்துழைப்பு வழங்கிய குற்றத்திற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்ணம் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கொழும்பு பிரதான நீதவான் நிஷாந்த ஹப்புவாராச்சியிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து தடுப்புக் காவல் நீடிப்பு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

விசாரணைகள் முடிவடைந்த பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர், விடுதலைப்புலிகளுக்கு உதவி மற்றும் ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் சந்தேக நபரை நீதவான் முன்னிலையில் மீண்டும் ஆஜர்ப்படுத்துவதற்கான திகதியை வழங்குமாறும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மோசடி இடம்பெறும் வாக்குச் சாவடிகளின் வாக்குகள் கணக்கெடுப்பிலிருந்து நீக்கப்படும் – மீள்தேர்தலின் பின்பே இறுதி முடிவு அறிவிக்கப்படும்

election000.jpgஏதாவ தொரு வாக்குச் சாவடியில் மோசடிகள், குளறுபடிகள் இடம்பெற்றது நிரூபிக்கப்படுமாயின் அவ்வாக்குச் சாவடி வாக்குகள் கணக்கெடுக்கப்படுவதிலிருந்து நீக்கப்படுவதுடன் தேர்தலின் இறுதி முடிவு அறிவிக்கப்படுவதும் நிறுத்தப்படும் என்று தேர்தல் செயலகம் நேற்றுத் தெரிவித்தது.இவ்வாறு இரத்து செய்யப்படும் வாக்குச் சாவடிக்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டு அதன் பின்னரே இறுதி முடிவு உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என்றும் தேர்தல் செயலகம் குறிப்பிட்டிருக்கிறது.

இதேநேரம் வாக்குச் சாவடிகளினுள் இருந்தபடி தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபடவென பெப்ரல் இய க்கத்திற்கும், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான மத்திய நிலையத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் தேர்தல் செயலக உயரதிகாரியொருவர் கூறினார்.

அவ்வதிகாரி மேலும் கூறுகையில் ஊவா மாகாண சபைக்கும், யாழ்ப்பாண மாநகர சபைக்கும் வவுனியா நகர சபைக்குமான தேர்தல்களுக்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியடைந்துள்ளன. தேர்தல் பிரசார பணிகள் யாவும் நேற்று நள்ளிரவுடன் நிறைவு பெற்றுள்ளன. திட்டமிட்டபடி நாளை மறுதினம் 8 ஆம் திகதி வாக்களிப்பு இடம்பெறும். வன்முறைகளின்றி அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப் படுத்தப்பட்டுள்ளன.

தேர்தல் சட்ட ஏற்பாடுகளை மீறுவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இத்தேர்தலில் பதுளை மாவட்டத்தில் 5 இலட்சத்து 74 ஆயிரத்து 814 பேரும், மொனராகலை மாவட்டத்தில் 3 இலட்சத்து 642 பேரும், யாழ். மாநகரசபைக்கென ஒரு இலட்சத்து 417 பேரும், வவுனியா நகர சபைக்கென 24 ஆயிரத்து 621 பேரும் வாக்களிக்கவுள்ளனர்.

இவர்கள் வாக்களிக்கவென பதுளை மாவட்டத்தில் 507 வாக்கு சாவடிகளும், மொனராகலை மாவட்டத்தில் 307 வாக்குச் சாவடிகளும், யாழ்ப்பாணத்தில் 70 வாக்குச் சாவடிகளும், வவுனியாவில் 18 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட விருக்கின்றன.

இதேவேளை இடம்பெயர்ந்துள்ளவர்கள் வாக்களிக்கவென புத்தளத்தில் 6 வாக்குச் சாவடிளும், அனுராதபுரத்தில் 4 வாக்குச் சாவடிகளும், கொழும்பில் இரு வாக்குச் சாவடிகளும், கம்பஹாவில் இரு வாக்குச் சாவடிகளும் களுத்துறையில் ஒரு வாக்குச்சாவடியும் என்றபடி விசேட வாக்குச் சாவடிகளும் அமைக்கப்படவிருக்கின்றன என்றார்.

2011 இல் நாடளாவிய குடித்தொகை மதிப்பீடு 150 கோடி செலவாகுமென கணிப்பீடு

000sri-lanka.jpg30 ஆண்டுகளின் பின்னர் நாடளாவிய குடித்தொகை மதிப்பீட்டை 25 நிர்வாக மாவட்டங்களிலும் மேற்கொள்ள ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. “அடுத்த குடித்தொகை மதிப்பீடு 2011 இல் இடம்பெறும். அதற்காக இப்போது நாம் ஆயத்தமாகி விடுகிறோம்.இதற்கு எமக்கு நிதி தேவை’ என்று இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுரஞ்ஜன வித்யாரட்ண இணையத்தளமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

கடைசியாக 18 மாவட்டங்களில் 2001 இல் சனத்தொகை மதிப்பீட்டை மேற்கொண்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடைசியாக மேற்கொள்ளப்பட்ட குடித்தொகை மதிப்பீட்டுக்கு 80 கோடி ரூபா செலவானதாகவும் 2011 இல் மேற்கொள்ளப்படவுள்ள சனத்தொகை மதிப்பீட்டுக்கு 150 கோடி ரூபா தேவையென மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் தொகை மதிப்பீட்டு புள்ளி விபரவியல் திணைக்களம் கூறுகிறது.

வட,கிழக்கு மாகாணங்களின் பகுதிகள் அச்சமயம் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. அதனால்,வட,கிழக்கு மாவட்டங்களில் அச்சமயம் முழுமையான குடிசன மதிப்பீட்டை மேற்கொள்ளவில்லை.இப்போது யுத்தம் முடிவடைந்து அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் முழுநாடும் கொண்டுவரப்பட்ட பின்னர் 2011 இல் குடிசன மதிப்பீட்டுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.2008 இல் இலங்கையின் சனத்தொகை 20.2 மில்லியன் (2 கோடி 20 இலட்சம்) என்று மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது.

ரணில் தலைமையிலான ஐ.தே.க.வினால் மட்டுமே தமிழர் பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்க முடியும்

ranil.jpgதமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வாக அமையும் அதிகாரப் பரவலாக்களை ரணில் தலைமையிலான ஐ.தே.க.வினால் மட்டுமே முன்வைக்க முடியுமெனத் தெரிவித்த அக்கட்சியின் பொருளாளர் டி.எம்.சுவாமிநாதன் தமிழ் மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும் வடக்கு உள்ளூராட்சி தேர்தலில் அரசின் சலுகைகளுக்காக வாக்குகளை வீணடிக்காது நீண்ட கால நன்மைக்காக ஐ.தே.க. வுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமெனவும் கோரினார்.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்து அரசு பலவற்றைக் கூறுகின்றது. தீர்வு தொடர்பில் புதிய அரசியலமைப்பை அரசு முன்னெடுத்தாலும் அது எழுத்தில் மட்டுமிருந்தால் எந்தப் பிரயோசனமுமில்லை. அத்துடன் அதனை தமிழ் மக்கள் ஏற்கப் போவது மில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாதாள உலக கோஷ்டி முக்கிய புள்ளிகள் இருவர் சுட்டுக் கொலை – மாதிவெல, இரத்மலானை பகுதியில் சம்பவம்

பாதாள உலக கோஷ்டியைச் சேர்ந்த முக்கிய புள்ளிகள் இருவர் மாதிவெல மற்றும் இரத்மலானை பிரதேசத்தில் நேற்றுக் காலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆர்மி ரொஷான் என்று அழைக்கப்படும் 36 வயதுடைய கீர்த்தி குமார, பப்பா என்று அழைக்கப்படும் 32 வயதுடைய எம். ரிழ்வான் ஆகிய இருவருமே கொல்லப்பட்டவர்கள் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட சமயமே இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

64-7836 என்ற இலக்க டொயோடா ரக காரில் ஆர்மி ரொஷானை மிரிஹான பொலிஸின் விசேட பிரிவு நிறுத்தி சோதனையிட்டுள்ளது. அதன் போது அவரது காரில் பிஸ்டல் ரக துப்பாக்கிகளும், அதற்கு பயன்படுத்தப்படும் ரவைகளையும் பொலிஸார் மீட்டெடுத்ததையடுத்து அவரை கைது செய்த பொலிஸார், இவர் மறைத்து வைத்திருந்த மற்றைய ஆயுதங்களை கைப்பற்ற அழைத்து சென்றுள்ளனர்.

இவருடன் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள்களை இலக்குவைத்து ரொஷான் கைக்குண்டு தாக்குதல் நடத்தியதையடுத்து பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதில் ரொஷான் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் அதிர்ச்சியடைந்த இரண்டு பொலிஸாரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆர்மி ரொஷான் பல்வேறு கொலை கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்றும் பொலிஸாரால் முக்கியமாக தேடப்பட்டு வந்தவர் என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இரத்மலானை பிரதேசத்தில் தலைமறைவாக இருந்த ஒரு பாதாள உலக குழுவை பிடிப்பதற்காக பொலிஸ் குழுவொன்று சென்றுள்ளது.

மாளிகாவத்தை பிரதேசத்தில் பாதாள உலக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த குழுவொன்றின் தலைவரான ரிழ்வான் என்பவரின் மறைவிடத்தை அண்மித்த பொலிஸார் அவரை பிடிக்க முற்பட்ட போது பொலிஸாரை ஏமாற்றியுள்ளார். இதனையடுத்து பொலிஸார் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார் என்று கல்கிஸ்ஸை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி பிரதம இன்ஸ்பெக்டர் மகேஷ் பெரேரா தெரிவித்தார்.

மூதூர் 17 பணியாளர் படுகொலை; சர்வதேச விசாரணைக்கு மீண்டும் வலியுறுத்தல்

body1.jpgபிரெஞ்சு தொண்டர் நிறுவனமான பட்டினிக்கு எதிரான செயற்பாட்டு அமைப்பின் 17 பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சர்வதேச ஆணைக்குழுவொன்று தேவை என்று நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டு செயற்படும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. ஜூலை நடுப்பகுதிவரை இச்சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லையென்றும் எவரும் குற்றவாளியாகக் காணப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், இது கவலைகளை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

மூன்று வருடங்களாக நீதி வழங்கப்பட்டுள்ளது என்று சர்வதேச சமூகம் நம்புவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டது.”காட்சிப்படுத்துதல் முடிந்து விட்டது’ என்றும் தீவிரமான முறையில் சர்வதேச விசாரணையை மேற்கொள்ளுமாறு ஐ.நா.வும் கரிசனையுடைய அரசாங்கங்களும் கூறுவதற்கு இதுவே நேரம் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சட்டக் கொள்கை விடயங்களுக்கான பணிப்பாளர் ஜேம்ஸ் ரோஸ் கூறியுள்ளார்.

இந்தப் பயங்கரமான குற்றச்செயல் தொடர்பாக நீதி வழங்குவதற்கு தன்னால் முடிந்த சகலவற்றையும் செய்வதற்குப் பதிலாகப் பாதிக்கப்பட்ட பட்டினிக்கெதிரான செயற்பாட்டு அமைப்பின் பணியாளர் குடும்பங்கள் மேலும் உள ரீதியாக பாதிப்படைவதற்கான நடவடிக்கைகளுக்கான முயற்சியில் அரசு ஈடுபட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டை ஏனையோர் மீது சுமத்த முயற்சிப்பதன் மூலம் இதனை மேற்கொள்வதாகவும் ரோஸ் கூறியுள்ளார்.

17 நிவாரணப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டு 3 ஆண்டுகளாகின்றன. பொறுப்பானவர்கள் தொடர்பாக விசாரணை செய்து உண்மையை வெளிப்படுத்துவதற்கு இலங்கை அரசு நெருங்கிவரவில்லை

பதிலாக உள்ளூர் உரிமைகள் குழுக்களுக்கும் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்படுவதாகவும் பிரெஞ்சு அரசுக்கு எதிராக அரசியல் ஆதாயம் தேடுவதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு தினமும் 30 கொலை அச்சுறுத்தல்கள்

000-obama.jpgபராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவருக்கான அச்சுறுத்தல்கள் 400 சத வீதமாக அதாவது ஒரு வருடத்தில் மூவாயிரமாக அதிகரித்திருக்கிறது. ஜனாதிபதியின் இரகசிய சேவையில் நூலை எழுதிய ரொனால்ட் கெஸ்லர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் இரகசிய சேவையின் சங்கேதக்குறியீடு “ரெனிகேட்’ என்பதாகும்.

அதில் ஒபாமாவுக்கான சில அச்சுறுத்தல்கள் குறித்து பிரசுரிக்கப்பட்டுள்ளன. கடந்த வருடம் ரென்னீசீயில் வெள்ளையின மேலாதிக்கவாதிகளின் சதி முயற்சி குற்றச்சாட்டும் இதில் உள்ளடங்கியுள்ளதாக டெய்லி ரெலிகிராப் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

துப்பாக்கி விற்பனைசெய்யும் நிலையத்தில் திருடி 88 கறுப்பின மக்களை சுட்டு, மேலும் 14 பேரை காயப்படுத்தி அமெரிக்க வரலாற்றில் முதலாவது கறுப்பின ஜனாதிபதியை படுகொலை செய்ய சதிமுயற்சி மேற் கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும் இந்த விடயத்தை இரகசிய சேவை மூடி மறைத்து விட்டது. ஏனெனில் இந்த விபரங்களை வெளியிடுவது இதே மாதிரியான குற்றச் செயல்களை மேலும் அதிகரிக்கச் செய்துவிடும் என்று இரகசிய சேவை அஞ்சியதே இதற்கு காரணமென இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அநேகமான அச்சுறுத்தல்கள் நம்பத்தகுந்தவையற்றவையாகும். ஆனாலும் ஒவ்வொன்றும் விசாரணை செய்யப்பட்டுள்ளன.

சோமாலியாவை தளமாக கொண்ட இஸ்லாமிய குழுவான அல் சாபாப் ஜனவரியில் ஒபாமாவின் பதவியேற்பு நிகழ்வை குழப்பக்கூடுமென புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு சவால்கிடைத்திருந்தது. இதனையடுத்து இரகசிய சேவையானது 94 பொலிஸ், இராணுவ, பாதுகாப்பு முகவரமைப்புகளை சேர்ந்த 40 ஆயிரம் பேரை பணியில் ஈடுபடுத்தியதாக இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோப்ப நாய்கள் அடங்கிய குழுக்கள் பதவியேற்கும் நிகழ்வு இடம்பெற்ற பகுதியில் நிலைகொண்டிருந்தன. அருகிலிருந்த கட்டிடங்கள் கடும் சோதனைக்குள்ளாக்கப்பட்டிருந்தன.  ஒபாமா ஜனாதிபதியாக பதவியேற்றபின் அவருடைய இரு மகள்மாருக்கும் இரகசிய சேவை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மலியாவுக்கு (11) ரேடியன்ஸ் என்ற சங்கேத குறியீடு வழங்கப்பட்டுள்ளது. மற்ற மகள் சஸ்னாவுக்கு (8 வயது) ரோஸ்பட் என்ற குறியீடு வழங்கப்பட்டிருக்கிறது.

ஒபாமாவின் மனைவி மிச்சேலுக்கு ரீநைசன்ஸ் என்ற குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் துணை ஜனாதிபதி ஜோபைடனின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், தாயாருக்கு இரகசியசேவையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.