செய்திகள்

செய்திகள்

செய்திகள்

கல்வித்துறையை மறுசீரமைக்க பாராளுமன்றத் தெரிவுக்குழு – மூன்று மாதத்தினுள் புதிய சட்டம் – கல்வி அமைச்சர் பந்துல

bandula.jpgகல்வித் துறையை முழுமையாக மறுசீரமைக்கும் வகையில் புதிய கல்விச் சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கெனப் பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை அமைப்பதற்காக கொள்கைத் திட்டங்கள் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். தேசிய கல்விக் கொள்கை ஒன்றை மூன்று மாத காலத்திற்குள் தயாரித்து சட்டமாக்குவதற்கான நடவடிக்கைகளை இந்தப் பாராளுமன்ற தெரிவுக்குழு மேற்கொள்ளுமென அமைச்சர் கூறினார்.

புதிய கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றதன் பின்னர் நேற்று அமைச்சில் முதலாவது செய்தியாளர் மாநாட்டை அமைச்சர் நடத்தினார். இந்தச் செய்தியாளர் மாநாட்டில் பிரதி கல்வி அமைச்சர் ரி. பி. ஏக்கநாயக்க புதிய கல்விச் செயலாளர் சுனில் எஸ். சிறிசேன மற்றும் மேலதிகச் செயலாளர்கள், அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கல்வித் துறை தொடர்பான உத்தேச பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் சகல அரசியல் கட்சிகளையும் சார்ந்த பிரதிநிதிகளும் உள்வாங்கப்படுவார்கள். இந்தத் தெரிவுக் குழுவின் முன் சகல தரப்பினரும் தமது சாட்சியங்களை வழங்கி மறுசீரமைப்புக்கான யோசனைகளை முன்வைக்க முடியும் என்று தெரிவித்த அமைச்சர் குணவர்தன, சகல மட்டத்திலும் ஆலோசனைகள் பெறப்பட்டு மூன்று மாத காலத்தில் சட்ட மூலம் நிறைவேற்றப்படும் எனக் குறிப்பிட்டார். புதிய சட்ட மூலத்தின் ஊடாக கல்வித் துறையில் நிலவும் சகலவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படுமென்று கூறிய அமைச்சர் 2011 ஆண்டு முழுமையாக மறுசீரமைக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

சம்பள உயர்வு, சம்பள முரண்பாடு, இடமாற்றம், பதவி உயர்வு, பெற்றார் மாணவர், ஆசிரியர்களுக்கிடையிலான சிக்கல்கள், பாடசாலைகளைத் தரப்படுத்தல், புலமைப் பரிசில் பரீட்சை, முதலாம் ஆண்டுக்கு மாணவர்களைச் சேர்த்தல், தனியார் சர்வசேத மற்றும் அறநெறிப் பாடசாலை பிரச்சினைகள் எனப் பல்வேறு விதமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் அதேநேரம், அரசாங்கமும், அமைச்சரும் மாறும்போது கல்விக் கொள்கையை மாற்றாதிருக்கும் வகையில் தேசிய கொள்கை வகுக்கப்படுவதாகக் கூறினார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாழிகாட்டலின்படி நாட்டின் மனித வளத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கல்வி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழு: மக்கள் அபிலாஷைகளை நிறைவேற்ற கூடியதாக அமைய வேண்டும் – சம்பந்தன்

Sambanthan_R_TNAஅரசாங்கம் நியமிக்க உத்தேசித்துள்ள நல்லிணக்க ஆணைக்குழு மக்கள் அபிலாஷைகளை முழுமையாக நிறைவேற்றக்கூடியதொன்றாக அமைய வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுத் தலைவர் ஆர். சம்பந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த கால நடவடிக்கைகளில் உண் மைத் தன்மை குறித்த மூலகாரணங்களை இனங்கண்டு அவற்றுக்குத் தீர்வு காணப்படாவிட்டால் அர்த்த புஷ்டியான நல்லிணக்கம் ஏற்பட முடியாதெனவும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று, முன்னாள் அமைச்சர் அமரர் ரிச்சட் பத்திரனவின் அனுதாபப் பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தமதுரையில் மேலும் தெரிவிக்கையில், உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழு அமைப்பது தொடர்பில் அண்மைக்காலமாக பல்வேறு கருத்துக்கள் வெளிவருகின்றன.

கடந்த கால நடவடிக்கைகளைக் கண்டறியவும் அவ்வாறான தவறுகள் இனியும் இடம்பெறாமல் தடுப்பது தொடர்பில் ஆராயவுமே இந்த நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்படவுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது. தமக்கான கெளரவம் மீள நிலைநாட்டப்பட வேண்டும். ஆட்சியதிகாரம் நல்லிணக்கம் போன்றவற்றையே மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மத்தியில் இருக்கின்ற அதிகாரங்கள் பிராந்திய ரீதியில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் சட்டம், ஒழுங்கு, காணி, கல்வி உள்ளிட்ட அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்ற முற்போக்குச் சிந்தனை கொண்டவராக ரிச்சட் பத்திரன திகழ்ந்தார் எனவும் சம்பந்தன் எம்.பி. மேலும் தெரிவித்தார்.

இலங்கை பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஜப்பான் வர்த்தக சமூகம் ஒத்துழைப்பு வழங்கும்

economics.jpgபொருளா தாரத்தை பலப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளு க்கு ஜப்பான் அரசாங்கமும் ஜப்பான் வர்த்தக சமூகமும் முழு ஒத்துழைப்பு வழங்கும் என நிப்பொன் மன்ற தலைவர் யொஹெய் சசகாவ தெரிவித்தார்.

யொஹெய் சசகாவ நேற்று (7) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்தார். இதன் போது கருத்துத் தெரிவித்த அவர், இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஜப்பான் நாட்டு பிரதான வியாபாரிகளை ஊக்குவிக்க உள்ளதாகவும் கூறினார்.

இதனூடாக இலங்கையில் பெருமளவு தொழில் வாய்ப்புகள் உருவாகும் என்று கூறிய அவர், இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உச்ச ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்தார்.

1981ஆம் ஆண்டு முதல் நிபொன் மன்றத்தில் அங்கம் வகிக்கும் இவர் உலக சுகாதார ஸ்தாபன ஆபிரிக்க, லத் தின் அமெரிக்க மற்றும் ஆசிய அபிவிருத்தி ஒன்றிய நாடுகளுக்கான விசேட ஆணையாளராகவும் பணியாற்றுகிறார். ஜப்பானுக்கு விஜயம் செய்யுமாறும் அவர் ஜனாதிபதிக்கு அழைப்புவிடுத்தார்.

மேற்குலகு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை; பிரதமர் ஜயரட்ண விசனம்

deemu.jpgவிடு தலைப்புலிகள் அமைப்பு மீள் எழுச்சி பெறுவதற்கு தமது மண்ணைப் பயன்படுத்தும் தமிழர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கையை மேற்கு நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் டி.எம். ஜயரட்ண வலியுறுத்தியுள்ளார்.வெளிநாடுகளிலுள்ள 15 இலட்சம் தமிழர்களில் சிலர் இலங்கையில் தமது சமூகத்துக்கு தனியான தாயகத்தை அமைக்கும் நோக்கத்துடனான பிரிவினைவாத இயக்கத்தை அமைப்பதற்கு திட்டமிடுவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

எமக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்காக தமது மண்ணை அவர்கள் பயன்படுத்துவதை நிறுத்துவது தொடர்பாக மேற்குலகு போதியளவு நடவடிக்கைகளை எடுக்கவில்லையெனவும் பிரதமர் கூறியுள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற வெளிநாட்டு நிருபர்கள் சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

மே 17 தொடக்கம் சுவிட்ஸ்லாந்தில் மூன்று நாள் நிதிசேகரிக்கும் நடவடிக்கையை புலிகளின் அனுதாபிகள் ஏற்பாடு செய்திருப்பதாகவும் இதில் வெளிநாடுகளிலுள்ள தமிழர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மேலதிக விபரம் எதனையும் தெரிவித்திருக்கவில்லை என்று ஏ.எவ்.பி. செய்திச் சேவை குறிப்பிட்டிருக்கிறது.

மற்றொரு நாட்டிற்கு எதிராக எமது மண்ணைப் பயன்படுத்துவதை நாம் அனுமதிப்பதில்லை. இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவது தொடர்பாக போதியளவு நடவடிக்கைகளை மேற்குலகு எடுக்கவில்லை என்று நான் நம்புகிறேன். அவர்கள் இது தொடர்பாக அதிகளவு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜயரட்ண கூறியுள்ளார்.

அதேசமயம் 1983 இலிருந்து அமுலிலிருந்து வரும் அவசரகால ஒழுங்குவிதிகள் எதிர்வரும் மாதங்களில் படிப்படியாக நீக்கப்படும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.எவ்வாறாயினும் வெளிநாடுகளிலுள்ள தமிழர்கள் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்க திட்டமிடுவதாகவும் இலங்கைத் தீவுக்குள் உள்ள செயலற்று இருக்கும் போராளிகளை இயங்கவைக்க முயற்சிக்கக்கூடும் என்றும் பிரதமர் தெரிவித்ததாக ஏ.எவ்.பி. செய்திச் சேவை தெரிவித்தது.

சுமார் 30 வருடத்தின் பின்னர் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம்

lawyer.jpgசுமார் 30 வருடத்தின் பின்னர் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் எதிர்வரும் 10ம் திகதி திங்கட்கிழமை முதல் செயல்படவுள்ளது. முன்னர் நீதிமன்றம் இயங்கிய கட்டடம் சேதமடைந்துள்ளதினால் அதற்கு சமீபத்தில் உள்ள தனியார் கட்டடம் ஒன்றிலேயே நீதிமன்றம் இயங்கவுள்ளது.

குடியியல் மேன்முறையீட்டு மேல்நீதிமன்ற நீதிபதி ஜே. விஸ்வநாதன் நீதிமன்ற கட்டிடத்தினை வைபவ ரீதியாக காலை 9 மணிக்கு திறந்து வைப்பார். கிளிநொச்சி நீதிமன்றுக்கு சாவகச்சேரி, யாழ்ப்பாணம் ஆகிய நீதிமன்றங்களில் கடமையாற்றிய அலுவலர்கள் கடந்த முதலாம் திகதி முதல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆங்கில மொழியில் உ/தரம் கற்பிக்க 554 ஆசிரியர்கள்- திங்கள் பத்திரிகையில் விண்ணப்பம்

teachers.jpgஆங்கில மொழியில் க.பொ.த. உயர் தரம் கற்பிப்பதற்கென 554 ஆசிரியர்களை சேர்த்துக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்து ள்ளது. இது தொடர்பான விண்ணப்பம் நாளை மறுதினம் திங்கட்கிழமை (10) சகல தேசிய பத்திரிகைகளிலும் வெளியாகுமென கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கல்வி அமைச்சில் நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் குணவர்தன இதுபற்றி அறிவித்தார். “வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் 85 பாடசாலைகளில் உயர்தரம் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுகிறது. ஆனால் ஆங்கில ஆசிரியர்கள் போதியளவு இல்லை என்று கூறுகிறார்கள். இந்தக் குறையை நிவர்த்திக்கும் வகையில் 554 ஆங்கில ஆசிரியர்களை சேர்த்துக்கொள்ள முகாமைத்துவ திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. தற்போது விஞ்ஞான பாடத்திற்கு மட்டுமே ஆங்கில ஆசிரியர்கள் உள்ளனர். வர்த்தகம், கலை பிரிவுகளுக்குப் போதிய ஆசிரியர்கள் இல்லை. ஒரு பாடத்தினைக் கற்க குறைந்தது 20 மாணவர்களாவது இருந்தால் அந்தப் பாடசாலைக்கு ஆங்கில ஆசிரியர் பெற்றுக்கொடுக்கப்படுவார் என்றும் அமைச்சர் கூறினார்.

ஆசியக்கிண்ண கிரிக்கெட் போட்டி ஜூன் 15 இல் ஆரம்பம்

cricket-tournament.jpgஇலங் கையில் நடைபெறும் ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டது.  இதில்  இந்தியா பாகிஸ்தான் அணிகள் ஜூன் 19 இல் நடக்கும் லீக் போட்டியில் மோதுகின்றன.

இலங்கையில் 10 ஆவது ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர் ஜூன் 15 ஆம் திகதி தொடங்குகிறது. இதில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நான்கு ஆசிய அணிகள் பங்கேற்கின்றன. இந்தத் தொடர் 24 ஆம் திகதி வரை தம்புள்ளையில் நடைபெறும்.

இத்தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் போட்டியில் மோதும். லீக் சுற்றின் முடிவில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் ஜூன் 24 ஆம் திகதி நடக்கும் இறுதியாட்டத்தில் விளையாடும்.

அடுத்த மாதம் 15 ஆம் திகதி நடக்கவுள்ள இத்தொடரின் முதல் போட்டியில் சாம்பியன் இலங்கை அணி பாகிஸ்தான் அணியை சந்திக்கிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை (ஜூன்16)  எதிர்கொள்கிறது. அதன்பின் பாகிஸ்தான் (ஜூன்19), இலங்கை (ஜூன்22) அணிகளுடன் மோதுகிறது.

இதுவரை நடந்துள்ள இத்தொடரில் இலங்கை 1986,1987,2004,2008 இந்தியா (1984, 1988, 1990, 1991, 1995) தலா நான்கு முறை சாம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளன. பாகிஸ்தான் அணிஒருமுறை (2000) மட்டும் கிண்ணம் வென்றுள்ளது.

கசாப் மேன்முறையீடு

kasab.jpgமும்பை தாக்குதல் வழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்த்து மேன்முறையீடு செய்வது குறித்து கசாப்புடன் பேசி முடிவு எடுக் கப்படும் என்று அவனது சட் டத்தரணி கே.பி பவார் கூறினார்.

மும்பைத் தாக்குதல் வழக்கில் கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்ததைத் தொடர்ந்து அவனது சட்டத்தரணி கே.பி பவார் நிருபர்களிடம் கூறியதாவது :-நான் தீர்ப்பை விமர்சிக்க மாட்டேன். ஒரு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு திருப்தி அளிக்காத பட்சத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் மேல் நீதிமன்றங்களில் மேன்முறையீடு செய்யலாம். அவ்வளவுதான்.

கசாப்பை சந்திக்க எனக்கு வாய்ப்பு தரப்படும். அப்போது மும்பை மேல் நீதிமன்றில் மேன்முறையீடு செய்வது குறித்து கசாப்பிடம் கேட்பேன். அதன்பின்னர் முடிவு எடுக்கப்படும்.

பிரதி ஊடக அமைச்சர் பதவியிலிருந்து மேவின் சில்வா இராஜினாமா!

mervyn2.jpgபுதிய பாராளுமன்றத்தின் ஊடகத்துறை பிரதியமைச்சராக பதவியேற்ற மேர்வின் சில்வா தான் அந்தப் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்யப்போவதாக சற்றுமுன் அறிவித்துள்ளார்.

இன்று மாலை தனது இராஜினாமாக் கடிதத்தைத் தயார் செய்து விரைவில்  ஜனாதிபதியிடம் கையளிக்கப்போவதாகவும் அவர் கூறினார்.

ஊடகம் மற்றும் தகவல்துறை அமைச்சில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். தனது இந்த முடிவுக்கு எந்த அமைச்சர்களும் காரணம் அல்லவெனக் கூறிய அவர் ஊடகவியலாளர்கள் முன்போலவே எப்போதும் தன்னுடன் தொடபு கொள்ளலாம் என்றும் கூறினார்.

பெருந்தெருக்கள் பிரதியமைச்சராக பாரிய அபிவிருத்திப் பணிகளை நாடு முழுவதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கில் செய்து முடிக்கவேண்டிய பெரும் பொறுப்பு தனக்கு உள்ளதாகவூம் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார். 

இலங்கை மீது நிபந்தனைகள் கிடையாது

eu-flag.jpgஜி.எஸ்.பி வர்த்தகச் சலுகைகளைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை மீது எந்தவிதமான நிபந்தனைகளையும் விதிக்கவில்லை என்று கொழும்பிலுள்ள ஐரோப்பிய யூனியன் அலுவலகம் இன்று அறிவித்துள்ளது. இலங்கையின் நீதித்துறைச் செயற்பாடுகளை தான் மதிப்பதாகவும் ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.