இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு முன்னராக தமிழ்க் கட்சிகள் மத்தியில் கருத்தொருமைப்பாடு ஏற்பட வேண்டும் என்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதியாகத் தெரிவித்திருக்கிறார்.”சில (தமிழ்) அரசியல் கட்சிகள் ஏற்கனவே சாதகமான முறையில் பதிலளித்துள்ளன. தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகளவு கட்சிகள் உள்ளன. அவற்றின் மத்தியில் கருத்தொருமைப்பாட்டை நாம் எதிர்பார்க்கின்றோம். விசேடமாக அபிவிருத்தி தொடர்பான விடயங்களில் கருத்தொற்றுமையை எதிர்பார்ப்பதாக நேற்று முன்தினம் மாலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.
அதேசமயம், தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதை தாம் எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் தூதுக்குழுவானது பிரிட்டிஷ் தொழிற்கட்சி எம்.பி. போல் மேர்பி தலைமையில் ஜனாதிபதியைச் சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வட மாகாணசபை நிர்வாகம் தொடர்பான கேள்வியின் போது உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்கே முதலாவதாக முன்னுரிமை அளிக்கப்படுமென பிரிட்டனின் பொதுநலவாய பாராளுமன்றசங்கத் தூதுக்குழுவிற்கு கூறப்பட்டதாக அவுட்லுக் இணையத்தளம் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. உள்ளூராட்சிசபைத் தேர்தல்களின் பின்னர் வட மாகாண சபைக்கு தேர்தல்கள் இடம்பெறும். கிழக்கில் பின்பற்றப்பட்ட நடைமுறை அங்கும் மேற்கொள்ளப்படும். பயங்கரவாதத்தைத் தோற்கடித்த பின்னர் கிழக்கில் அரசியல் ரீதியான நடவடிக்கைகள் முன்னேற்றமடைந்ததாகவும் அங்கு தேர்தல்கள் திருப்திகரமானதாக நடத்தப்பட்டதாகவும் ஜனாதிபதி தூதுக்குழுவிடம் கூறியுள்ளார்.
இதேவேளை, விடுதலைப்புலிகளைத் தோற்கடிப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டிருந்த முயற்சிகளை மேர்பி பாராட்டியுள்ளார். ஐக்கிய இராச்சியத்தின் சகல கட்சிகளும் உங்களின் நிலைப்பாட்டில் உள்ளன. இன்று இலங்கைக்கு உதவுவதற்குத் தயாராக அவை உள்ளன என்று மேர்பி கூறியுள்ளார்.இந்தத் தீவிலிருந்து பயங்கரவாதம் இல்லாமல் போய்விட்டதையிட்டு நாம் மகிழ்ச்சியடைந்துள்ளோம். இன்று புனர்நிர்மாணம், நல்லிணக்கம் அன்றாட நடவடிக்கையாக மாறியுள்ளதென்று மேர்பி கூறியுள்ளார்.
இலங்கைக்கு தான் முன்னர் மேற்கொண்டிருந்த விஜயத்தை அவர் நினைவுகூர்ந்தார். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் கிளிநொச்சி இருந்த சமயத்தில் அவர் அங்கு சென்றிருந்தார். இப்போது இங்குள்ள சூழ்நிலையானது பிரிட்டனின் நிலைமையை ஒத்ததாகவுள்ளது. சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக வட அயர்லாந்தில் யுத்தத்தில் பிரிட்டன் வெற்றிபெற்றிருந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடபகுதி மக்களில் அநேகமானோர் தற்போது தண்ணீர், மின்சாரம், பாடசாலைகள், சுகாதாரசேவைகள், கல்வி என்பனவற்றையே விரும்புவதாக தூதுக்குழுவிடம் ஜனாதிபதி விபரித்திருப்பதாக உத்தியோகபூர்வ அறிக்கை தெரிவித்தது. தமிழ் மக்கள் மத்தியில் அபிவிருத்தி தொடர்பான கோரிக்கையே உள்ளது. சமாதானமின்றி அபிவிருத்தியில்லை. அபிவிருத்தியின்றி சமாதானமில்லையென ஜனாதிபதி கூறியுள்ளார். நல்லிணக்கம் தொடர்பான முயற்சிகள் குறித்து தூதுக்குழுவிடம் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, நான்காவது ஈழப்போரின் இறுதிக்கட்டம் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு அப்பணியை மேற்கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக சாட்சியமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டபோதும் சர்வதேச மன்னிப்புச்சபை,மனித உரிமைகள் கண்காணிப்பகம்,சர்வதேச நெருக்கடிக்குழு போன்ற அமைப்புகள் அதனை நிராகரித்தமையை இட்டு ஜனாதிபதி தாம் கவலையடைந்திருப்பதாகக் கூறியுள்ளார். ஐ.நா. உட்பட சகலரையும் உள்ளடக்கியது இவ் ஆணைக்குழு எனவும் உள்நாட்டில் ஏற்படுகின்ற தீர்வே இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துமெனவும் வட அயர்லாந்திலிருந்தோ அல்லது வேறெங்கிலிருந்தோ அதனை கொண்டுவர முடியாதெனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
எமது சொந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டதாக தீர்வு அமைய வேண்டும். அதேசமயம், ஏனையோரின் அனுபவத்தை கற்றுக்கொள்ள நாம் தயாராகவிருக்கின்றோம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.மேலும், சிறுவர் போராளிகளினதும் இளைஞர்களினதும் புனர்வாழ்வில் துரிதமான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி அதிகாரப்பகிர்வு தொடர்பாகக் கூறுகையில், மக்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்வே அவசியமென்று கூறியுள்ளார்.
விடுதலைப்புலிகள் விரும்பியிருந்ததை கொடுக்க முடியாது என ராஜபக்ஷ அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் அதிகாரப்பகிர்வு தொடர்பான ஏதாவது நியாயபூர்வமான விடயங்களில் சகல கட்சிகளினதும் கருத்தொருமைப்பாடு அவசியமெனவும் அதனை பாராளுமன்றத்தின் மூலம் வழங்க முடியுமெனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். சகல கட்சிகளையும் இணக்கப்பாட்டுக்கு வருமாறு தான் ஊக்குவிக்க முடியுமெனவும் பாராளுமன்றமே இறுதியான தீர்மானத்தை மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி: thinakkural. 20.01.2010