செய்திகள்

செய்திகள்

செய்திகள்

இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி – மஹேல ஆட்ட நாயகன்

0308mahela.jpgபாகிஸ் தானுடனான 3வது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.

தம்புள்ளையில் இன்று நடைபெற்ற 3வது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை நாணய சுழற்சியில் வெற்றிபெற்று களத்தடுப்பு செய்ய முடிவு எடுத்தது

முதலில் துடுப்பெடுத்தாடிய  பாகிஸ்தான் அணி  50 ஓவர்களில் 8 விக்கட் இழப்புக்கு 288 ஓட்டங்களை பெற்றது. கம்ரன் அக்மல் 45 ஓட்டங்களையும்,  யூனுஸ் கான்  44 ஓட்டங்களையும்,  உமர் அக்மல் 66 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் குலசேகர  10  0  74  1, மிரண்டோ  10  0  46  1, பெர்னாண்டோ  10  1  62  1, மதேவ்ஸ்  10  0  41  2,  முரளிதரன்  10  0  64  2,

பின்னர் பதிலெடுத்தாடிய இலங்கை அணி 46.3 ஓவர்களில் 289 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது. அதிகபட்சமாக மஹேல 123 ஓட்டங்களையும்,  தரங்க 76 ஓட்டங்களையும், சங்கக்கார ஆட்டம் இழக்காமல் 37 ஓட்டங்களையும் கபுகெதர ஆட்டம் இழக்காமல் 08 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் மொதம்மாத் ஆம்  9.3  1  45  1,  அப்துல்  9  0  62  1,  சகிட் அபிரிடி  6  0  45  0 , அஜ்மல்  9  0  54  2,  மாலிக்  6  0  37  0  

மஹேலக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.

இடைத்தங்கல் முகாம்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள் – சிவநாதன் கிஷோர்

srilanka-refugees.jpgஅரசாங் கத்தின் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மக்கள் வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுவது சில காலமாகவே நடைபெற்று வருவதாகவும், இது ‘எல்லோருக்கும்’ தெரியும் என்றும் அவர் BBC தமிழோசையிடம் தெரிவித்தார். இவ்வாறு வெளியேறுவதற்கு மக்கள் பெரும் பணம் கொடுப்பதாகவும், ஒரு சிலர் விமான நிலையம் வரை அழைத்து செல்லப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக எந்த அரசியல் கட்சி மீதோ, எந்த ஒரு தனிநபர் மீதோ குற்றம் சுமத்தாத நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், தனக்கு இது தொடர்பில் உறுதியான நம்பிக்கைக்குரிய தகவல்கள் இருப்பதாகவும், முகாம்களில் இருந்து மக்கள ‘நோயாளிகள்’ என்ற போர்வையில் வெளியில் கொண்டு செல்லப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை அரசின் பாதுகாப்புத்துறை செயலர் கோத்தாபய ராஜபக்ஷ், இவ்வாறு மக்கள் தப்பியிருப்பது தொடர்பில் தங்களுக்கு ஆதாரம் இருப்பதாகவும், சிலரை கைது செய்திருப்பதாகவும் கூறினார். இது குறித்த மேலதிக செய்திகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

தமிழரின் ஒரே சக்தி த.தே.கூ. மட்டுமே என்பதை சர்வதேசம் அறியும் : செல்வம் அடைக்கலநாதன்

0308adaikalanathan.jpgதமிழ் மக்களின் ஒட்டுமொத்த அபிலாஷைகளையும் உரிமைகளையும் நேர்மையுடன் வென்றெடுக்கக் கூடிய, தமிழர்களின் சக்தியாய்,பலமாய் இருக்கக் கூடிய ஒரேயொரு கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே என்பதை அனைத்துலக சமூகமும் பிராந்திய வல்லரசான இந்தியாவும், புரிந்துகொண்டுள்ளன.

ஜனாதிபதியும் கூட இதனை நன்கு உணர்ந்துள்ள நிலையில், தமிழர்களின் ஒற்றுமையே பலம் என்பதை மீண்டும் உறுதியுடன் நிரூபிக்கும்,களமாக யாழ். மாநகரசபை, வவுனியா நகரசபை தேர்தல்கள் திகழ்கின்றன. இத்தேர்தல்களில் தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இலங்கை தமிழரசு கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் என கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றில் மேலும் தெரிவித்ததாவது: “வரலாறு காணாத பேரவலத்தை சந்தித்த வன்னி வாழ் மூன்று லட்சம் மக்களும், இடம்பெயர்ந்து வவுனியாவில் முள்ளுக்கம்பி நடுவில், பரிதாபகர வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

மரண பீதியுடன் வாழ்ந்து வரும் அவர்களைத் தமது சொந்த இடங்களில் குடியமர்த்தும் முயற்சியை உடனடியாக மேற்கொள்ளாமல், யாழ். மாநகர சபை தேர்தலையும், வவுனியா நகரசபை தேர்தலையும் அரசாங்கம் திட்டமிட்டுத் திணித்துள்ளது. திணிக்கப்பட்ட தேர்தலில் வலிந்து போட்டியிட வேண்டிய காலத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாமும் இத்தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்தோம்.

தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய கொள்கையிலிருந்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்தும் விலகிவிட்டார்கள் என்று தப்புக்கணக்கு போடும் சிங்கள தேசத்தின் முத்திரையை கிழித்தெறியும் அரிய வாய்ப்பாக இத்தேர்தலை நாம் கருதுகிறோம். கடந்த 61 வருடங்களாக தமிழினத்தின் உரிமைப்போர் அகிம்சை ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் முன்னெடுத்த போதெல்லாம் அதனைத் திட்டமிட்டு உலக வல்லரசுகளின் ஆதரவுடன் தமிழர்களின் உணர்வுகளை அடக்கிய சிங்கள தேசம், பேச்சுவார்த்தைகள் மூலம் நிரந்தர தீர்வுக்காகப் பல சந்தர்ப்பங்களில் தமிழ்த் தலைமைகள் முயன்ற போதெல்லாம் அதனை ஏற்றுக்கொள்ளவோ தமிழினத்துக்கு தீர்வு வழங்கவோ முன்வரவில்லை.

இன்னல்கள், இடர்கள், துன்பங்கள், சோகங்கள் என எமது வாழ்வு தொடரும் இவ்வேளையிலும் தமிழினம் தன்மானத்தை இழந்து சோரம் போகாமல் சுதந்திர தாகம் கிடைக்கும் இறுதி நேரம்வரை பற்றுறுதியுடன் அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

அதற்கான வல்லமையும் துணிவும் அரசியல் நேர்மையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மட்டுமே உள்ளது என்பதனை தமிழ் மக்கள் நிரூபித்துக் காட்ட வேண்டும்.

எமது கரங்களைப் பலப்படுத்த, உரிமையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், இலங்கை தமிழரசு கட்சியின் வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்கும் படி தமிழ் மக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தனது அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விமான நிலையத்தின் பார்வையாளர் கூடம் இன்று முதல் திறக்கப்படும்

27-air-arabia-a.jpgகட்டு நாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பார்வையாளர் கூடம் இன்று திங்கட்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படும் என்று விமான நிலையத்தின் நிர்வாகப் பிரிவு அறிவித்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களால் கடந்த சில வருடங்களாக மூடப்பட்டிருந்த குறித்த விமான நிலையதின் பார்வையாளர் கூடத்தை மீண்டும் திறப்பதற்கான அனுமதி பாதுகாப்பு தரப்பிடமிருந்து கிடைக்கப்பெற்றதை அடுத்தே மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் இலக்கு வைக்கப்பட்டதை அடுத்து விமான நிலையத்தின் பார்வையாளர் கூடம் மூடப்பட்டது. பார்வையாளர் கூடம் திறக்கப்பட்ட போதிலும் அக்கூடத்துக்கு செல்வதற்கான அனுமதியும் உரிய பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்படவுள்ளன

35 ஆவது தேசிய விளையாட்டு போட்டியின் கூடைப்பந்தாட்ட போட்டி மட்டக்களப்பில்

basketball.jpg35 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் கூடைப்பந்தாட்டம் மற்றும் ஜூடோப் போட்டி என்பன கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் ஆரம்பமானது. தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாகக் நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

ஒன்பது மாகாணங்களையும் சேர்ந்த அணிகள் மட்டக்களப்பை வந்தடைந்த நிலையில், ஜூடோ போட்டி மட்டக்களப்பு நகர மண்டபத்தில் கூடைப்பந்தாட்டப் போட்டி மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை மைதானத்திலும் சென் மைக்கல்ஸ் தேசிய பாடசாலை மைதானத்திலும் ஆரம்பமானது.

இந்நிகழ்வுகளை அமைச்சர் வி.முரளிதரன் ஆரம்பித்து வைத்ததுடன் 35 ஆவது தேசிய விளையாட்டு விழாவினை முன்னிட்டு மட்டக்களப்பு புனித சிசிலியா புதிய பெண்கள் பாடசாலை, சென்.மைக்கல் தேசிய பாடசாலையிலும் கூடைப்பந்தாட்ட மைதானம் புனரமைப்புச் செய்ததுடன் கிரான் மகா வித்தியாலயத்தில் புதிய கூடைப்பந்தாட்ட மைதானமும் அமைக்கப்பட்டது.

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் பாடசாலையில் இடம்பெற்ற 35 ஆவது தேசிய விளையாட்டு விழா ஆரம்ப வைபவத்தில் புனரமைக்கப்பட்ட மைதானத்தை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் திறந்து வைத்ததுடன் விளையாட்டினையும் ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீர்த்தா பிரபாகரன் விளையாட்டுத் துறை அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் டீ.வீ.தஸா நாயக்க, அரசாங்க அதிபர் எஸ்.அருமைநாயகம் உட்பட பல உயரதிகாரிகள், அரச அதிகாரிகள், கல்வித் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சகல பிரதேசங்களுக்கும் சமமான சேவையை வழங்குவதே அரசின் நோக்கம் – ஜனாதிபதி

mahinda.jpgநாட்டில் இதற்கு முன்னர் எந்த அரசாங்கங்களும் நினைத்துக்கூட பார்க்க முடியாதவற்றை செய்து முடித்துள்ளோம் எனவும் தொடர்ந்தும் நாட்டு மக்களுக்காக எதையும் செய்யத்தயாராயுள்ளதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இன்று இந்நாட்டில் தமிழ், முஸ்லிம், சிங்களம் என சகல இன மத மக்களும் சுதந்திரமாக ஒரே கொடியின் கீழ் வாழும் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளோம். வடக்கு, கிழக்கு, பெருந்தோட்டப் பகுதி ஒன்றில்லாமல் சகல பிரதேசங்களுக்கும் சமமான சேவைகளைப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர, முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் மாபெரும் மக்கள் பேரணிக்கூட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் புத்தள நகரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:-

நாட்டின் தேசிய பயணத்தைப் பலப்படுத்த நாட்டு மக்கள் அனைவரும் அரசாங்கத்துக்கு ஆணை வழங்கியுள்ளனர். இன்று நாட்டில் பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டு உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் சுதந்திர நாடு உரிமையாகியுள்ளது. வடக்கு, கிழக்கிலன்றி மொனராகலை புத்தல பிரதேசங்களிலும் மக்கள் பயங்கரவாத அச்சுறுத்தல்களுடனேயே வாழ்ந்துவந்தனர். புத்தள பகுதியிலும் பலர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டே நாம் உங்கள் முன்னிலைக்கு வந்துள்ளோம். இன்று நாட்டில் பயங்கரவாதம்

மட்டுமன்றி வேறு எந்த வாதமும் இல்லை. வெள்ளைக்கார ஏகாதிபத்தியம் எம் இனத்தை அழித்து வளங்களை சூறையாடிய யுகமொன்றிலிருந்தது. அன்று விவசாயிகள் தெருவில் விடப்பட்டனர். விவசாய வளங்கள் அழிக்கப்பட்டன. மக்கள் பெரும் பின்னடைவுக்குத் தள்ளப்பட்டனர். 16 வயதிற்குக் கீழுள்ள இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அந்த யுகத்துக்கு முடிவுகட்டப்பட்டுவிட்டது.

எனினும் அன்று அவ்வாறு செய்தவர்களுக்கு உதவியவர்கள் இன்று இந்த நாடு அபிவிருத்தியடைவதை விரும்பவில்லை. அதனால்தான் நாம் சர்வதேச கடன்களைப் பெறுவதற்கு அவர்கள் தடையாக நிற்கின்றனர். வடக்கிற்கோ, கிழக்கிற்கோ வேறு அபிவிருத்திகளுக்கோ வன்றி நமது சொந்த விடயங்களுக்காக நாம் வெளிநாட்டுக் கடன் பெறுவதாக அவர்கள் பிரசாரம் செய்கின்றனர். இதனை மக்கள் நம்பத்தயாரில்லை. ஏனெனில் நாடு முழுவதிலும் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. சமகாலத்தில் ஐந்து துறைமுகங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகளென பாரிய அபிவிருத்திச் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. கிராமங்கள் பெரும் அபிவிருத்திக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன.

மொனராகலை மாவட்டத்தில் ஒரு கிராமத்திற்கு நான்கு கோடி என நிதி ஒதுக்கப்பட்டு அபிவிருத்திப் பணிகள் நடைபெறுகின்றன. எமக்குப் பல அழுத்தங்கள் வந்தன. அவ்வேளைகளில் நாம் அதற்கு அடிபணியவில்லை. ஒரு தடவையல்ல ஆயிரம் தடவையாயினும் நாம் தூக்குத் தண்டனை பெற தயார் என நாம் கூறினோம். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட நிலையில் கஷ்டப் பிரதேசம் என்ற பெயரை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளிலேயே அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது ஏகாதிபத்தியவாதிகள் நம்மிடமிருந்து பறித்ததை நாம் மீளப்பெற வேண்டியுள்ளது.

மறந்து கிடந்த கிராமங்களை மீள அபிவிருத்தியில் கட்டியெழுப்ப வேண்டிய காலம் உருவாகியுள்ளது. எமது வளங்களைப் பாதுகாப்பதற்கு உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கொழும்பு மட்டுமன்றி சகல நகரங்களும், சகல கிராமங்களும் ஒரேவிதமாக அபிவிருத்தி செய்யப்படும். இதற்கான செயற்றிட்டங்கள் மாகாண சபைகள் மூலம் முன்னெடுக்கப்படவுள்ளன.

எமது மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்துள்ளனர். ஊவா மாகாண சபையிலும் நாம் அமோக வெற்றிபெற்று ஊவா மாகாணத்தைக் கட்டியெழுப்ப சகலரும் பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

பரக் ஒபாமா இந்தியா விஜயம்!

அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா இந்தியாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ் தெரிவித்துள்ளார்.

ஒபாமா வெகுவிரைவில் இந்தியா செல்ல உள்ளதாகவும் அவருடைய இந்தியப் பயணம் 3 மாதங்கள் கழித்து இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் எதிர்வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை  மேற்கொள்ள உள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ 9 வீதியில் தனியார் பஸ் சேவை!

bus.jpgகண்டி யாழ்ப்பாணம் ஏ 9 வீதி பொது மக்களின் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்படுமேயானால் 580 பஸ்களை சேவையில் ஈடுபடுத்த  தீர்மானித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் யாழ். மாவட்டக் கிளைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

கடந்த பல வருடகாலமாக ஏ 9 வீதி மூடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது நாட்டில் சுமுக நிலை ஏற்பட்டுள்ளதால், ஏ 9 வீதியில் போக்குவரத்துக்கு திறந்தால் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த தயாராக உள்ளதாக கூறுகின்றார்.

அரச பஸ்களை மாத்திரம் பயன்படுத்திக் கொண்டு வடக்கு பகுதிகளில் இருந்து கொழும்பு நோக்கிய போக்குவரத்து சேவையை முழுமையாக ஈடுசெய்ய இயலாது. தனியார் பஸ்களின் சேவையும் அத்தியாவசியமாகும்.

எனவே, அரசாங்கம் அனுமதியளிக்கும் பட்சத்தில் சாதாரண கட்டணத்தில் யாழில் இருந்து கொழும்புக்கு தனியார் பஸ் சேவையினை வழங்க எமது சங்கம் தேவையான சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நீச்சலில் 5 நாட்களில் 29 புதிய சாதனைகள்!

pelps2.jpgஇத்தாலி யில் நடைபெற்றுவரும் உலக சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் ஐந்து நாட்களில் 29 உலக சாதனைகள் முறியடிக்கப்படடன. தொடர்ந்து உலக சாதனைகள் முறியடிக்கப்பட்டு வருகின்றன. போட்டியின் 5 ஆவது நாளான நேற்று மாத்திரம் 7 உலக சாதனைகள் முறியடிக்கப்பட்டன. உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இதுவரை புதிதாக 29 உலக சாதனைகளின் நிலைநாட்டப் பட்டுள்ளன.  போட்டிகளில் மேலும் 3 நாட்கள் எஞ்சியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் நடந்த ஆண்களுக்கான 200 மீற்றர் மெட்லே போட்டியில் அமெரிக்காவின் ரயான் லொச்டே 1 நிமிடம் 54.10 வினாடிகளில் போட்டித் தூரத்தை நீந்தி முடித்து ஒலிம்பிக் சாம்பியன் மைக்கல் பெல்பிஸின் உலக சாதனையை முறியடித்தார். பெல்ப்ஸ் இம்முறை தொடரில் பறிகொடுக்கும் இரண்டாவது உலக சாதனை இதுவாகும்.

இதனிடையே இம்முறை உலக சாதனைகள் முறியடிக்கும் வேகம் அதிகரிப்பதற்கு வீர, வீராங்கனைகள் உயரிய தொழிநுட்பத்திலான நீச்சல் உடைகளை பயன்படுத்துவதே காரணம் என்று பரவலாக விமர்சனம் எழுந்துள்ளது. இதற்கு முன்னாள் நீச்சல் வீரர்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். இம்முறை உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் உலக சாதனைகள் முறியடிக்கப்படாமல் முடிவடைந்த போட்டிகள் மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கதாகும

வவுனியா நிவாரணக் கிராமம் – ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நிர்ப்பீடன மருந்து வழங்கல் இன்று

vaccine.jpgவவுனி யாவிலுள்ள நிவாரணக் கிராமங்களிலும், நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ள ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சின்னமுத்து மற்றும் போலியோ நோய்களுக்கான நிர்ப்பீடன மருந்துகளும் வயிற்றுப் புழுக்களுக்கான தடுப்பு மருந்தும் இன்று 3 ஆம் திகதி முதல் வழங்கப்படவுள்ளன.

வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களிலும், நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ள குழந்தைகளின் நலன்கருதி இந்நிர்ப்பீடன மருந்து வழங்கல் மற்றும் வயிற்று புழுக்களுக்கான மருந்து விநியோகத் திட்டம் இன்று முதல் மூன்று நாட்களுக்குச் செயற்படுத்தப்படவிருப்பதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ளவர்கள் புலிகளின் பிடியில் சிக்குண்டிருந்த சமயம் தமது குழந்தைகளுக்கு, நோய்த் தடுப்பு நிர்ப்பீடன மருந்துகளையோ, வயிற்று புழுக்களைத் தடுப்பதற்கான மருந்துகளையோ ஒழுங்கு முறையாக பெற்றுக் கொடுத்ததில்லை. இக்குழந்தை களின் நலன் கருதியே இத்திட்டத்தை சுகாதார அமைச்சு, யுனிசெப், உலக சுகாதார ஸ்தாபனத்துடன் இணைந்து செயற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

இப்பணியில் 140 அரசாங்க மருத்துவ மாதுகள் ஈடுபடுத்தப்படவிருப்பதுடன் 130 நிலையங்களும் அமைக்கப் படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இத்திட்டத்தின் மூலம் இடம்பெயர்ந்துள்ள சுமார் 40 ஆயிரம் குழந்தைகள் நன்மை பெறுவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.