செய்திகள்

செய்திகள்

செய்திகள்

சிம்பாபேயின் புதிய பிரதமராக அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மோர்கன் சுவாங்கிராய் பதவியேற்றார்

suvangi.jpgசிம்பாபேயின் புதிய பிரதமராக அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மோர்கன் சுவாங்கிராய் பதவியேற்றார்.சிம்பாபே ரொபேர்ட் முகாபோக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சுவாங்கிராய்க்கும் இடையில் கூட்டணி அரசாங்கம் அமைப்பாதாக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு நான்கு மாதங்கள் கழிந்த நிலையிலேயே இந்தப் பதவியேற்பு நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

கடந்த வருடம் சிம்பாபேயில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரொபேர்ட் முகாபேயை எதிர்த்துப் போட்டியிட்ட சுவாங்கிராய் தேர்தலில் வெற்றிபெற்றிருந்தார். எனினும், ஆட்சி துறப்பதற்கு ரொபேர்ட் முகாபே இணங்கவில்லை. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட இழுபறிநிலையின் பின்னர் முகாபேயுடன் கூட்டணி அரசாங்கம் அமைக்க சுவாங்கிராய் இணங்கியிருந்தார். இதற்கமைய இரு தலைவர்களுக்கும் இடையில் நான்கு மாதங்களுக்கு முன்னர் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

“நான் ஏன் இவ்வாறு செய்தேன் இதனால் அரசியல் ரீதியாக ஏற்பட்டிருக்கும் கேள்விக்கு என்ன பதில் போன்ற சந்தேகங்களுக்கு விரைவில் விடைகிடைக்கும்” என சாங்கிராய் கூறினார். “இந்த முடிவை நாங்களே எடுத்துள்ளோம். எந்தவிதமான அழுத்தங்களுமின்றி இந்த முடிவைத் தேர்ந்தெடுத்தோம்” என்றார் அவர். அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டுமென சுவாங்கிராய் தனது பதவியேற்வு விழாவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

ராஜீவ் இருந்திருந்தால் இலங்கை பிரச்சினை என்றோ தீர்ந்திருக்கும் கள்ளத் தோணியில் சென்று காரியத்தை கெடுத்தவர் வைகோ – ஸ்டாலின் தெரிவிப்பு

stalin.jpgஅரசியல் பிழைப்பு நடத்தும் அநாதை தலைவர்கள் சிலர் தி.மு.க. ஆட்சியை அகற்ற திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க. அரசை கலைக்க துடிப்பவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருவள்ளூரில், இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், இலங்கை பிரச்சினைக்கு ஜனநாயக முறையில் தீர்வு காணக் கோரியும் இலங்கை தமிழர் நல உரிமை பேரவை சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் ஸ்டாலின் பேசுகையில் கூறியதாவது;

இலங்கை பிரச்சினையில் 2 கால கட்டங்கள் உள்ளன. கி.மு. மற்றும் கி.பி. என்பது போல் ராஜீவ்காந்திக்கு முன்பு ராஜீவ்காந்திக்கு பின்பு என்று ஒரு காலகட்டம் ஏற்பட்டுவிட்டது. ராஜீவ்காந்தி மட்டும் கொலை செய்யப்படாமல் இருந்திருந்தால் இந்த இலங்கை பிரச்சினை என்றோ தீர்ந்திருக்கும்.

1989 இல் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் கருணாநிதி டில்லியில் சந்தித்தார். அப்போது ராஜீவ்காந்தி, தாங்கள் 2 நாட்கள் தங்கியிருக்க முடியுமா என்று கேட்டார். அப்போது முரசொலி மாறனும் உடன் இருந்தார்.

இலங்கை பிரச்சினையில் தீர்வுகாண முடியுமானால் அது தமிழக முதல்வர் கருணாநிதியால் தான் முடியும். அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தங்களுக்கு செய்வேன் என்று கூறிய ராஜீவ்காந்தி, மறுநாள் காலை வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வார்சிங்கை சந்திக்க ஏற்பாடு செய்தார். அவர்கள் இரண்டரை மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காணுவதற்காக கருணாநிதியை இலங்கைக்கு சென்று வருமாறும், அதற்கு என்ன தேவையோ அத்தனையும் செய்து தரப்படும் என்றும் தெரிவித்தார்.

அதனை ஏற்றுக்கொண்டு மறுநாள் சென்னை விமான நிலையத்திற்கு வந்த கருணாநிதியிடம் ஒரு கசப்பான தகவல் தெரிவிக்கப்பட்டது. அதாவது, கோபாலசாமி எம்.பி. கள்ளத்தோணி ஏறி இலங்கை வவுனியா காட்டிற்கு சென்று பிரபாகரனை சந்தித்தார் என்பதுதான் அந்த செய்தி.

ஒரு பாராளுமன்ற உறுப்பினர், பாராளுமன்றம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் கள்ளத்தோணியில் ஏறி இலங்கைக்கு சென்ற அதிர்ச்சியான தகவலை கேள்விப்பட்டதை ராஜீவ்காந்தியிடம் வருத்தத்துடன் தெரிவித்தார். அப்போது நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தில் ஒரு உறுப்பினர் கோபால்சாமி இலங்கைக்கு சென்றது பற்றி பிரச்சினை எழுப்பினார். அப்போதுகூட ராஜீவ்காந்தி பெருந்தன்மையாக இலங்கைக்கு சென்றவர் பத்திரமாக திரும்பிவர வேண்டும் என்று விரும்புவதாக கூறினார். அதன் பின்பும் நீங்கள் முயற்சி செய்தால் இலங்கையில் தமிழர்கள் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர முடியும். முயற்சி செய்யுங்கள் என்று ராஜீவ்காந்தி கருணாநிதியிடம் கேட்டுக்கொண்டார். அவர் முயற்சி செய்ய சொன்ன பிறகுதான் நமது தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் இரத்தம் சிந்தி கொலையானார். அதனால் தான், இலங்கை பிரச்சினை ராஜீவ்காந்திக்கு முன்பு ராஜீவ்காந்திக்கு பின்பு என்று ஆனது.

ராஜீவ்காந்தி உயிருடன் இருந்திருந்தால் இலங்கை பிரச்சினை எப்போதோ சுமுகமாக தீர்த்து வைக்கப்பட்டிருக்கும். இருப்பினும் தொடர்ந்து இன்றுவரை இலங்கை பிரச்சினைக்கு தீர்வு கண்டு தமிழர்களை காக்க வேண்டும் என்று தி.மு.க., காங்கிரஸ் மற்றும் அதன் தோழமை கட்சிகள் அனைத்தும் பாடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அரசியல் பிழைப்பு நடத்தும் அநாதை தலைவர்கள் சிலர் தி.மு.க. ஆட்சியை அகற்ற திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு கட்சியோடு சேர்ந்து கொண்டு ஆட்சியைப் பிடிக்கலாம் என்று திட்டம் தீட்டுவோர்களையெல்லாம் மக்களுக்கு நன்கு தெரியும். தொடர்ந்து தமிழக மக்களுக்கு நல்லாட்சி நடத்திவரும் தி.மு.க. அரசை கலைக்க துடிப்பவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

புலிகளின் பாரிய அச்சகத்தொகுதி விசுவமடுவில் நேற்று கண்டுபிடிப்பு

udaya_nanayakkara_.jpgவிசுவமடு, சுந்தரபுரம் பிரதேசத்தில் புலிகளின் பிரதான அச்சகம் உள்ளிட்ட பாரிய முகாம் ஒன்றை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். பெரும்தொகையான புதிய ரக வாகனங்கள், நவீன அச்சக இயந்திரங்கள், புகைப்படக் கூடம், பிரபாகரனின் பெனர்கள், போஸ்டர்கள், கட்டவுட்கள், லெமினேடிங் இயந்திரங்கள், கமராக்கள் மற்றும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இராணுவத்தின் 58வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான படையணியினர் நேற்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் இந்த முகாமை கைப்பற்றியுள்ளனர். விசுவமடு சுந்தரபுரம் பகுதியில் புலிகளுடனான கடும் மோதல்களைத் தொடர்ந்து முன்னேறிய படையினர் இந்த அச்சகப் பகுதியை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். 23 துப்பாக்கிகளும், புதிய ரகத்திலான வாகனங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

புலிகளின் தலைவர்கள் இம் முகாமில் கடந்த ஓரிரு தினங்களுக்குள் தங்கியிருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இந்த அச்சகத்தில் அச்சிடப்பட்ட பெருந்தொகையான புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்களுடன் பெருந்தொகையான சீடிக்களும் கைப்பற்றப்பட்டன. புலிகள் நடத்திய பேச்சுவார்த்தைகள், சந்திப்புக்கள், உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் பதியப்பட்ட சீடிக்களையே படையினர் கைப்பற்றியுள்ளனர். அச்சகத்தில் உள்ள நவீன உபகரணங்கள் அண்மையில் கொள்முதல் செய்யப்பட்டதாகவே தென்படுவதாக படைத் தரப்பினர் தெரிவிக்கின்றனர். புலிகளின் உள்நாட்டு, வெளிநாட்டு பிரசார நடவடிக் கைகளுக்காக இந்த அச்சகத்தையே அவர்கள் பிரதானமாக பயன்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, புதுக்குடியிருப்பு தென்பகுதியில் படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தின் நான்கா வது செயலணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் நிஷாந்த வன்னியாராய்ச்சி தலமையிலான படைப் பிரிவினர் அந்தப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த மற்றுமொரு அச்சகம் ஒன்றையும், கட்டிங் இயந்திரம் ஒன்றையும் படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார சுட்டிக்காட்டினார்.

புலிகள் இயக்க உறுப்பினர்களின் புகைப்படங்களும், புலிகளின் முக்கிய புகைப்படங்களும் அச்சிடப்பட்ட பெருந் தொகையான புத்தகங்களையே படையினர் மீட்டெடுத்துள்ளதாக தெரிவித்த அவர், அச்சு இயந்திரங்களுடன் அவற்றுக்குத் தேவையான பெருந்தொகையான உபகரணங்களும் இங்கிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

வாகனம் நீரினுள் பாய்ந்து விபத்து; இரு வெளிநாட்டு பிரஜைகள் கிண்ணியாவில் மரணம்

திருகோணமலை – மூதூர் கரையோரப் பாதையிலுள்ள கெங்கை துறையில் இடம்பெற்ற விபத்தொன்றில் அரசசார்பற்ற நிறுவனத்தைச் சேர்ந்த இரு வெளிநாட்டவர்கள் மரணமடைந்துள்ளனர்.

நேற்றுக்காலை 10.30 மணியளவில் கெங்கை துறையை கடப்பதற்காக மிதவைப் படகில் ஏற்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் தற்செயலாக கடலில் பாய்ந்ததில் ஜெய்க்கா நிறுவனத்தின் ஜப்பான் நாட்டவரான குஜிவாரா மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டவரான ஆனோல்வலதே ஆகிய இருவருமே இறந்தவர்களாவர்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:-

சாரதி மற்றும் இலங்கை பொறியியலாளர் உட்பட நால்வர் வாகனத்தில் பயணம் செய்துள்ளனர். மூதூருக்கும், கிண்ணியாவிற்கும் இடையிலுள்ள கெங்கை துறை மிதவை படகு பாதையில் வாகனத்தை ஏற்றிய பின் சாரதியும், பொறியியலாளரும் கீழே இறங்கி நின்றபோது, வாகனம் திடீரென கடலினுள் சரிந்துள்ளது.

இதனால் இருவரும் உயிர் தப்பியுள்ளனர். வெளிநாட்டவர்களான இருவரினதும் சடலம் வாகனத்துடன் அரைமணி நேரத்தின் பின் பொதுமக்களால் மீட்கப்பட்டுள்ளது. சடலம் தற்போது (நேற்று 1.30 வரை) கிண்ணியா தள வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது. மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காட்டுத்தீ அனர்த்தத்தை குற்றச்செயலென பிரகடனப்படுத்தியது அவுஸ்திரேலியா

forest_fire.jpg
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் பரவும் காட்டுத்தீயினால் பலியானோரின் எண்ணிக்கை 203 ஆக அதிகரித்துள்ள அதேவேளை இத்தீ உண்டாவதற்கு காரணமாகவுள்ள சதிக்கும்பலைத் தேடும் முயற்சியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, வேறுபிராந்தியத்திலுள்ள மக்கள் இக்காட்டுத்தீயினால் பாதிக்கப்படும் அபாயமுள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.இக்காட்டுத்தீயில் பெரும்பகுதி வேண்டுமென்றே ஏற்படுத்தப் பட்டுள்ளவையென தெரிவித்துள்ள பொலிஸார் காட்டுத்தீ பரவியுள்ள பிரதேசங்களை குற்றவலயமெனவும் பிரகடனப் படுத்தியுள்ளனர்.

இக்காட்டுத்தீயினால் பெருந்தொகையான மக்கள் பலியாவதற்குக் காரணமாக இருந்த சதிகாரர்களை அவுஸ்திரேலியப் பிரதமர் வன்செயல் புரிந்தவர்கள் என்றும் பாரிய கொலைகாரர் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். காட்டுத்தீயினை வேண்டுமென்றே திட்டமிட்டு ஏற்படுத்தும் ஒரு நபருக்கு 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் அதேநேரம் தவறுதலாக காட்டுத்தீ ஏற்படக் காரணமாக இருந்தவர்களுக்கு ஆகக்கூடியது15 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

அவுஸ்திரேலியாவில் தற்பொழுது ஏற்பட்டுள்ள காட்டுத்தீ தொடர்பான விசாரணைகளை இராஜாங்க ஆணைக்குழு மேற்கொள்ளுமென விக்டோரியா மாநில பிரதமர் ஜோன் புறும்பி அறிவித்துள்ளார்.

விக்டோரியா மாநிலத்தில் ஏற்பட்ட இக்காட்டுத் தீயில் பெரும்பலானோரின் வீடுகள், கட்டிடங்களுக்குள்ளும் வாகனங்களுக்குள்ளேயுமே பலியாகியுள்ளனர்.

இக்காட்டுத் தீயினைக் கட்டுப்படுத்துவதற்கு கடுமையாகப் போராடிவரும் தீயணைப்புப் படைவீரர்கள் உள்ளிட்ட அவசர உதவி அமைப்புகள் மேலும் பல உடல்களை மீட்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இக்காட்டுத் தீயினால் இதுவரை 203 பேர் பலியாகியுள்ள அதேவேளை,750க்கும் அதிகமான வீடுகளும் 5 இலட்சத்து 44 ஆயிரம் ஏக்கர் பரப்பளவான நிலப்பரப்பும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

அத்துடன் சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தமது வீடுகளை இழந்து நிர்க்கதியாகி வேறு இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

காட்டுத் தீ ஏற்பட்டது முதல் இதுவரை 450 பேர் உடலின் 30 வீதமான பகுதிவரை காயமடைந்துள்ளனர்.

இக்காட்டுத் தீயினைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் 3,400 தீயணைப்புப் படைவீரர்கள் தொடர்ந்து போராடி வருவதாக தீயணைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இக் காட்டுத் தீயிலிருந்து தப்பியவர்கள் புதர்க்காடுகளின் ஊடாக தீச் சுவாலை கொழுந்துவிட்டு எரிந்தன என்றும் விண்ணிலிருந்து தீ மழை பொழிந்தது போல இருந்தது என்றும் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் வரலாற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய இயற்கை அனர்த்தம் இதுவெனக் கூறப்பட்டுள்ளது.

மாணவிகளுடன் பொலிஸார் நடந்த முறை குறித்து விசாரணை நடத்துமாறு கோரிக்கை

kelani_.jpgகளனி பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கிடையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மோதல் சம்பவங்களையடுத்து அங்கு பொலிஸார் மாணவிகளுடன் நடந்துகொண்ட முறை குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென மாணவர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த மோதலில் மூன்று மாணவர்களும் நான்கு பொலிஸாரும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதமும் இப்பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல்களின் போது 40 மாணவர்கள் காயமடைந்தனர்.

கடந்த செப்டெம்பர் மாதமும் இதேபோல் மோதல்கள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவத்தின் போது பொலிஸார் சில மாணவிகளை தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்றது மற்றும் கைது செய்து வாகனத்தில் ஏற்றும் போது தள்ளிஏற்றியமை போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வுகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுள்ளதால் ஆண் பொலிஸார் மாணவிகளைக் கைது செய்யும் போது நடந்து கொண்டுள்ள முறைகள் தெரியவந்துள்ளன.

தீக்குளிப்போருக்கு நிதியுதவி இல்லை

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக உயிர் துறப்போரின் குடும்பத்தினருக்கு இனி நிதியுதவி அளிப்பதில்லை என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக முதன் முதலில் சென்னையில் இளைஞர் முத்துக்குமார் தீக்குளித்து உயிர் நீத்தார்.

இதையடுத்து திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரவி, சீர்காழியைச் சேர்ந்த ரவிச்சந்திரன், சென்னையைச் சேர்ந்த அமரேசன் ஆகியோர் தீக்குளித்து உயிர் நீத்தனர். இவர்களில் ரவி, அமரேசன் ஆகியோர் தற்கொலை குறித்து சர்ச்சை இருந்தது.

முத்துக்குமார் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ. 2 லட்சம் நிதியுதவியை அறிவித்தது. ஆனால் அதை அவரது குடும்பத்தினர் நிராகரித்து விட்டனர். இந்த நிலையில் தீக்குளித்து இறந்த மற்றவர்களுக்கும், இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை பேரணியில் கலந்து கொண்டபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மன்னை பாண்டியன் குடும்பத்திற்கோ தமிழக அரசு நிதியுதவி எதையும் அறிவிக்கவில்லை.

அவ்வாறு செய்தால், தற்கொலை செய்வதை ஊக்கப்படுத்துவது போல் ஆகிவிடும் என தமிழக அரசு கருதுவதால், நிவாரண நிதி அறிவிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

3000 தற்காலிக ஊழியர்களுக்கு இன்று நிரந்தர நியமனம்

nimal-siripala.jpgஅரசாங்க சுகாதாரத்துறையில் பணிபுரியும் மூவாயிரம் தற்காலிக ஊழியர்களுக்கு இன்று 12ம் திகதி நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவிருக்கின்றன.

சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் கொழும்பு, மருதானை, எல்பிஸ்டன் திரையரங்கில் நடைபெறும் வைபவத்தின் போது இந்த நிரந்தர நியமனக் கடிதங்கள் வழகப்படவிருக்கின்றன.

வன்னி அகதிகளுக்காக மேலதிக பஸ்கள்

bus.jpgவன்னிப் பகுதிகளில் இருந்து வவுனியாவுக்கு வருகின்ற மக்களின் நலன் கருதி வவுனியா இ.போ.ச.டிப்போவுக்கு போக்குவரத்து அமைச்சு ஐந்து பஸ்களை வழங்க இணங்கியுள்ளது. ஏற்கனவே வவுனியா டிப்போவுக்கு ஐந்து பஸ்கள் கிடைத்துள்ளன எனவும் டிப்போ முகாமையாளர் தெரிவித்தார்.

இந்த பஸ்கள் வன்னியில் இருந்து வருகின்ற மக்களை ஏற்றிவருவதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்தார். அத்துடன் தற்காலிக இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள வன்னிப் பகுதி அகதிகளை இந்த பஸ்கள் மூலம் செட்டிகுளத்துக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த பஸ்கள் இரவு பகலாக வன்னிப் பகுதி அகதிகளின் சேவைக்காகவே பயன்படுத்தப்பட்டுவருகின்றன.

வன்னிப்பகுதியிலிருந்து வவுனியா வருபவர்கள் தொகை மேலும் அதிகரிக்கும் நிலை -அமைச்சர் ரிசாட் பதியுதீன்

civilians_arrive.jpgவன்னிப் பகுதிகளில் இருந்து வவுனியாவுக்கு வருகின்ற அகதிகளின் தொகை தினமும் அதிகரித்துக்கொண்டிருப்பதால் அடுத்த சில தினங்களில் மேலும் இத்தொகை அதிகரிக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்துள்ள மக்கள் தங்கியுள்ள நலன்புரி நிலையங்களில் சுகாதார நிலைமைகள் மிக மோசமாகியுள்ளன எனவும் புகார்கள் வந்துள்ளன.

இடம்பெயர்ந்து வருகின்ற வன்னிப்பகுதி மக்களுக்கு சேவையாற்ற டாக்டர்கள் முன்வரவேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். குறிப்பாக கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மார்களுக்கு விசேட மருத்துவ சிகிச்சை தேவைப்படுகின்றன எனவும் அமைச்சர் கூறினார்.

இடம்பெயர்ந்துள்ள மக்களின் குடிநீர் உணவு சுகாதார விடயங்களில் உரிய கவனம் செலுத்தப்படவேண்டும் எனவும் அவர் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். இதனால் பலருக்கு பல நோய்கள் ஏற்பட்டுள்ளதாக தமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்த அகதிகளின் உடல் நலன்களை கருத்திற்கொண்டு மேலதிக டாக்டர்களை உடனடியாக வவுனியாவுக்கு அனுப்பிவைக்குமாறு அமைச்சர் சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியா நகரில் உள்ள ஏனைய பாடசாலைகளில் இருபது தற்காலிக மலசல கூடங்கள் அமைத்துக்கொள்ளுமாறும் அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.