செய்திகள்

செய்திகள்

செய்திகள்

இறைச்சிக்காக விலங்கு உற்பத்தியென்ற திட்டத்தை இல்லாதொழிக்க வேண்டும் -ஐ.தே.க.எம்.பி. ஜோசப் மைக்கல் பெரேரா

sri-lanka-parliment.jpgஇறைச் சிக்காக விலங்கு உற்பத்தி என்ற திட்டத்தை இல்லா தொழிக்க வேண்டுமெனத் தெரிவித்த ஐ.தே.க. வின் கம்பஹா மாவட்ட எம்.பி.யும் எதிர்க்கட்சி பிரதம கொறடாவுமான ஜோசப் மைக்கல் பெரேரா, விலங்குகள் கொல்லப்படுவதை தடுக்கும் அரசின் திட்டத்துக்கு தாம் ஆதரவளிப்பதாகவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற விலங்குகள் திருத்தசட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; விலங்குகள் கொல்லப்படுவதை தடுக்கும் வகையில் கொண்டுவரப்படுகின்ற சட்டம் தொடர்பில் ஐ.தே.க.வுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. எனினும் இந்தச் சட்டமானது பால் உற்பத்தியை பாதிப்புக்குள்ளாக்கும் விதமாக பசுக்கள் கொல்லப்படுவதை தடுக்கவோ அல்லது இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்ற மாடுகள் கொல்லப்படுவதை தடுப்பதாகவோ மட்டும் இருக்கக் கூடாது.

ஆடு,மாடு,பன்றி, எலிகள் கூட இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. விலங்குகள் மீது கருணைகாட்டுகின்ற சட்டமாக இருந்தால் இறைச்சிக்கான விலங்கு உற்பத்தி என்ற திட்டத்தையே இல்லாதொழிக்கவேண்டும். இதற்கு அரசாங்கம் இணங்குகின்றதா என்று கேட்க விரும்புகின்றேன் . மக்களுக்கு கறவை மாடுகள் வழங்கப்படும்போது கூட அரசியல் நிறம்பார்த்தே வழங்கப்படுகின்றன. கால்நடை உத்தியோகத்தர்கள் எவ்வாறு செயற்படுகின்றனர். அவர்கள் யாரின் பட்டியல்களை முன்வைக்கின்றனர் என்பதை நாம் கவனிக்கவேண்டும்.

கறவை மாடுகள் அறுக்கப்படுவதை நாம் உண்மையாக எதிர்க்கின்றோம். எனவே அமைச்சரின் இந்த திட்டத்தை நாம் வரவேற்கின்றோம்.

காயமடைந்த படையினருக்கு சிகிச்சையளிக்க மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை

medicine.jpgகாயம டைந்த படைவீரர்கள் மற்றும் நோயாளிகளுக்கு சத்திர சிகிச்சை செய்வதற்கான அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு வைத்தியசாலைகளில் தட்டுப்பாடு நிலவுவதாக ஜே.வி.பி.பாராளுமன்ற உறுப்பினர் ரணவீர பத்திரன வியாழக்கிழமை சபையில் முன்வைத்த குற்றச்சாட்டை, சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா மறுத்துவிட்டார்.

அநுராதபுரம் மற்றும் வவுனியா வைத்தியசாலைகளுக்கு போதியளவு மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ரணவீர பத்திரன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் முகமாகவே அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இவ்வாறு கூறினார்.

“அநுராதபுரம் வைத்தியசாலையில், காயமடைந்த படையினருக்கும் நோயாளிகளுக்கும் சத்திரசிகிச்சை செய்வதற்கு அத்தியாவசியமான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றனவே’ என்று ரணவீர பத்திரன இதன்போது தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா,”” அந்த செய்திகளில் எந்த உண்மையும் கிடையாது. அங்கு ஒரேயொரு மருந்துக்கு மட்டுமே தட்டுப்பாடு நிலவுகிறது. ஏனெனில், அது இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதுடன், அதற்கு அந்நாட்டு போதைப் பொருள் தடுப்பு பணியகத்தின் அனுமதியைப் பெற வேண்டும். இது தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகருடன் பேசியதை அடுத்து, தற்போது தருவிப்பதற்கான அனுமதி கிடைத்திருக்கிறது’ என்று கூறினார்.

அத்துடன், அநுராதபுரம் மற்றும் வவுனியா வைத்தியசாலைகளுக்கு போதியளவு மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து, பேசியதன் மூலம் அங்கு மருந்துப் பொருட்களில் எந்த தட்டுப்பாடுகளும் இல்லையென்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

எனினும், தான் இப்போது தொடர்பு கொண்டு பேசிய போது அநுராதபுர வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கான இரு அத்தியாவசிய மருந்துகள் இல்லையென கூறப்பட்டதாக ரணவீர பத்திரன எம்.பி. மீண்டும் தெரிவிக்கவே;

“ஜே.வி.பி. யிடம் 23 வைத்தியர்களைக் கொண்ட சங்கமொன்று உள்ளது. இவ்வாறான அறிக்கைகளை விடுப்பதே இவர்களது வேலை. 8,594 வகையான மருந்துப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. அதில் 8,593 ஐப் பற்றி பேசாமல் ஒன்றைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கின்றனர். மருந்துப் பொருட்கள் என்பது கடையில் சென்று சீனி வாங்குவதைப் போல தருவிக்க முடியாது’ என்று சுகாதார அமைச்சர் பதிலளித்தார்.

வீட்டை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து விட்டு தானும் தூக்கிட்டு உயிரிழந்த இலங்கைப் பெண்

bahrain.jpgபஹ்ரெய் னின் வீடொன்றில் பணிபுரிந்த இலங்கைப் பணிப் பெண்ணொருவர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை அவ்வீட்டைத் தீக்கிரையாக்கியதுடன் தானும் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வீடொன்றில் பணிபுரிந்த மரியம்மா பெருநான் (வயது 32) எனும் பெண்ணே வீட்டின் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்கிரையாக்கியுள்ளதாக நம்பப்படுவதாக கல்வ் டெய்லி நியூஸ் தெரிவித்திருக்கிறது.

இவ்விபத்தையடுத்து அங்கு சென்ற தீயணைப்புப் படையினர் அவ்வீட்டினுள் சுயநினைவற்ற நிலையிலிருந்த பஹ்ரெய்னைச் சேர்ந்த இரு பிள்ளைகளைக் காப்பாற்றியதுடன், அவ்வீட்டின் கூரையில் பொருத்தப்பட்டிருந்த மின் விசிறியில் தூக்கிட்டுத் தொங்கிய நிலையில் சடலமாகவிருந்த அப்பணிப் பெண்ணின் உடலையும் மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான புலனாய்வு விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். தீக்கிரையாக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் ஏ.ஏ.எம். அல் ஹமாடா தெரிவிக்கையில்;

ஆயிஷா (வயது 21), தலால் (வயது 15) ஆகிய இரு பிள்ளைகளும் தூங்கிக் கொண்டிருக்கும் போதே இப் பணிப்பெண் வீட்டிற்கு தீயிட்டுள்ளார். இச்சம்பவத்தின் போது தலால் சுகயீனம் காரணமாக பாடசாலை செல்லாமையாலும் பஹ்ரெய்ன் பல்கலைக்கழகமொன்றின் மாணவியான ஆயிஷாவிற்கு அன்று மதியமே வகுப்புகள் இருந்ததாலும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர் என்றார்.

வீட்டிலிருந்து புகையேறுவதைக் கண்ட அயலவர்கள் அச்சமயத்தில் வெளியே சென்றிருந்த அல் ஹமாடாவின் மனைவிக்கும் தீயணைப்புப் படையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

புகையை சுவாசித்தமையால் சுயநினைவற்ற நிலையிலிருந்த இருபிள்ளைகளும் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். சில மணி நேர சிகிச்சையைத் தொடர்ந்து இருவரும் வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றியுள்ளனர்.

இப் பணிப்பெண் கடந்த 8 மாதங்களாக இவ்வீட்டிலேயே பணிபுரிந்தார் எனவும் இவர் எவ்வித பிரச்சினையுமின்றி நல்ல முறையிலேயே பணியாற்றியதாகவும் வீட்டின் உரிமையாளர் அல் ஹமாடா தெரிவித்தார்.

மேலும், இப்பணிப் பெண் தூக்கிட்டுக் கொள்வதற்கு சற்று முன்னர் தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார் எனவும் அதுவே இச்சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

இப் பணிப்பெண் தனது குடும்பத்தினரைத் தொடர்பு கொண்ட தொலைபேசி பொலிஸாரால் மீட்கப்பட்ட போதிலும் அது மிக மோசமாக சேதமடைந்த நிலையிலிருந்தது.

இத்தீவிபத்து தொடர்பாக அவசர அழைப்பையடுத்து காலை 11.09 மணியளவில் இரு பிள்ளைகளும் காப்பாற்றப்பட்டதுடன், இறந்த பணிப் பெண்ணின் உடலும் மீட்கப்பட்டது என அந்நாட்டின் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் அறிக்கை தெரிவித்துள்ளது. அத்துடன், இவ்விபத்து மண்ணெண்ணெயை வீடு முழுவதிலும் ஊற்றி எரிக்கப்பட்டதாலேயே ஏற்ப்பட்டுள்ளதென்பதை அவ்வமைச்சின் ஊடகப் பேச்சாளர் உறுதி செய்துள்ளார்.

ஆயினும் எவ்விதமான எரிகாயங்களும் காணப்படவில்லை என மருத்துவ அறிக்கை தெரிவிக்கின்றது.

வன்னியிலிருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு இந்தியாவின் உதவியை ஏற்க இலங்கை தயார்

puthumaattalan-hospital.gifமோதல் பகுதிகளில் சிக்குண்டிருக்கும் பொதுமக்களை வெளியேற்றுவதற்கு உதவுவதற்கு தயாராக இருப்பதாக இந்திய அரசாங்கம் அறிவித்திருப்பதை ஏற்றுக்கொள்ள விரும்புவதாக இலங்கை தெரிவித்திருக்கின்றது.

பொதுமக்களின் துன்பம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் அதிகளவு அக்கறைகொண்டுள்ளது என்றும் இது தொடர்பான இந்தியாவின் உணர்வுகளை நாங்களும் பகிர்ந்துகொள்கின்றோம் எனவும் புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதுவர் சி.ஆர்.ஜயசிங்க தெரிவித்துள்ளார். பொதுமக்களை வெளியேற்றுவது தொடர்பான தனது ஆர்வத்தை இந்தியா முறைப்படி வெளியிட்டுள்ளது. இந்தியா போன்ற நட்பு நாடுகளின் உதவியை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்கிறோம் என்று ஜயசிங்க கூறியுள்ளார். ஆனாலும் களநிலை யதார்த்தத்திலேயே இது தொடர்பான தீர்மானம் தங்கியிருப்பதாக கொழும்பு தெரிவித்துள்ளது.

வெளியேற்றும் திட்டம் தொடர்பான விபரங்கள் பின்னர் தயாரிக்கப்படும். இது களநிலைவரத்தைப் பொறுத்ததாகும். பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் அரசின் திட்டத்துக்கு புலிகள் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர் என்றும் ஜயசிங்க கூறியுள்ளார்.

சகல பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதில் நாம் உறுதியாகவுள்ளோம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை, புலிகள் ஆயுதங்களை கைவிட வேண்டும் என்றும் வன்னியில் மோதலுக்கிடையே அகப்பட்டுள்ள பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு இந்தியா உதவத் தயாரெனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி பாராளுமன்றத்தில் தெரிவித்ததை தூதுவர் ஜயசிங்க வரவேற்றுள்ளார்.

“இதுவொரு ஆக்கபூர்வமான அறிக்கை. களநிலை யதார்த்தத்தை மிகச்சரியாக பிரதிபலிக்கும் அறிக்கையாக அது உள்ளது. சமாதானம், நல்லிணக்கம் தொடர்பாக முன்னோக்கிச் செல்வதை வெளிப்படுத்தும் அறிக்கை அதுவெனவும் ஜயசிங்க கூறியுள்ளார்.

ஒபாமாவுக்கு ஹமாஸ் கடிதம் செனட்டர் ஹெரியிடம் கையளிப்பு

hamas.jpgகாஸாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் செனட்டர் ஹெரியிடம் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கான கடிதம் ஒன்றை ஹமாஸ் போராளிகள் கையளித்துள்ளனர். இக்கடிதமானது காஸாவிலுள்ள ஐ.நா.வின் உதவி அமைப்பின் மூலமே செனட்டர் ஜோன் ஹெரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் அதிகாரி கரேன் அபு தெரிவித்தார்.

ஆனால், இக்கடிதத்தை ஜோன் ஹெரி ஏற்றுக்கொண்டாரா என்பது குறித்தோ அக்கடிதத்தில் அடங்கியுள்ள விடயங்கள் தொடர்பாகவோ ஐ.நா.வின் அதிகாரி அபு எதுவும் தெரிவிக்கவில்லை. 2007 ஆம் ஆண்டில் காஸாவை ஹமாஸ் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததையடுத்து ஹமாஸ் போராளிகளை தீவிரவாத அமைப்பாகவே அமெரிக்கா கருதிவருவதுடன், எதுவித பேச்சுகளையோ உடன்படிக்கைகளையோ ஏற்படுத்தவில்லை.

ஹமாஸ் அமைப்பினர் காஸா பிராந்தியத்தைக் கைப்பற்றிய பின்னர் அங்கு முதற் தடவையாக விஜயம் செய்யும் அமெரிக்க உயர்மட்ட அதிகாரியாக ஹெரி அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அத்துடன், அமெரிக்க காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களான பிரையன் பைர்ட் மற்றும் கெய்த் எலிசன் ஆகியோரும் ஹெரியுடன் இணைந்து காஸாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

ஆனால், இந்த அமெரிக்க உயர்மட்டப் பிரதிநிதிகள் ஹமாஸ் போராளிகள் குழுவினரை சந்திக்க விரும்பவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இஸ்ரேல் தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் ஐ.நா. நிவாரண அமைப்பு உள்ளிட்ட உதவி நிறுவனங்களை இக்குழுவினர் சந்திக்கவுள்ளனர். இந்த விஜயம் அமெரிக்காவில் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்டுள்ள ஹமாஸ் அமைப்புடனான உறவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாதெனத் தெரிவித்தார்.

அவசர மனிதாபிமான தேவைகளுக்கென 10 மில். டொலர்களை வழங்க ஐ.நா முடிவு – அரசுடன் இணைந்து செயற்படவும் ஹோம்ஸ் விருப்பம்

John_Holmes_UNமோதல் பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்து வரும் சிவிலியன்களுக்கான அவசர மனிதாபிமானத் தேவைகளைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற தயாரென ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விடயங்களுக்கான பிரதிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் தெரிவித்தார். இதற்கென 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாகவும் கொழும்பில் இன்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் ஜோன் ஹோம்ஸ் தெரிவித்தார்.

சிவிலியன்களின் பாதுகாப்பை இருதரப்பும் பொறுப்பேற்க வேண்டுமெனக் கூறிய அவர், இதனை உறுதிப்படுத்துவதற்காக, மோதல்களைத் தீவிரப்படுத்த வேண்டாமென அரசாங்கத்தையும் புலிகள் இயக்கத்தையும் கோருவதாகக் கூறினார். இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களின் சுதந்திர நடமாட்டத்திற்காக அவர்களைப் பதிவு செய்யும் பணிகளையும், விசேட அடையாள அட்டை வழங்கும் நடைமுறையையும் துரிதப்படுத்த வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொள்வதாகக் கூறினார்.

அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்த ஐ. நா. மனிதாபிமானப் பணிகளுக்கான பிரதிச் செயலாளர் ஹோம்ஸ், அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன் இணைந்து இன்று (21) பிற்பகல் செய்தியாளர் மாநாடொன்றில் கலந்துகொண்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இது நடந்தது. இங்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்களுக்கான மானிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்தவர்கள் தங்கியுள்ள முகாம்களுக்குச் சென்றபோது அதனை நன்கு அறிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது. ஆனாலும், குறைபாடான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும். சிவிலியன்கள் தொடர்பாகத்தான் கவலையாக இருக்கிறது. புலிகளின் பிரதேசத்தில் உள்ள மக்களை சுதந்திரமாக செயற்பட அவர்கள் அனுமதிக்க வேண்டும். பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்கு இடமளிக்க வேண்டும். எனது விஜயத்தின்போது சம்பந்தப்பட்ட தரப்பினர்களைச் சந்திக்க அரசு இடமளித்தது என்று தெரிவித்த அவர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருடன் சந்திப்பொன்றை நடத்தியதாகவும் கூறினார்.

அமைச்சர் மஹிந்த சமரசிங்க இங்கு கருத்துத் தெரிவிக்கையில், சிவிலியன்களைப் பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தம்மைச் சந்தித்த ஐ.நா. பிரதிநிதி ஜோன் ஹோம்ஸிடம் ஜனாதிபதி மஹிந்த சமரசிங்க மீள வலியுறுத்தியதாகக் கூறினார்.

சிவிலியன்களின் பாதுகாப்பை உறுதி செய்தவாறே இராணுவ நடவடிக்கை தொடரும் என்று தெரிவித்த அவர், சிவிலியன்கள் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிந்தால் தாக்குதல் நடத்துவதில்லை எனவும் தெரிவித்தார். அதேநேரம் மக்களின் அரசியல் அபிலாஷைகள், சமூக, பொருளாதார அபிவிருத்தி, அதிகாரப் பகிர்வு என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து ஐ.நா. பிரதிநிதி ஜோன் ஹோம்ஸ¤க்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

வடக்கில் ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதற்காக உள்ளூராட்சி மன்றத் தேர்தலையும், மாகாண சபைத் தேர்தலையும் ஜோன் ஹோம்ஸ் விரைவில் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார். மக்களின் பிரதிநிதிகள் என்போரை விடுத்து, உண்மையான கலந்துரையாடல் நடத்தப்படுவதை ஹோம்ஸ் விரும்புவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். சிவிலியன்களை வெளியேற அனுமதிப்பது தொடர்பில் புலிகள் தரப்பிலிருந்து சாதகமான பதில் எதுவும் கிடையாது எனத் தெரிவித்த அமைச்சர், எனினும் பொதுமக்கள் வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை உண்டென்றும் கூறினார்.

சிவிலியன்களுடன் கலந்து புலிகள் அரச கட்டுப் பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவி வருவதாகக் கூறிய அமைச்சர் இவ்வாறு வந்தவர்களுள் 250 பேர் தம்மை புலி உறுப்பினர்கள் என அடையாளப்படுத்திக்கொண்டதாகவும் தெரிவித்தார். இவர்களுள் 32 பேர் புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார். ஓமந்தை சோதனைச்சாவடியில் சோதனைகள், பதிவுகள் நிறைவடைந்ததும் 24 மணித்தியாலத்திற்குள் அரசாங்க அதிபரிடம் சிவிலியன்களை ஒப்படைப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

‘புலிகள் இயக்கத்துடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தாது, அவர்கள் சட்டப்படி தடை செய்யப்பட்ட ஓர் இயக்கம். இது இறைமையுள்ள ஒரு நாடு. எந்த முடிவையும் நாம் சுதந்திரமாக மேற்கொள்ள உரிமை உண்டு’, என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இன்றைய செய்தியாளர் மாநாட்டில், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் அனுஷ பல்பட்ட, தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

இன்று ஈழத்தமிழருக்காக திமுக பிரமுகர் சென்னையில் தீக்குளிப்பு

united-people.jpgஇலங் கையில் இரு தரப்பினரும் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று திமுக இளைஞர் அணி சார்பில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை கிண்டியில் ஹால்டா ஜங்சனில் மனித  சங்கிலி ஊர்வலத்தின் போது திமுக தொண்டர் சிவப்பிரகாசம் தீக்குளித்தார்.

இவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 60 வயதாகும் சிவப்பிரகாசம் திமுகவின் முன்னாள் சைதாப்பேட்டை பகுதி பிரதிநிதி.  தற்போது சிட்டிபாபு நினைவு மன்ற செயலாளர். சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் கணக்காளராக பணியாற்றி 1999ல்(வி.ஆர்.எஸ்) ஓய்வு பெற்ற சிவப்பிரகாசம் திமுகவின் தீவிர தொண்டர்

முல்லைத்தீவிலிருந்து அழைத்துவரப்பட்டோரில் 442 பேர் வவுனியாவுக்கு அனுப்பிவைப்பு

trico-hospital.gifநேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிவரை, முல்லைத்தீவிலிருந்து கப்பலில் திருகோணமலைக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் அழைத்துவரப்பட்ட காயமடைந்த 1212 பொதுமக்களில் 442 பேர் வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தோர் நலன்புரி முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். வெளிமாவட்டங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள காயமடைந்த வன்னி மக்களின் எண்ணிக்கை 437. அதன் விபரம் வருமாறு:

பொலன்னறுவை178, கந்தளாய்160, தம்பலகமம்07, கொழும்பு தேசிய ஆஸ்பத்திரி மற்றும் கண்டி போதனா வைத்தியசாலை32. திருகோணமலை ஆஸ்பத்திரியில் 322 பேரும் திருகோணமலை மெதடிஸ்த மகளிர் கல்லூரியில் 35 பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பெப்ரவரி 11 தொடக்கம் பெப்ரவரி 19 ஆம் திகதிவரை திருகோணமலை ஆஸ்பத்திரியில் சத்திரசிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்ட காயமடைந்த வன்னி மக்களின் எண்ணிக்கை 490 ஆகும். திகதிவாரியாக விபரம் வருமாறு: பெப்ரவரி 11 முதல் 17 வரை 394 பேர், பெப்ரவரி 1868 பேர், பெப்ரவரி1928.

முல்லைத்தீவில் இருந்து கப்பல் மூலம் திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்ட வன்னி மக்களின் எண்ணிக்கை 1212 ஆகும். திகதிவாரியாக விபரம் வருமாறு. பெப்.11-368, பெப் 12-404, பெப் 16-440. இவர்களில் இருவர் மட்டுமே திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் உயிரிழந்தனர். ஒருவர் ஆசிரியர் மற்றவர் இன்னும் அடையாளங் காணப்படவில்லை.

புதுக்குடியிருப்பை கைப்பற்றும் முயற்சியில் படையினர் தீவிரம்

truck.jpgமுல்லைத் தீவில் விடுதலைப்புலிகள் வசமிருக்கும் கடைசி நகரான புதுக்குடியிருப்பை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. புதுக்குடியிருப்பு நகரை தற்போது படையினர் சுற்றிவளைத்து வருவதாகவும் அப்பகுதியில் கடும் மோதல்கள் நடைபெற்று வருவதாகவும் படையினர் கூறுகின்றனர்.

பரந்தன் முல்லைத்தீவு வீதிகளில் (ஏ35) பரந்தனுக்கு தென்கிழக்கே சுமார் 35 கிலோமீற்றர் தூரத்தில் புதுக்குடியிருப்பு உள்ளது. இந்த வீதியிலுள்ள புதுக்குடியிருப்பு நகர் மட்டுமே தற்போது புலிகள் வசமிருப்பதாகவும் படையினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில தினங்களாக புதுக்குடியிருப்புக்கு மேற்கே படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வின் மூலம், புதுக்குடியிருப்புக்கு மேற்கே சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரத்திலிருந்த அம்பலவன் பொக்கணைப் பகுதியை நேற்று முன்தினம் வியாழக்கிழமை படையினர் கைப்பற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தற்போது அம்பலவன் பொக்கணைப் பகுதியில் நிலைகொண்டுள்ள படையினர் அங்கிருந்து மேலும் முன்னேறி புதுக்குடியிருப்பு நகருக்குள் நுழைய முயற்சித்து வருவதாகவும் புதுக்குடியிருப்பு நகரை தற்போது படையினர் வடக்கு, வடமேற்கு மற்றும் மேற்கு திசைகளில் சுற்றிவளைத்து வருவதாகவும் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை இந்த மூன்று முனைகளிலும் 58 ஆவது படையணி புலிகளுடன் கடும் சமரில் ஈடுபட்டதாகவும் இதில் புலிகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் படையினர் கூறுகின்றனர்.  இப் பகுதிகளில் தொடர்ந்தும் கடும் சமர் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இராணுவ உதவிகளை நிறுத்துங்கள்’ இந்தியாவுக்கு கூறும் இலங்கை அரசியல்வாதி

Srithunga_Jeyasuriyaஇலங்கைப் படையினருக்கான சகல இராணுவ உதவிகளையும் இந்தியா உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்து தமிழ் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவதற்கு உதவ வேண்டும் என்று இலங்கை அரசியல்வாதியான சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை புதுடில்லியில் சிவில் சமூக குழுக்களின் ஏற்பாட்டில் இந்திய பத்திரிகை கழகத்தில் கூட்டமொன்று இடம்பெற்றது.
அக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சிறிதுங்க ஜயசூரிய, இலங்கை அரசாங்கத்திற்கான தனது சகல இராணுவ உதவிகளையும் நிறுத்துவதன் மூலம் இந்திய அரசு சாதகமான முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று கூறியதாக “இந்து’ பத்திரிகை நேற்று தெரிவித்தது.

வடபகுதியில் இலங்கைப் படையினர் மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கைகளுக்கு இந்தியா உதவி வருவதாக ஜயசூரிய குற்றஞ்சாட்டியுள்ளார். விடுதலைப்புலிகளுடன் 21/2 இலட்சம் தமிழ் பொதுமக்கள் அகப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளதுடன் முழு அளவிலான தாக்குதலை இலங்கைப் படையினர் மேற்கொண்டால் படுகொலை இடம்பெறும் என்று அஞ்சப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இப்பிரச்சினை தமிழர் விவகாரம் மட்டும் அல்ல, இது அதிகளவிலான மனித உரிமைகள் விவகாரமாகும். இதற்கு தீர்வு காண நாம் யாவரும் எம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று மனித உரிமைகளுக்கான தெற்காசிய மன்றத்தின் பொதுச் செயலாளர் தபான் போஸ் குறிப்பிட்டார்.

தமிழ்நாடு பெண்கள் அமைப்பு, ஊடகங்கள், சமூக ஆராய்ச்சிக்கான ஜோஷி அதிகாரி நிறுவனம், சட்டப் போராட்டம், இன்சாவ், ஒழுங்குபடுத்தப்படாத தொழிலாளருக்கான தேசிய போராட்டக்குழு, நிர்மான் மஸ்தூர் பஞ்சாயத்து சங்கம் ஆகியவையும் இக்கூட்டத்தில் பங்குபற்றின