வன்னியிலிருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு இந்தியாவின் உதவியை ஏற்க இலங்கை தயார்

puthumaattalan-hospital.gifமோதல் பகுதிகளில் சிக்குண்டிருக்கும் பொதுமக்களை வெளியேற்றுவதற்கு உதவுவதற்கு தயாராக இருப்பதாக இந்திய அரசாங்கம் அறிவித்திருப்பதை ஏற்றுக்கொள்ள விரும்புவதாக இலங்கை தெரிவித்திருக்கின்றது.

பொதுமக்களின் துன்பம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் அதிகளவு அக்கறைகொண்டுள்ளது என்றும் இது தொடர்பான இந்தியாவின் உணர்வுகளை நாங்களும் பகிர்ந்துகொள்கின்றோம் எனவும் புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதுவர் சி.ஆர்.ஜயசிங்க தெரிவித்துள்ளார். பொதுமக்களை வெளியேற்றுவது தொடர்பான தனது ஆர்வத்தை இந்தியா முறைப்படி வெளியிட்டுள்ளது. இந்தியா போன்ற நட்பு நாடுகளின் உதவியை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்கிறோம் என்று ஜயசிங்க கூறியுள்ளார். ஆனாலும் களநிலை யதார்த்தத்திலேயே இது தொடர்பான தீர்மானம் தங்கியிருப்பதாக கொழும்பு தெரிவித்துள்ளது.

வெளியேற்றும் திட்டம் தொடர்பான விபரங்கள் பின்னர் தயாரிக்கப்படும். இது களநிலைவரத்தைப் பொறுத்ததாகும். பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் அரசின் திட்டத்துக்கு புலிகள் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர் என்றும் ஜயசிங்க கூறியுள்ளார்.

சகல பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதில் நாம் உறுதியாகவுள்ளோம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை, புலிகள் ஆயுதங்களை கைவிட வேண்டும் என்றும் வன்னியில் மோதலுக்கிடையே அகப்பட்டுள்ள பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு இந்தியா உதவத் தயாரெனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி பாராளுமன்றத்தில் தெரிவித்ததை தூதுவர் ஜயசிங்க வரவேற்றுள்ளார்.

“இதுவொரு ஆக்கபூர்வமான அறிக்கை. களநிலை யதார்த்தத்தை மிகச்சரியாக பிரதிபலிக்கும் அறிக்கையாக அது உள்ளது. சமாதானம், நல்லிணக்கம் தொடர்பாக முன்னோக்கிச் செல்வதை வெளிப்படுத்தும் அறிக்கை அதுவெனவும் ஜயசிங்க கூறியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *