செய்திகள்

செய்திகள்

செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது நாட்டுப்பற்றுள்ள அனைவரின் கட்சி

mahinda-rajapaksha.jpgமுப்பது வருட காலம் தலைவிரித்தாடிய பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்க முடிந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது நாட்டுப் பற்றுள்ள அனைவரினது கட்சியாக மாறியுள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழு மற்றும் அகில இலங்கை செயற்குழு உறுப்பினர்களுக்கான கூட்டம் நேற்று அலரிமாளிகையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி தொடர்ந்தும் குறிப்பிடுகையில்:- படையினர் மீட்டுத் தந்த நாட்டை அபிவிருத்தி செய்யும்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பிரதான பொறுப்புள்ளது. ஆகவே அர்ப்பணிப்புடன் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

நாட்டை பயங்கரவாதப் பிடியிலிருந்து மீட்டெடுத்த பெருமை எமது கட்சியையே சாரும் எனக் கூறினார்.

மேற்படி கூட்டத்தில் ஜனாதிபதியையும் படை வீரர்களையும் கெளரவிப்பது தொடர்பாக இரண்டு யோசனைகள் முன்வைக்கப்பட்டன. இரண்டு யோசனைகளும் ஏகமனதாக ஏற்றுக்¦¡ள்ளப்பட்டன. ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற மேற்படி கூட்டத்தில் இன்னும் பல யோசனைகள் முன்வைக்கப்பட்டு அவையும் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டன.

அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை சுதந்திரக் கட்சியின் உபதலைவராக நியமிப்பதற்கு முன்மொழியப்பட்ட யோசனையும் எல்லோராலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

எதிர்வரும் தேர்தல்களின்போது கட்சி முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் வேலைத் திட்டங்கள் குறித்து ஆராயுமுகமாக கட்சியின் 19வது தேசிய சம்மேளன மாநாட்டை எதிர்வரும் 12ம் திகதி நடத்துவதற்கும் முடிவெடுக்கப்பட்டது.

இலங்கை விஷயத்தை சிறப்புப் பிரச்சினையாக எடுத்துக் கொள்ள வேண்டும்’’ – கருணாநிதி

karunanithi.jpgஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை அரசு தாக்கல் செய்துள்ள வரைவுத் தீர்மானம் தொடர்பாக, இந்தியா பொருத்தமான முடிவெடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் கருணாநிதி. “ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இலங்கை அரசு தாக்கல் செய்துள்ள தீர்மானம், இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானது என்று உலகில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே, இலங்கைத் தமிழர்களின் உணர்வுகளையும், அவர்களது எதிர்கால நலனையும் கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தில் இந்தியா பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’ என்று அந்தக் கடிதத்தில் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

“ஒரு பக்கம், இன்னொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவது தொடர்பான கேள்வி எழுந்தாலும், இலங்கை விஷயத்தை சிறப்புப் பிரச்சினையாக எடுத்துக் கொள்ள வேண்டும்’’ என்றும் தமிழக முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் தீர்மானத்தை இந்தியா ஆதரித்தால், இதுவரை இலங்கை செய்த கொடுமைகளை எல்லாம் இந்தியா ஆதரிப்பதாகத் தான் அர்த்தம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கை நிலவரம் தொடர்பாக ஐ நா கூட்டம்

vanni-0001.jpgஇலங்கை நிலவரம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலின் சிறப்பு கூட்டம் நேற்று ஜெனீவாவில் தொடங்கியது.

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக எழும் குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை அரசு விசாரணைகள் நடத்த வேண்டும் எனக் கோரும் முகமாக 17 நாடுகள் ஐ நா வின் மனித உரிமை கவுன்சிலில் ஒரு முன்மொழிவை வைத்தன. இவ்வாறு கோரியுள்ள 17 நாடுகள் பெரும்பாலானவை ஐரோப்பிய நாடுகள், சில லத்தீன் அமெரிக்க நாடுகள்.

ஆனால் இவ்வாறு அந்த 17 நாடுகள் வைத்திருக்கும் பிரேரணைக்கு எதிராக தமது தரப்பு கருத்துக்களை எடுத்துக் கூறும் விதமாக இலங்கை அரசும் ஒரு வரைவு அறிக்கையை தயார் செய்துள்ளது. இதற்கும் சிலருடைய ஆதரவு கிடைத்துள்ளது.

இலங்கையில் 26 வருடங்களாக அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதல்களின் போது கடுமையான மனித உரிமை மீறல்களைச் செய்ததாக இருதரப்பு மீதும் குற்றங்கள் சாட்டப்படுகின்றன.

எனவே இது தொடர்பில் சுயாதீனமான ஒரு விசாரணை நட்த்தப்பட வேண்டும் என்றும், சுமார் மூன்று லட்சம் பேர் இடம் பெயர்ந்து தங்கியுள்ள முகாம்களுக்கு, எந்தவிதமான தங்குதடையின்றி சென்று வர சர்வதேச தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட வேண்டும் என தற்போது மனித உரிமை அமைப்புகள் கோரிவருகின்றன

புலிப் பயங்கரவாதத்தின் தோற்கடிப்பு – சர்வதேசத்திற்கும் கிடைத்த பெருவெற்றி

maithripalasirisena.jpgபுலிப் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமை இலங்கைக்கு மட்டும் மல்ல சர்வதேச நாடுகளுக்கும் கிடைத்திருக்கும் பாரிய வெற்றியாகும் என்று விவசாய அபிவிருத்தி, கமநல சேவைகள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.

நிதிச் சட்டங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், புலிகள் தரைவழிப் படையை மட்டுமல்லாமல் கடல், ஆகாய பிரிவுகளையும் கொண்டிருந்தனர்.

அவர்களிடம் விமானங்கள் இருந்தன. உலகில் எந்தவொரு பயங்கரவாத இயக்கமுமே இவ்வாறான கூட்டமைப்பை கொண்டிருக்கவில்லை.  அதனால் புலிப் பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க முடியாது என்ற அபிப்பிராயம் வளர்ந்திருந்தது. எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் எமது வீரதீர பாதுகாப்பு படையினர் புலிப் பயங்கரவாதத்தை முழுமையாக தோற்கடித்து நாட்டுக்கும், முழு உலகிற்கும் கெளரவத்தைத் தேடிக்கொடுத்துள்ளனர். அவர்களை நாம் கெளரவிக்கின்றோம். மீண்டும், மீண்டும் நன்றி தெரிவிக்கிறோம்.

இந்த சந்தர்ப்பத்தில் எதிரணியினர் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது. அதனால் அவசரகாலச் சட்டத்தை தடையிலிருந்து நீக்கவேண்டும் என்று கோரியுள்ளனர். புலிப் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட உடனேயே ஐ. தே. க. இவ்வாறான கோரிக்கையை என்ன நோக்கத்திற்காக முன்வைத்திருக்கிறது என்பதை நாமறியவில்லை. நாட்டின் நிலைமையை சரியான முறையில் அறிந்து கொண்ட அவர்கள் இவ்வாறான கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்களா எனக் கேட்கத் தோன்றுகிறது.

அவசர காலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பல புலிச் சந்தேக நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். விசாரணைகளும் தொடர்கின்றன. இதேநேரம், தலைமறைவாகியுள்ள புலிப் பயங்கரவாதிகளையும் தேடிக் கைது செய்ய வேண்டிய தேவையும் இருக்கிறது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டா ஐ.தே.க இக்கோரிக்கையை முன்வைத்திருக்கிறது.

ஆகவே, நாம் அரசியல் பேதங்களை மறந்து தேசம் என்ற வகையில் சவால்களை வெற்றிகொண்டு முன்னேற முயற்சி செய்ய வேண்டிய காலமிது. தேசிய பொருளாதாரத்தை முன்னிலைப்படுத்தி நாம் முன்னேறவேண்டும்.

“அரச பெருந்தோட்டங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை; குற்றச்சாட்டு’

sri-lanka-upcountry.jpg அரசாங்கத்திற்குச் சொந்தமான பெருந்தோட்டங்கள் முறையாகப் பராமறிக்கப்படுவதில்லை. இத் தோட்டங்களை முறையாக அபிவிருத்தி செய்வதற்கும் தொழிலாளர்களின் உரிமைகளை உரிய முறையில் பெற்றுக்கொடுப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியனின் பொதுச் செயலாளர் எஸ்.இராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பன்விலை லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியன் காரியாலயத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்த பேசுகையில்;

தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த மார்ச் மாத இறுதியோடு கூட்டு ஒப்பந்தம் காலாவதியானதால் சம்பள உயர்வு சம்பந்தமாக எட்டப்படும் முடிவு கடந்த ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்தே அமுலுக்கு வருவதாகவிருக்க வேண்டும் என்பதையும் முதலாளிமார் சம்மேளனத்திடம் வலியுறுத்தியுள்ளோம்.

அரசாங்கத்துக்குச் சொந்தமான தோட்டங்கள் முறையாகப் பராமறிக்கப்படாமல் சீரழிந்து வருகிறது. ஆரம்ப காலங்களில் மிகவும் நல்ல முறையில் இயங்கிவந்த அநேகமான தோட்டங்கள் தற்போது காடுகளாகியுள்ளன. முறையான பராமறிப்பின்றிக் காணப்படுகிறது. இத்தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அவர்களிடமிருந்து மாதாமாதம் அறவிடப்படும் சேமலாப நிதியைக் கூட நிர்வாகங்கள் மத்திய வங்கிக்கு அனுப்புவதில்லை. சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி, சேவைக்காலப் பணம் போன்றவற்றை தொழிலாளர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு தொழிற் சங்கங்கள் தொடர்ந்தும் தொழிற்காரியாலயங்களின் மூலம் நீதிமன்றங்களையே நடவேண்டியுள்ளது.

இதன் காரணமாகத் தொழிலாளர்கள் தங்களின் கொடுப்பனவுகளை காலக்கிரமத்தில் பெற்றுக் கொள்வதில் வீண் தாமததிற்கும் அசௌகரியங்களுக்கும் ஆளாகி வருகின்றனர். இந்நிலை தொடர்ந்தும் நீடிக்கப்படக்கூடாது. இத் தோட்டங்களை முறையாக அபிவிருத்தி செய்து பாதுகாப்பதற்கும் தொழிலாளர்களின் உரிமைகளைப் உரிய முறையில் பெற்றுக்கொடுப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இத்தோட்டங்களை அரச நிறுவனங்களால் முறையாக நடத்தமுடியாதென்றால், இவற்றை முறையாக நடத்தக்கூடிய சிறந்த தனியார் கம்பனிகளை இனங்கண்டு இத்தோட்ட நிர்வாகங்களை அவர்களிடம் ஒப்படைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்வது உசிதமானதாகும்.

உயர்வு சம்பந்தமான பேச்சுவார்த்தையை நடத்த இது உகந்த தருணமல்ல என்று முதலாளிமார் சம்மேனமும் தொழில் அமைச்சும் அபிப்பிராயம் தெரிவித்துள்ள இந்த சந்தர்ப்பத்திலேயே நாம் சம்பள உயர்வு சம்பந்தமான பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளோம். பேச்சுவார்த்தையின் மூலம் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கே முயற்சித்து வருகிறோம். சம்பள உயர்வு சம்பந்தமாக எட்டப்படும் முடிவு 2009 ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்தே அமுல் நடத்தப்படவேண்டும் என்பதையும் நாம் வலியுறுத்தியிருக்கிறோம் என்றார்.

கொழும்பு பிரதம நீதிவான் முன் தயாமாஸ்ரர், ஜோர்ஜ் ஆஜர்

விடுதலைப் புலிகளின் ஊடக ஒருங்கிணைப்பாளராக இருந்த தயா மாஸ்டர் எனும் வேலாயுதம் தயாநிதி மற்றும் மொழி பெயர்ப்பாளராக செயற்பட்டிருந்த ஜோர்ஜ் எனும் வேலுப்பிள்ளை குமார் பஞ்சரத்தினம் இருவரும் கொழும்பு பிரதம நீதிவான் நிஷாந்த அப்புஆராச்சி முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டதை தொடர்ந்து, எதிர்வரும் ஜூன் மாதம் 26 ஆம் திகதி இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு நீதிவான் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

இவர்கள் இருவரையும் கொழும்பு பிரதம நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தி, விசாரணைகள் தொடர்பாக நீதிவானுக்கு அறிக்கை சமர்ப்பித்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர்.

தயா மாஸ்டர் விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்க ஊடக பேச்சாளராகவும், மொழி பெயர்ப்பாளராகவும் செயற்பட்டுள்ளார். படையினரின் மனிதாபிமான நடவடிக்கையின் போது கட்டுப்பாடற்ற பிரதேசத்தில் இருந்து வந்த மக்களுடன் இவர்கள் இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி வந்து, பின்னர் இராணுவத்திடம் சரணடைந்தனர்.

இதனையடுத்து, இருவரும் ஓமந்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் விசாரணை செய்யப்பட்டு அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டது. புலிகள் அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்கள் என்ற வகையில் இவர்கள் இருவரும், அந்த அமைப்பை அபிவிருத்தி செய்ய பல உதவி, ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளனர்.

தயா மாஸ்டர் ஊடக பேச்சாளராகவும் மொழி பெயர்ப்பாளராகவும் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு உதவியுள்ளார். இவர்களது, செயற்பாடுகள் பொது, பாதுகாப்புக்கும், மக்களின் அமைதிக்கும் பங்கம் விளைவித்து விடுவதை தடுக்கும் வகையிலேயே கைது செய்யப்பட்டனர். பின்னர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரது உத்தரவின் பேரில் தடுப்புப் காவல் உத்தரவின் பேரில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் மேம்பாட்டுக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நபர்களுக்கும் ஊடகங்களுக்கும் வெளியிட்ட கருத்துக்கள் மற்றும் அவர்களது, செயற்பாடுகள் தொடர்பான விடயங்களை கண்டறிய விசாரணை நடத்தப்படுகின்றது.

சுகயீனம் காரணமாக இருவருக்கும் மருந்துகள் வாங்கிக் கொடுக்கப்பட்டதுடன், சட்ட வைத்திய அதிகாரியிடமும் காண்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது? என்று தெரிவித்துள்ளனர்.  அத்துடன், தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் இருவரையும் நேரில் பார்வையிட்ட கொழும்பு பிரதான நீதிவான், இருவரையும் ஜூன் மாதம் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறும், விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை அன்றைய தினம் மன்றுக்கு சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

நேபாளத்தின் புதிய பிரதமாரானார் மாதவ் குமார்

madhav_nepal.jpg நேபாளத்தில் மூத்த கம்யூனிஸ அரசியல்வாதியான மாதவ் குமார் நேபாள் நாட்டின் புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.

நேபாளத்தில் பிரதமர் பதவியில் இருந்து பிரசண்தா பதவி விலகியதை ஒட்டி உருவான அரசியல் நெருக்கடிக்குப் பின்னர் இந்த பதவியேற்பு நடந்துள்ளது. பிரதமரைத் தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பில் நாடாளுமன்றத்தில் மிகப் பெரியக் கட்சியாக விளங்கும் மாவோயியவாதிகள் கலந்துகொள்ளாமல் போனதை அடுத்து மாதவ குமார் நேபாள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இராணுவத்தின் தலைவரை பதவி நீக்கம் செய்ய முந்தையப் பிரதமர் பிரச்சண்டா செய்த முயற்சியை நாட்டின் அதிபர் ராம் பரன் யாதவ் தடுத்ததை அடுத்து மாவோயியத் தலைவர் பிரச்சண்டா பதவி விலகியிருந்தார்.

வடகொரியா இரண்டாவது அணுகுண்டு பரிசோதனை

statetv_grab-korutroket.jpgவட கொரியாவினால் செய்யப்பட்ட இரண்டாவது அணுகுண்டு சோதனையை அதன் நெருக்கமான இராஜதந்திர கூட்டாளி நாடான சீனா விமர்சித்துள்ளது.நிலத்தடியில் வைத்து செய்யப்பட்டுள்ள இந்த அணுகுண்டு சோதனையை தாம் திட்டவட்டமாக எதிர்ப்பதாக சீனா கூறியுள்ளது. நாட்டின் வடகிழக்குப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த அணுகுண்டு சோதனை வெற்றிகரமானது என்று வடகொரியா புகழ்ந்துள்ளது.

அந்த வெடிப்பின் சக்தியானது 1945ல் நாகசாக்கியில் போடப்பட்ட அணுக்குண்டுக்கு ஒப்பானது என்று ரஷ்ய இராணுவ அறிக்கை மதிப்பிட்டுள்ளது. மூன்று வருடங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட வடகொரியாவின் அணுச் சோதனையை விட இது பெரியதாகும். சிறிது நேரத்தின் பின்னர் வடகொரியா மூன்று குறுந்தூர ஏவுகணைகளையும் பரிசோதித்ததாக தென்கொரிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

காலஞ்சென்ற கனகசபை பத்மநாதனின் வெற்றிடத்திற்கு டாக்டர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை

காலஞ்சென்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதனின் வெற்றிடத்திற்கு டாக்டர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம் செய்யப்படவிருக்கின்றார்.

இறுதியாக நடைபெற்ற பொதுத் தேர்தலி்ன் முடிவுகளின் படி விருப்பு வாக்குகளின் அடிப்படையில் இந்நியமனத்தை அவர் பெறவிருக்கின்றார்.பிரபல சமூக சேவையாளரான பாண்டிருப்பைச் சேர்ந்த தோமஸ் வில்லியம் தங்கத்துரை கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டதன் மூலமே நேரடியாக அரசியலில் நுழைந்தார்.

இதற்கிடையில் காலஞ்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதனின் இறுதிக் கிரியைகள் நேற்று மாலை தம்பிலுவில் பொது மயானத்தில் நடை பெற்றது.அம்பாறை மாவட்டத்தின் பல பாகங்களிலுமிருந்து பெரும் எண்ணிக்கையிலானோர் இதில் கலந்து கொண்டனர். 

மேற்கு வங்கத்தில் பெரும் புயல் கடும் சேதம், 45பேர் பலி

rain.jpgகொல்கத்தா வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த அய்லா புயல் மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று கரையைக் கடந்தது. இதனால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. 45 பேர் பலியாகியுள்ளனர்.

வங்கக் கடலில் மேற்கு மத்திய பகுதியில் ஒரிசாவின் பாரதீப துறைமுகத்திலிருந்து தென் கிழக்கே 450 கிலோ மீட்டர் தூரத்தில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் தீவிரம் அடைந்து வடக்கு நோக்கி நகர்ந்து நேற்று முன்தினம் காலை பிரதீப்பின் தென் கிழக்கே 350 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டு இருந்தது.

அது மேலும் வலுவடைந்து தீவிர புயல் சின்னமாக மாறி வடக்கு நோக்கி நகர்ந்து சாகர் தீவில் இருந்து 100 கிலோமீட்டர் கிழக்கே மேற்கு வங்காளம்- வங்காள தேசத்துக்கு இடையே நேற்று மாலை கரையை கடக்கலாமென அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக அந்தப் பகுதியில் 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் பலத்த மழை பெய்யும் என்று கொல்கத்தா வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் நேற்று முற்பகல் 11 மணியளவில் அய்லா புயல் கொல்கத்தாவை நெருங்கியது. இதனால் நகரமே வெள்ளக்காடாக மாறியது.