கொல்கத்தா வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த அய்லா புயல் மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று கரையைக் கடந்தது. இதனால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. 45 பேர் பலியாகியுள்ளனர்.
வங்கக் கடலில் மேற்கு மத்திய பகுதியில் ஒரிசாவின் பாரதீப துறைமுகத்திலிருந்து தென் கிழக்கே 450 கிலோ மீட்டர் தூரத்தில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் தீவிரம் அடைந்து வடக்கு நோக்கி நகர்ந்து நேற்று முன்தினம் காலை பிரதீப்பின் தென் கிழக்கே 350 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டு இருந்தது.
அது மேலும் வலுவடைந்து தீவிர புயல் சின்னமாக மாறி வடக்கு நோக்கி நகர்ந்து சாகர் தீவில் இருந்து 100 கிலோமீட்டர் கிழக்கே மேற்கு வங்காளம்- வங்காள தேசத்துக்கு இடையே நேற்று மாலை கரையை கடக்கலாமென அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக அந்தப் பகுதியில் 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் பலத்த மழை பெய்யும் என்று கொல்கத்தா வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில் நேற்று முற்பகல் 11 மணியளவில் அய்லா புயல் கொல்கத்தாவை நெருங்கியது. இதனால் நகரமே வெள்ளக்காடாக மாறியது.