எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

குளவி கொட்டி 38 பேர் பாதிப்பு; சிகிரிய குன்றில் சம்பவம் காப்பாற்ற சென்ற விமானப்படை வீரர்களும் ஆஸ்பத்திரியில்

சிகிரியாவில் குளவி கொட்டி பாதிக்கப்பட்ட 38 பேர் சிகிச்சைக்கென சிகிரிய கிராமிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக ஆஸ்பத்திரி பொறுப்பாளர் டாக்டர் டப்ளியு. ஜி. ஜயசிங்க நேற்றுத் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பாடசாலை மாணவர்கள் 18 பேரும், விமானப் படையினர் ஐவரும், வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் இருவரும், ஒரு பொலிஸாரும் அடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்:- சிகிரிய குன்றில் குளவி கொட்டி 38 பேர் சிகிச்சை பெறவந்தனர். இவர்களில் பத்து பேர் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வெளியேறினர்.

குளவி கொட்டிய மாணவர்களைக் காப்பாற்றச் சென்ற ஐந்து விமானப் படையினரும், ஆரம்ப சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர். அத்தோடு ஒரு உல்லாச பயணியும் சிகிச்சை பெற்று வெளியேறி இருக்கிறார்.

இதேநேரம் ராஜாங்கணை யாயட்ட பாடசாலை மாணவர்கள் 18 பேரும், ஒரு உல்லாசப் பயணியும், உல்லாச ஹோட்டலொன்றின் இரு ஊழியர்களும், உல்லாச பயணிகளுக்கு வழிகாட்டும் நபர் ஒருவரும் ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர் என்றார்.

திருமலை வைத்தியசாலையில் தொடர்ந்தும் ஐவருக்கு சிகிச்சை; மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பிவைப்பு

foods.jpgதிரு கோணமலையிலுள்ள பேக்கரி ஒன்றில் பாண் மற்றும் பணிஸ் போன்ற மாப்பண்டங்களை உட் கொண்டு பாதிக்கப்பட்டவர்களில் ஐவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக திருமலை பொது வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் டாக்டர் அனுஷியா ராஜ்மோகன் நேற்றுத் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த நபரின் சடலம் நேற்று காலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த ப்பட்டதுடன், அச்சடலத்திலிருந்து பெறப்பட்ட மாதிரிகள் உடற்கூற்றியல் பிரிவுக்கு அனுப்பிவைக்கப் பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், பாண் மற்றும் பணிஸ் உட் கொண்டதால் பாதிக்கப்பட்ட 148 பேர் நேற்று முன் தினம் சிகிச்சைக்காக வந்தனர். இவர்களில் 89 பேர் மாணவ/மாணவியராவர்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஐவர் தான் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் இருவர் சிறுவராவர். இதர மூவரும் மீனவர்கள். ஏனையவர்கள் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர். இச்சம்பவத்தில் உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது என்றார்.

இலங்கை இனநெருக்கடிக்கு கௌரவமான தீர்வுக்கு காங்கிரஸ் வலியுறுத்தும்

இலங் கையின் இனப்பிரச்சினைக்கு கௌரவமான தீர்வைக்காண்பதற்கு காங்கிரஸ் கட்சி வலியுறுத்தும் என்று அக்கட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளது.  பிராந்திய அபிலாஷைகளில் உணர்வு பூர்வமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் கட்சி, இலங்கையின் இனநெருக்கடிக்கு சகல சமூகங்களினதும், விசேடமாக தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளை உத்தரவாதப்படுத்தும் கௌரவமான தீர்வை கட்சி வலியுறுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.

அத்துடன் ஐக்கிய இலங்கைக்குள் சமவுரிமைகளை உறுதிப்படுத்தும் தீர்வையே காங்கிரஸ் கட்சி வலியுறுத்துவதாகவும் அக் கட்சி கூறியுள்ளது. கட்சியின் வெளிநாட்டுக் கொள்கையானது சுயாதீனமானது என்றும் அதேசமயம், பொறுமையுடன் ஆனால் வலுவான இராஜதந்திரத்தை மும்பைத் தாக்குதல் விவகாரத்தில் கையாண்டதாகவும் அக்கட்சி கூறியுள்ளது.

இதேவேளை, இலங்கை உட்பட இந்தியாவின் அயல் நாடுகள் ஸ்திரமின்றி இருப்பதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் செவ்வாய்க்கிழமை கவலை தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்து உரையாற்றிய இந்தியப்பிரமர் இந்தியாவை சூழவுள்ள சவால்களை நான் பார்த்தால், “ஸ்திரமின்மையை காண்கிறேன். பாகிஸ்தான் பயங்கரவாதத்தை எதிர்நோக்கியுள்ளது. நேபாளம், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும் இடம்பெறுபவை தெற்காசியாவின் எதிர்காலம் குறித்த கவலைக்கு காரணமாக உள்ளன என்றும் கூறினார்.

நாடு பலமானதாகவும் இலக்குடைய அரசாங்கத்தையும் கொண்டிருந்தால் ?தெற்காசியாவை சமத்துவம் மிக்கதாகவும் அதிக சுபிட்சமுடையதாகவும் மீளக்கட்டியெழுப்புவதற்கான ஊக்குவிப்பு சக்தியாக இந்தியாவால் விளங்கமுடியும்’ என்றும் மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.

பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா இனவாத நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுப்பதாகவும் மக்கள் மத்தியில் பிரிவினையை தூண்டுவதாகவும் அவர் சாடியுள்ளதுடன், பாரதியஜனதாவும் இடதுசாரிகளும் எதிர்மறையான மனப்பாங்குடன் இருப்பதாகவும் இது நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லாது என்றும் கூறியுள்ளார்.

இலங்கையிலிருந்து புகலிடம் கோரும் விண்ணப்பங்கள் 24% அதிகரிப்பு -யு.என்.எச்.சி.ஆர். தெரிவிப்பு

sri-lanka-air-lanka.jpgஇலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் ஏனைய நாடுகளில் இடம்பெறும் யுத்தத்தால் கைத்தொழில் துறை வளர்ச்சியடைந்த நாடுகளில் பொதுமக்கள் புகலிடம் கோருவது அதிகரிக்கும் என்று அகதிகளுக்கான ஐ.நா.உயர்ஸ்தானிகராலயம் (யு.என்.எச்.சி.ஆர்) செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

கடந்த வருடம் ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் கைத்தொழில்துறை வளர்ச்சியடைந்த நாடுகளில் புகலிடம் கோரி 2008 இல் 3 இலட்சத்து 83 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருக்கின்றனர். இது 2007 ஐ விட 12 சதவீதம் அதிகமாகும் என்று அகதிகளுக்கான ஐ.நா.உயர்ஸ்தானிகர் கூறியுள்ளார். ஆப்கான், சோமாலியா நாடுகளிலிருந்தே அதிகளவு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இலங்கையிலிருந்து புகலிடம் கோருவோர் விண்ணப்பங்கள் கடந்த வருடம் 24 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.  புலிகளுடனான யுத்தநிறுத்த உடன்படிக்கையிலிருந்தும் அரசு விலகிக்கொண்டதைத் தொடர்ந்து யுத்தம் மீண்டும் ஆரம்பித்ததால் இலங்கையிலிருந்து புகலிடம் கோருவோரின் தொகை அதிகரித்திருப்பதாக யு.என்.எச்.சி.ஆர். தெரிவித்துள்ளது.

165 அதிபர்களால் மட்டுமே பதவி விலகல் கடிதங்கள் கையளிப்பு

மூவாயிரம் அதிபர்கள் தமது விலகல் கடிதத்தை வழங்குவதாக கூறியபோதும் 165 பேர் மட்டும் நேற்று (25) தமது விலகல் கடிதங்களை கையளித்ததாக கல்வி அமைச்சு நேற்று (25) தெரிவித்தது. கையளிக்கப்பட்ட விலகல் கடிதங்கள் கூட ஏற்றுக்கொள்ளக் கூடியவாறு தயாரிக் கப்பட்டிருக்கவில்லையென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

சேவை மூப்பின் அடிப்படையில் அதிபர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்று தெரிவித்து மூவாயிரம் அதிபர்கள் நேற்று தமது பதவி விலகல் கடிதங்களை அமைச்சிற்கு வழங்க உள்ளதாக இலங்கை ஆசிரியர் தொழில்சார்ந்தோர் தொழிற் சங்கம் அறிவித்திருந்தது. அதிபர்கள் விலகல் கடிதங்களை கையளித்தால் அவற்றை ஏற்கத் தயாராக இருப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் அறிவித்திருந்தார்.

இதன்படி, விலகல் கடிதங்களை கையேற்பதற்கென மேலதிக செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்ததாக கல்வி அமைச்சு கூறியது. ஆனால், பதவி விலகுவதாகக் கூறும் படிவம் ஒன்று கல்வி அமைச்சில் உள்ள சில நபர்களிடம் கையளிக்கப்பட்டிருந்ததோடு அவை ஒழுங்கான முறையில் நிரப்பப்பட்டிருக்கவில்லையென அறிவிக்கப்படுகிறது. சில படிவங்களில் போலியான ஊர், பெயர்கள் இடப்பட்டிருந்தன என கல்வி அமைச்சு தெரிவித்தது.

ஒழுங்கான ஒரு விலகல் கடிதம் கூட கையளிக்கப்பட்டிருக்கவில்லையென கல்வி அமைச்சு கூறியது. இவற்றை உண்மையில் அதிபர்கள் தான் கையளித்தனரா என்ற சந்தேகம் ஏற்படுவதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதிபர்களின் பிரச்சினைகளை தீர்க்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதோடு பொதுச்சேவை ஆணைக்குழுவின் அனுமதி கிடைப்பது தாமதமானதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்தார். பொதுச்சேவை ஆணைக் குழுவின் அனுமதி தற்பொழுது கிடைத்துள்ளதாகவும் விரைவில் அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமெனவும் அவர் கூறினார்.

இதேவேளை, விலகல் கடிதம் கையளிக்க வரும் சகலருக்கும் அமைச்சு வளாகத்திற்குள் சமுகமளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்ததோடு அங்கு வந்திருந்த ஐந்து அதிபர்களுடன் அமைச்சின் மேலதிக செயலாளர் பேச்சு நடத்தியுள்ளார். அதிபர்களின் பிரச்சினையை தீர்க்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை அவர் இங்கு விளக்கியதாக கல்வி அமைச்சு தெரிவித்தது.

எமது உரிமைகளை முழுமையாக பெறுவதற்கு தமிழ் மக்கள் அனைவரும் ஆதரவு வழங்கவேண்டும் -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

minister.jpgஇலங்கை இந்திய ஒப்பந்த பிரகாரம் ஜனநாயக வழிக்கு வந்த நான் தமிழ் மக்களுடைய உரிமைகளை பெறுவதற்காகத் தொடர்ந்தும் உழைப்பேன். அதற்கு மக்களுடைய ஆதரவு தேவையாகும் என சமூக சேவைகள் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வவுனியா நெளுக்குளம் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் பேசும்போது கூறினார்.

தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை அரசியல் ரீதியாகத் தீர்ப்பதற்கு புலிகளுக்கு ஐந்து தடவைகள் நிறையச் சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டது. அவர்கள் அனைத்து சந்தர்ப்பங்களையும் தவறவிட்டார்கள். நானும் கூட ஒரு காலத்தில் ஆயுதமேந்தி போராடியவன். பின்னர் அதன் மூலம் எதனையும் சாதிக்க முடியாது என அறிந்து கொண்டு ஜனநாயக வழிக்குத் திரும்பியவன் எனவும் குறிப்பிட்ட அமைச்சர் தேவானந்தா மேலும் தெரிவித்ததாவது;

ஜனாதிபதியின் பிரதிநிதியாகவும் உங்களின் ஒருவனாக இருப்பதினால் தான் இங்கு வந்துள்ளேன். யுத்தம் எவ்வளவு கஷ்டமானது என்பதனையும் இடம்பெயர்வு என்பது அதனைவிட கஷ்டமானது என்பதையும் உணர்ந்தவன். இடம்பெயர்ந்த மக்களுடைய தேவைகள் என்ன என்பதை ஏற்கனவே அறிந்து கொண்டபோதிலும் இங்குள்ள மக்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தவே நான் வந்துள்ளேன்.

மக்களுடைய உயிர் வாழ்வதற்குரிய உத்தரவாதம் முக்கிய பிரச்சினை. இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வந்துள்ள உங்களுக்கு அந்த உத்தரவாதம் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ளது.

ஜனநாயக வழிக்கு வந்த பின்னர் மக்களுடைய நலன்சார்ந்த விடயங்களை ஆக்கபூர்வமாக தான் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். புலி தலைமையானது தமிழ் மக்களுக்கு நன்மை தரக்கூடிய அனைத்துச் சந்தர்ப்பங்களையும் புறந்தள்ளிவிட்டு அழிவை ஏற்படுத்தும் யுத்தத்தினை நடத்திவருகின்றார்கள். அவர்களுடைய பிடியிலிருந்து விடுபட்டு வரும் மக்கள் இந்தச் சந்தர்ப்பத்தினை சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் இறுதிப் பதவியும் பறிபோனது

chandrika.jpgஇலங் கையின் முன்னாள் ஜனாதிபதியும், முன்னாள் பிரதமர்களின் புதல்வியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வகித்த இறுதிப் பதவியும் பறிபோயுள்ளதாகக் கூறப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பண்டாரநாயக்க குடும்பத்தின் கோட்டையாகக் கருதப்பட்ட அத்தனகல்ல ருவான்புர தொகுதி அமைப்பாளர் பதவியையும் சந்திரிகா இழந்துள்ளார் என இணைய தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினர்களில் முன்னோடியாக சந்திரிகாவின் தந்தை எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. ருவன்புர தொகுதி அமைப்பாளர் பதவியினை சந்திரிகா கடந்த 18 வருட காலமாக வகித்து வந்தார்.

சுமூகமான ஓர் சூழ்நிலையின் கீழே பேச்சுவார்த்தைகளை நடத்த முடியும் ‐ த.தே.கூ:

சுமூகமான ஓர் சூழ்நிலையிலேயே அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பேச்சுவார்த்தைகளுக்கு உந்த சூழலொன்றை உருவாக்கும் தார்மீகப் பொறுப்பு அரசாங்கத்தின் கைகளிலேயே தங்கியுள்ளதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கே.சிறகாந்தா தெரிவித்துள்ளார்.

பல்லாயிரக்கணக்கான எமது மக்கள் பேரவலத்தை எதிர்நோக்கியுள்ள தருணத்தில் உயர் மட்ட அரசியல் பேச்சுவார்த்தைகளில் நன்மை கிட்டும் என்பதில் நம்பிக்கையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் நாளைய தினமே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழர் பிரச்சினை குறித்த இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் தேசியப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்ட அணுகுமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

200000 அப்பாவி சிவிலியன்கள் இன்னல்களை எதிர்நோக்கி வருவதாகவும் மக்கள் பாதுகாப்பை கருத்திற் கொண்டு யுத்த நிறுத்தமொன்று அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வர்ஷா படுகொலை சந்தேக நபர்கள் சார்பாக சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகக்கூடாது திருமலை மக்கள் கோரிக்கை,

Regie_Varsa
திருகோணமலையில் 6 வயது சிறுமி ஜூட் ரெஜி வர்ஷா படுகொலை தொடர்பான சந்தேக நபர்கள் சார்பில் எந்தவொரு சட்டத்தரணியும் ஆஜராகக் கூடாது எனக் கோரி திருகோணமலை நகரப் பிரதேசத்தில் ஓரிரு இடங்களில் பதாதைகள் கட்டப்பட்டுள்ளன.

சிறுமி வர்ஷாவின் கொலையை தமிழ் சிங்கள முஸ்லிம் பறங்கியர் ஆகிய சகல இனமக்களும் கண்டிப்பதாக அப்பதாதைகளில் குறிப்பிட்டு கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் சார்பில் சடத்தரணிகள் எவரும் ஆஜராகக் கூடாது என்று வலியுறுத்தி கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழக பரீட்சைகள் 26 ஆம் திகதி

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை, கலாசார பீட 2007/2008 ஆம் கல்வியாண்டின் 1ஆம், 2ஆம், 3ஆம் மற்றும் 4ஆம் வருடங்களுக்கான அரையாண்டுப் பரீட்சைகள் யாவும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நேர அட்டவணையின் பிரகாரம் நாளை 26 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக நடைபெறுமென கலை, கலாசார பீடாதிபதி செல்வி சி.பொன்னையா தெரிவித்துள்ளார்.

மேலதிக விபரங்களுக்கு மாணவர்கள் பீடாதிபதியுடனோ (தொலைபேசி இலக்கம் 0652240165/0652240971) அல்லது சிரேஷ்ட உதவிப் பதிவாளர்/பரீட்சைகள் பிரிவுடனோ (தொலைபேசி இலக்கம் 0652240584) உடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.