சுமூகமான ஓர் சூழ்நிலையிலேயே அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பேச்சுவார்த்தைகளுக்கு உந்த சூழலொன்றை உருவாக்கும் தார்மீகப் பொறுப்பு அரசாங்கத்தின் கைகளிலேயே தங்கியுள்ளதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கே.சிறகாந்தா தெரிவித்துள்ளார்.
பல்லாயிரக்கணக்கான எமது மக்கள் பேரவலத்தை எதிர்நோக்கியுள்ள தருணத்தில் உயர் மட்ட அரசியல் பேச்சுவார்த்தைகளில் நன்மை கிட்டும் என்பதில் நம்பிக்கையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் நாளைய தினமே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழர் பிரச்சினை குறித்த இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் தேசியப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்ட அணுகுமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
200000 அப்பாவி சிவிலியன்கள் இன்னல்களை எதிர்நோக்கி வருவதாகவும் மக்கள் பாதுகாப்பை கருத்திற் கொண்டு யுத்த நிறுத்தமொன்று அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.