எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

நேற்று இரவு மட்டக்களப்பில் “வார உரைகல்” பத்திரிகை ஆசிரியர் மீது தாக்குதல்

vaarauraika.jpgகாத்தான்குடி பிரதேசத்தில் டீன் வீதியில் இருந்து வெளிவரும் ‘வார உரைகல்’ வார இதழின் ஆசிரியர் புவி ரஹ்மத்துல்லா இனந்தெரியாத ஆயுதக்குழுவினரால் தாக்கப்பட்டுள்ளதுடன் அலுவலகமும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.  நேற்று புதன்கிழமை இரவு 10.30மணியளவில் இவரது வீட்டுக்கு முகத்தை மூடியநிலையில் வந்த ஆயுதக்குழுவினர் இவர் மீது சரமாரியான தாக்குதலை நடத்தியுள்ளனர். அத்துடன் அவரது வீட்டுடன் இணைந்ததாகவுள்ள அலுவலகத்துக்குள்ளும் நுழைந்த ஆயுதக்குழுவினர் அங்கிருந்த கணணி உட்பட அலுவலக ஆவணங்களை தீயிட்டு கொளுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமை அமைப்புச் செயலாளரின் பிரதிநிதி இன்று இலங்கை வருகிறார்.

walter_kaelin_.jpgஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் இடம்பெயர்ந்தோருக்கான மனித உரிமை அமைப்புச் செயலாளரின் பிரதிநிதியான வோல்டர் கீலின் இன்று இலங்கை வரவுள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் சங்கம் தெரிவித்துள்ளது.  இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இங்கு வரும் ஐ.நா. பிரதிநிதி இடம்பெயர்ந்தோர் தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் குறித்து அரசின் உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளார்.

இவர் இலங்கையில் தங்கியிருக்கும் நாட்களில் இங்கு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஐ.நா. வின் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநதிகள் ஆகியோரைச் சந்திக்கவுள்ளதோடு இடம்பெயர்ந்தோரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். சுவிட்சர்லாந்திலுள்ள பேர்ன் பல்கலைக் கழக சட்ட பீடத்தின் யாப்பு மற்றும் சர்வதேச பொதுச் சட்டத்துறை பேராசிரியரான வோல்டர் கீலின்,  கடந்த 2004ஆம் ஆண்டு முதல் ஐ.நா.வின் இடம்பெயர்ந்தோருக்கான மனித உரிமை அமைப்பு செயலாளரின் பிரதிநிதியாகக் கடமையாற்றுவதோடு இவ்வமைப்பின் உறுப்பினராகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

புதுக்குடியிருப்பு பச்சப்புல்மூடை படையினரின் கட்டுப்பாட்டில் – பாதுகாப்பு அமைச்சு தகவல்

armyvictory.gifபுதுக் குடியிருப்புக்கு கிழக்காக அமைந்துள்ள பச்சப்புல்மூடை பிரதேசத்தை இராணுவத்தினர் நேற்றுக் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இப்பிரதேசத்தில் புலிகளுக்கெதிரான தாக்குதல்களை மேற்கொண்டு வரும் இராணுவத்தின் 58ஆவது படைப் பிரிவினர் பயங்கரவாதிகளுக்கு கடும் சேதங்களை ஏற்படுத்தி நேற்றுப் பிற்பகல் பச்சப்புல்மூடையை தமது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

படையினரின் தாக்குதல்களுக்கு முகம்கொடுக்க முடியாத புலிகள் இறந்த தமது சகாக்களின் உடல்களையும் விட்டுவிட்டு இங்கிருந்து தப்பிச்சென்றதாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பகுதியில் படையினர் நடத்திய தேடுதலின்போது 19 எல்.ரீ.ரீ.ஈ.யினரின் உடல்களையும் 19 ரி-56 ரக துப்பாக்கிகள் உட்பட சில ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

10 ஆயிரம் ரூபாவுக்கான புலமைப் பரிசில் – படை வீரர்களின் 250 குழந்தைகளுக்கு

wanni-operations.jpgஉயிர் நீத்த மற்றும் வலது குறைந்த நிலைக்குள்ளாக்கப்பட்ட படை வீரர்களின் 250 குழந்தைகளுக்கு 10 ஆயிரம் ரூபாவுக்கான புலமைப் பரிசில்களை வழங்க ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலின் தூதுக் குழுவொன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து இந்த புலமைப் பரிசில்களை கையளித்தது.

இலங்கையிலும் வெளிநாடுகளிலும் இயங்கும் முஸ்லிம் நலன்புரி அமைப்புக்களை ஒன்றிணைத்து இயங்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில், இலங்கையில் படை வீரர்கள் அடைந்துவரும் வெற்றிகளைப் பாராட்டும் நோக்கில் சகல முஸ்லிம்கள் சார்பாகவும் இந்த அன்பளிப்பை வழங்குவதாக அறிவித்துள்ளது.

யுத்த நிறுத்தத்துக்கு அரசு தயாரில்லை; மோதல் தவிர்ப்புகளே சாத்தியம்

krambukkela.bmp

புலிகள் அமைப்புடன் எந்த விதத்திலும் யுத்த நிறுத்தம் ஒன்றை மேற் கொள்ள அரசாங்கம் தயார் இல்லை என்றும், பொது மக்களின் நலனை கருத்திற் கொண்டு அவ்வப்போது மோதல் தவிர்ப்புக்களே மேற் கொள்ளப்பட்டு வருவதாக தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

யுத்த நிறுத்தம், மோதல் தவிர்ப்பு ஆகிய இரண்டும் வெவ்வேறானவை. இந்தச் சொற்பிரயோகங்ளின் வித்தியாசத்தை விளங்கிக் கொள்ளாத சில வெளிநாட்டு ஊடகங்கள் மாறுபட்ட தகவல்களை வெளியிட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஆயுதங்களைக் கீழே வைத்து பாதுகாப்புப் படையினரிடம் சரணடைதல், அல்லது தங்களின் பிடியிலுள்ள பொதுமக்களை விடுவித்தல் ஆகிய இரு மாற்று வழிகள் மாத்திரம் தற்பொழுது புலிகளுக்கு உள்ளது என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட் டினார்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்றுக்காலை கொழும்பிலுள்ள தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடை பெற்றது.

அமைச்சர் இங்கு மேலும் உரையாற்றுகையில்:- புலிகளைக் காப்பாற்றும் முயற்சியாக உடனடி யுத்த நிறுத்தம் ஒன்றைக் கொண்டு வர சர்வதேச ரீதியில் பல தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

இராணுவ ரீதியில் புலிகள் 99 சத வீதம் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். இதனை தற்பொழுது முழு உலகமும் ஏற்றுக் கொண்டுள்ளது. தற்பொழுது நாம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளோம்.

புலிகள் ஆயுதங்களை கீழே வைக்காவிட்டாலும் பரவாயில்லை. அவர்களின் பிடியில் சிக்கி அவதிப்படும் அப்பாவி பொது மக்களை வெளியேற அனுமதித்தாலே போதும். ஆயுதங்களை கீழே வைக்கும் விடயத்தையும், சரணடைய வைப்பதையும் எமது பாதுகாப்பு படையினர் கவனித்துக் கொள்வார்கள்.

புலிகளின் பிடியிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவது தொடர்பாக தகவல்கள் எமக்குக் கிடைக்கும் பட்சத்தில் படையினர் உடனடியாக அந்தப் பிரதேசத்தில் மேற் கொள்ளும் தாக்குதல் நடவடிக்கையை தற்காலிகமாக தவிர்த்துவிட்டு, வரும் பொது மக்களை பாதுகாப்பாக மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

கடந்த சில மாதங்களாக இதுபோன்ற தற்காலிக மோதல் தவிர்ப்புக்கள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொது மக்களின் பாதுகாப்பையும் நலனையும் கருத்திற் கொண்டு முப்படைகளின் தளபதியான, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 48 மணிநேர மோதல் தவிர்ப்பு ஒன்றை உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.

நாங்கள் பொது மக்களின் நலனை கருத்திற் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொள் வதன் காரணமாக இதுவரை 62157 பொது மக்கள் புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்து பாதுகாப்பு படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட் டார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹ¤லுகல்லே, இரா ணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, விமானப் படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார, கடற்படையின் பதில் பேச்சாளர் கொமாண்டர் மஹேஷ் கருணாரட்ண, பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர ஆகி யோர் கலந்து கொண்டனர்.

ஐ.நா வதிவிடப் பிரதிநிதி பிரிட்டிஷ் பிரதி ஸ்தானிகர் நிவாரண கிராமங்களுக்கு விஜயம்

ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி நீல்பூனேயும் பிரிட்டிஷ் பிரதி உயர்ஸ்தானிகர் மார்க் குடிங்கும் நேற்று புதன்கிழமை வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களுக்கு நேரில் விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்தனர்.

வவுனியா நிவாரணக்கிராமங்களுக்கு தனித்தனியாக விஜயம் மேற்கொண்ட இவர்கள் அங்கிருந்த மக்களின் தேவைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.

இவர்கள் மாவட்ட அரச அதிபர், பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி, வவுனியாவில் உள்ள ஐக்கியநாடுகள் அலுவலகத்தில் கடமையாற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடனும் கலந்துரையாடலை நடத்தியிருந்தனர்.

இடம்பெயர்ந்துள்ள மக்களுடைய சேம நலன்களை கவனிப்பதில் காட்டப்படும் அக்கறை குறித்து விபரமாக அறிந்து கொண்டனர். ஐக்கியநாடுகள் வதிவிட பிரதிநிதி மெனிக்பாம் நிவாரண கிராமத்திற்கும் விஜயம் செய்திருந்தாரென அதிகாரிகள் தெரிவித்தனர்.

தனியார் தோட்டங்களால் அரசாங்கத்துக்கு மூவாயிரத்து 11 மில்லியன் ரூபா நஷ்டம் – அமைச்சர் டியு குணசேகர

deu-gunasekara.jpgநாடளாவிய ரீதியிலுள்ள பாரிய தோட்ட நிறுவனங்கள் கடந்த பத்து வருடங்களில் அரசாங்கத்துக்கு எதுவித கட்டணமும் செலுத்தாத நிலையில் உள்ளன என்றும் இதனால் அரசாங்கத்துக்கு மூவாயிரத்து 11 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதெனவும் அரசியலமைப்பு மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் டியு குணசேகர தெரிவித்தார்.

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் காணிகளின் நிலைப்பாடு குறித்து ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை குறித்து விளக்கம் அளிக்கும் முகமாக தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில்

நாடளாவிய ரீதியில் 23 பாரிய தோட்டங்கள் உள்ளன. அவற்றில் மூன்றைத்தவிர ஏனையவை தனியார் நிறுவனங்களாகவே இயங்கி வருகின்றன. இவ்வாறு இயங்கி வரும் 20 தோட்டங்களும் கடந்த பத்து வருடங்களாக அரசாங்கத்துக்கு எவ்வித கட்டணமும் செலுத்தவில்லை. சில தோட்ட நிறுவனங்கள் அவற்றின் முகாமைத்தவக் கட்டணமாக வருமானத்தின் 50 வீதத்தை ஒதுக்கியுள்ளன. அதேவேளை அந்தத் தோட்டங்களின் விவரங்கள் திரட்டப்படுவது தெரிய வந்ததும் அவை முகாமைத்துவ கட்டணத்தை 20 வீதமாகக் குறைத்து கணக்குகளைத் தயாரித்துள்ளன.

சில தோட்ட நிறுவனங்கள் மீள் நடுகைக்காக பெருமளவில் கடனுதவி பெற்றுள்ளதுடன் மீள் நடுகை மேற்கொண்டதற்கான எவ்வித அறிகுறியும் தென்படவில்லை. இவ்வாறு 10047 மில்லியன் ரூபா கடனாகப் பெறப்பட்டுள்ளது. எனினும் இந்தக்கடன் தொகைக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை.

காணி மறுசீரமைப்பு ஆணைக்கழுவினால் சுவீகரிக்கப்பட்ட காணியின் அளவு 4 இலட்சத்து 8487 ஹெக்டயர் ஆகும். இந்த ஆணைக்குழுவினால் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட காணிகளின் அளவில் குளறுபடிகள் நிலவுகின்றன. ஆணைக்குழுவின் பதிவுகளின் எண்ணிக்கைக்கும் பெற்றுக்கொண்ட நிறுவனங்கள் தெரிவிக்கும் எண்ணிக்கைக்கும் இடையில் வித்தியாசம் தென்படுகிறது.

இவ்வாறு பாரிய குளறுபடிகள் தெண்படுவதாக கடந்த 18 ஆம் திகதி ஜனாதிபதியிடம் சமர்பிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். அமைச்சரவை உப குழு அதன் அறிக்கை ஊடாக சில சிபாரிசுகளை முன்வெத்துள்ளது. காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு  மறுசீரமைக்கப்பட வேணடும். தோட்ட நிறுவனங்களுக்குரிய காணியின் அளவை 5000 ஏக்கருக்கு மட்டுப்படுத்தல், சிறிய தோட்ட உரிமையாளர்களுக்கு காணிகளைப் பகிர்ந்தளித்தல், விசேட தேடுதல் நடவடிக்கைப் பிரிவொன்றை உருவாக்கல் போன்றவை முன்வைக்கப்படட சிபாரிசுகளில் முக்கியமானவைகளாகும்.

அமைச்சர் டியு குணசேகர தலைமையிலான அமைச்சரவை உப குழுவில் அமைச்சர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா,  ஜீவன் குமாரதுங்க,  சமல் ராஜபக்ஷ ஆகியோரும்  இடம்பெறுகின்றனர்

ஜி20 நாடுகளின் மாநாடு இன்று லண்டனில் ஆரம்பம்

g-20.jpgலண்டன், எக்ஸல் மையத்தில் இன்று ஜி20 நாடுகளின் மாநாடு ஆரம்பமாகவுள்ளது. நான்கு நாட்கள் இடம்பெறவுள்ள ஜி20 நாடுகளின் மாநாட்டில் உலக பொருளாதார நெருக்கடி குறித்து முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக லண்டன் வந்துள்ளார்.இதன் போது பிரித்தானிய ஜனாதிபதி கோடன் பிரவுணை 10 டவுனிங் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.அமெரிக்கா ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் பராக் ஒபாமா முதன்முறையாக லண்டன் வந்துள்ளது இதுவே முதற் தடவையாகும்.

இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய உயர் மட்டக் குழு லண்டன் சென்றுள்ளது. இந்தியக் குழுவில் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் எம்.எஸ்.அலுவாலியா, வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.தனது பயணத்தின்போது அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா உள்ளிட்ட தலைவர்களை சந்திக்கவுள்ளார் மன்மோகன் சிங். 

பகிஷ்கரிப்பில் ஈடுபட்டாலும் தடையின்றி பஸ் சேவைகள்

ஒரு சில தனியார் பஸ் உரிமையாளர்கள் வேலை பகிஷ்கரிப்பில் ஈடுபடுகிறபோதும் தடையின்றி தனியார் பஸ் சேவைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று (1) பெரும்பாலான தூரசேவை தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபட்டதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் அமல் குமாரகே தெரிவித்தார்.

பஸ்கள் சேவையில் ஈடுபடுவதற்கு இடையூறு செய்யும் வகையில் சிலர் பஸ் சாரதிகளை அச்சுறுத்தியும் பஸ்கள் மீது கற்களால் தாக்கியும் வருவதாகவும் இதனை தடுக்க விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். இடையூறு விளைவித்த மூவர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதோடு ஏனையவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தனியார் பஸ் சங்கமொன்று நேற்று முன்தினம் முதல் வேலை பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகிறது. சட்ட ஒழுங்குகளை மீறும் பஸ் சாரதிகளுக்கு எதிராக தண்டம் அறவிடுவது; பஸ் அனுமதிப் பத்திரத்தை ரத்து செய்வது  போன்ற சட்டங்களை நீக்குமாறு கோரியே இவர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் கோரிக்கைகளில் எதுவித நியாயமும் கிடையாது எனவும் அவர்களின் எந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப்படாது எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் அமல் குமாரகே கூறினார். பெரும்பாலான தனியார் பஸ் ஊழியர்கள் வேலை பகிஷ்கரிப்பில் ஈடுபடவில்லை எனவும் தடையின்றி பஸ் சேவைகளை நடத்தும் வகையில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பதுளை, கேகாலை, தென் பிராந்தியம் அடங்கலான பல பகுதிகளுக்கான தூரசேவை பஸ்கள் நேற்று (1) சேவையில் ஈடுபட்டதாகவும் சொன்னார்.

இதேவேளை, சேவையில் ஈடுபடும் பஸ்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களையும் இடையூறு செய்பவர்க ளையும் கைது செய்ய நடமாடும் பொலிஸ் குழுக்களும் மோட்டார் சைக்கிளில் ரோந்தில் ஈடுபடும் பொலிஸ் குழுக்களும் சிவிலியன்களைக் கொண்ட குழுக்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

இது தவிர நாடு பூராவும் உள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் இது தொடர்பான அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் தூரசேவை பஸ்களுக்கான பாது காப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை தமது சங்கம் இந்த வேலை பகிஷ்கரி ப்பில் ஈடுபடவில்லையெனவும் பெரும்பாலான தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன கூறினார். சேவையில் ஈடுபட்ட தமது சங்க ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

‘உலக பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான்’- இந்தியப் பிரதமர்

manmohan.jpgஉலக பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான் என்று இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங் வர்ணித்துள்ளார்.

பிரிட்டனின் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த செவ்வியில், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு இந்தியா என்று கூறியுள்ள பிரதமர் மன் மோகன் சிங், பயங்கரவாத அமைப்பான லஷ்கர் அமைப்பை கட்டுப்படுத்த விரும்பாமல் அல்லது கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான் உள்ளதாக கூறியுள்ளார்.

மும்பையில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தாக்குதலுக்கு லஷ்கர் மீது இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. இத்தாக்குதலில் 170 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.