எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

பொருளாதாரத்திற்கு பலம் சேர்க்கும் தேசிய உற்பத்தியாளருக்கு நிவாரணம்

mahinda.jpgஏற்றுமதித் தொழிற் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு உரிய தீர்வு வழங்கும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முதலீட்டுச் சபையின் தலைவருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

தேசிய உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி வெளிநாட்டு செலாவணியை நாட்டுக்கு ஈட்டித்தந்து நாட்டின் பொருளாதாரத்திற்குப் பலம் சேர்க்கும் தேசிய உற்பத்தியாளர்களுக்கு நிவாரணத் திட்டமொன்றை நடைமுறைப் படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்குமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கை முதலீட்டுச் சபை ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஏனைய ஏற்றுமதித்துறை சார்ந்தவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது.

பல்வேறு துறைகளையும் சார்ந்த பாரிய மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்கள் கலந்துகொண்ட இப்பேச்சுவார்த்தை அலரி மாளிகையில் இடம் பெற்றது. சர்வதேச ரீதியில் வர்த்தக முயற்சிகளில் ஈடுபடும்போது முகங்கொடுக்க நேர்ந்துள்ள சிக்கல்கள் மற்றும் நெருக்கடிகள் சம்பந்தமாக இதன்போது ஏற்றுமதியாளர்கள் ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்தினர். உலக நாடுகள் பலவும் எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த நாடுகளிலிருந்து தமக்கான கேள்விகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் தமது உற்பத்திகளின் அளவைக்குறைக்க நேர்ந்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதனைக் கருத்திற்கொண்ட ஜனாதிபதி இது தொடர்பில் ஆராய்ந்து இதற்கான தீர்வினை விரைவாகப் பெற்றுக்கொடுக்குமாறு முதலீட்டுச் சபையின் தலைவருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

மலேஷியாவில் புதிய பிரதமர் பதவியேற்பு

najib-razak.jpgமலேஷி யாவின் புதிய பிரதமராக நஜீப் ரஸாக் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.  மலேஷிய நாடும் அதன் ஆளும் கட்சியும் மிகப் பெரும் சவால்களை எதிர்நோக்கும் இந்த நேரத்தில் புதிய ஆட்சித் தலைவராக ரஸாக் பொறுப்பேற்கிறார்.

மலேஷியாவின் பொருளாதாரம் இவ்வாண்டு சுருக்கம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஸாக் இப்போது வழிநடத்தும் ஐக்கிய மலாய் கட்சி நாடாளுமன்றத்தில் தனது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கடந்த ஆண்டில் இழந்தது.

இதன் விளைவாக அப்போதைய பிரதமர் அப்துல்லா பதாவி ராஜினாமா செய்து வெளியேற நேரிட்டது. புதிய பிரதமர் ரஸாக்கின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பலவும் எழுப்பப்பட்டுள்ளன. ஆனால் அவர் அக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

கப்பலில் புல்மோட்டைவந்த மக்கள் விடுதலைப் புலிகள் மீது புகார் – பிபிசி தகவல்

taking-to-green-ocean.jpg புல்மோட்டையில் கரையிறக்கப்படும் தமிழ் அகதிகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள புதுமாத்தளன் பகுதியில் இருந்து கப்பல் மூலமாக வெள்ளியன்று 480 பேர் புல்மோட்டை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர். இவ்வாறு கப்பலில் கொண்டுவரப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வசிக்கும் மக்களை அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு செல்ல புலிகள் அனுமதி மறுப்பதாகவும், 14 வயதுடைய சிறுவர்களைக் கூட தமது படையணியில் அவர்கள் கட்டாயமாகச் சேர்ப்பதாகவும் புல்மோட்டைக்கு வந்த சிலர் பிபிசியிடம் தெரிவித்தனர்.

புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள குறுகிய பிரதேசத்தில் ஷெல் தாக்குதல்கள் அதிகம் இடம்பெறுவதாகத் தெரிவித்த ஒருவர், அங்கு தண்ணீருக்கு கடும் கட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் ஒரே வீட்டில் இருந்து கூட நான்கு-ஐந்து பேர் என்று பிடித்துச் செல்வதால், சிறார்களை வெளியே அனுப்பவே பயப்பட வேண்டிய சூழல் நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வர மக்கள் விரும்பினாலும் புலிகள் அதை அனுமதிப்பதில்லை என்று நம்மிடம் கூறிய ஒரு பெண்மணி, தப்பி வர முற்படும் மக்கள் மீது புலிகள் சுடுகின்றனர் என்றும் கூறினார். இதற்கிடையே, புதுமாத்தளன் பகுதியிலிருந்து 2 இயந்திரப் படகுகளின் மூலம் எவ்வித வழித்துணையும் இன்றி 21 பேர் புல்மோட்டையை வந்தடைந்துள்ளனர்.

கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட இவர்கள் விசாரணைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுக்கிறது. இதனைத் தொடர்ந்து இவர்களை வவுனியாவில் உள்ள இடைத்தங்கல் முகாமுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்வும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு-மட்டக்களப்பு நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில் சேவை – ஞாயிறு ஆரம்பம்

bati-trnco.jpgகொழும்பிற்கும் மட்டக்களப்பிற்குமிடையில் நாளை ஞாயிற்றுக்கிழமை நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில் சேவை ஆரம்பமாகவிருக்கின்றது.”புதிய உதயதேவி நகரங்களுக்கிடையிலான கடுகதி சேவை” என இந்த ரயில் சேவைக்கு பெயரிடப்பட்டுள்ளது.

தினமும் காலை 7.45 இற்கு மட்டக்களப்பிலிருந்து புறப்படும் இந்த ரயில் மாலை 4.30 இற்கு கொழும்பு கோட்டையை சென்றடையும் .கொழும்பு கோட்டையிலிருந்து முற்பகல் 10.30 இற்கு புறப்படும் ரயில் மாலை 6.40 இற்கு மட்டக்களப்பை சென்றடையும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.இதன் பிரகாரம் முதலாவது ரயில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி புறப்படவிருக்கின்றது.

ஏறாவூர் ,வாழைச்சேனை ,வெலிக்கந்தை ,பொலன்னறுவை ,ஹிங்கராகொட ,கல்லோயா சந்தி ,கெக்கிராவை ,மாகோ சந்தி ,குருநாகல் ,பொல்காவெலை சந்தி ,வியாங்கொடை ,மற்றும் ராகமை ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே குறிப்பிட்ட ரயில் நிறுத்தப்படும் என இது தொடர்பாக மட்டக்களப்பு ரயில் நிலையத்தின் பிரதம அதிபர் கூறுகின்றார்.

பிரதியமைச்சர் நிஜாமுதீனின் இணைப்பு செயலாளரின் துஷ்பிரயோகம் அம்பலம்

snijamudeen.jpgபிரதியமைச்சர் எஸ். நிஜாமுதீனின் இணைப்புச் செயலாளர் எஸ். எல். லாபீர் பிரதியமைச்சரின் பெயரைப் பயன்படுத்தியும் அமைச்சின் பெயரைப் பயன்படுத்தியும் பல்வேறு துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டுள்ளமை அம்பலத்துக்கு வந்துள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்த பிரதியமைச்சர்,

லாபீர் என்பவரை கடந்த 29 ஆம் திகதிமுதல் அவரது பதவியை இடைநிறுத்தி யுள்ளதாகவும் அவரது சகல துஷ்பிரயோகங்களையும் கண்டு பிடித்து சட்டத்துக்கு முன் நிறுத்துமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கும் இரகசியப் பொலிஸாருக்கும் அறிவித்துள்ளதாகவும் சுட்டிக் காட்டினார்.

மேற்படி நபர் கடந்த ஒரு வருடகாலமாக தனது தனிப்பட்ட நியமனத்தின் பேரில் அக்கரைப்பற்று பகுதிகளில் தனது அரசியல் நடவடிக்கைக்கான இணைப்புச் செயலாளராக பணியாற்றினார்.

இக்காலத்தில் எனது அமைச்சின் கடிதத் தலைப்பையும் தனியார் டிஜிட்டல் நிறுவனத்தின் உதவியுடன் எனது கையெழுத்தையும் ஸ்கான் பண்னி வேறு ஒருவருக்கு இணைப்பாளர் அடையாள அட்டையும் வழங்கியுள்ளார். அத்துடன் இவர் கிழக்கு மாகாண அமைச்சர் ரீ. நவரத்தினராஜாவின் இணைப்புச் செயலாளராகவும் அடையாள அட்டையொன்றை தயாரித்து எடுத்துள்ளதாக குறித்த டிஜட்டல் நிறுவனம் எனக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.

அத்துடன் எனது அமைச்சின் வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய தொழிற்பயிற்சி நிறுவனம் ஊடாக 315 தாதி பயிலுனர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட பயிலுனர்களிடமிருந்து பல்வேறு துஷ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பயிலுனர்கள் எனக்கு அறிவித்துள்ளனர். மேலும் எனது வாகனமொன்றையும் சட்டரீதியற்ற முறையில் போலி ஒப்பந்தமொன்றை தயாரித்து தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள முயற்சித்துள்ளமையும் அம்பலத்துக்கு வந்திருப்பதாகவும் பிரதியமைச்சர் கூட்டிக்காட்டினார்.

உலக பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க ஜி20 மாநாட்டில் நடவடிக்கை

g-20.jpgலண்டனில் ஆரம்பமாகியுள்ள ஜி 20 உச்சி மாநாட்டின் 2ஆம் நாள் அமர்வுகளின் போது, உலக நாடுகளின் தலைவர்கள் சர்வதேச பொருளாதர நெருக்கடிக்கு முகம் கொடுப்பது தொடர்பில் பல்வேறு தீர்மானங்களை எடுத்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்துக்கான பணத்தை அதிகரிப்பது, நிதி கண்காணிப்பை வலுப்படுத்துவது உள்ளிட்ட நெருக்கடியைச் சமாளிக்கும் பிரச்சினைகள் குறித்து லந்துகொண்ட தலைவர்கள் கலந்துரையாடியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பல இன்னல்களில் சிக்கியுள்ள நாடுகளுக்கு உதவி செய்யும் பொருட்டு, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட நாணய நிறுவனங்களுக்கு 750 பில்லியன் அமெரிக்க டொலரை வழங்க 20 நாடுகள் குழுவின் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.மேலும் 25 பில்லியன் டி அமெரிக்க டாலர் மதிப்புள்ள சிறப்பு நிதியுதவி, உறுப்பு நாடுகளுக்கு அளிக்கப்படும் என்று பிரிட்டன் தலைமையமைச்சர் கோர்டன் பிரவுண் தெரிவித்துள்ளார். செல்வாக்கு வாய்ந்த அனைத்து நிதி நிறுவனங்கள், நிதி உற்பத்தி பொருட்கள் மற்றும் சந்தைகள் மீது, கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். புதிய நிதி ஆணையத்தை உருவாக்கி, சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து, உலக பொருளாதாரம் மற்றும் சந்தையின் அபாயத்தையும், கண்காணிக்க வேண்டும் என்று தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் மேலும் தெரிவிகின்றன. 

இலங்கையின் வர்த்தக, பொருளாதார அபிவிருத்திக்கு கட்டார் பூரண ஒத்துழைப்பு

president_qutr_amb.jpgஇலங்கையின் வர்த்தக, பொருளாதார அபிவிருத்திக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும், முதலீட்டு வர்த்தகத்தில் ஈடுபடுவதாகவும் கட்டார் அரசு உறுதியளித்துள்ளது.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வந்துள்ள கட்டார் சர்வதேச ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் கலாநிதி காலித் பின் மொஹமட் அல் அத்தியா அரசாங்கத்துடன் நடத்திய இருதரப்புப் பேச்சுவார்த்தையின் போது இந்த உறுதிமொழியை வழங்கியதாக வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்தார்.

இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக, பொருளாதார ஒத்துழைப்புகளை மேம்படுத்தும் பொருட்டு முதலீட்டு, பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றும் கைச்சாத்திடப்படவுள்ளது. கட்டார் மன்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கிறபோது இந்த உடன்படிக்கை கைச்சாத்தாகுமென அமைச்சர் போகொல்லாகம தெரிவித்தார்.

கட்டார் வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான தூதுக் குழுவினர் நேற்றுக் காலை (03) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் சிரேஷ்ட அமைச்சர்களுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தையின் பின்னர் செய்தியாளர் மாநாடொன்று நடைபெற்றது. இதில் வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகமவுடன் கட்டார் சர்வதேச ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சரும் கலந்துகொண்டார்.

கட்டார் மன்னரின் இலங்கை விஜயத்திற்கான முன்னோடிப் பயணமாக வெளிவிவகார அமைச்சர் விஜயம் செய்திருக்கின்றார். இதன்போது, இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக, பொருளாதார விடயங்களை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான இந்தப் பேச்சுவார்த்தையில் இலங்கையின் சார்பில், தொழில் முயற்சிகள் அபிவிருத்தி, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, பொறியியல், நிர்மாணத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் நவீன் திசாநாயக்க, மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், விவசாய, கமநல சேவைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் விஜேதிலக, சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் ஜோர்ஜ் மிக்காயல், ஏற்றுமதி அபிவிருத்தி சர்வதேச வர்த்தக அமைச்சு, பெற்றோலிய வளத்துறை அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள், நிதியமைச்சு, முதலீட்டுச் சபை ஆகியவற்றின் உயரதிகாரிகள் முதலானோர் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பின்போது இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் கட்டார் அரசுடன் இணைந்து தனியார் துறையினரின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் கட்டார் வங்கியொன்றை ஸ்தாபிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது. கட்டாரில் தற்போது 1,40,000 இலங்கையர்கள் வாழ்கிறார்கள். இவர்களின் பிள்ளைகளுக்காக இலங்கை நடத்தும் பாடசாலைக்கென நிரந்தரக் கட்டடமொன்றை நிர்மாணிப்பதற்கான காணியொன்றைப் பெற்றுத் தருமாறு இலங்கையின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் போகொல்லாகம தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த கட்டார் வெளிவிவகார அமைச்சர் காலித் பின் மொஹமட் அல் அகியா, 1976 ஆம் ஆண்டிலிருந்து இரு நாடுகளுக்குமிடையில் நீண்ட உறவு உள்ளது. இலங்கைக்கு உதவ வேண்டிய தருணம் இதுதான். எனவே, பொருளாதார வளர்ச்சியில் பங்கெடுத்துக்கொள்வோம் என்று தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையில் வர்த்தகத்தை ஆரம்பிப்பதற்காக முதலீடு செய்யும் விரும்பும் கட்டார் வர்த்தகர்களுக்கு முதலீட்டுச் சபையூடாக சலுகைகளைப் பெற்றுக்கொடுக்க முடியுமென்று கட்டார் வெளிவிவகார அமைச்சரிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. அதிகாரிக்கும் விடுதலைப் புலிகள் பிரதிநிதிக்கும் இடையில் தொலைபேசி கலந்துரையாடல்: நோர்வே மீது இலங்கை அரசு அதிருப்தி

dr-palitha.jpgஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனித உரிமைகள் விவகாரங்களுக்குப் பொறுப்பான உயர் அதிகாரியான சேர் ஜோன் ஹோம்ஸிற்கும் விடுதலைப்புலிகளின் பிரதிநிதிக்கும் இடையில் தொலைபேசிக் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்வதற்கு நோர்வே அனுசரணை வழங்கியமைக்காக இலங்கைக்கான நோர்வே தூதுவரை அழைத்து இலங்கை அரசு அதிருப்தி வெளியிட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

வெளிநாடொன்றில் தங்கியிருக்கும் விடுதலைப்புலிகளின் பிரதிநிதியான கே.பி. எனப்படும் செல்வராஜா பத்மநாதன் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் விவகாரங்களுக்குப் பொறுப்பான உயர் அதிகாரி சேர் ஜோன் ஹோம்ஸ் இடையில் நோர்வேயின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல் குறித்து ஊடகங்களில் வெளியான அறிக்கைகள் குறித்தே நோர்வேயின் தூதுவரிடம் இலங்கை வெளிநாட்டமைச்சு தனது அதிருப்தியினை வெளியிட்டிருப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹொன தெரிவித்திருக்கிறார்.

இவ்வாறானதொரு கலந்துரையாடலுக்கு அனுசரணை வழங்கியதாக நோர்வேயின் தூதுவர் டோர் ஹட்ரம் இந்தச் சந்திப்பின்போது ஒப்புக்கொண்டிருப்பதாக பாலித கொஹொன தெரிவித்திருக்கிறார்.

நாட்டில் அரச ஊழியர்கள் இன்று பாரிய நெருக்கடியை எதிர்நோக்குகிறார்கள் : ஐ.தே.க. எம்.பி. வஜிர

unp-vijira.jpg“எமது நாட்டில் அரசு ஊழியர்கள் இன்று பாரிய நெருக்கடியை எதிர் நோக்கி உள்ளார்கள். அவர்களுக்கான ஓய்வூதியம் கூட ஒழுங்கான முறையில் கிடைக்கப் பெறுவதில்லை” என ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேகேகர நேற்று எதிர்க்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:

“எமது ஆட்சிக்காலத்தில் ஐ.தே.க.அரச ஊழியர்களுக்கு எவ்வாறான சலுகைகளை அளித்தது என எம்மை வினவுகிறார்கள் . ஆரம்ப காலத்தில் அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை 55 ஆகக் காணப்பட்டது. இதனால் எமது ஆட்சிக்காலத்தில் நாம் ஓய்வூதிய நிலையத்தில் ஒரு கணிப்பை மேற்கொண்டோம். 55 வயதில் ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கை மற்றும் 60 வயதில் ஓய்வு பெறுவோரின் எண்ணிக்கை என்பன தொடர்பில் கணிப்பொன்று நடத்தப்பட்டது. அதன் பிரகாரம் 55 வயதில் ஓய்வு பெறுவோரின் எண்ணிக்கை 100 க்கு 5 வீதமாகவே இருந்தது. இதனால் வயதெல்லை 60 ஆக தீர்மானிக்கப்பட்டது.

ஐ.தேகவினால் நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. இது தற்போது 55 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. ஓய்வூதியக் கொடுப்பனவை அதிகரிக்க அக்காலக்கட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பரீட்சைகள் நடத்தப்பட்டு அவர்களின் பதவி உயர்வுகளில் எவ்வித பாதகமான நிலை ஏற்பட்டாலும் ஓய்வூதியம் பாதிக்கபடாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை மீண்டும் அமுல்படுத்த வேண்டும் என தற்போது கூறப்படுகிறது. இவ்வாறு பல நிலைகளில் அரச ஊழியர்கள் ஒரு குழப்ப நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளனர்.

அரச ஊழியர்களுக்காக 25,000 வீடுகளை அமைக்கும் திட்டம் ஐ.தே.க. ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 1500 வீடுகள் தென் பகுதி காலியில் அமைக்கப்பட்டன.  இப்பொழுது அவற்றைத்தான் மகிந்த சிந்தனையின் அடிப்படையில் அமைக்கப்பட்ட 1500 வீடுகள் என்று கூறுகிறார்கள். இது முற்றிலும் தவறானது. ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் இந்த வீடுகள் அமைக்கப்பட்டன. இத்திட்டத்துக்கான ஒப்பந்தம் எப்போது கைச்சாத்திடப்பட்டது? திட்டம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

ஆசிய வங்கியோ, சர்வதேச நாணய நிதியமோ இலங்கைக்கு கடன் உதவி வழங்கும்போது, அந்நிறுவனங்கள் நாட்டின் பொருளாதார நிலையை அவதானித்தலே முக்கியமான செயலாக இருக்கும் . நாட்டில் நிதி கொள்கைகள் ஒழுங்கான முறையில் கணக்கிடப்படாவிட்டால், எந்த நாடும் நமது நாட்டுக்கு உதவி வழங்க முன் வரப்போவதில்லை” இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கையின் பொருளாதார நிலையைக் கருத்திற் கொண்டு பார்க்கும் போது சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்காமல் போகக்கூடிய சூழ்நிலையே காணப்படுவதாகப் பரவலாக பேசப்படுவது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

மாளிகாவத்தை சிறுநீரக மாற்று சிகிச்சை ஆராய்ச்சி பிரிவு தொடர்பில் சர்ச்சை

nimal-sri-pala.jpgகொழும்பு, மாளிகாவத்தையில் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் சிறுநீரக மாற்று சிகிச்சை மற்றும் சிறுநீரக வியாதிகள் ஆராய்ச்சி பிரிவை எந்தத் தரப்பினரிடம் ஒப்படைப்பதென்பது தொடர்பாக நிலவிவரும் இழுபறி நிலைக்கு அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்குள் சுமுகமான இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால் தீர்க்கமான முடிவொன்றை எடுக்கப் போவதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

இப்பிரிவு தொடர்பாக கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தினரும், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரும் சுமுகமான இணக்கப்பாட்டுக்கு வராவிட்டால் சிறுநீரக மாற்று சிகிச்சை மற்றும் சிறுநீரக வியாதிகள் ஆராய்ச்சி பிரிவின் மருத்துவ உபகரணங்களை அனுராதபுரம் மற்றும் பதவிய அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்குக் கையளிப்பதற்கு முடிவு செய்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

450 மில்லியன் ரூபா செலவில் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இப்பிரிவை கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்திடம் ஒப்படைக்கப்படுவதற்கு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆட்சேபனை தெரிவிப்பதால் இந்த இழுபறி நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். இது தொடர்பாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் குறிப்பிடுகையில், இலங்கையில் சுமார் 17 ஆயிரம் பேர் சிறுநீரக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில் தான் அரசாங்கம் 450 மில்லியன் ரூபா செலவில் நவீன வசதிகளுடன் கூடிய சிறுநீரக மாற்று சிகிச்சை மற்றும் சிறுநீரக வியாதிகள் பிரிவை மக்கள் நலன்கருதி இந்நாட்டில் முதற் தடவையாக நிர்மாணித்திருக்கிறது.

இந்தப் பிரிவை கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு ஒப்படைப்பதற்கு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆட்சேபனை தெரிவிக்கிறது. இதனால் இப்பிரிவை உத்தியோகபூர்வமாக திறந்து சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இந்த இழுபறி நிலை ஒரு மாதத்திற்கும் மேல் நீடிக்கிறது. இந்நிலை இனியும் தொடர இடமளிக்க முடியாது என்றார்.