ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனித உரிமைகள் விவகாரங்களுக்குப் பொறுப்பான உயர் அதிகாரியான சேர் ஜோன் ஹோம்ஸிற்கும் விடுதலைப்புலிகளின் பிரதிநிதிக்கும் இடையில் தொலைபேசிக் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்வதற்கு நோர்வே அனுசரணை வழங்கியமைக்காக இலங்கைக்கான நோர்வே தூதுவரை அழைத்து இலங்கை அரசு அதிருப்தி வெளியிட்டிருப்பதாகத் தெரியவருகிறது.
வெளிநாடொன்றில் தங்கியிருக்கும் விடுதலைப்புலிகளின் பிரதிநிதியான கே.பி. எனப்படும் செல்வராஜா பத்மநாதன் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் விவகாரங்களுக்குப் பொறுப்பான உயர் அதிகாரி சேர் ஜோன் ஹோம்ஸ் இடையில் நோர்வேயின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல் குறித்து ஊடகங்களில் வெளியான அறிக்கைகள் குறித்தே நோர்வேயின் தூதுவரிடம் இலங்கை வெளிநாட்டமைச்சு தனது அதிருப்தியினை வெளியிட்டிருப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹொன தெரிவித்திருக்கிறார்.
இவ்வாறானதொரு கலந்துரையாடலுக்கு அனுசரணை வழங்கியதாக நோர்வேயின் தூதுவர் டோர் ஹட்ரம் இந்தச் சந்திப்பின்போது ஒப்புக்கொண்டிருப்பதாக பாலித கொஹொன தெரிவித்திருக்கிறார்.