இலங்கையின் வர்த்தக, பொருளாதார அபிவிருத்திக்கு கட்டார் பூரண ஒத்துழைப்பு

president_qutr_amb.jpgஇலங்கையின் வர்த்தக, பொருளாதார அபிவிருத்திக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும், முதலீட்டு வர்த்தகத்தில் ஈடுபடுவதாகவும் கட்டார் அரசு உறுதியளித்துள்ளது.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வந்துள்ள கட்டார் சர்வதேச ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் கலாநிதி காலித் பின் மொஹமட் அல் அத்தியா அரசாங்கத்துடன் நடத்திய இருதரப்புப் பேச்சுவார்த்தையின் போது இந்த உறுதிமொழியை வழங்கியதாக வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்தார்.

இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக, பொருளாதார ஒத்துழைப்புகளை மேம்படுத்தும் பொருட்டு முதலீட்டு, பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றும் கைச்சாத்திடப்படவுள்ளது. கட்டார் மன்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கிறபோது இந்த உடன்படிக்கை கைச்சாத்தாகுமென அமைச்சர் போகொல்லாகம தெரிவித்தார்.

கட்டார் வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான தூதுக் குழுவினர் நேற்றுக் காலை (03) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் சிரேஷ்ட அமைச்சர்களுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தையின் பின்னர் செய்தியாளர் மாநாடொன்று நடைபெற்றது. இதில் வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகமவுடன் கட்டார் சர்வதேச ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சரும் கலந்துகொண்டார்.

கட்டார் மன்னரின் இலங்கை விஜயத்திற்கான முன்னோடிப் பயணமாக வெளிவிவகார அமைச்சர் விஜயம் செய்திருக்கின்றார். இதன்போது, இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக, பொருளாதார விடயங்களை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான இந்தப் பேச்சுவார்த்தையில் இலங்கையின் சார்பில், தொழில் முயற்சிகள் அபிவிருத்தி, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, பொறியியல், நிர்மாணத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் நவீன் திசாநாயக்க, மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், விவசாய, கமநல சேவைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் விஜேதிலக, சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் ஜோர்ஜ் மிக்காயல், ஏற்றுமதி அபிவிருத்தி சர்வதேச வர்த்தக அமைச்சு, பெற்றோலிய வளத்துறை அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள், நிதியமைச்சு, முதலீட்டுச் சபை ஆகியவற்றின் உயரதிகாரிகள் முதலானோர் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பின்போது இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் கட்டார் அரசுடன் இணைந்து தனியார் துறையினரின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் கட்டார் வங்கியொன்றை ஸ்தாபிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது. கட்டாரில் தற்போது 1,40,000 இலங்கையர்கள் வாழ்கிறார்கள். இவர்களின் பிள்ளைகளுக்காக இலங்கை நடத்தும் பாடசாலைக்கென நிரந்தரக் கட்டடமொன்றை நிர்மாணிப்பதற்கான காணியொன்றைப் பெற்றுத் தருமாறு இலங்கையின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் போகொல்லாகம தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த கட்டார் வெளிவிவகார அமைச்சர் காலித் பின் மொஹமட் அல் அகியா, 1976 ஆம் ஆண்டிலிருந்து இரு நாடுகளுக்குமிடையில் நீண்ட உறவு உள்ளது. இலங்கைக்கு உதவ வேண்டிய தருணம் இதுதான். எனவே, பொருளாதார வளர்ச்சியில் பங்கெடுத்துக்கொள்வோம் என்று தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையில் வர்த்தகத்தை ஆரம்பிப்பதற்காக முதலீடு செய்யும் விரும்பும் கட்டார் வர்த்தகர்களுக்கு முதலீட்டுச் சபையூடாக சலுகைகளைப் பெற்றுக்கொடுக்க முடியுமென்று கட்டார் வெளிவிவகார அமைச்சரிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *