கொழும்பு, மாளிகாவத்தையில் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் சிறுநீரக மாற்று சிகிச்சை மற்றும் சிறுநீரக வியாதிகள் ஆராய்ச்சி பிரிவை எந்தத் தரப்பினரிடம் ஒப்படைப்பதென்பது தொடர்பாக நிலவிவரும் இழுபறி நிலைக்கு அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்குள் சுமுகமான இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால் தீர்க்கமான முடிவொன்றை எடுக்கப் போவதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
இப்பிரிவு தொடர்பாக கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தினரும், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரும் சுமுகமான இணக்கப்பாட்டுக்கு வராவிட்டால் சிறுநீரக மாற்று சிகிச்சை மற்றும் சிறுநீரக வியாதிகள் ஆராய்ச்சி பிரிவின் மருத்துவ உபகரணங்களை அனுராதபுரம் மற்றும் பதவிய அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்குக் கையளிப்பதற்கு முடிவு செய்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
450 மில்லியன் ரூபா செலவில் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இப்பிரிவை கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்திடம் ஒப்படைக்கப்படுவதற்கு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆட்சேபனை தெரிவிப்பதால் இந்த இழுபறி நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். இது தொடர்பாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் குறிப்பிடுகையில், இலங்கையில் சுமார் 17 ஆயிரம் பேர் சிறுநீரக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இவ்வாறான சூழ்நிலையில் தான் அரசாங்கம் 450 மில்லியன் ரூபா செலவில் நவீன வசதிகளுடன் கூடிய சிறுநீரக மாற்று சிகிச்சை மற்றும் சிறுநீரக வியாதிகள் பிரிவை மக்கள் நலன்கருதி இந்நாட்டில் முதற் தடவையாக நிர்மாணித்திருக்கிறது.
இந்தப் பிரிவை கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு ஒப்படைப்பதற்கு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆட்சேபனை தெரிவிக்கிறது. இதனால் இப்பிரிவை உத்தியோகபூர்வமாக திறந்து சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இந்த இழுபறி நிலை ஒரு மாதத்திற்கும் மேல் நீடிக்கிறது. இந்நிலை இனியும் தொடர இடமளிக்க முடியாது என்றார்.