எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

நாட்டின் சில பகுதிகளில் மழை – களுகங்கை நீர் மட்டம் உயர்வு

rain2.jpgமேல் மாகாணம், மத்திய மாகாணம், வடமேல் மாகாணம் உட்பட பல பகுதிகளில் நேற்று கடும் மழை பெய்ததாக காலநிலை அவதான நிலையம் அறிவித்தது. அதன்படி, கொழும்பில் ஓரளவு மழை பெய்துள்ளது. களுத்துறை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகக்கூடிய மழை வீழ்ச்சி ஹங்வெல்லயில் பதிவாகியுள்ளது. (63.3 மி. மீ.) அதேவேளை லபுகலவில் 60.6 மி. மீ., கலட்டுவாவயில் 49 மி. மீ., மத்துகமவில் 31.6 மி. மீ. மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் மீண்டும் இடையிடையே பெய்து வரும் கடும் மழை காரணமாக இம்மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக தோட்டங்களில் பால் சேகரிக்கும் பணி, சீவல் தொழில் என்பன முற்றாகவே ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. இதனால் தொழிலாளர்கள் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். களுகங்கையின் நீர் மட்டமும் கூடியுள்ளன.

டெங்கு நோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெறவேண்டும் – டாக்டர் ஷாலினி

dengu_1.gif“எமது நாட்டில் தற்போது கட்டுப்படுத்த முடியாதளவிற்கு விஸ்வரூபம் எடுத்துள்ள டெங்கு நோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்தியரை அணுகி அதற்கான ஆலோசனையைப் பெறவேண்டும். காய்ச்சல், தொண்டை நோ, தலைவலி, வயிற்றுவலி, குமட்டல் போன்ற அறிகுறிகள் டெங்கு நோய்க்கானவையாகவும் இருக்கலாம்’ என கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட விரிவுரையாளர் டாக்டர் ஷாலினி அறிவுரை வழங்கினார்.

கொழும்பு சேர் ராசிக் பரீட் வித்தியாலயத்தில் நடைபெற்ற இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த மேல் கொழும்பு தரம்2 பாடசாலைகளுக்கான விஞ்ஞான தின விழாவில் உரையாற்றும் போதே அவர் இந்த ஆலோசனையைத் தெரிவித்தார். விஞ்ஞான கைத்தொழில் அமைச்சர் திஸ்ஸ விதாரணவின் பாரியார் திருமதி காமினி விதாரணவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் டாக்டர் ஷாலினி தொடர்ந்து உரையாற்றுகையில்;

“தற்போது எமது நாட்டில் டெங்கு நோயினால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இறந்திருப்பதும் எம்மை கதிகலங்க வைக்கிறது. ஏடிஸ் எஹிப்டிக் என்னும் பெண் நுளம்பினால் பரவும் இந்த நோய் ஒரு வைரஸ் நோயாகையால் இதனை மருந்தின் மூலம் கட்டுப்படுத்த முடியாது. சிகிச்சை பயனளிக்காத நிலைமையையே காண முடிகிறது.

இந்த நோயில் சாதாரண டெங்கு  வகை தலைவலி, பசியின்மை, உடல் வலி, காய்ச்சல் என்பவற்றை விளைவித்தாலும் பெரும்பாலும் மூன்று நாட்களில் குணமாகிவிடும் சாத்தியம் உண்டு. ஆனால், குருதிக் காய்ச்சல் டெங்கு பேராபத்தை விளைவிக்கும் நோயாகும். அநேகமாக 15 வயதுக்குட்பட்ட சிறார்களையே அது பாதிக்கின்றது.

நோய் முற்றிய பின்பு வைத்தியரை நாடுவதில் எவ்வித பயனுமில்லை. உடல் சோர்வு அதிகரித்து, இரத்த அழுத்தம் குறைந்து போகும் அறிகுறி தென்பட்டால் உயிரிழப்பு தவிர்க்க முடியாததாகிவிடும். எனவே, நோய் வருமுன் காப்பதே சிறந்தது. இந்த நோயைப் பரப்பும் நுளம்பை முதலில் ஒழித்துக் கட்டவேண்டும்.

குறைந்தது 5 மில்லி லீற்றர் நீர் எங்காவது தேங்கி இருந்தால் கூட இந்த நுளம்பு இனவிருத்தி செய்துவிடும் ஆற்றல் பெற்றது. எனவே உங்கள் வீட்டுச் சுற்றுப்புறச் சூழலில் நீர்தேங்கியிருந்தால் அதை உடனடியாகச் சுத்தப்படுத்துங்கள். சகலரதும் ஒத்துழைப்பு இருந்தாலே இந்த நுளம்பின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும்’ என்றார்.

ஊடகவியலாளர் ஓய்வூதிய திட்டத்திற்கு ரூ. 100 மில். வழங்க அரசு இணக்கம் -மாற்றுத் திட்டமொன்றை அமுல்படுத்த அமைச்சு தீர்மானம்

ஊடகவியலாளர் களுக்கான ஓய்வூதிய திட்டத்தை மறுசீரமைத்து மாற்று திட்டமொன்றை அமுல்படுத்த மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் துறை அமைச்சு தீர்மானித்துள்ளது. மேற்படி ஓய்வூதிய திட்டத்துக்கு அரசின் ஒருங்கிணைந்த நிதியினூடாக 100 மில்லியன் ரூபா வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.

ஊடக அமைச்சும், சமூக சேவைகள் சமூக நல அமைச்சும் இணைந்து மேற்படி ஊடகவியலாளர்களுக்கான ஓய்வூதியத்திட்டமொன்றை கடந்த வருடம் அறிமுகப்படுத்தியது. ஆனால் மாதாந்தக் கொடுப்பனவு செலுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் மாதாந்தக் கொடுப்பனவு செலுத்தாமல் ஒதுங்கியுள்ளனர். இதனால் இந்தத் திட்டம் ஒழுங்காக செயற்படுத்தப்படவில்லை.

இதன் காரணமாக மாற்று யோசனைகள் பெற்று புதிய திட்டமொன்றை அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதோடு தமது யோசனைகளை ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்புமாறு பல்வேறு தரப்பினரிடமும் கோரப்பட்டுள்ளது.

அரசியலில் ஒரு பொது ஊடகம் ……. சாராயம்: – ரி கொன்ஸ்ரன்ரைன்

Alchocol_Labelபல நூறு ஆண்டுகளாக உலக ராஜதந்திர அரசியலில் இரண்டு விடயங்கள் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது. இவற்றிற்கு அடிமையாகி மண்கவ்வியவர்கள் பலர். பெரியார் ஈ வே ராமசாமி ஊடாக அண்ணாத்துரையைத் தொட்டு நம்ம ஜோன் மேஜர் வரைக்கும் ‘பொம்பிளைப் பிரச்சினை’. சேர்ச்சில் தொடக்கம் சந்திரிக்கா ஊடாக விஜயகாந்த் வரைக்கும் ‘தண்ணிப் பிரச்சினை’.

தமிழ்நாட்டில் கறுத்தக் கண்ணாடி அரசியல்வாதிகள் வலம்வருவதற்கு இரண்டு காரணம் கூறப்படுகிறது. முதலாவது இவர்கள் எதைப் பார்க்கிறார்கள் என்பதை மற்றவர்கள் அவதானிக்க முடியாது. மற்றையது சம்பந்தப்பட்டவரின் கண்ணின் நிறத்தை அல்லது நிதானத்தை யாரும் கணிப்பிட முடியாது.

அண்மையில் 90 வயதை அடைந்த உலகப் பிரசித்திபெற்ற நெல்சன் மண்டேலாவைப் பற்றி அவருடைய நெருங்கிய நண்பர்கள் கருத்துத் தெரிவித்தபோது… அழகிய பெண்கள் மீது மண்டேலாவிற்கு இருந்த கவர்ச்சியைப் பற்றி பலமுறை தெளிவாகக் கூறியிருக்கிறார்கள். “What ever he did in his life Nelson Mondela always had an eye for a good looking women”.

சர்வதேச ராஜதந்திர அரசியல் ஒருபுறம் இருக்க நம்மட லோக்கல் விஷயத்திற்கு வருவோம். போர்க்காலங்களில் வடக்கு கிழக்கு மாகாணம் ஸ்ரீலங்காவின் மதுபான வியாபாரத்தில் முன்னிலையில் இருந்திருக்கின்றது. இவ் மதுபான வியாபாரம் சட்டரீதியாக இடம்பெறாத காரணத்தினால் இதுகுறித்த புள்ளிவிபரங்கள் கணிப்பீடுகள் ஒன்றும் வெளியாகவில்லை. வடக்கு கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற மதுபான வியாபாரத்தில் நேரடியாக ஈடுபட்ட இருபெரும் சிங்கள வியாபாரிகளின் கருத்தே இங்கு மூல காரணிகளாக மேற்கோள் காட்டப்படுகிறது. இவ்விரு சிங்கள வியாபார முதலாளிகளும் பல சொத்துக்களுக்கு அதிபதிகள். கொழும்பின் பிரபல வீதியில் மாளிகை போன்ற வீடுகளும் வெளிநாடுகளில் பல சொத்துக்களும் வைத்திருக்கின்றனர்.

கடந்த ஆண்டுகளில் ரணில் விக்கிரமசிங்க அரசு உட்பட சந்திரிகா அரசிற்கும் பணஉதவிகள் புரிந்தனர். இரண்டு முக்கிய கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்திற்கும் ஒரே நேரத்தில் பல லட்சக் கணக்கான பணத்தை வாரி வழங்கியவர்கள். யார் பதவிக்கு வந்தாலும் நாம் எப்போதும் வெல்லும் கட்சிதான் என்ற அரசியல் தத்துவார்த்தத்தை பின்பற்றுபவர்கள். இவர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான வியாபாரத்தை தொடக்கி வைத்ததே சந்திரிக்கா அரசின் உயர் அதிகாரிகள் என்று தெரிவிக்கின்றார்கள். விடுதலைப் புலிகளில் இருந்து கருணாவும் பிள்ளையானும் பிரிந்தபின் இதே வியாபாரத்தை தாம் கிழக்கிலும் தொடர்ந்துள்ளார்கள். தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களும் கிழக்கு மாகாண பிரிவின் பின் முஸ்லிம் பெயருடன் கூடிய ஒரு முக்கிய நபரும் தமது மதுபான வியாபாரத்தில் முக்கிய தொடர்பாளராக இருந்துள்ளதாக கூறுகிறார்கள்.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்தபின்னர் தமது வியாபாரத்தில் மிகுந்த மந்த நிலைமை தொடங்கியதாக கூறும் இவர்கள் விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் பிரபாகரனையும் மிக உயர்வாக மதிக்கிறார்கள். பண கொடுக்கல் வாங்கல்களில் விடுதலைப் புலிகளைப்போல் நேர்மையானவர்கள். ஒருவரும் இல்லை என பற்றுச் சான்றிதழ்கூட கொடுக்கிறார்கள். தங்களின் மதுபான பௌசர்கள் சொன்ன நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் மிகவும் பவுத்திரமாக திருப்பி கையளிக்கப்படும். சம்பவங்களை பெருமையாக விபரிக்கின்றனர்.

வாழைச்சேனையிலும் அம்பாறையிலும் வவுனியாவிலும் கொள்வரவாகிய மதுபானங்களுக்காக London Tooting பகுதியிலுள்ள கடையொன்றில் பணம் கைமாறப்பட்டுள்ளது. ஜந்து பவுண் நோட்டில் உள்ள இலக்கம் குறிப்பிடப்பட்டு அந்த ஜந்து பவுணை இங்கு Tooting இல் கையளிக்கப்படும் பட்சத்தில் பல ஆயிரக் கணக்கான பவுண்கள் கைமாறப்பட்டுள்ளன. வருபவரை அடையாளப்படுத்துவதற்காக கையளிக்கப்படும் ஜந்து பவுண் நோட்டை ஏற்கும் லண்டன் கடைக்காரர் அந்த ஜந்து பவுணிற்கு சமனான ஜந்து பவுண் குத்திகளை கொடுக்கும் கண்ணியவராம்.
இவர்களின் கணிப்பின்படி போர்க்காலங்களில் ஸ்ரீலங்காவின் அனைத்து மாகாணங்களுடன் ஒப்பிடும்போது வடக்கு கிழக்கு மாகாணத்தின் மதுபான வியாபாரம் அதிகளவில் இருந்திருக்கின்றது. சிங்கள பிரதேசங்களில் மதுபான வியாபாரத்தில் ஈடுபடும்போது இவர்கள் பலவிதமான இடையூறுகளையும் செலவுகளையும் ஈடுகொடுக்க வேண்டியிருக்கின்றது. பல தனிப்பட்டவர்களையும் பல திணைக்களங்களையும் தாஜாபண்ண வேண்டியிருந்தது. அதற்கும் மேலாக வரி செலுத்த வேண்டும். ஆக மொத்தமாக 295 ரூபாய்க்கு விற்பனையாகும் 750 ml சாராயத்திற்கு 200 ரூபாய் வரை செலவாகிறது. இதே மதுபானத்தை இவர்கள் வடக்கு மாகாணத்திற்கு விற்கும்போது 100 ரூபாய்தான் செலவாகிறது. மிகுதி அனைத்தும் நயம். அதுமட்டுமல்லாமல் பணம் பவுண்ஸில் லண்டனில் சுளையாகக் கொடுக்கப் படுகின்றது. அதிலும் குறிப்பாக வரி இல்லை. ஒரு இழுபறியோ தாமதமோ இல்லை.

போரில் இடம்பெற்ற உயிரிழப்பு மற்றும் ஏனைய அனர்த்தங்களுடன் இவ்வாறான சமுதாய குளறுபடிகளும் மௌனமாக கூட்டாக வளர்ந்துள்ளன. இதன் தாக்கங்களை சமுதாயம் வளரும் காலங்களில்தான் முகம்கொள்ளப் போகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் மொக்குத்தனமான போராட்டம் முள்ளிவாய்க்காலில் கோரத்தனமாக முடிவிற்கு கொண்டு வரப்படவில்லை. அதன் விளைவுகளை நாம் தொடர்ந்தும் சந்திக்கத்தான் போகின்றோம்.

நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை; பலத்த காற்று

rain2.jpgநாட்டின் பல பாகங்களிலும் இன்று அதிகாலை முதல் தொடர்ச்சியாக மழை பெய்ததுடன் பல இடங்களில் பலத்த காற்றும் வீசியுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களிலும் மத்திய மலை நாட்டின் சில பிரதேசங்களிலும் இன்று மழை பெய்துள்ளதுடன் காலி, மாத்தறை, அம்பாறை, மட்டக்களப்பு, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று வீசியுள்ளது. இதனால் சில பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது.

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழைக்காலத்தில் காற்றும் வீசத் தொடங்கியுள்ளதால் நாட்டின் காலநிலையில் கடந்த புதன்கிழமை இரவு முதல் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வளி மண்டலவியல் திணைக்களம், இந்நிலைமை தொடருமாக இருந்தால் நாட்டின் காரையோரப்பகுதிளிலும் மத்திய மலை நாட்டின் சில இடங்களிலும் கடும் காற்று வீசலாம் என எச்சரித்துள்ளது.

வடமாகாண ஆளுநர் இன்று பதவியேற்பு

chandrasiri.jpgவடக்கு மாகாணத்திற்கான புதிய ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி இன்று வெள்ளிக்கிழமை திருகோணமலை வரோதய நகரில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபையின் பிரதம செயலகத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.  இலங்கை இராணுவத்தின் யாழ்.மாவட்டக் கட்டளைத் தளபதியாகப் பணியாற்றிய மேஜர் ஜெனரல் சந்திரசிறி பின்னர் வவுனியாவில் தங்கவைக்கப்பட்டுள்ள அகதிகள் விவகாரத்தைக் கையாளுவதற்கான தகுதிவாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

கடந்த வாரம் அவர் வடக்கு மாகாணத்தின் ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார். இதுவரை வடக்கு மாகாண ஆளுநராகப் பதவி வகித்துவந்த டிக்ஷன் தேலபண்டார மாலைதீவுக்கான இலங்கைத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இரட்டைக் குழந்தைகள் திடீர் வாந்தி ஏற்பட்டு மரணம்

சிலாபம், அக்கரையான் தொட்டுவ பகுதியைச் சேர்ந்த 1 1/2 வயதுடைய இரட்டைக் குழந்தைகள் திடீரென ஏற்பட்ட வாந்தி காரணமாக உயிரிழந்துள்ளன. இச்சம்பவம் நேற்று முன்தினம் புதன்கிழமை சிலாபம் ஆஸ்பத்திரியில் இடம்பெற்றுள்ளது. இக்குழந்தைகளுக்கு திடீரென வீட்டில் வாந்தி ஏற்பட்டதால் பெற்றோர் இருவரையும் சிலாபம் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர். எனினும் சிகிச்சையளிக்கப்பட்டு வரும்போது காலை 10 மணிக்கு ஒரு குழந்தையும் பிற்பகல் ஒரு மணிக்கு மற்றக் குழந்தையும் மரணமடைந்தன.

இவர்களின் மரணத்திற்குரிய காரணத்தை தம்மால் அறிய முடியாதிருப்பதால் கொழும்புக்கு சடலங்களை அனுப்பி அறிவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிலாபம் ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்தது.

அப்போலோ 11 பயணத்தை ஆரம்பித்த தினம்

19690717moon.jpgஅப்போலோ 11 விண்கலத்தின் நிலவுக்கான பயணம் ஆரம்பமான 40 வது ஆண்டு நிறைவு நேற்று அனுஸ்டிக்கப்பட்டது

அப்போலோ திட்டத்தின் கீழ் இருவரை நிலவுக்கு அமெரிக்கா அனுப்பியது. அதன் மூலம் அன்று ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான விண்வெளிப் போட்டியில் அமெரிக்காதான் முழு வெற்றி பெற்றதாக உணரப்பட்டது.

முதலாவதாக இறங்கி நிலவில் கால் பதித்தவர் நீல் ஆம்ஸ்ரோங்.

உண்மையில் நிலவில் கால் பதிப்போம் என்ற உறுதி மொழியை வழங்கியிருந்தவர், அமெரிக்க ஜனாதிபதியான ஜோண் எஃப் கென்னடி. ஆனால் அவரது கனவு நனவான போது அவர் உயிருடன் இல்லை.

நிலவில் கால் பதித்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அப்போலோ திட்டத்தின் 40 வது ஆண்டு நிறைவை கொண்டாடுவதற்காக, அதில் பணியாற்றிய முன்னாள் விண்வெளி விஞ்ஞானிகள் எல்லாம் கேப் கனவெரலில் தற்போது கூடியிருக்கிறார்கள்.

இன்று அமெரிக்க விண்வெளி திட்டங்கள் ஒரு நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கியிருக்கின்ற போதிலும், இரண்டு மனிதர்கள் முதன் முதலாக நிலவில் கால் பதித்த அந்த தினம், அவர்களுக்கு மிகுந்த ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் இன்றும் தரும்.

ஈரான் விமான விபத்தில் பலியானோரை அடையாளம் காண முடியாத நிலை

iran-plane.jpgஈரான் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 168 பேரும் உயிரிழந்தனர். தலைநகர் தெஹ்ரானில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பகல் 11.30 மணியளவில் இந்த விமானம் புறப்பட்டது. பின்னர் சில நிமிடங்களில் விமானத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இந்த விபத்து ஏற்பட்டது. ஈரானில் இந்த ஆண்டு நிகழ்ந்த மிகப் பெரிய விமான விபத்தாக இது கருதப்படுகிறது- இதில் 153 பயணிகளும் 15 சிப்பந்திகளும் பயணம் செய்தனர்.
ஈரான் விமானம் விபத்துக்குள்ளான தெஹ்ரானின் வடமேற்குப் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளோரைக் காணலாம்.

பலியானோரில் 147 ஈரானியர்களும், 31 ஆர்மினிய நாட்டைச் சேர்ந்தோரும் அடங்குவர். இன்னும் நான்கு அமெரிக்கர்களும் இரண்டு ஜோர்ஜிய நாட்டைச் சேர்ந்தோரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். விமானத்திலிருந்து மூன்று இன்ஜின்களில் ஒன்று தீப்பற்றிக்கொண்டதால் விமானி விமானத்தை தரையிறக்க முற்பட்ட வேளை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தலைநகர் தெஹ்ரானுக்குச் சற்றுத் தொலைவிலுள்ள எரிவின் என்ற இடத்தில் விமானம் நொறுங்கி வீழ்ந்ததாக சாட்சியாளர்கள் தெரிவித்தனர். விமானத்தின் டயர்கள் வெளியே தெரிந்தவாறு அது தீப்பற்றி எரிவதைக் கண்டதாகவும் சிலர் கூறினர். விமானத்தை விமானமோட்டி தரையிறக்க முயன்றுள்ளார் என்பதை இது காட்டுகின்றது.

ஈரான் ஜனாதிபதி அஹ்மெதி நெஜாத் தேடும்பணிகளைத் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளைப் பணித்துள்ளார். எலும்புகளையும், சதைத் துண்டுகளையும் உடல் அவயங்களையும் தேடி எடுத்து பொதிகளில் சேமித்துள்ள மீட்புப் பணியாளர்கள் எவரையும் அடையாளம் காண முடியாதுள்ளதாகக் கவலை வெளியிட்டுள்ளனர். இந்த விமானம் கஸ்பியன் ஏயார் லைன்ஸ¤க்குச் சொந்தமானது.

ஐம்பது சிறிய, நடுத்தர விமானங்களைச் சேவையில் ஈடுபத்தியுள்ள கஸ்பியன் எயார் லைன்ஸ் விமான நிலையம் வாரமொரு தடவை ஈரான் மத்திய கிழக்கு கிழக்கைரோப்பிய நாடுகளின் நகரங்களுக்கும் விமான சேவைகளை நடத்துகின்றது.

ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளிடமிருந்து விமான உதிரிபாகங்களைக் கொள்வனவு செய்வதிலிருந்து ஈரான் தடுக்கப்பட்டுள்ளது. இதனால் குறைந்த வலுவுடைய இன்ஜின்கள் மற்றும் விமான உதிரிப்பாகங்களே ஈரானிடம் உள்ளன. சர்வதேச நாடுகள் ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிதிது ள்ளதால் ஈரான் இவ்வாறான நிலைமைகளுக்கு முகங் கொடுக்க வேண்டியுள்ளது.

ஹிலாரி கிளிண்டன் இன்று இந்தியா செல்கிறார்

hillary_clinton.jpgஅமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஐந்து நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை இந்தியா செல்கிறார்.

இலங்கையில் இந்தியாவின் பங்களிப்பு மற்றும் கடல்சார்ந்த இராணுவ நடவடிக்கைகள் தொடர்பான புதுடில்லியின் தீர்மானங்கள் தொடர்பாக அமெரிக்கா ஆர்வம் காட்டுவதாக அவர் கூறியுள்ளார். தமது விஜயத்தின் போது இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோருடன் மிகவும் விரிவான முறையில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுக்கொள்கை,  கேந்திர ரீதியா சவால்கள்,  சுகாதாரம்,  கல்வி,  விவசாயம்,  பொருளாதாரம் மற்றும் அணுவாயுதப்பரிகரணம் உட்பட மிகவும் கடினமான விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்