சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உணவுப் பொதிகள் அனுப்பி வைப்பு

mi-27.jpgபுலிகளின் பிடியிலிருந்து மீட்டெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெருந்தொகையான மக்களுக்கு விநியோகிக்கவென ஆயிரக்கணக்கான உலர் உணவுப் பொதிகளையும், சமைத்த உணவுப் பொதிகளையும் விமானப் படை விமானங்கள் எடுத்துச் சென்று கொண்டிருப்பதாக விமானப் படைப்பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

விமானப் படையினர் நேற்று முன்தினம் 20 ஆயிரம் உலர் உணவு பொதிகளையும், நேற்றைய தினம் காலை ஆறாயிரம் சமைத்த உணவுப் பொதிகளையும் கிளிநொச்சிக்கு விமானம் மூலம் எடுத்துச் சென்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பணிப்பின் பேரில் விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க இதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

படையினரை நோக்கி பொதுமக்கள் சாரை சாரையாக வர ஆரம்பித்ததை அடுத்து, அதனை தடுக்கும் வகையில் புலிகளால் மூன்று தற்கொலை தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 238 பொது மக்கள் அவசரமாக மீட்டெடுக்கப்பட்டு விமானப் படை விமானம் மூலம் அவசரமாக அநுராதபுர வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். என்றும் விமானப் படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

ஜி.எஸ்.பி.+ சலுகைக்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் விசாரணைக்கு அரசு இணக்கம் – ரணில் தெரிவிப்பு; போகொல்லாகம நிராகரிப்பு

sri-lanka-parliament.jpgஆடைத் தொழிற்துறைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை பெற்றுக்கொள்ளவென ஐரோப்பிய ஒன்றியத்தின் விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் இணங்கியிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க செவ்வாய்க்கிழமை சபையில் தெரிவித்ததுடன், வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம அந்த கூற்றை முற்றாக நிராகரித்துவிட்டார்.

செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போதே ஏற்பட்ட வாதப்பிரதிவாதங்களின் போதே இந்த கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

கேள்வி நேரத்தின் போது முன்னதாக ஒரு கட்டத்தில் பேசிய ஆளுந்தரப்பின் பிரதம கொரடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன, “எதிர்க்கட்சியினர் என்ன கூறினாலும் ஜனாதிபதி லிபியா மற்றும் ஈரான் போன்ற நாடுகளுக்கு மேற்கொண்ட விஜயங்களின் மூலம் நாட்டுக்கு பல உதவிகள் கிட்டியிருக்கின்றன. அது மட்டுமல்லாது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை இலங்கைக்கு கிடைக்காமல் போகப் போகிறதென்றும் எதிர்க்கட்சியினர் கூறினார். எனினும், அப்படியான எதுவும் நடக்கவில்லை’ என்றார்.

இதன் தொடர்ச்சியானதொரு சந்தர்ப்பத்தில் பேசும்போதே, ஜி.எஸ்.பி. சலுகையை பெற்றுக்கொள்ளும் பொருட்டு விசாரணைகளை நடத்த இலங்கை அரசாங்கத்துக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் இணக்கம் ஏற்பட்டிருப்பதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச கைத்தொழிற்சாலைகளை திறந்த வேகத்தில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று கைத்தொழிற்சாலைகளை மூடிச் செல்வதாகவும் குறிப்பிட்டார். இதையடுத்து, ரணில் விக்கிரமசிங்கவின் கூற்றுக்கு பதிலளிக்கும் முகமாக பேசிய வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம;

“எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டது போன்று இலங்கை அரசாங்கம் எந்த விசாரணைக்கும் இணங்கவில்லை. ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை குறித்து ஐரோப்பிய ஒன்றியத்துடனும், ஐரோப்பிய ஆணைக்குழுவுடனும் பேசி வருகிறது என்று கூறினார்.

யானைகளால் மக்கள் பலியாவதைக் கண்டித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் யானைகளின் தாக்குதல்களால் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்படுவதையும் தோட்டங்கள், பயிர்கள் அழிக்கப்படுவதையும் வன்மையாகக் கண்டித்து வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்கு முன்னால் மீளக் குடியேறிய மக்கள் ஆர்ப்பாட்டம மற்றும் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

குறிப்பிட்ட காலப்பகுதியில் யானைகள் தாக்கி 8 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 219 குடிமனைகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பிரதேச செயலாளர் உதயஸ்ரீதர் தெரிவித்தார். அரசாங்கமும் அதிகாரிகளும் யானைகளைக் கட்டுப்படுத்துவதில் அக்கறை செலுத்தவில்லையெனத் தமிழ்மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

கொழும்பில் அதிகாலையில் திடீர் மழை; இடி, மின்னலால் நகரம் அதிர்வு: 164.8 மி. மீ. மழை வீழ்ச்சி: தாழ் பகுதிகளில் வெள்ளம்

கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று (22) அதிகாலை திடீரெனப் பெய்த கடும் மழையின் காரணமாக தாழ்ந்த பகுதிகள் பல வெள்ளத்தால் மூழ்கின.

அதிகாலை இரண்டு மணியிலிருந்து கடும் இடி, மின்னல் ஆரம்பித்ததுடன் மூன்று மணியிலிருந்து காலை 7.30 மணி வரை கடும்மழை பெய்தது. இதனால் தாழ்ந்த பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், போக்கு வரத்துகளும் துண்டிக்கப்பட்டன.

இடி, மின்னல் காரணமாக வீடுகளில் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டதுடன், மின் உபகரணங்களும் செயலிழந்துபோயின. அதிகாலை இரண்டு மணிக்கு இடி, மின்னல் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தால் வெகுண்டதாகத் தகவல்கள் தெரிவித்தன.

கொழும்பு கோட்டைப் பகுதியில் காலை 7.30 மணி வரை தொடர்ச்சியாக 164.8 மில்லி மீற்றர் மழை பெய்ததாக கால நிலை அவதான நிலையம் தெரிவித்தது. பெளத்தாலோக மாவத்தை பிரதேசத்தில் 137.4 மில்லி மீற்றர் மழை பெய்ததாகவும் நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

தாழ்ந்த பகுதிகளில் வீதிகள் வெள்ளத்தால் மூழ்கியதால், போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்து காணப்பட்டது.

இதேவேளை, நாடு முழு வதும் மாலை நேரங்களில் இவ்வாறு இடியுடன் கூடிய மழை பெய்யுமென்று காலநிலை அவதான நிலையம் தெரிவித்தது. இந்தச் சீரற்ற காலநிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்குமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சில வேளைகளில் காலை வேளையில் மழை பெய்யு மென்றும் காலநிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்தது.

இலங்கை அவலம்-ஐநாவில் விளக்க மறுத்த நம்பியார்

vijaynambiar.jpg இலங்கையின் வட பகுதியில் நிலவி வரும் மனிதப் பேரவலம் குறித்து இலங்கைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு ஐ.நா. திரும்பியுள்ள ஐ.நா. இணை செயலாளர் விஜய் நம்பியார், தான் சென்று பார்த்தது, அறிந்தது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விளக்க மறுத்து விட்டார்.

இலங்கை பயணத்தை முடித்துக் கொண்டு நேரடியாக ஐ.நா. செல்லாமல் இடையில் இந்தியாவில் தங்கிச் சென்றுள்ளார் விஜய் நம்பியார் என்பது குறிப்பிடத்தக்கது.

பான் கி மூன்தான், இலங்கை மனிதப் பேரவலம் குறித்து நேரில் அறிந்து கொள்வதற்காக நம்பியாரை அனுப்பி வைத்தார். அவரும் கொழும்பு சென்று ராஜபக்சே, கோதபாய ராஜபக்சே ஆகியோரை சந்தித்துப் பேசினார். இந்த நிலையில் தான் போய் பார்த்து விட்டு வந்ததை விளக்குமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதுகுறித்து விளக்கம் அளிக்க விஜய் நம்பியார் பிடிவாதமாக மறுத்து விட்டாராம்.

இலங்கை நிலவரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும், நம்பியாருடன் பேச ஒப்புக் கொண்டனர். ஆனால், நான் இலங்கை சென்றது ஒரு மீடியேட்டராக மட்டுமே. அங்கு அதிபர் ராஜபக்சேவுடன் பேசியது குறித்து நான் வெளிப்படையாக சொல்ல முடியாது. அது ரகசியமானது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலாக இருந்தாலும் கூட சொல்ல முடியாது என கூறி விட்டாராம் நம்பியார்.

நம்பியாரின் இந்த செயல் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம். ஐ.நா.வின் இணை செயலாளர் ஒருவர் பாதுகாப்பு கவுன்சிலிடம் விளக்கம் தர முடியாது என்று கூறியிருப்பது குறித்து அவர்கள் ஏமாற்றமும், அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளனர்.

மேல் மாகாணப் பாடசாலைகளுக்கு 24 ஆம் திகதி விடுமுறை!

schools_stu.jpgமேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 24 ஆம் திகதி மூடப்படும் என்றும் மீண்டும் அப்பாடசாலைகள் 27 ஆம் திகதி திறக்கப்படும் என்றும் கல்வித் திணைக்களம் தெரிவித்தது. இதேவேளை விருப்பு வாக்குகள் எண்ணும் மத்திய நிலையங்களாக  பயன்படுத்தப்படும் பாடசாலைகள் மட்டும் 28 ஆம் திகதி திறக்கப்படவுள்ளன.

மேல் மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டே இந்த விடுமுறை வழங்கப்படுகிறது. மேல் மாகானத்தின் மூன்று மாவட்டங்களிலும் ஆறு பாடசாலைகள் வாக்குகள் எண்ணும் மத்திய நிலையங்களாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

நாளைய வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பதில்லை – அதிமுக, தேமுதிக,மதிமுக, இடதுசாரிகள்

jayalalitha.jpg“போர் நிறுத்தம் செய்யுங்கள் என்று உலகமே கேட்கும் இந்தச் சமயத்தில் கூட வேலை நிறுத்தம் செய்யுங்கள் என்கிறார் கருணாநிதி. இதில் அதிமுக கலந்து கொள்ளாது. அதிமுக தேர்தல் பிரசாரம் வழக்கம் போல நடைபெறும்” என அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்தார்.

கருணாநிதி அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில்,

“போர் நிறுத்தம் செய்யுங்கள் என்று உலகமே கேட்கும் இந்த நேரத்தில் கூட, வேலை நிறுத்தம் செய்யுங்கள் என்று இங்கே முதல்வர் கருணாநிதி மீண்டும் ஒர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். கருணாநிதியின் வேலை நிறுத்த அறிவிப்பு உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டிருக்கிறது. பல தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றம் பொது வேலை நிறுத்தங்களைச் சட்ட விரோதம் என்று அறிவித்திருக்கிறது.

வேலை நிறுத்தம் போர் நிறுத்தத்திற்கு வழி செய்யுமா? இலங்கையில் மடிந்து கொண்டிருக்கும் தமிழர்களை எண்ணி தமிழ் நாட்டில் கலங்கி நிற்கும் தமிழர்களுக்கு மேலும் பல இழப்புகளையும், இடைஞ்சல்களையும் தான் பொது வேலை நிறுத்தம் தரும். இந்த வேலை நிறுத்த அறிவிப்பு வெற்று வெளிவேடம். எனவே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பிரசார நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

கலைஞர் திஸ்ஸ அபேசேகரவின் இறுதிக் கிரியைகள் இன்று

thissa-abeysekara.jpgகாலஞ் சென்ற பிரபல சினிமாக் கலைஞர் திஸ்ஸ அபேசேகரவின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை கொழும்பு, ராஜகிரியவிலுள்ள சந்திரா டி சில்வா விளையாட்டரங்கில் பூரண அரச மரியாதையுடன் நடைபெறவுள்ளது.

அன்னாரின் பூதவுடல் இன்று காலை 6.00 மணியிலிருந்து பிற்பகல் 2.30 மணி வரை கொழும்பு தேசிய கலாபவனத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து மாலை 3.00 மணிக்கு இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ள நடைபெற மைதானத்துக்குக் கொண்டு வரப்பட்டு 3.30 மணிக்கு இறுதிக் கிரியைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுகயீனமுற்ற நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கலைஞர் திஸ்ஸ அபேசேகர கடந்த 18ஆம் திகதியன்று காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி நாளை பொது வேலைநிறுத்தம்: கருணாநிதி

20-karunanithi1.jpgஇலங்கை அரசு உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும், இதை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோரி நாளை தமிழகத்தில் பொது வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என திமுக அறிவித்துள்ளது.

இதுகுறித்து திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தப் போராட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை அரசு போர் நிறுத்தத்தை அமல்படுத்த இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோரி மத்திய அரசுக்கு 2 முறை தந்தி அடித்தார் முதல்வர் கருணாநிதி. இந்த நிலையில் நாளை பொது வேலைநிறுத்தம் நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார்.

சிறுவர்கள் இரட்டைக் கொலை: பிரதான சந்தேக நபர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் பலி

baby-01.jpgஅக்மீமன பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். பிரதான சந்தேக நபர் நேற்றுமுன்தினம் காலை (20) பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் இறந்ததோடு மற்றைய சந்தேக நபர் இனந்தெரியாத கும்பலொன்றினால் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அக்மீமன நுகேகந்த பகுதியில் வைத்து 10 வயது சிறுமி ஒருவரும் மூன்று வயது சிறுவன் ஒருவனும் கடந்த 15ஆம் திகதி காணாமல் போயிருந்தனர். பின்னர் இவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். கடந்த 18ஆம் திகதி சிறுமியின் சடலமும் 19ஆம் திகதி சிறுவனின் சடலமும் பொலிஸாரினால் மீட்கப்பட்டன.

சம்பவம் தொடர்பாக அருகில் உள்ள வீட்டில் வசித்த நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து கிடைத்த வாக்குமூலத்தின்படி, மறைத்து வைத்துள்ள ஆயுதங்களை மீட்பதற்காக பிரதான சந்தேக நபர் நேற்றுமுன்தினம் காலை (20) சம்பவ இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதன்போது மறைத்து வைத்திருந்த கைக்குண்டை சந்தேக நபர் பொலிஸார் மீது வீசித் தாக்க முயன்றுள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் சந்தேக நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த சந்தேக நபர் கராபிடிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

இதேவேளை, யக்கலமுல்ல கொட்டாவ காட்டுப் பகுதியில் இருந்து நபரொருவரின் சடலமொன்று நேற்றுக்காலை (20) மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இந்த சடலம் பிரதான சந்தேக நபரின் உறவினர் ஒருவருடையது என பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர். இவருக்கும் சிறுவர்களின் கொலையுடன் தொடர்பு இருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இதுவரை சடலம் அடையாளங் காணப்படவில்லை எனவும் பொலிஸார் கூறினர்.

இருவரினதும் பிரேத பரிசோதனை பத்தேகம நீதவானின் முன்னிலையில் நேற்றுமுன்தினம் பிற்பகல் நடைபெற்றது. இதேவேளை, கொல்லப்பட்ட 10 வயது சிறுமியரின் இறுதிக் கிரியைகள் நேற்று பிற்பகல் நடைபெற்றது. ஊர் மக்கள் உட்பட பெருந்திரளான மக்கள் இதில் கலந்துகொண்டனர். இவரின் உடலில் 12 வெட்டுக் காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

அக்மீமன பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.